ரெங்கசுப்ரமணி
16 மார்ச் 2024
மிளகு - இரா. முருகன்
01 பிப்ரவரி 2024
தில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு
தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாகத்தான் அறிமுகம். பலமுறை பார்த்த படம். சிற்சில இடங்கலை ஓட்டிவிட்டால் சலிக்காமல் பார்க்க முடியும். காரணம் எனக்கு பாலையா, நாகேஷ் & மகாதேவன். ஒரு நாவலை அல்லது தொடரை எப்படி கதையை மாற்றாமல், ஜீவனை கெடுக்காமல் எப்படி படமாக்க வேண்டும் என்பதை ஏ.பி. நாகராஜன் காட்டியுள்ளார்.
இந்த புத்தகம் பல ஆண்டுகள் அச்சில் கிடையாது. உறவினர் வீட்டில் ஒரிஜினல் பதிப்பு இருந்தது. பல வருடம் முன்பு வாங்கி படிக்கும் போது பிடித்திருந்தது. மீண்டும் படிக்க முடியவில்லை. கொடுத்த புத்தகத்தை திருப்பி கேட்கும் கெட்ட பழக்கம் எப்போது போகுமோ தெரியவில்லை.
சமீபத்தில் விகடன் பதிப்பித்திருந்தது. விகடன் மாதிரியே அதே அளவு, அதே மாதிரி பேப்பர் எல்லாம்.
31 ஜனவரி 2024
மீண்டும்
கடந்த ஒரு வருடங்களாக இதில் எதுவும் எழுதவில்லை என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது. ஆடி கதையை சுட்டு சமீபத்தில் எழுதியது போலவே உள்ளது. அனைவருக்கும் வரும் அதே வியாதிதான். நேரத்தை சீரிஸ்கள் பறித்து கொண்டதன் விளைவு, அதோடு பெரும்பாலும் புதிய புத்தகங்கள் வாங்கியதும் குறைந்து விட்டது. வாங்கிய புத்தகங்களும் பெரிய சைஸ். அதோடு கிண்டில் அன்லிமிட்டட் ஒரு மூன்று மாதம் கண்டதையும் படிக்க வைத்து விட்டது.
அதோடு இதில் எழுதுவதை யார் படிக்கின்றார்கள் என்ற எண்ணம் தோன்றினாலும், இதில் எழுதுவது பெரும்பாலும் எனக்காக என்றாகிவிட்டது. ஒரு புத்தகத்தை மீண்டும் படிக்கும் போது, இங்கு வந்து ஒரு முறை பார்ப்பது வழக்கம். மூளை வளர்ந்திருக்கின்றதா என்று சோதனை செய்யும் முயற்சி பெரும்பாலும் தோல்விதான். பல புத்தகங்களைப் பற்றிய எண்ணம் மாறவில்லை. சில புத்தகங்களை பார்க்கும் கோணம் மாறியிருக்கின்றது. அதனால் மீண்டும் .............
27 டிசம்பர் 2022
ஆடி - மகாபாரத கதை
நண்பர் சிலிக்கான் ஷெல்ஃப் ஆர்.வி எழுதிய மகாபாரத கதையை சொல்வனத்தில் படித்தேன். அந்த கருவும், வடிவமும் எனக்கு பிடித்திருந்தது. அதை கொஞ்சம் மாற்றி எழுதிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. அவரும் இதற்கு எல்லாம் கேட்க வேண்டுமா என்றார். அவருக்கு நன்றி. இனி கதை...
பதினான்காம் நாள் போர் முடிந்த மாலை
துரியோதனனின் வார்த்தைகளால் கோபமுற்ற துரோணர் சிறிய ஓய்விற்கு பின் இரவிலும் போரை தொடர ஆணையிட்டு விட்டு கூடாரத்திற்கு வந்தார், கூடவே அஸ்வத்தாமனும்
திருஷ்டத்யும்னன் துருபதரின் கூடாரத்துக்குள் நுழைந்தபோது துருபதர் கவசங்களை கழட்டாமல் இருப்பதை கண்டவுடன் ஒரு கணம் ஆச்சர்யம் வந்து சென்றது.
23 ஆகஸ்ட் 2022
விளக்கும் வெளிச்சமும் - விமலாதித்த மாமல்லன்
மாமல்லன் எழுதிய புனைவு என்னும் புதிர் புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். அந்த பதிவிற்கு பின்னால் ஒரு குட்டி கதை உள்ளது அது கடைசியில். ப்ளாக் ஆரம்பித்த காலத்தில் ஒழுங்காக இருந்த பதிவுகள், என்னையறியாமல் மாற தொடங்கின. எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் எல்லாம் அதிகமானது. காரணம் ஒரு பதிவை பல நாட்கள் எழுதுவது, அதனால் கோர்வையில்லாமல் போவது, சொன்னதையே திரும்ப வேறு வரிகளில் சொல்வது போன்றவை அதிமாக வர தொடங்கின. பெரும்பாலும் சரி செய்தாலும் தொடர்ந்தன. தற்போது வெகுவாக அது குறைந்துள்ளது என்று தோன்றுகின்றது. அதற்கு ஒரு முக்கிய காரணம் மாமல்லன். அவரது பதிவுகளில் பிழை இருந்து பார்த்த நினைவில்லை. கச்சிதமான மொழியில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு.
தொகுப்பில் இருக்கும் இரண்டு கதைகளின் தலைப்பை இணைத்து தொகுப்பின் தலைப்பாக வைத்துள்ளார்.