30 ஜனவரி 2013

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 11



முந்தைய பகுதிகள்


பகுதி 9
பகுதி 10



101. பாரிமுனை டு பட்ணபாக்கம்

   
       இரு போன்ற மனிதர்களை பல முறை பல இடங்களில் பார்த்திருப்போம். அதை எப்படி ஒரு கதையாக்குவது என்பதுதான் சூட்சுமம். ஒரு குடிகாரன் டிராமில் செய்யும் அட்டகாசம். அவனது பேச்சுதான் கதை முழுவது. நன்கு ரசிக்கலாம்

102. கம்ப்ளெய்ண்ட்

       அரசாங்க அலுவலகத்தில் நாம் தரும் கம்ப்ளெய்ண்ட்களின் கதி என்ன? சாதாரண சிறு அலுவலகங்களிலேயே கஷ்டம். மிகப்பெரிய ஒரு யந்திரமான ரயில்வே பற்றி புகார் அளித்தால்? சாப்பாடைப் பற்றி ஒரு புகார், அது என்னவாகின்றது?

103. வேதாந்தியும் உப்பிலியும்

       வேதாந்தி முஸ்லீமாக மதம் மாறிவர், உப்பிலி ஒரு வாய்ச்சவடால் ஆசாமி. சீமாண்டி உப்பிலியின் அண்ணா பையன். அவர்களின் உரையாடல் தான் இக்கதை.


        நமது அரசியல்வாதிகளை நக்கலடிக்கும் கதை. டெல்லியில் யாரையாவது பார்த்திருப்பார் போல, தனியாக பார்க்க வேண்டுமா என்ன எல்லாரும் ஒரே மாதிரிதானே. உளுந்து வாரியத்தலைவருக்கு ஏகப்பட்ட மரியாதை, அதைக் கண்டு வியக்கும் ஒரு சாதரணர். அவர் ஒரு நாட்டின் மந்திரி.


        மீண்டும் உப்பிலியும் சீமாண்டியும். அவரைக் காண வரும் கோவிந்து. அவர்தான் நாதரட்சகர். தனக்குதானே அட்சதை போட்டுக் கொள்ளும் ஒரு கேரெக்டர்.

106. மிஸஸ் மாதங்கி.

        அதிகார வர்கத்தின் முகத்தைக் காட்டும் கதை. பெரிய பதவியில் இருப்பவர்கள் ஒரு தனி ரகம். அதுவும் அரசாங்க பதவியில் இருப்பவர்களை தனியாக கண்டு பிடிக்கலாம். ரயில் நிலையத்தில் நிற்கும் போது அவர்களை தனியாக கண்டு பிடிக்கலாம். ஒரு விரைத்த முகம், ஒரு அலட்சிய பார்வை, வித்தியாசமான உடல் மொழி. அப்படி பட்ட ஒரு அதிகார கோத்திரத்தின் ஒரு புள்ளி மாதங்கி. அவரிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு சாதாரண கோத்திரன்.


       ஒரு பெரிய மனிதர். அக்கால கிசு கிசு. பல பெரிய மனிதர்களின் ரசனை இப்படித்தான் இருக்கும் போல.

27 ஜனவரி 2013

சொந்த ஊர் புராணம்

எனது சொந்த ஊர் கோம்பை. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையத்திற்கு அருகில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோம்பை என்றால் மலைகள் சூழ்ந்த பகுதி என்பார்கள். ஏகப்பட்ட கோம்பைகள் தமிழகத்தில் உள்ளது. 

கோம்பை நாய்களுக்கு பெயர் போனது. வேட்டை நாய்கள். இப்போது உள்ளது போல் தெரியவில்லை. நான் பார்த்ததும் இல்லை. இரண்டு கோம்பை நாய்கள் சேர்ந்தால் ஒரு சிறுத்தையைக் கூட கொல்லும் என்பார்கள். கோம்பை நாய்களுக்கு பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கிடையாது, நேரடி நடவெடிக்கை.   எதிரியைக் கண்டு குலைத்து நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக பாய்ந்துவிடும்.

