29 ஏப்ரல் 2013

சொர்க்கத் தீவு - சுஜாதா

சுஜாதாவின் முதல் சைன்ஸ் ஃபிக்‌ஷன். ஒரு அய்ங்காரின் (கவனிக்க அய்யங்காரின் அல்ல) அனுபவம். எதில் தொடராக வந்தது என்று தெரியவில்லை. எப்படி சைன்ஸ்ஃபிக்‌ஷன் என்பதற்கு பதில் சுஜாதாவின் முன்னுரையிலேயே இருக்கின்றது. ஒரு எதிர்கால சமுதாயம் இப்படி இருக்க வாய்ப்புள்ளது. 

அய்ங்கார் ஒரு கம்ப்யூட்டர் ஆசாமி. பழைய கம்ப்யூட்டர். (கதை எழுதப்பட்டது ). மாதம் 2000 ரூபாய் சம்பளத்தை எப்படி செல்வு செய்வது என்பதை வேலைக்கு நடுவில் யோசிக்கும் ஒருவன். அலமேலு என்னும் ஒரு மசால்வடை மூலம் அய்ங்காரை பிடித்துக் கொண்டு சொர்க்கத்தீவிற்கு செல்கின்றனர் ஒரு கூட்டம். அவனை தூக்கிக் கொண்டு போகக் காரணம் அங்கிருக்கும் ஒரு கம்ப்யூட்டரை சரி செய்ய.

முதலில் முரண்டு பிடிக்கும் அவன் மெதுவாக ஒத்துழைக்க எண்ணும் அவனுக்கு அத்தீவின் நடைமுறைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. //இன்று எத்தனை பேர் பிறக்க வேண்டும், எத்தனை பேர் இறக்க வேண்டும் என்பதை சரியாக கணிக்கவில்லை. அதனால் சிலர் கொல்லப்படவில்லை// தீவின் தலைவர் ஆத்மா. ஒரே ஒரு மூன்றெழுத்துக்காரர். மற்றவர்கள் எல்லாம் பெரி, பொரி, சரி என்று இரண்டெழுத்து ஆசாமிகள்.

எல்லருக்கும் ஒரே மாதிரியான ஆடை, ஒரே மாதிரி உணவு, ஒரே மாதிரி உறைவிடம். ஒரிஜினல் கம்யூனிசம். சர்வமும் கம்ப்யூட்டர் கையில். யார் இருக்கலாம், யார் இறக்கலாம், யார் என்னெ செய்ய வேண்டும் எல்லாம் கம்ப்யூட்டர். மனிதனின் ஆதார உணர்ச்சிகளை மருந்துகள் மூலமும், பயிற்சிகள் மூலமும் மட்டுப் படுத்தி ஒரு பொம்மைகளை போல வைத்திருக்கும் தீவு. சொர்க்கத்தீவு.

" ஆடு கூட தழை தின்னாமல் இருக்க நினைத்தால் தின்னாமல் இருக்கலாம், இங்கு மக்களால் அது கூட முடியாது".

"எங்கள் தமிழில் மொத்தம் ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் கிடையாது"

"அம்மா என்று கூறும் போதெல்லாம் அக்குழந்தைகளுக்கு மெல்லிய மின் அதிர்ச்சி குடுப்போம்"

இதில் ஒருவனுக்கு மட்டும் எப்படியோ சுய உணர்ச்சி வருக்கின்றது. அவனால் உணர்ச்சி பெற்ற அவன் காதலியும் இணைந்து சொர்க்கத்தீவை மாற்ற முயன்று அய்ங்காரிடம் உதவி கேட்கின்றனர். அய்ங்காரின் உதவியும் தோல்வியில் முடிகின்றது.

ஊருக்கு கிளம்பும் முன் ஒரு சிறிய வேலையால் அய்ங்கார் அத்தீவை மாற்றத்தின் பாதையில் திருப்பி விட்டு வருகின்றான். மீண்டும் கடத்திக் கொண்டு போகப்பட்டால் புதிய தீவைக் காணலாம்.

