17 அக்டோபர் 2013

ஜெயமோகன் குறுநாவல்கள்

ஜெயமோகனின் குறுநாவல்களின் தொகுப்பு. அவரின் மொத்த குறுநாவல்கள் அனைத்தும் உள்ளதா, இல்லை தேர்ந்தெடுத்த கதைகளா என்று தெரியவில்லை. விதவிதமான கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான களத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒரு சில கதைகள் குறுநாவல் என்பதை விட பெரிய சிறுகதைகள் என்று கூறலாம்.

ஜெயமோகனின் பெரிய பலமான தளம் தொன்மம் சார்ந்த கதைகள். அவரின் மற்ற கதைகளை விட அந்த மாதிரியான கதைகளே மிகவும் பிடித்தமாக உள்ளது.


கிளிக்காலம்

கிளிக்காலம், இரண்டுங்கட்டான் என்று கூறப்படும் வயதிலுள்ள சிறுவர்களை(?)ப் பற்றிய கதை. கதைநாயகன் பெயர் ஜெயன் (!). சிறுவர்கள் என்ற இடத்திலிருந்து பெரியவர்கள் என்ற இடத்திற்கு நகரும் கதை. அந்த பருவத்தினருக்கு இருக்கும் விபரீத சந்தேகங்கள், பெண்களை பற்றிய மயக்கங்கள் எல்லாம் இயல்பான உரையாடல்களில் வெளிப்படுகின்றது. மிகவும் கவரவில்லை.

பூமியின் முத்திரைகள்

பாதி கதையிலேயே தூக்கம் வருகின்றது. பயங்கர போரான கதையாக படுகின்றது எனக்கு. கதை உள்ளேயே போக மறுக்கின்றது. யாருக்காவது மிகவும் பிடித்திருக்கலாம்.  அவர்களுக்கு வாழ்த்துக்கள். கிறிஸ்துவ பிண்ணனியில் அமைந்த கதை.


மடம்

மடம் என்று மடத்தை குறிப்பிடுகின்றாரா, இல்லை மடத்தனத்தை குறிப்பிடுகின்றாரா? இடையன்சாமியை கடவுளாக்கும் முயற்சியில் ஈடுபடும் கனபாடிகள் கண்டறியும் உண்மை கொஞ்சம் சிரிக்க வைத்தாலும், யோசிக்க வைக்கின்றது. சகட்டுமேனிக்கு பல விஷயங்களை கிண்டலடித்துள்ளார்.பல விஷயங்களில் நமக்கு இருக்கும் மரியாதையை கேள்விக்குள்ளாக்கி விடுகின்றார். கிழவி மாதாவாக மாறுவதும், அரசியல் கட்சிகளின் கூத்தும், கனபாடிகள் கா என்னும் எழுத்தை ஆராய்வது புன்னகைக்க வைக்கின்றது.

பரிணாமம்

இதை சைன்ஸ் ஃப்க்‌ஷன் என்றும் கூறலாம் இல்லை ஏதாவது பழைய தொன்ம கதையின் நீட்சியாகவோ, அதன் அடிப்படையாகவோ இருக்கலாம். ஒரு பழங்குடியினரை பற்றிய கதை. ஆங்கிலேயர்கள் நமது வரலாற்றை அணுகும் தன்மையையும் காட்டுகின்றது.

லங்கா தகனம்

உண்மையான கலைஞர்களின் நிலை என்பது இங்கு எப்போதும் பரிதாபம்தான். சிற்பியை அம்மி கொத்த சொன்னால் கூட பரவாயில்லை, கல்லுடைக்க வைக்கும் சமூகம் நமது. கதகளியில் தேர்ந்த ஆசான், ஆனால் அதன் பெருமையை முழுவதும் அடையாமல், அவமானத்தை மட்டும் அடைகின்றார். அவரின் கலை மீது அவருக்கே ஒரு குறை. கடைசியில் அதே கலையை முழுவதும் கைக்கொள்வதன் மூலம் தன் குறையையும், பெருமையையும் அடைய முயல்கின்றார். முடிவை வெளிப்படையாக சொல்லவில்லை. முடிவை கொஞ்சம் யூகிக்க முடிந்தாலும், அதை நெருங்க நெருங்க ஒரு பரபரப்பு நமக்கு தொற்றிக் கொள்கின்றது. கடைசி வரிகள் கதை சொல்லியுடன் நமக்கும் ஒரு பீதியை தருகின்றது. ஆசானின் மாற்றத்தை எழுதியுள்ள விதமும், சில சில நுணுக்கங்களும் நம்மை கதையுடன் மேலும் மேலும் நெருக்கமாக்குகின்றது. ஒரு வித மழை மூட்டமான நேரத்தில், ஒரு அரண்மனையின் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு பார்ப்பதை போன்று எனக்கு தோன்றியது. இந்த தொகுப்பில் மிகவும் பிடித்துப் போன கதை.

அம்மன் மரம்

மனநிலை பாதிக்கப்பட்ட அம்மாவை குணப்படுத்த எங்கோ கொண்டு செல்லும் மகன். அவன் காணும் காட்சிகள். சேது படம் பார்த்த எஃபெக்ட். சுமாரான கதைதான்.