கோம்பையின் மற்றொரு பெருமை, தேர். மிகப்பெரிய தேர் திருவாருர் தேர். அது அகலம், உயரம் குறைவு. உயரமான தேர் ஶ்ரீவில்லிபுத்தூர் தேர். அதற்கு அடுத்த உயரமான தேர் கோம்பைத் தேர். இத்தேர்க்கு சொந்தக்காரரும் ரங்கமன்னார் தான். இக்கோவிலில் குடி கொண்டுள்ளவரும் ரெங்கநாதர்தான். ஊருக்கு வெளியில் மலையடிவாரத்தில் நிம்மதியாக தூங்கிக் கொண்டுள்ளார். யாரும் அவரை தொந்தரவு செய்வதுமில்லை. சனிக்கிழமைகளில், மாத முதல் தேதியில் மட்டும் அவரை எழுப்பி தங்கள் வருகையை பதிவு செய்வார்கள் பக்தர்கள். புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளும் அவர் பிசி. காலை ஆறு முதல் மாலை ஏழு வரை. மற்ற நாட்களில் அவரும் என் அப்பாவும் மட்டும்தான்.

அந்த அழகான தேர் ஜாதிக் கலவரத்தால் நின்று போனது. பத்துநாள் உற்சவம். எனக்கு தெரிந்து தேரோட்டம் மொத்தம் நான்கு முறை தான் நடைபெற்றுள்ளது இந்த முப்பது வருடங்களில்.

ஊரில் எனக்கு தெரிந்து வேறு சிறப்புகள் இருக்கலாம், ஆனால் நான் கோவிலைச் சுற்றி வளர்ந்ததால் அதைப் பற்றி தான் அதிகம் பேச முடியும். கோவில் அமைந்துள்ள அழகிய மலையடிவாரம், மேலேறினால் கேரளா. ராமக்கல் மெட்டு என்று அழைக்கப்படும். அப்பெயருக்கு காரணம் இக்கோவில்தான். 

ராமக்கல் மெட்டு பற்றி ஜெயமோகன் தளத்தில் இங்கே. அதில் குறிப்பிடப்பட்டுள்ள குறவன் குறத்தில் சிலை, இம்மலை மேல் உள்ளது. அங்கிருந்து கீழிறங்கினால் கோம்பை. 

ராமக்கல் மெட்டு பெயர்க் காரணத்தை கீழேயுள்ள புகைப்படங்கள் சொல்லும்.

24 ஜனவரி 2013

தி.ஜானகிராமன் சிறுகதைகள் - 10


முந்தைய பகுதிகள்


       அனைவரும் விரும்பும் தபால்க்காரர் தாத்தாச்சாரி, தள்ளாத வயதிலும் ஊர் ஊராக நடக்கும் பெரியவர். அவர் நடந்து நடந்து மறக்க நினைப்பது அவர் மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையை. ரயிலில் தவறான பாதையில் ஒரு முறை சென்ற மனைவியுடன் ஒரே வீட்டில் இரண்டு குடித்தனங்கள் நடத்திய நினைவை மறக்க நடக்கின்றார், நடந்து கொண்டே இருக்க நினைக்கின்றார்.

92. பஞ்சத்து ஆண்டி

     தொழில் நசிந்து போன ஒரு நெசவாளி. பஞ்சம் பிழைக்க ஊர் விட்டு ஊர் வந்து கடைசியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வருகின்றான். அவனின் நிலையைக் கண்டு பரிதாபப்படும் குரங்காட்டி அவனது மற்றொரு குரங்கை அவனிடம் தந்து அவனை அதை வைத்து பிழைக்குமாறு கூறுகின்றான். பஞ்சத்து ஆண்டிக்கு பரம்பரை ஆண்டியைப் போல் இருக்க முடியாமல், குரங்கை சாக விட்டு விடுகின்றான். பாவம்.

