25 செப்டம்பர் 2013

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

விகடனில் வந்த தொடர்கதை. அந்த காலத்தில் பலரையும் கவர்ந்த கதை. ஆனந்த தாண்டவம் என்ற பெயரில் சினிமாவாகவும் வந்திருக்கின்றது.

மதுமிதா, ரகுபதி, ரத்னா, ராதா கிஷண். இவர்களை மையமாக வைத்து ஓடும் கதை. ரகுபதிக்கு நிச்சயம் செய்யப்பட்ட மதுமிதாவை புயல் போல கடத்திக்கொண்டு அமெரிக்கா போகும் ராதாகிஷண். அந்த தோல்வியினால் தூண்டப்பட்டு படிக்க அமெரிக்கா போகும் ரகுபதி, அங்கு அமெரிக்காவால் ஜீரணம் செய்யப்பட்ட மதுமிதாவை மீண்டும் சந்திக்கின்றான். மதுமிதாவால் அறிமுகம் செய்யப்பட்ட ரத்னாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் போது, மதுமிதாவின் மறு பிரவேசம். கடைசியில் அமெரிக்கா மதுமிதாவை ஒரு பெட்டியில் அடக்கி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கின்றது.

கதை ஒரு சாதாரண கதை. அதை சொல்லும் விதத்தில்தான் கதையின் முழு வெற்றியும் அடங்கியுள்ளது. சுஜாதாவின் கதை சொல்லும் திறன் கதைக்குள் நம்மை இழுக்கின்றது. அழகான வர்ணனை, சின்ன ட்விஸ்டுகள், சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமான சம்பவங்கள் என்று அடுத்தடுத்து இழுத்து கொண்டு போய்விடுகின்றார். முதல்பாகத்தில் பாபநாச சிலுசிலுப்பில் இருக்கும் கதை, அடுத்த பகுதியில் அமெரிக்க வேகத்தில் பறக்கின்றது.

14 செப்டம்பர் 2013

வேதபுரத்து வியாபரிகள் - இந்திரா பார்த்தசாரதி

கல்கியில் 1994ல் வந்த அங்கத நாவல் (அப்படின்னா என்னா?).  எதை வேண்டுமானாலும் மிகைப்படுத்தலாம், அரசியலில் அதை செய்ய முடியாது. நமது அரசியல்வாதிகள் அதை உண்மையாக்கி தொலைத்து விடுவார்கள். கற்பனை நாவலுக்கு பதிலாக எதிர்கால குறிப்பு கிடைக்கும். சோ அப்படித்தான் ஒரு தீர்க்கதரிசியாகிவிட்டார். அது போன்ற ஒரு நாவல்.

இது போன்ற நாவலுக்கு கதை எல்லாம் தேவைதானா? இருந்தும் அப்படி ஒரு வஸ்து இருக்கின்றது. வேதபுரம் என்பது ஒரு கற்பனை நகரம். நமது தமிழகத்தின் பிரதிபலிப்பு. வேதபுரத்து தலைவர் அரூபமாக ஆண்டு கொண்டிருக்கின்றார். அவரை கண்டு, வேதபுரத்தை வைத்து பேட்டி எடுக்க வரும் அபூர்வா, எப்படி வேதபுர ராணியாகின்றாள் என்பது கதை. 

முழுக்க முழுக்க திராவிட இயக்கத்தவர்களை தான் வாரியிருக்கின்றார். தமிழ் கலாச்சாரம் என்று பேசிவிட்டு இரண்டு மனைவி வைத்துக் கொள்வது, அடை மொழி வைத்துக் கொண்டு திரிவது, சுயமரியாதை என்று பேசிவிட்டு தலைவருக்கு ஜால்ரா அடித்துப் பிழைப்பது, கடவுள் சிலையை வணங்குவதை கிண்டலடித்துவிட்டு தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்குவது, புராணங்களை தூற்றி விட்டு தலைவர்கள் மீது புராணங்கள் எழுதிக் குவிப்பது, அரசியலுக்கும் சினிமாவிற்குமான தொடர்பு, என்று கடைத்த இடத்தில் எல்லாம் போட்டு தாக்கியுள்ளார். படிக்க சந்தோஷமாக இருந்தது.

அவர் எழுதிய சில நடந்தும் தொலைத்து விட்டன, இஷ்டப்படி மந்திரிகளை மாற்றுவது, 8450 நொடி உண்ணாவிரதம் இருப்பது, மிருகங்களுக்கு ஒன்று மனிதர்களுக்கு ஒன்று என்று கஞ்சி தொட்டி திறப்பது, கமிட்டி போடுவது, அதன் முடிவை ஆராய இன்னொரு கமிட்டி என்று. 

இன்னும் சில நடப்பதற்கு அதிக காலம் ஆகாது, அன்னிய முதலீடு அதிகமாகி, சி.பி.ஐயை ஒரு வெளிநாட்டு நிறுவனம் வாங்குவது, முடியாட்சி, கஜானாவை காணாமல் அடிப்பது எல்லாம் விரைவில் நடக்கு என எதிர்பார்க்கலாம். 

