22 மே 2014

கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து

வைரமுத்துவின் புத்தகங்களில் நான் முதலில் படித்தது இதுதான். வைகை அணைக் கட்டுமானத்தை வைத்து அப்பகுதி மக்களை பற்றி எழுதப்பட்டது. சொந்தக்கதை. 

பேயத்தேவர் என்னும் ஒரு வைரக்கிழவனாரின் கதை. அவர் மூலமாக அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையை, பழக்க வழக்கங்களை எழுதியுள்ளார். சுமாரான கதைதான். ஓஹோ என்று புகழமுடியாவிட்டாலும், சுத்த திராபை என்றும் கூற முடியாது. 

பாத்திரங்கள் வெகு இயல்பு. வெள்ளந்தி கிராமத்து மனிதர்கள். கோபமோ, பாசமோ தன்னை திறந்து கொட்டும் மனிதர்கள். விவசாயியின் கஷ்டம். அதிகாரிகளின் இயந்திரத்தனம் எல்லாம் அங்கங்கு வந்து போகின்றது.

மாட்டிற்கு பிரசவம் பார்ப்பது, சாராயம் காய்ச்சுவது, கோழி குழம்பு வைப்பது, ஆடு திருடுவது, கிணறு வெட்டுவது என்று சின்ன சின்ன நுணுக்கங்கள்.  வட்டார வழக்கு, எங்கள் பகுதி வழக்கு. மதுரை தமிழில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் வேறு பட்டிருக்கும். அப்பகுதிகாரர்களுக்கு அது தெரிந்து விடும். அதை படிக்க மிக சந்தோஷம். அணை கட்ட ஆரம்பித்தவுடன் கதை பரபரவென்று போகின்றது. 


பலருக்கு நடந்த சம்பவங்களை ஒருவருக்கு ஏற்றி  வைத்ததுதான் மிக பெரிய தவறாகி விட்டது. ஒரு எரிச்சல் வருகின்றது. வைரமுத்து உரைநடை எழுத்தாளர் இல்லை என்பதால் வந்த வினை. கதையை சொல்ல சொல்ல ஒருவர் எழுதியதால் அது கதைத்தன்மையை இழந்துவிட்டது. 

பாத்திரங்களூக்கிடையிலான உரையாடல் வட்டார வழக்கில் இயல்பாக இருக்கும் போது, கதை சொல்லும் போது வைரமுத்து தன் தொண்டையை கனைத்து கொண்டு வந்துவிடுகின்றார். அவரது புத்திசாலித்தனம் தேவையற்ற இடங்களில் எட்டி பார்க்கின்றது. வாசகனை கவர வேண்டும், அட போட வைக்க வேண்டும் என்றே பல தேவையற்ற வேலைகள். உதாரணம் வெட்டியானுக்கு மல்லிப்பூ வாசம் எரிச்சலை தருமிடம். 

தாரளமாக படிக்கலாம். மின்னூலாக கிடைக்கின்றது. தேடினால் கிடைக்கும்.

இதற்கு சாகித்ய அகாடமி விருது கொஞ்சம் அதிகம்தான். விருது வைரமுத்துவுக்குதானே அவர் புத்தகத்திற்கு அல்லவே, அதனால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

விகடனில் வெளிவந்த வைரமுத்துவின் மற்ற இரண்டு கதைகளை விட இது தரமானதே.
கருவாச்சி காவியம் ஒரு அழுகாச்சி காவியம்.
ஏண்டா படித்தோம் என்றாக்கிவிடும் ஒரு படு திராபையான கதை. அங்கங்கு வரும் சின்ன சின்ன சுவார்ஸ்யங்களுக்காக மொத்த கதையை படிக்கும் சாகசம் எல்லாம் செய்யக் கூடாது.

மூன்றாம் உலகப்போர் - முதலாம் உலக அக்கப்போர். ஒரு வார்த்தை போது. தண்டம்.

5 கருத்துகள்:

  1. இந்த மூன்று புத்தகங்களையுமே படித்ததில்லை என வருத்தப்பட்டேன், என் வருத்தம் தேவையற்றது எனக் கூறிவிட்டீர்கள் :-)

    பதிலளிநீக்கு
  2. எனக்கு இந்த நூலைப் படிக்க வேண்டும் என்றே தோன்றவில்லை! நாம் இப்படி நினைத்தாலும் இது ஒரு டாப் செல்லர்! அதனுடைய பதிப்பு விவரங்களையும் பாருங்கள்.

    இந்தத் தொடர் விகடனில் வந்தபோது அதற்கு வரையப்பட்ட ஓவியம் ஒன்று இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஒரு முரடன் ஒரு பெண்ணை கன்னத்தில் அறிந்திருப்பான். அந்தப் பெண்ணின் காத்துத் தொங்கல் அறுந்து பறந்து கொண்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. வைரமுத்து எழுத்துக்கள் வைரமும் அல்ல முத்தும் அல்ல. அவைகள் வெறும் கூழாங்கற்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம்

    அதிக் பதிப்பு கண்ட புத்தகம். காரணம் கொஞ்சம் சென்டிமெண்டல், வைரமுத்துவின் சினிமா புகழ். என்னிடம் இருப்பது விகடனில் வந்து பைண்டிங் செய்தது. ஓவியங்கள் பிரமாதமாக இருக்கும். அதில் ஒரு சுவாரஸ்யம். ம.செவிடம் முழுக்கதையும் சொல்லாமல் படம் வரைய வைத்துவிட்டனர் போல. முதல் அந்தியாயத்தில் வரும் பேயத்தேவர் ஒரு படு கிழவாரக சொக்கலிங்க பாகவதர் போல இருப்பார். அதற்கு பின்னால் கதாபாத்திரத்தை தெளிவாக விளக்கியிருப்பார்கள் போல, ஒரு வாரத்தில் பேயத்தேவருக்கு வயது குறைந்து, விஜயகுமார் மாதிரி மாறிவிட்டார்

    சீனு

    க.கா.இ படிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படுமளவிற்கான புத்தகமில்லை,ஏண்டா படித்தோம் என்று வருத்தபடுமளவிற்கான புத்தகமுமில்லை.

    கேசவமணி

    கரெக்ட்.பார்க்க அழகாக இருக்கும் என்று கொஞ்ச நேரம் வைத்து கொண்டிருந்து விட்டு தூக்கி போட வேண்டியதுதான். இல்லை என்றால் ஷோ கேசில் வைத்து வேடிக்கை பார்க்கலாம். கடைசி இரண்டு புத்தகங்களை அந்த வரிசையில் கூட என்னால் சேர்க்க முடியாது.

    பதிலளிநீக்கு
  5. //க.கா.இ படிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படுமளவிற்கான புத்தகமில்லை,ஏண்டா படித்தோம் என்று வருத்தபடுமளவிற்கான புத்தகமுமில்லை.
    // ஹா ஹா ஹா சூப்பரே (மாகாபா ஆனந்த் வாய்ஸில்)

    பதிலளிநீக்கு