18 மே 2013

மத்தகம் - ஜெயமோகன்

அலுக்காமல் பார்த்து ரசிக்க கூடிய விஷயங்கள் என்று சில உண்டு. குழந்தை. யானை. கடல். அதில் ஒன்றான யானையை பற்றிய கதை. யானை என்னும் ஒரு மிருகத்தை இத்தனை நெருக்கமாகவும், அதன் மனதை படிப்பவர்களும் உணரும் படி படைக்க முடியுமா என்ற பிரமிப்பு படித்து முடித்த பின்னும் போகவில்லை.

யானையை ரசிப்பது என்பது ஒரு குழந்தையை ரசிப்பது போலத்தான். யானையின் செய்கை எல்லாம் ஒரு கபடமற்ற குழந்தையின் செய்கை போலத்தான் தோன்றும். அவ்வளவு பெரிய உருவம் ஒரு சின்ன சங்கிலிக்கு கட்டுப்பட்டு அடங்கி இருப்பது என்பது ஒரு பார்வைக்குதான். அது நினைத்தால் அச்சங்கிலி தூள்தூளாகும். காட்டிலிருந்தாலும் நாட்டிலிருந்தாலும் யானை யானைதான். அது போனால் போகின்றது என்று மனிதனுக்கு கட்டுப் பட்டு இருக்கின்றது. 

கேசவன் கஜராஜ கேசரி. திருவனந்தபுர மன்னரின் தோழன். அவனின் பாகன்களில் ஒருவன் பரமன். பரமன்தான் கதை சொல்லி. மொத்தம் ஐந்து அந்தியாயங்கள். தவறுதலாக குழியில் விழுந்த யானை அக்குழியிலியே பிரசவித்த குட்டி. குட்டி கொஞ்சம் வளர்ந்ததும் அரச கொட்டடிக்கு வருகின்றது. யானை வந்த வேளையில் நோய்வாய்ப்பட்ட தம்புரான் எழுந்து நடக்க, யானை  அவரின் தோழனாகின்றது. வளர்ந்ததும் திருவெட்டாறு கோவிலிக்கு விடப்படும் கேசவன், தம்புரான் பட்டத்திற்கு வந்தது அதுவும் ஒரு பட்டத்து யானையாக மாறுகின்றது. கடைசியில் தம்புரான் மறைந்ததும், பட்டத்திலிருந்து கீழே இறங்கி வருகின்றது. 

கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் அது காட்டும் உலகம் வித்தியாசமானது. சாதரணர்கள் காண, கண்டிருக்க முடியாத உலகம். யானை, யானை வளர்ப்பு, யானைகளின் சுபாவம் என்று ஒரு சரடு. யானைகளுடனே வாழும் பாகன்களின் உலகம் என்று ஒரு சரடு.இரண்டிற்கும் ஊடே அதிகாரம் என்னும் ஒரு சரடு. இது அனைத்தும் பின்னி பிணைந்ததுதான் மத்தகம். 

மத்தகம் என்பது பாகன் அமரும் இடம். கேசவன் அம்மத்தகத்தில் யாரையும் அமர விடுவதில்லை. தம்புரானை மட்டுமே அவ்விடத்தில் அனுமதிக்கும். கதை உள்ளே பேசுவது அதிகாரத்தை பற்றி. தம்புரானின் தோழனாக இருக்கும் போது கம்பீரமாக ஒரு ராஜாவைப் போல இருக்கும் கேசவன், தம்புரான் இல்லை என்று தெரிந்ததும், அதிகார மாற்றத்தை உணர்ந்து சாதரண பாகனிடம் தன்னை ஒப்படைத்து கீழ்படிவதாக மாறுகின்றது. கஜகேசரியாக இருக்கும் வரை பாகனின் தவறுக்காக அவனை நெருங்க விடாத கேசவன், அவனை தன் மத்தகத்தில் ஏற்றி வைத்துக் கொள்கின்றது.