93. நான்தான் ராமன் நாயர்

       ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒரு வித்தியாசமான கேரெக்டர். பிழைக்க வழியில்லாமல் மருத்துவமனையில் நோயாளி என்ற போர்வையில் உண்டு உறங்கும் ஒரு ஆள். கடைசியில் அதுவே ஒரு தொழிலாகின்றது, அங்குள்ள நோயாளிகளுக்கு எடுபிடி வேலை செய்து வாழ்கின்றான். கடைசியில் ஒரு நாள் வெளியேற்றப் படுகின்றான்

22 ஜனவரி 2013

நடந்தாய் வாழி காவேரி - தி. ஜா, சிட்டி

எப்போதும் போல சுயபுராணத்துடன் ஆரம்பிக்கின்றேன். என்னிடம் எனக்கு தெரிந்த ஒரு நல்ல குணம், அடுத்தவரைப் பார்த்து பொறாமை படும் குணம் இல்லை, அவரிடம் உள்ளது நம்மிடம் இல்லையே என்று யோசித்ததில்லை, நமக்கு தேவையானது நம்மிடம் உள்ளது என்று திருப்தி படும் ஜாதி. ஆனால் இரண்டு விஷயங்களை கண்டால் மட்டும் ஒரு பொறாமை, அல்லது ஒரு வயித்தெரிச்சல் என்று கூட சொல்லலாம்.

ஒன்று காடு மலை என்று சுற்றித்திரிபவர்களையும், இசையை அதன் நுணுக்கத்துடன் அனுபவித்து ரசிப்பவர்களையும் கண்டால், என்னால் அது முடியவில்லை என்று  கண்டிப்பாக ஒரு பொறாமை ஏற்படும். டபுள் வயித்தெரிச்சல் இப்புத்தகத்தை படித்து. 

என் சொந்த ஊர் ஒரு காய்ந்த பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் என்றாலும், அது ஒரு மழை மறைவு பிரதேசம். எங்களூரிலிருந்து ஆறு கி.மீ சென்றால் முல்லையாறு, ஒரு முறைகூட அதில் குளிக்கும் பாக்கியம் கிடைத்தில்லை. ஊரிலிருந்த பத்தொன்பது வருடங்களும், வீடு, பள்ளி, புத்தகங்கள் (பாட புத்தகங்கள் அல்ல) என்றே இருந்துவிட்டேன். ஊரிலிருந்த மலையில் கூட ஏறியதில்லை. ஆனால் அனைத்தையும் செய்ய ஆசை உண்டு. அந்த ஆசை இப்புத்தகம் மூலம் நிறைவேறியது.

பயணங்களைப் பற்றி படித்தது என்றால் வெகு குறைவு. எஸ். ரா விகடனில் எழுதியது, அது எனக்கு போரடிக்க ஆரம்பித்து. ஒரு கிராமத்தில் ஆட்டு மந்தை கடந்து செல்வதை சிலாகித்து பத்து பக்கம் எழுதினால் எப்படி படிப்பது. அதன் பின் ஜெ.மோ எழுதும் பயணக்கட்டுரைகள், படிக்கும் போதும், படங்களை பார்க்கும் போதும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இப்போது கூட அவரது குகைப்பயணத்தை படித்து காதில் புகைவருகின்றது. என்ன செய்ய? 

19 ஜனவரி 2013

பயாஸ்கோப் - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் கட்டுரை தொகுப்பு. சினிமா பற்றிய கட்டுரைகள் மட்டும். அசோகமித்திரன் சினிமா துறையுடன் நெருங்கிய தொடர்புடன் இருந்து வந்திருக்கின்றார். அந்த அனுபவங்கள் ஏற்கனவே நாவல்களாக மாறி இருக்கின்றது. அதைத் தவிர சினிமா பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. 