சைன்ஸ்ஃபிக்‌ஷனுக்கு சைன்ஸ்தேவையில்லை என்கின்றார் சுஜாதா. அவரின் கருத்துப்படி பாரதியாரின் காக்கை பார்லிமெண்ட்டே ஒரு சைன்ஸ்ஃபிக்‌ஷன். எதிர்கால சமூகம் முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர்களால் நடத்தப்படும் என்னும் அவரது கற்பனை / யூகம் கொஞ்ச கொஞ்சமாக நடந்துவருகின்றது.

கதை வழக்கமான சுஜாதாத்தனமான விறுவிறுப்பு. கதாநாயகன் தேவையற்ற சாகசங்கள் எல்லாம் செய்வதில்லை. நமக்கு தெரியும் கதநாயகன் எப்படியும் அம்மக்களை காப்பாற்றி விடுவான் என்று, அதை எப்படி செய்வான் என்பதே முடிச்சு. அதை தெளிவாக, புத்திசாலித்தனமாக அவிழ்த்துள்ளார்.

கம்ப்யூட்டர் சம்மந்தப்பட்ட தகவல்கள் இன்றைக்கு பழையதாக தெரியலாம். ஒவ்வொரு பதிப்பின் போது மாற்றிக் கொண்டிருப்பது சாத்தியமல்ல. அதை விட்டு பார்த்தால் ஒரு விறுவிறுப்பான கதை.

எழுதிவிட்டு தேடினால் பால்ஹனுமான் தளத்தில் ஒரு விமர்சனம் கிடைத்தது. தோத்தாத்ரி என்பவரின் விமர்சனத்தை படித்து அசந்துவிட்டேன். ஆய்வு கட்டுரையாம். ப்ரமாதம்.// ஒரு வகையான கம்யூனிச எதிர்ப்பை காணலாம்// இது உண்மையென்றால் அதற்காகவே அனைவரும் படிக்கலாம்.

23 ஏப்ரல் 2013

என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ - சுஜாதா

விஞ்ஞான கதைகள் என்றால் முதலில் நினைவிற்கு வருவது சுஜாதாதான். அதன் பின்னால்தான் மற்றவர்கள். யார் அந்த மற்றவர்கள் என்று யோசிப்பவர்களுக்கு எனக்கு தெரிந்து சில ராஜேஷ்குமார், ஆர்னிகா நாசர், மாலன், ஜெயமோகன். விஞ்ஞான சிறுகதைகள் சுலபம், நாவல்கள் சற்று கடினம்.

என் இனிய இயந்திராவும், மீண்டும் ஜீனோவும் விகடனில் தொடராக வந்தது. நாவலின் வெற்றிக்கு காரணம் ஜீனோ. ஒரு பெரிய கிரேக்க மேதையின் பெயரைக் கொண்ட நாய். ரோபாட். இயந்திரம். அது அனைவரையும் கவர்ந்ததற்கு காரணம், அதன் மனிதத்தன்மை. இதே ஒரு இயந்திர மனிதனை அங்கு வைத்திருந்தால் இந்தளவிற்கு கவர்ந்திருக்காது. ஒரு நாய் விஞ்ஞான முன்னேற்றத்தினால் மனிதனைப் போல சிந்திக்க ஆரம்பித்ததுதான் கதையின் பெரிய பலம்.

கதை எதிர்காலத்தில் ஏதோ ஒரு நாளில் ஆரம்பிக்கின்றது. மனிதர்களின் பெயர்கள் சுருக்கப்பட்டு, பிறப்பும் இறப்பும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் ஒரு காலம். நிலா - சிபி. அவர்களின் வீட்டில் உள்ள அறையில் தங்க அனுமதிக்கப்பட்ட விருந்தாளி ரவி. ரவியுடன் வரும் நாய். தத்துவம் படிக்கும் நாய். நிலாவின் கணவன் காணமல் போக, கதை சுறுசுறுப்பாகின்றது. தலைவர் ஜீவாவை சந்திக்கும் நிலா கடைசியில் ரவியின் கூட்டத்துடன் சேர்ந்து ஜீவாவை கொல்ல துணிகின்றாள். ஜீனோவின் உதவியுடன் ஜீவாவின் பின்னால் உள்ள சதியை கண்டுபிடிக்கின்றாள். பெரும்பாலானவர்கள் படித்திருப்பார்கள் அதனால் கதையின் முடிவை சொல்வதில் தப்பில்லை. படிக்காதவர்கள் கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்.