பாகன்களின் வாழ்க்கை. யானையின் காலடியில் வாழ்வது என்பது மரணத்துடன் இருப்பது போலத்தான். யானை கோபம் கொண்டால், ஒரு வினாடி போதும் பாகன் போய் சேர வேண்டியதுதான். பாகனின் சொல் பேச்சு கேட்கும் யானை எப்படி அவர்களை தாக்கும் என்பதற்கான் விடை இங்குள்ளது. பாகன்களின் பார்வையில் யானை, என்று அருமையாக காட்டியுள்ளார். கதை வெகுகாலத்திற்கு முன்பு நடக்கின்றது. பாகன்களின் பரிதாப நிலையை விட அவர்களின் மனைவிகளின் நிலை, எப்போது வேண்டுமானாலும் வாழ்க்கை பறி போகும் அபாயம், அதன் பின்னால் வாழ வேண்டிய கட்டாயம், அதற்காக அவர்கள் தரும் விலை. 

முக்கியமானது யானையின் குணாதியங்கள். காட்டிற்கு ராஜா சிங்கம் என்கின்றார்கள். உண்மையான ராஜா யானைதான். சிங்கம் ஒரு சோம்பேறி வேறு. யானையின் கம்பீரம், பலம் அனைத்தையும் விட அப்பலத்தை தன் கட்டிற்குள் வைத்திருக்கும் மனம். காட்டில் வாழும் மிருகங்களில் அசாத்தியமான நினைவாற்றலுடனும், பலத்துடனும், புத்திசாலித்தனத்துடன் இருக்கும் ஒரே மிருகம் யானைதான். எல்லா யானையும் ராஜா இல்லை. அனைவரும் தலைவராக முடியாதல்லவா. கேசவன் அப்படிப்பட்ட தலைவன். கஜராஜன். கேசவன் அவனுக்கு முந்தைய கஜராஜனான நாரயணனை கண்டு பயந்தாலும் அதை சீண்டிபார்க்கின்றான். கேசவனை சீண்ட கடைசியில் கொச்சு கொம்பன் வருகின்றான். 

ஜெ.மோவிற்கு யானை என்றால் மிகவும் பிடிக்கும் போல. காடு நாவலில் வரும் கீறக்காதன், குட்டப்பன் யானையை பற்றி பேசும் விஷயங்கள். யானை டாக்டர். விஷ்ணுபுரத்தில் வரும் வீரன், பைரவன். ஊமைச் செந்நாயில் வரும் கொம்பன், மண் கதையில் வரும் இன்னொரு கொம்பன் என பல யானைகள். ஆனால் கதை முழுக்க வந்து கதையையே தன் மத்தகத்தில் கொண்டு செல்வது இந்த கேசவன் மட்டும் தான்.

ஜெயமோகனின் கதைகளில் என்னை அதிகம் கவர்வது இது போன்ற கதைகள்தான். காடு, மலை, தொன்மம் போன்ற விஷயங்களை இவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. ஒரு யானையுடன் ஒரு மணி நேரம் பயணம் செய்த உணர்வை தருகின்றது இக்கதை.



01 மே 2013

பாம்பு

கருப்பாக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்த அந்த பாம்பை முதலில் பார்த்தது என் பெரியம்மா பெண்தான்.

 "டேய் அங்க பாரு பாட்டி வீட்டு பக்கத்துல என்னமோ போகுது, பாம்பு போல இருக்கு"

எனக்கு ஒன்றும் தெரியவில்லை. இருட்ட தொடங்கும் நேரம். அவளின் கண்ணாடி பவர் வேறு என்னைவிட இரண்டு பாய்ண்ட் அதிகம்.

 "கண்ணாடிய துடச்சு பாரு" என்றேன்.