இந்திய சினிமா, உலக சினிமா (இந்தியா வேறு உலகம் என்பது பலரின் எண்ணம் போல, பெரும்பன்மையோர் வழியே நம் வழி) பற்றி விபரமாக எழுதியுள்ளார். 

கட்டுரைகளை சினிமா புள்ளிகளை பற்றியவை, குறிப்பிட்ட சினிமாக்களை பற்றியவை, ஜெமினி ஸ்டூடியோவின் வரலாறு (கிழக்கில் இருந்து ஏன் இன்னும் ஜெமினி ஸ்டூடியோ - கனவின் கதை வரவில்லை?)  என பல வகையாக பிரிக்கலாம். பல சுவாரஸ்யமான தகவல்களை அவருக்கே உரித்தான சுருக் நறுக் நடையில் எழுதியுள்ளார். சில தகவலகள் மிகப் பழையவை, அது தேவையா, அது ஏன் இப்போது என்று கூட எண்ணலாம், அதற்கு பதில் அவரே தருகின்றார். "மனித நினைவு, மனித தேர்விற்கும் கட்டுபாட்டிற்கும் உட்பட்டதா என்பது சந்தேகத்திற்கு உரியது"

18 ஜனவரி 2013

சங்கர்லால் துப்பறிகின்றார் - தமிழ்வாணன்

பொங்கல் விஜயத்தின் போது ஊரில் படித்தது. அப்புத்தகம் எப்படி என் வீட்டில் வந்தது என்று இன்னும் தெரியவில்லை. எப்போதோ எங்கோ ஓசி வாங்கி வைத்திருந்திருக்கின்றேன். குப்பையை குடைந்த போது கிடைத்தது. பொங்கல் தின்ற மயக்கத்தில் அரைத் தூக்கத்தில் படிக்க ஆரம்பித்தேன். நடுநடுவே தூக்கம் கலைக்க அலுவலகத் தொல்லைகள். மீண்டும் தூக்கத்தை விரட்டிப் பிடிக்க உதவி செய்த புத்தகத்தை பற்றி எழுதாவிட்டால் தூக்கம் வருமா?

தமிழ்வாணனின் சங்கர்லால் கதாபாத்திரம் அக்காலத்தில் மிகவும் பிரபலம் என்று கேள்விபட்டிருக்கின்றேன். அவரும் பிரபலம்தான், தொப்பியும் கண்ணாடியும் மட்டுமே விலாசத்தில் போட்டால் போதும், கடிதங்கள் அவருக்கு போய்சேர்ந்துவிடும் என்பதாக சரித்திரம் சொல்கின்றது. 

பல கதைகள் மூலம் பிரபலமானவர். இக்கதை மிக முக்கியமானது, சங்கர்லாலுக்கு திருமண ப்ராப்தம் இக்கதையில் தான் கிடைத்துள்ளது. 

கதை எல்லாம் அக்கால கதை, ஒரு பணக்காரர் கொலை செய்யப்படுகின்றார். கையில் கத்தியுடன் அவரது பெண் பிடிபடுகின்றார். அவளைப் பார்த்து கண்ணீர் விடும் போலிஸ்காரர் வகாப், சங்கர்லாலை துப்பறிய அழைக்கின்றார். அவர் ஸ்டெயிலாக மாது குடுத்த தேநீரை குடித்துக் கொண்டே மர்மங்களை அவிழ்த்து, கத்தியுடன் பிடிபட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றார்.

சங்கர்லால் ஒரு வானத்தில் பறக்கவில்லை அவ்வளவுதான், மற்றபடி அவர் ஒரு மேதாவி. ஹோட்டல் பையன் கூட அவருக்கு திருமணம் ஆகவில்லையே என்று விசனப்படும் அளவிற்கு பிரபலம். சிகரெட் பெட்டியில் கேமெரா, பெண்வேடம், கான்ஸ்டபிள் வேடம் என பல வழிகளில் புகுந்து குற்றவாளியை கண்டு பிடிக்கின்றார்.