20 ஏப்ரல் 2013

மகாபாரதம்

நான் அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் டவண்டை அடிக்கும் விஷயம், நான் ஒரு மகாபாரத பைத்தியம். சிறுவயதில் இதை ஆரம்பித்த பெருமை தூர்தர்ஷனுக்குத்தான்.ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும் போது டிவியில் தொடராக வந்தது. அதோடு தினமலர். தினமலரில் முதல் நாள் அடுத்த நாள் காட்சிகளின் வசனம் வரும். சிறுவயதில் புத்தகம் படிக்கும் வழக்கம் இருந்ததால் அதை சுவாரஸ்யமாக படிக்கவும் முடிந்தது. வசனம் புரிந்து பார்க்கும் போது இன்னும் பிடித்து போனது.

முதலில் பிடித்ததற்கு காரணம் அதில் வரும் சாகசங்கள். போர் முறைகள், சண்டை, வில் அம்பு, கதை என்று சிறுவர்களை கவரும் அனைத்தும் போதுமான அளவிற்கு இருந்தது. இன்னும் என்னால் அதன் கதாபாத்திரங்களை கண் முன் கொண்டுவர முடிகின்றது. நல்ல காஸ்டிங், சகுனி, துரியோதனன், பீமன், கிருஷ்ணன் (நிகில் பரத்வாஜ்?), பீஷ்மர் எல்லாம் கனகச்சிதம். இதை எழுதும் போது கர்மம் புதிய மகாபாரதம் நினைவில் வந்து தொலைக்கின்றது. சை.

ஏழாவது படிக்கும் போது என் தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டிற்கு போகும் போது அங்கு பாரதம் அனாதையாக கிடந்தது. திரும்பி வரும்போது பதுக்கிக் கொண்டு வந்துவிட்டேன். வந்த வேகத்தில் படித்தேன். பல நாட்களுக்கு அது உள்ளேயே ஓடிக் கொண்டிருந்தது. நான்கு புத்தகங்கள். ஆதி பர்வம், சபாபர்வம், வன பர்வன் இரண்டு புத்தகங்கள், யுந்த பர்வங்கள் ஒரு புத்தகம், சாந்தி பர்வம் முதல் ஒரு புத்தகம். யார் எழுதியது ஒரு விவரமும் நினைவில் இல்லை. 

14 ஏப்ரல் 2013

தண்ணீர் - அசோகமித்திரன்

தண்ணீர் ஒரு மணி நேரத்தில் படித்து முடித்துவிடக் கூடிய் ஒரு குட்டி நாவல். ஆனால் அது எளிதல்ல. அது தரும் தாக்கம் அதை அப்படி எளிதில் படிக்க விடாது. 

"யாரோ ஒரு பெண் தண்ணீருக்காக இங்கும் அங்கும் அலைந்ததை தொடர்ச்சியாக பார்த்ததன் விளைவு இக்கதை" என்கின்றார் அசோகமித்திரன்.