"நல்ல பாருடா அங்க, நெளிஞ்சு நெளிஞ்சு போகுது"

கண்ணாடியை துடைத்துதான் போட்டிருக்கின்றாள். நல்ல நீளமான பாம்பு, சுமார் ஐந்து அடிக்கு மேல் இருக்கும். நல்ல பருமன். பளபளவென்று உடல். அசங்கி அசங்கி தூக்கத்தில் நடப்பவன் போல் போய்க் கொண்டிருந்தது.

"ப்பா என்ன பெருசு, பளபளன்னு இருக்குல்ல, தோல பாரு நல்ல லேடிஸ் ஹேண்ட் பேக் போல வளவளன்னு இருக்கு'

"ரசிக்ற மூஞ்சிய பாரு, இப்ப என்ன பண்றது"

எனக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. பாதுகாப்பான தூரம் என்பதை உறுதி செய்து கொண்டு குறி பார்த்து ஒரு கல்லை எடுத்து எறிந்தேன். விளைவு விபரீதமாகி, பாம்பு பாட்டி வீட்டிற்குள் விறுவிறுவென நுழைந்தது.

"ஐயஐயோ பாட்டி"

29 ஏப்ரல் 2013

சொர்க்கத் தீவு - சுஜாதா

சுஜாதாவின் முதல் சைன்ஸ் ஃபிக்‌ஷன். ஒரு அய்ங்காரின் (கவனிக்க அய்யங்காரின் அல்ல) அனுபவம். எதில் தொடராக வந்தது என்று தெரியவில்லை. எப்படி சைன்ஸ்ஃபிக்‌ஷன் என்பதற்கு பதில் சுஜாதாவின் முன்னுரையிலேயே இருக்கின்றது. ஒரு எதிர்கால சமுதாயம் இப்படி இருக்க வாய்ப்புள்ளது. 

அய்ங்கார் ஒரு கம்ப்யூட்டர் ஆசாமி. பழைய கம்ப்யூட்டர். (கதை எழுதப்பட்டது ). மாதம் 2000 ரூபாய் சம்பளத்தை எப்படி செல்வு செய்வது என்பதை வேலைக்கு நடுவில் யோசிக்கும் ஒருவன். அலமேலு என்னும் ஒரு மசால்வடை மூலம் அய்ங்காரை பிடித்துக் கொண்டு சொர்க்கத்தீவிற்கு செல்கின்றனர் ஒரு கூட்டம். அவனை தூக்கிக் கொண்டு போகக் காரணம் அங்கிருக்கும் ஒரு கம்ப்யூட்டரை சரி செய்ய.

முதலில் முரண்டு பிடிக்கும் அவன் மெதுவாக ஒத்துழைக்க எண்ணும் அவனுக்கு அத்தீவின் நடைமுறைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. //இன்று எத்தனை பேர் பிறக்க வேண்டும், எத்தனை பேர் இறக்க வேண்டும் என்பதை சரியாக கணிக்கவில்லை. அதனால் சிலர் கொல்லப்படவில்லை// தீவின் தலைவர் ஆத்மா. ஒரே ஒரு மூன்றெழுத்துக்காரர். மற்றவர்கள் எல்லாம் பெரி, பொரி, சரி என்று இரண்டெழுத்து ஆசாமிகள்.

எல்லருக்கும் ஒரே மாதிரியான ஆடை, ஒரே மாதிரி உணவு, ஒரே மாதிரி உறைவிடம். ஒரிஜினல் கம்யூனிசம். சர்வமும் கம்ப்யூட்டர் கையில். யார் இருக்கலாம், யார் இறக்கலாம், யார் என்னெ செய்ய வேண்டும் எல்லாம் கம்ப்யூட்டர். மனிதனின் ஆதார உணர்ச்சிகளை மருந்துகள் மூலமும், பயிற்சிகள் மூலமும் மட்டுப் படுத்தி ஒரு பொம்மைகளை போல வைத்திருக்கும் தீவு. சொர்க்கத்தீவு.

" ஆடு கூட தழை தின்னாமல் இருக்க நினைத்தால் தின்னாமல் இருக்கலாம், இங்கு மக்களால் அது கூட முடியாது".