தூக்கம் வர வேண்டுமா, கண்டிப்பாக படியுங்கள் என்று சிபாரிசு செய்கின்றேன்.  கண் மேல் பலன் கிடைத்தது எனக்கு. தலைப்பு கூட சரியா என்று சந்தேகம் வருமளவிற்கு படித்துள்ளேன். 

16 ஜனவரி 2013

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 9

முந்தைய பகுதிகள்




      செல்லுர் சொர்ணாம்பாவின் அழகு அக்கரைச் சீமை வரை பிரபலம். சிங்கப்பூரில் இருக்கும் கோவிந்த வன்னி அங்கு வரக்காரணமே அச்சொர்ணாம்பா. அவளின் ஒரு நாள் பணத்தை சம்பாதிக்க சிங்கப்பூர் வந்த கோவிந்த அதை சம்பாதித்து முடிக்க பத்து வருடங்கள் ஆகிவிட்டன. "ஒரு நாளுக்காக பத்து வருட உழைப்பா? அந்த ஒரு நாளுக்கு பின் மீண்டும் அதே உழைப்பிற்கு திரும்ப வேண்டுமே" என்று கூறும் நண்பரிடம் "அப்புறம் உயிர் வாழணும்தான் என்ன முடை? உசிரே இல்லாம இருந்திட்டா?" என்னுமளவிற்கு அவளின் நினைவு. திரும்பி வந்து பார்க்கும் போது, அவளுக்கு அறுபது வயது. அவனது தவத்தின் தரிசனம் விபரீதமாகிவிட்டது


       போன பதிவில் கூறியது போல பாயசம் அவரது மாஸ்டர் பீஸ் எனறால் இது அதை விட ஒரு படி மேலே என்றுதான் எனக்கு படுகின்றது. மிக அருமையான கதை. இரண்டு சம்பவங்களை இணைத்து ஒரே மூச்சில் எழுதியதாக கூறுகின்றார் தி.ஜா. ஒரு குட்டிப் பெண், கண்காணாத சீமைக்கு ஒரு பாவடைச் சட்டையுடன் வேலைக்கு போகின்றாள். அக்குழந்தையின் பொறுப்புணர்வும், தைரியமும், சமர்த்தும் அனைவரையும் கவர்கின்றது, கரைக்கின்றது. குமாஸ்தாவின் குட்டிப் பையனை அவன் தனக்கென்று வாங்கிய பழத்தை அப்பெண்ணிடம் தர வைக்கின்றது. கதை எழுதிய விதமும், குழந்தைகளின் உலகத்தை அவர் படம்பிடித்துள்ளதும், என்ன சொல்ல. படித்து முடித்தபின் அக்குழந்தை என்னவாகும், எங்கோ நன்றாக இருக்கும், இருக்கட்டும் என்று நம்மையறியாமல் வேண்ட வைக்கின்றது. எங்காவது சிறு குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டால் இக்கதை நினைவிற்கு வராமல் போகாது.

11 ஜனவரி 2013

தெய்வீக உணவு

அம்மா எப்போது ஊருக்கு போனாலும் எங்கள் ஊர் முருகன் கோவிலில் உள்ள பிள்ளையாருக்கு ஒரு நப்பாசை துளிர் விடும். ஒரு விடல் தேங்காய் கிடைக்கும் என்று அவர் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார். எப்படி நடக்கும்? வேண்டுதல் என் பாட்டியுடையது என்றாலும்,  அது நிறைவேறுவது என் கையில் அல்லவா இருந்தது. என் பாட்டி என்றால் எல்லாருக்கும் ஒரு டெரர்தான். அனைவருக்கும் ஒரு பயம். அவருக்கும் யாரும் லட்சியம் கிடையாது, தடால் புடால் தான். அவர் எங்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு பார்த்ததில்லை, ஆனால் தலையில் பீரோ விழுந்து அடிப்பட்ட கட்டுடன் தலைக்கு குளித்துவிட்டு கோவிலுக்கு பொங்கல் பிரசாதம் போட போய்விடுவார். அப்படி பட்ட பாட்டி;

" அப்பா பிள்ளையாரப்பா, இந்த பையன் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு போகடும் உனக்கு ஒரு விடல் போடுகின்றேன்" என்று வேண்டிக் கொள்வாள்.