தண்ணீர் பிரச்சினை என்றுமுள்ள ஒரு விஷயம். என் ஊரில் முன்பு தண்ணீர் பஞ்சம் படு பயங்கரம், பக்கத்து தெருவில் போய் தண்ணீர் சுமந்து வருவார்கள். வீட்டில் விஷேஷம் என்றால் தண்ணீரை விலைக்கு வாங்கி கொண்டு வருவோம். மழை பெய்யும் போது பிடித்து வைத்துக் கொள்வோம். பின்னர் முல்லையாற்றிலிருந்து தண்ணீர் வீட்டிற்கே வர ஆரம்பித்தது. கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டோம். ஆனால் இப்போதும் சில சமயம் வாரக்கணக்கில் தண்ணீர் வராமல் போய்விடும். இன்றும் தண்ணீரை ட்ரம்மில் கொண்டு வருவது நடக்கிக்ன்றது. ஆனால் முன்பிருந்த கொடுமை இல்லை. இப்போது தண்ணீருக்கு பதில் மின்சாரம்.

இக்கதை அது போன்ற ஒரு கொடுமையான தண்ணீர் பிரச்சினை காலத்தை பேசுகின்றது. அது ஒரு பின்புலம், அதன் மேல் இரண்டு சகோதரிகளின் கதை. அசோகமித்திரனின் தனிப்பட்ட பேட்டிகளை படிக்கும் போது அவர் கூறுவது வாழ்க்கை மேல் எவ்வித குற்றச்சாட்டுமில்லை, வருவதை ஏற்றுக் கொண்டேன் என்பது. அவரது கதைகளும் அவரைப் போலவே, வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து நம்மை கூறுபோடுவதில்லை. வாழ்க்கையை ஒரு அடி தள்ளி நின்று நமக்கு காட்டுகின்றது. நாம் அதை புரிந்து கொள்ள வேண்டியதுதான். 

08 ஏப்ரல் 2013

என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

பெங்களூர் புத்தக கண்காட்சிக்கு சென்ற போது கண்ணில் பட்டது. ஏற்கனவே கேள்வி பட்டிருந்ததால் வாங்கினேன். ஸ்டாலில் இருந்தவர், "சார் இவரின் காகித மலர்கள், படிச்சிருக்கீங்களா. நல்லா இருக்கும் சார்" என்றார்." ஏற்கனவே சில புத்தகங்களில் வாங்கிய சூடு இன்னும் ஆறாததால் "முதல்ல இத படிப்போம் சார், நல்லா இருந்தா அப்புறம் வாங்கலாம்" என்று கூறிவிட்டு வந்தேன். வாங்கியிருக்கலாம்.

புத்தகத்தின் அட்டைப்படமே கதையை முழுவதும் காட்டுகின்றது. முகமூடி அணிந்த ஒரு கோமாளி. ராம்சேஷ் என்னும் ஒரு காசனோவாவிற்கு உள்ளே ஒளிந்திருக்கும் ராமசேஷனின் கதை.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ள ஒரு முகமூடி இருக்கும். மனைவியிடம் ஏன் உற்ற நண்பர்களிடம் கூட மாட்டிக் கொள்ள ஒரு முகமூடி இருக்கும். தனிமையில் இருக்கும் போது நம்மையே இது தான் நாம் என்று நம்ப வைக்க ஒரு முகமூடி இருக்கும். அதை ஒரு கை திறக்க விரும்பினாலும், மறு கை அதை விடாமல் இழுத்து மாட்டிக் கொண்டே இருக்கும்.அந்த முகமூடிகளை கிழித்து தோரணம் கட்டியுள்ள புத்தகம். ஒவ்வொருவருக்கும் அடுத்தவரிடம் நிரூபிக்க ஏதோ ஒன்று இருக்கின்றது. அந்த அபத்தத்தை வெட்ட வெளிச்சமாக காட்டுகின்றது இப்புத்தகம்.

ராமசேஷன். ஒரு கர்நாடக பெயர். கேட்டாலே ஒரு படு ஆச்சரமான மாமாதான் நினைவில் வருகின்றார். ஏதோ அது போல ஒருவர்தான் கதை நாயகன் என்று நினைத்தேன். ராமசேஷன் ஒரு நடுத்தர வர்க்கத்து பிராமண பையன். அவன் கல்லூரிக்கு செல்வதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது. ராம்சேஷன் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள், ஒவ்வொருவரிடமும் அவன் ஆடும் விளையாட்டு.