டார்த்தீனியம்

புறப்பாடு படித்த பின் இக்கதை அவரது சொந்தக்கதையின் மாற்று வடிவமோ என்று தோன்றுகின்றது. ஒரு அழகான குடும்பத்தில் நுழையும் ஒரு செடி அக்குடும்பத்தையே சாய்க்கின்றது. பார்த்தீனியம் என்னும் செடியை பார்த்திருப்போம், தொட்டால் ஆஸ்துமா வரும் என்பார்கள். விட்டால் கிடுகிடுவென பரவி கிடைத்த இடத்தை எல்லாம் ஆக்கிரமித்துவிடும். அது போல இந்த டார்த்தீனியம். ஒரு குறியீடு. எதன் குறியீடு? குடும்பத்தில் நுழையும் எதன் குறியீடாகவும் இருக்கலாம். கறுப்பு என்று ஒரு நிறத்தை கேவலப்படுத்திவிட்டார் என யாரும் கல்லெறியவில்லையோ? படிக்கும் போது நம்மை அந்த உலகிற்கு அழைத்து செல்கின்றார் என்பது நிஜம். படிக்கும் போது புஸ் புஸ் என்று சீறும் ஒலி கேட்டால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.

மண்

கொம்பன் யானைக்கும், ஆதி மூப்பனுக்குமான போராட்டம். இதை ஒரு முழுக்க கற்பனை கதை என்று கூற முடியவில்லை. ஏதோ ஒரு மூலம் இருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. மூப்பன், கொம்பன் யானை இருந்த இடத்தில் தன் குடியை நிறுவுகின்றான். கொம்பன் பழி வாங்க அலைகின்றது. கடைசியில் கொம்பனும், மூப்பனும் மட்டும் தனித்திருக்கின்றனர். ஆனால் வேறு நிலையில். பஞ்சத்தில் தவித்து மண்ணை உண்ணும் நிலையில் கிடைக்கும் கடைசி தண்ணீரை மூப்பன் கொம்பனுக்கு தருகின்றார். கொம்பனை பழிவாங்க கடைசி வாய்ப்போ?

நிழலாட்டம்

நிழலாட்டம், ஒரு பெண்ணிற்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அதை குணப்படுத்த முயற்சி செய்கின்றனர். அதே சமயம் அப்பெண்ணின் காதலன் கொல்லப்படுகின்றான். என்னவோ இது ஒட்டவேயில்லை.

பத்ம வியூகம்

ஒரு மகாபாரத கதை. அபிமன்யூ பத்மவியூகத்தில் கொல்லப்பட்டான். அவனை மறுபடியும் அதே வியுகத்தில் அவனது தாயே தள்ளுகின்றாள். இக்கதை முழுக்க முழுக்க கற்பனையா? இல்லை பாரதத்தில் வருவதா தெரியவில்லை. அபிமன்யூவை வியாசரின் அருளால் காணும் சுபத்திரை, அவனுக்கும் அவனுடனே பிறந்த ப்ரகத்பாலனுக்குமான பகையை போட்டுடைத்து அவனை மறுபடியும் வெளிவர முடியாத வியூகத்தில் தள்ளுகின்றாள். சுபத்திரையின் பார்வையில் அர்ச்சுனனை காணும்  போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது. ஒற்றை பரிமாணத்தில் பார்த்த நம் கதாநாயகர்களை மாற்று பார்வையில் பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டம்தான். புராண நாயகர்களை இழுத்துக் கொண்டு வந்து சாதரண மனிதர்களாக மாற்றி பார்க்கும் வசதி நமக்குதான் உண்டு. இக்கதையை பல இலங்கை தமிழர்கள் பாராட்டுகின்றார்கள் என்றார் ஜெயமோகன், என்ன காரணமோ?

இறுதி விஷம்

பாரததின் தொடக்கத்தில் வரும் கதை. ஜனமேஜயனின் சர்ப்பயாகம். அதை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. தட்சனை காமத்துடன் உருவகப்படுத்தியுள்ள கதை. தட்சனை கொல்வதன் மூலம் பூமியை பாபங்களிடமிருந்து விடுவிக்கமுடியும் என்று கூறும் ஜனமேஜயனை, மறுத்து தட்சனை காப்பாற்றும் முனிவன். இதை பிரித்து போட்டு ஆராய்ச்சி செய்தால், ஜெயமோகன் கிறித்துவர்களை தாக்குகின்றார் என்று ஒரு கோணம் கிடைக்கும். யாருக்காவது பயன்படும். அங்குதான் காமம் என்பது பாபம்.

விதவிதமான கதைகள். அவருடை பெரிய நாவல்களுடன் ஒப்பிடுகையில் இவை ஒரு படி கீழேதான் நிற்கின்றன. டார்த்தீனியம், லங்காதகனம், மடம், பத்மவீயூகம், இறுதிவிஷம் இவைதான் என்னுடைய தேர்வாக இருக்கின்றது.

குறிப்பு : மேலே உள்ள படத்தை பார்த்து, ஜெயமோகன் பற்றிய பதிவில் யாரோ ஒருவரின் படத்தை போட்டுள்ளானே என்று சந்தேகப்பட வேண்டம். அது அவர்தான். சந்தேகப் பிராணிகள் இங்கு சென்று பார்க்க.

1 கருத்து:

  1. நேர்மையான முறையில் நூலனுபவத்தை எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
    இப்புத்தகம் பற்றிய எனது பதிவு http://kadaisibench.wordpress.com/2014/03/08/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

    நன்றி

    பதிலளிநீக்கு