பாவம் அது என்றும் நடந்ததில்லை.

இந்த சாப்பாட்டு ராம புத்தியால் பல பேர் சாபத்தை வாங்கிக் கொண்டுள்ளேன்,

அப்படி வக்கனையாக சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் பெங்களூரில் வந்து மாட்டிக் கொண்டேன். அனைவரின் சாபமும் வேறு வழியில் வேலையைக் காட்டத் துவங்கியது. இனிப்பு சாம்பாரும், புளித்த சட்னியும், தகடு தோசையுமாக என் வாழ்க்கை போனது. அதைக் கூட சகித்துக் கொண்ட எனக்கு, பொங்கல் என்ற பெயரில் தரப்படும் கஞ்சியையும் அதற்கு தொட்டுக் கொள்ள தரப்படும் தயிரும் தாங்க முடியவில்லை. அப்படியும் அதைக் குடித்துக் கொண்டு உயிருடன் வாழ்ந்தேன்.

07 ஜனவரி 2013

தி. ஜானகிராமன் சிறுகதைகள் 8


இதுவரை எழுதியது அனைத்தும் தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1ல் உள்ள கதைகள். இனி வருவது தொகுதி 2ல் உள்ள கதைகள். இந்த பதிவில் வரும் பத்துக் கதைகளுமே அற்புதமானவை, எனக்கு மிகவும் பிடித்தவை. முதல் தொகுதியில் உள்ள கதைகளை விட இது எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

71. கொட்டு மேளம்

           ஒரு ஏமாந்த சோணகிரி டாக்டர். மற்றவர்கள் எல்லாம் ஒஹோ என்றிருக்க அவர் மட்டும் அதே ஊரில் ஏமாந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு பணம் தரவேண்டியவன் தேர்தலில் ஜெயித்து, கொட்டு மேளத்துடம் ஊர்வலம் போகின்றான். அவருக்கு வரும் பெண்ணும் அவரைப் போலவே இருக்கின்றாள். ஏமாறுவதில் கூட கொஞ்சம் சந்தோஷம்.

72. சண்பகப் பூ

         சுடர் மாதிரி ஒரு பெண். வெகு அழகான பெண், இளம் வயதில் திருமணமாகி கணவனையும் இழக்கின்றாள். கணவனின் அண்ணன் அவளை படிக்க வைக்க அழைத்துச் செல்கின்றான். தாத்தா செண்பகப் பூவை முகர்ந்தால் ரத்தம் வராமல் போகுமா என்கின்றார், பாட்டி எல்லாருக்கும் வராது என்கின்றார். ரத்தம் வராதவர்கள் பூவை கொண்டாடலாம், அனுபவிக்கலாம். கணவனின் அண்ணனுக்கு ரத்தம் வந்தது போல் தெரியவில்லை. இதைவிட பூடகமாக அந்த உறவைக் கூற முடியாது. செண்பகப் பூ தான் தெரியும், அதை முகர்ந்தால் மூக்கிலிருந்து ரத்தம் வருமா என்ன?