அங்கத நாவல் என்கின்றார்கள், என்ன அங்கதமோ. இ.பாவின் அங்கதம் எல்லாம் என்னை அவ்வளவாக கவரவில்லை.கிருஷ்ணா கிருஷ்ணாவில் இருந்த அளவிற்கு கூட இதில் இல்லை. சிறிய புன்னகை கூட வருவதில்லை. பேச்சும் மிகுந்த மிகை படுத்தப்பட்டதாகினறது.தனி மண்டை வேண்டும் போல இதை புரிந்து சிரிக்க. இதே போன்ற மிகைப்படுத்தலை சேர்ந்ததுதான் முகம்மது பின் துக்ளக் நாடகமும், ஆனால் அதில் இருந்த சுவாரஸ்யம் இதில் இல்ல. 

படிக்கலாம் ஓசியில் கிடைத்தால்.

07 செப்டம்பர் 2013

ராமாயணம் - சோ, ராஜாஜி

ராமாயணமும், பாரதமும் இதிகாசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதிகாசம் என்றால் நடந்தது என்று பொருள். இந்த இரண்டில் ராமாயணம் நாடு முழுவதும் பரவியுள்ளது. நம் நாட்டில் மட்டுமின்றி அண்டை அயல் நாடுகளில் கூட ராமாயணம் பரவியுள்ளது.


ராமாயணத்தில் எத்தனையோ வகையான ராமாயணங்கள் வழக்கத்தில் உள்ளது. நூற்றுக் கணக்கான ராமாயணங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.  அது பாடப்படும் இடத்திற்கு தகுந்த மாதிரியும், பாடுபவர்களின் மனோ தர்மப்படியும் விதவிதமாக வழங்கப்படுகின்றது. சில காலப் போக்கில் மாறியும் இருக்கலாம். அனைத்திற்கும் மூலம் வால்மீகி ராமாயணம். தமிழ் ஹிந்துவில் படித்தது "சீதை ராமனிடம் தன்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறுகின்றாள், ராமன் அதை மறுத்து பலவிதமாக சமாதானப்படுத்துகின்றான். கடைசியில் சீதை அது எப்படி இதற்கு முன்னால் இருந்த அத்தனை ராமாயணங்களிலும் சீதையை ராமன் அழைத்து செல்கின்றான், நீங்கள் மட்டும் எப்படி விட்டு விட்டு போக முடியும் என்று கேட்க, அவனும் அழைத்து செல்கின்றான்". படிக்க சுவாரஸ்யமாகவும், ராமாயணம் எந்த அளவிற்கு நமது கலாச்சாரத்தில் கலந்துள்ளது என்பதையும் காட்டுகின்றது. 

புத்த, ஜைன மதம் தோன்றி வளர்ந்த போது அவர்களும் ராமாயணத்தை தம் போக்கில் எழுதியுள்ளனர். 


தென்னிந்தியாவில் அதிகம் பேர் அறிந்தது, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், துளசிதாசரின் ராம மானச சரிதம்.

ராமாயணத்தை அனைவரும் படிக்கும் படி எளிதாக ஆக்கி தந்தவர்களில் முதன்மையானவர், ராஜாஜி. கல்கியில் சக்ரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதிவந்த தொடர் ராமாயணம் என்ற பெயரில் வானதி பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெகு எளிமையான நடையில், சுருக்கமாகவும் அதே சமயம் படிப்பவர்களுக்கு தேவையானதை தந்திருக்கின்றார். முக்கியமான விஷயம் இது சிறுவர்களும் படிக்கும் அளவிற்கு எளிமையாக இருக்கின்றது.

04 செப்டம்பர் 2013

அன்பே ஆரமுதே - தி. ஜா

ஒரு சன்னியாசியின் கதை.

1961ல் கல்கியில் தொடராக வந்த கதை. 

ஒரு சன்னியாசி அனந்தசாமி, சிறு வயதில் திருமண மண்டபத்திலிருந்து ஓடி போய் சன்னியாசியானவர். ஆனால் முழு சன்னியாசியல்ல. உலக கவலைகள் அனைத்தும் படும் ஒரு சன்னியாசி. மற்றவர்களுக்கு வைத்தியம் பார்க்கும் சன்னியாசி.

அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த பெண் ருக்மணி. அவள் அனந்தசாமியை தற்செயலாக காண்கின்றாள். திருமண முறிவின் கசப்பில் அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றாள். அவளின் உறவினர் பெண் சந்திரா. அவள் ஒருவனுடன் பழகி அவன் அவளை விட்டு போன கசப்பில் வாழ்ந்து வருகின்றாள்.

சினிமா நடிகன் அருண் குமார். அனந்தசாமி அவனின் பையனுக்கு வைத்தியம் செய்ய வருகின்றார். அருண் குமாரால் சினிமா சான்ஸ் என்னும் கவர்ச்சியில் ஏமாறும் பெண் டொக்கி. அவளை காப்பாற்றுவதற்காக அவளை திருமணம் செய்ய முடிவு செய்யும் ரங்கன். ரங்கன் சந்திராவுடன் பழகிக் கொண்டிருந்தவன்.

இவர்களுக்கு நடுவில் அனந்தசாமி. கடைசியில் ருக்மணியின் வீட்டு மாடியில் குடியேறுகின்றார். கூடவே டொக்கி. அவள் படிக்க புறப்படுகின்றாள். அப்பாடா, ஒரு வழியாக கதை சுருக்கம் முடிந்தது