"எங்கள் தமிழில் மொத்தம் ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் கிடையாது"

"அம்மா என்று கூறும் போதெல்லாம் அக்குழந்தைகளுக்கு மெல்லிய மின் அதிர்ச்சி குடுப்போம்"

இதில் ஒருவனுக்கு மட்டும் எப்படியோ சுய உணர்ச்சி வருக்கின்றது. அவனால் உணர்ச்சி பெற்ற அவன் காதலியும் இணைந்து சொர்க்கத்தீவை மாற்ற முயன்று அய்ங்காரிடம் உதவி கேட்கின்றனர். அய்ங்காரின் உதவியும் தோல்வியில் முடிகின்றது.

ஊருக்கு கிளம்பும் முன் ஒரு சிறிய வேலையால் அய்ங்கார் அத்தீவை மாற்றத்தின் பாதையில் திருப்பி விட்டு வருகின்றான். மீண்டும் கடத்திக் கொண்டு போகப்பட்டால் புதிய தீவைக் காணலாம்.

சைன்ஸ்ஃபிக்‌ஷனுக்கு சைன்ஸ்தேவையில்லை என்கின்றார் சுஜாதா. அவரின் கருத்துப்படி பாரதியாரின் காக்கை பார்லிமெண்ட்டே ஒரு சைன்ஸ்ஃபிக்‌ஷன். எதிர்கால சமூகம் முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர்களால் நடத்தப்படும் என்னும் அவரது கற்பனை / யூகம் கொஞ்ச கொஞ்சமாக நடந்துவருகின்றது.

கதை வழக்கமான சுஜாதாத்தனமான விறுவிறுப்பு. கதாநாயகன் தேவையற்ற சாகசங்கள் எல்லாம் செய்வதில்லை. நமக்கு தெரியும் கதநாயகன் எப்படியும் அம்மக்களை காப்பாற்றி விடுவான் என்று, அதை எப்படி செய்வான் என்பதே முடிச்சு. அதை தெளிவாக, புத்திசாலித்தனமாக அவிழ்த்துள்ளார்.

கம்ப்யூட்டர் சம்மந்தப்பட்ட தகவல்கள் இன்றைக்கு பழையதாக தெரியலாம். ஒவ்வொரு பதிப்பின் போது மாற்றிக் கொண்டிருப்பது சாத்தியமல்ல. அதை விட்டு பார்த்தால் ஒரு விறுவிறுப்பான கதை.

எழுதிவிட்டு தேடினால் பால்ஹனுமான் தளத்தில் ஒரு விமர்சனம் கிடைத்தது. தோத்தாத்ரி என்பவரின் விமர்சனத்தை படித்து அசந்துவிட்டேன். ஆய்வு கட்டுரையாம். ப்ரமாதம்.// ஒரு வகையான கம்யூனிச எதிர்ப்பை காணலாம்// இது உண்மையென்றால் அதற்காகவே அனைவரும் படிக்கலாம்.

23 ஏப்ரல் 2013

என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ - சுஜாதா

விஞ்ஞான கதைகள் என்றால் முதலில் நினைவிற்கு வருவது சுஜாதாதான். அதன் பின்னால்தான் மற்றவர்கள். யார் அந்த மற்றவர்கள் என்று யோசிப்பவர்களுக்கு எனக்கு தெரிந்து சில ராஜேஷ்குமார், ஆர்னிகா நாசர், மாலன், ஜெயமோகன். விஞ்ஞான சிறுகதைகள் சுலபம், நாவல்கள் சற்று கடினம்.