05 ஜனவரி 2013

1945ல் இப்படி இருந்தது - அசோகமித்திரன்

மற்றுமொரு அசோகமித்திரனின் சிறுகதை தொகுப்பு. முன்பு சொன்னதே மீண்டும். இது ஒரு சிறிய அறிமுகம், கதையின் அனுபவம். அவ்வளவே

காலச்சுவடு பதிப்பகத்தின் புத்தகம். ஒரு விநோதம், ஒரே பக்கம் இரண்டு தடவை அச்சாகியுள்ளது. தலைப்பு இரண்டு தடவை, நூல் அறிமுகம் இரண்டு தடவை, மறுபடியும் உள் தலைப்பு இரண்டு தடவை, அட்டவணை இரண்டு தடவை. பார்த்ததும் பயந்து போனேன். கதைகளும் இரண்டு இரண்டு பக்கம் இருக்குமோ என்று. நல்லவேளை இல்லை.

அசோகமித்திரனின் செகந்திராபாத், சென்னை அனுபவங்கள் கதையாகியுள்ளது, சாதாரணச் சம்பவங்கள் என்று தோன்றுவது எப்படி ஒரு கதையாக மாறுகின்றது என்பதற்கு உதாரணம் இக்கதைகள்.
1. கோல்கொண்டா

       கோல்கொண்டா எப்போதோ என் மாமா போய்விட்டு வந்து காட்டிய புகைப்படங்களில் பார்த்தது. அதைப் பற்றி அதிகம் கேள்விபட்டதுமில்லை.  கோல்கொண்டாவை ஆண்ட மன்னன் டணாஷா, கோல்கொண்டா மீது படையெடுத்து வருகின்றான் ஒளரங்கசீப். இவனைப் பற்றி மதனின் தயவால் கொஞ்சம் தெரியும். ஒளரங்கசீப்பின் விநோத நிபந்தனையை நிறைவேற்ற முடியாமல் இருப்பதால், டணாஷவிற்கு அவனை எதிர்ப்பதை விட வேறு தெரியவில்லை. கடைசியில் அவனது மந்திரி மாதண்ணா, அந்நிபந்தனையை நிறைவேற்றுகின்றார்.

2. உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள வித்தியாசம்*
       
          நீண்ட தலைப்பு. உண்மையை அப்படியே புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. பெரும்பாலும் உண்மைக்கும் புரிதலுக்கும் நடுவில் ஒர் இடைவெளி இருக்கும் சாத்தியம் அதிகம். குழந்தையில்லா தம்பதியர் வீட்டில் உறவாக வரும் அத்தை, அவள் இறந்த பின் தெரியவரும் உண்மை, தம்பதியரின் நெருக்கத்தை காட்டுகின்றது. தலைப்பையும் முடிவையும் சேர்த்தால் அவர்களுக்கு ஏன் குழந்தையில்லை என்று ஒரு யூகம் செய்ய வைக்கின்றது. கதை ஏற்கனவே கேள்விபட்ட கதை, படத்தில் கூட நகைச்சுவை பகுதிகளில் வந்துள்ளது என்று நினைக்கின்றேன்.

03 ஜனவரி 2013

அழிவற்றது - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் நாவல்களை விரட்டி விரட்டி படித்தபின் அவரது சிறுகதைகள் மேல் கவனம் திரும்பியது.  ஒரு எழுத்தாளனின் விஸ்வரூபம் அவரது சிறுகதைகளில் தான் தெரியும். தி. ஜா, சுஜாதா இவர்கள் இருவரின் சிறுகதைகள் அவர்களது நாவலைவிட அதிகம் சிறபபானதாக எனக்கு தோன்றுகின்றது.

அசோகமித்திரனின் அனைத்து சிறுகதைகளின் தொகுப்பை தேடித்தேடி களைத்துப் போனேன். மதுரையில் அசோகமித்திரனின் கதை என்றால் விற்பனைப் பெண் முழிக்கின்றார். பெங்களூர் புத்தக கண்காட்சியிலும் தேடினேன் இல்லை. காலச்சுவடில் அவரது சமீபத்திய சிறுகதைகள் என்று இரண்டு தொகுப்பு பார்த்தேன். வாங்கும் முன் சந்தேகம் வேறு, அண்ணே இது பெரிய தொகுப்பில் உள்ள கதைகளா? இல்லை புத்தம் புதுசா என்று கேட்டேன். சார் அப்படி எல்லாம் வராது, இது எல்லாம் புதிது என்று கூறி அனுப்பிவைத்தார். முழுத் தொகுப்பை பார்த்தால் தான் தெரியும்.

அவரின் ஒற்றன் நாவலே ஒரு சிறுகதை தொகுப்பு போலத்தான். நாவல்களிலேயே சுருங்கச் சொல்லி விரையும் அவரின் சிறுகதைகள் அதைப் போலவே கச்சிதம்.

ஒரு சில கதைகளைப் படித்தால் இது என்ன கதை என்று தோன்றாமல் இல்லை. இதை எழுத என்ன அவசியம், இதனால் நீவிர் சொல்ல வந்த சேதி என்ன என்று கேட்கத் தோன்றுகின்றது. சில கதைகள் குழந்தைகளுக்கான கதையாகவும் உள்ளது, நன்னெறி வகுப்புகளுக்கான கதைகள். ஒரு சில கதைகள் கதை என்று கூற முடியாதபடி ஒரு சம்பவத்தை கூறிச் செல்கின்றது முடிச்சுகளோ சிக்கல்களோ இல்லாமல் வாழ்வின் ஒரு பகுதியை முழுமையாக பார்க்கும் அனுபவம். சில கட்டுரையாக போக வேண்டியது, அவரின் திறமையால் கதையாக வாழ்வு பெற்றுள்ளது.

அழிவற்றது என்பது பவுதீகத்தின் ஒரு விதி. "ஆற்றல் அழிவற்றது".

01 ஜனவரி 2013

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 7


முந்தைய பகுதிகள்


பகுதி 4

61. சந்தானம்

        எனக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும், நாய்கள் போன்று விசுவாசமானவை அல்ல என்றாலும், குழந்தை போல நம் மீது உரிமை எடுத்து விளையாடும். முத்தையா என்னும் சாகச போலிஸ்காரருக்கு பூனை என்றால் கொள்ளை பயம், அவரின் எதிர் வீட்டுக் காரருக்கு பூனைதான் குழந்தை. முத்தையாவின் பூனை பயம் யாருக்கும் தெரியாது. முதலியார் வளர்த்த பூனையை வைத்து, முத்தையாவின் மகன் அவரை பயப்படுத்தியதால் முதலியாருக்கும் அது தெரியவருகின்றது. முத்தையா இறந்த நாளன்று, பூனை கிணற்றில் விழ, முதலியார் துடித்து போகின்றார். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், தமக்கு வலி வந்து துடிப்பதை விட, அவைகளின் வலி கண்டு துடிப்பது அதிகம்.


      ஈகோ (சரியான தமிழ் வார்த்தை என்ன?). மனிதனின் மனதினுள் உள்ள அழுக்குகளை, அதன் விகாரங்களை, அதன் நியாய அநியாய வாதப்பிரதிவாதங்களை இது போல வேறு எந்தக் கதையும் சொன்னதில்லை அல்லது நான் படித்ததில்லை. தி.ஜாவின் மாஸ்டர் பீஸ். சாமநாது தன் அண்ணண் மகனைக் கண்டு பொறாமைப் படும் ஒரு வலுவான, வயதான பெரியவர். அவரின் மனதிற்குள் நடக்கும் போராட்டங்களை, அழுக்கை அழகாக எழுதியுள்ளார். ஆரம்ப வர்ணனையிலிருந்து, அவரின் மனதிற்குள் நினைக்கும்  சம்பாஷணைகள், இறுதியில் அவர் பாயசத்தை கவிழ்த்துவிட்டு ஒரு கணம் தடுமாறும் நிலை வரை அருமையான விவரிப்பு. அருமையான நடை. அந்த காவேரித்தமிழை இவரை விட அழகாக செய்தவர்கள் யாரவது உள்ளார்களா?