என் இனிய இயந்திராவும், மீண்டும் ஜீனோவும் விகடனில் தொடராக வந்தது. நாவலின் வெற்றிக்கு காரணம் ஜீனோ. ஒரு பெரிய கிரேக்க மேதையின் பெயரைக் கொண்ட நாய். ரோபாட். இயந்திரம். அது அனைவரையும் கவர்ந்ததற்கு காரணம், அதன் மனிதத்தன்மை. இதே ஒரு இயந்திர மனிதனை அங்கு வைத்திருந்தால் இந்தளவிற்கு கவர்ந்திருக்காது. ஒரு நாய் விஞ்ஞான முன்னேற்றத்தினால் மனிதனைப் போல சிந்திக்க ஆரம்பித்ததுதான் கதையின் பெரிய பலம்.

கதை எதிர்காலத்தில் ஏதோ ஒரு நாளில் ஆரம்பிக்கின்றது. மனிதர்களின் பெயர்கள் சுருக்கப்பட்டு, பிறப்பும் இறப்பும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் ஒரு காலம். நிலா - சிபி. அவர்களின் வீட்டில் உள்ள அறையில் தங்க அனுமதிக்கப்பட்ட விருந்தாளி ரவி. ரவியுடன் வரும் நாய். தத்துவம் படிக்கும் நாய். நிலாவின் கணவன் காணமல் போக, கதை சுறுசுறுப்பாகின்றது. தலைவர் ஜீவாவை சந்திக்கும் நிலா கடைசியில் ரவியின் கூட்டத்துடன் சேர்ந்து ஜீவாவை கொல்ல துணிகின்றாள். ஜீனோவின் உதவியுடன் ஜீவாவின் பின்னால் உள்ள சதியை கண்டுபிடிக்கின்றாள். பெரும்பாலானவர்கள் படித்திருப்பார்கள் அதனால் கதையின் முடிவை சொல்வதில் தப்பில்லை. படிக்காதவர்கள் கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்.

20 ஏப்ரல் 2013

மகாபாரதம்

நான் அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் டவண்டை அடிக்கும் விஷயம், நான் ஒரு மகாபாரத பைத்தியம். சிறுவயதில் இதை ஆரம்பித்த பெருமை தூர்தர்ஷனுக்குத்தான்.ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும் போது டிவியில் தொடராக வந்தது. அதோடு தினமலர். தினமலரில் முதல் நாள் அடுத்த நாள் காட்சிகளின் வசனம் வரும். சிறுவயதில் புத்தகம் படிக்கும் வழக்கம் இருந்ததால் அதை சுவாரஸ்யமாக படிக்கவும் முடிந்தது. வசனம் புரிந்து பார்க்கும் போது இன்னும் பிடித்து போனது.

முதலில் பிடித்ததற்கு காரணம் அதில் வரும் சாகசங்கள். போர் முறைகள், சண்டை, வில் அம்பு, கதை என்று சிறுவர்களை கவரும் அனைத்தும் போதுமான அளவிற்கு இருந்தது. இன்னும் என்னால் அதன் கதாபாத்திரங்களை கண் முன் கொண்டுவர முடிகின்றது. நல்ல காஸ்டிங், சகுனி, துரியோதனன், பீமன், கிருஷ்ணன் (நிகில் பரத்வாஜ்?), பீஷ்மர் எல்லாம் கனகச்சிதம். இதை எழுதும் போது கர்மம் புதிய மகாபாரதம் நினைவில் வந்து தொலைக்கின்றது. சை.

ஏழாவது படிக்கும் போது என் தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டிற்கு போகும் போது அங்கு பாரதம் அனாதையாக கிடந்தது. திரும்பி வரும்போது பதுக்கிக் கொண்டு வந்துவிட்டேன். வந்த வேகத்தில் படித்தேன். பல நாட்களுக்கு அது உள்ளேயே ஓடிக் கொண்டிருந்தது. நான்கு புத்தகங்கள். ஆதி பர்வம், சபாபர்வம், வன பர்வன் இரண்டு புத்தகங்கள், யுந்த பர்வங்கள் ஒரு புத்தகம், சாந்தி பர்வம் முதல் ஒரு புத்தகம். யார் எழுதியது ஒரு விவரமும் நினைவில் இல்லை.