26 ஆகஸ்ட் 2014

காடு - ஜெயமோகன்

காட்டை பற்றிய கனவு சிறிய வயது முதல் உண்டு. மலையடிவார கிராமம் என்றாலும், மலை மேல் ஏறியதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார கிராமம், ஆனால் காடு என்று ஏதுமில்லை. சோம்பேறித்தனத்தாலும், இது போன்ற விஷயங்களுக்கான தகுந்த துணையில்லாததாலும், வீட்டில் உதை கிடைக்குமென்பதாலும் அந்த பக்கம் போனதில்லை. இருந்தும் காட்டை பற்றி பல கதைகள், சாகச கதைகள் எல்லாம் படித்து படித்து ஒரு மயக்கம் உண்டு.

சில சந்தர்ப்பங்களில் காட்டை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும் ஏமாற்றம் தான். சுருளி அருவி பகுதி நல்ல அடர்ந்த காட்டு பகுதி. ஆனால் எங்கும் நுழைய முடியாத படி வனத்துறை கட்டுப்பாடு உண்டு. தப்பித்தவறி சென்றாலும் பாட்டில்கள் காலை கிழிக்கும் அபாயமுண்டு. குற்றாலம் பற்றி பெரிய கனவுடன் சென்ற எனக்கு, மெயினருவி தந்தது ஏமாற்றம். மரங்களுக்கு நடுவில் சத்தத்தை மட்டும் முதலில் காட்டி சுருளி அருவி தரும் அந்த தரிசனம் இதிலில்லை. மொட்டை பாறையில் கடைகளுக்கு நடுவிலிருக்கும் அருவி எனக்கு பிடிக்கவில்லை, ஒரு குரங்கு கூட இல்லாத அருவி என்ன அருவி.

பெங்களூருக்கு வந்த பின் அலுவலக நண்பர்கள் மலையேற்றத்திற்கு அழைத்தனர், ஆர்வத்துடன் சென்று காரிலிருந்து இறங்கி பார்த்தவனுக்கு அதிர்ச்சி. ஒரு பெரிய மொட்டை மலை. காட்டு ஆசை கொஞ்சம் பூர்த்தியானது கோவா சென்ற போது. யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஏற்பாடு செய்த மலையேற்றம், ஓரளவிற்கு காட்டு ஆசையை திருப்தி செய்தது. ஓரளவிற்கு அடர்ந்த காடு, எப்போதும் ஒரு பக்கத்தில் சிறிய ஓடை, குளிர்.

12 ஆகஸ்ட் 2014

லஜ்ஜா (அவமானம்) - தஸ்லிமா நஸ்ரின்

லஜ்ஜா - தஸ்லிமா நஸ்ரினின் உயிருக்கு விலை வைத்த புத்தகம். இப்போது தமிழில். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜவர்லால் (ஜவகர்லால் இல்லை) மொழி பெயர்த்துள்ளார். 

உலகெங்கும் பரபரப்பை கிளப்பிய புத்தகம் என்று கூறப்படுகின்றது. நமது உள்ளூர் (இந்து) மதச்சார்பற்றவர்களுக்கு பங்களாதேசத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தஸ்லிமா நஸ்ரின் தொடுத்த போரை எதிர்த்து போராட ஒரு வாய்ப்பை அளித்த புத்தகம். 

அவர் மீது பத்வா பிறப்பித்து, தலைக்கு விலை வைக்கும் அளவிற்கு இதில் என்ன இருக்கின்றது என்ற ஆர்வத்தில்தான் புத்தகத்தையே வாங்கினேன். ஒரு வேளை இஸ்லாமிற்கு எதிராக பல கருத்துக்கள் இருக்குமோ என்று நினைத்தால், அப்படி எதுவுமில்லை. இதற்கு பத்வா என்றால், நாட்டிலிருக்கும் பல செய்தி பத்திரிக்கைகளுக்கும் சேர்த்து பத்வா பிறப்பிக்க வேண்டும், ஊரிலிருக்கும் எல்லா செய்திபத்திரிக்கையாளர்கள் தலைக்கும் விலை வைக்க வேண்டும்.

இந்தியாவில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி எனப்படும் கட்டிடத்தை இடித்ததன் பின் விளைவை பற்றியதுதான் இக்கதை. இந்துக்களின் நிலை எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான். அவர்களுக்கு அரசியல் ஆதரவு கிடையாது. இப்போது பா.ஜ.க அசுரபலத்துடன் இருக்கின்றது. இருந்தாலும் அவர்களாலும் இந்துக்களுக்கு முழு ஆதரவு தரமுடியாது. காரணம் மதச்சார்பன்மை என்ற பெயரில் பிற கட்சிக்கள் எடுக்கும் ஓட்டு பிச்சை. இந்துக்கள் அதிகமிருக்கும் இந்தியாவில் இந்த நிலை என்றால், இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் மற்ற இடங்களில், அதுவும் அடிப்படைவாதிகள் கையில் அதிகாரம் இருக்கும் இடத்தில், மற்ற மதங்களை அடியோடு வெறுக்கும் மதத்தலைவர்களின் கையில் அதிகாரம் இருக்கும் இடத்தில் இந்துக்களின் நிலை எப்படி இருக்கும். அதைத்தான் காட்டுகின்றது இப்புத்தகம்.

05 ஆகஸ்ட் 2014

சாமானியனின் முகம் - சுகா

தாயார் சன்னதி எழுதிய சுகாவின் மூன்றாவது புத்தகம் சாமானியனின் முகம். அதிகம் சினிமா பற்றிய கட்டுரைகளே உள்ளது அதிலும் குறிப்பாக சினிமா இசை பற்றிய கட்டுரைகள்.

யாரும் அறியாத புதிய விஷயம் எதுவும் சொல்லவில்லை. சினிமா ஆள் என்பதால் சினிமா வம்புகள் தேடினால் ஒன்றுமில்லை. சும்மா அங்கங்கு நாலு கிசுகிசுவை சேர்த்திருக்கலாம்.

சுகா சிறுவயதிலிருந்து இசை கற்றவர் என்பது, இசைக் கருவிகளை வாசிப்பவர் என்பதும் அவரது முதல் புத்தகத்திலேயே தெரிந்துவிட்டது. இதில் அவரது திரையிசை பற்றி பல கட்டுரைகளும் நடுவில் மானே தேனே என்று வேறு சில கட்டுரைகளும் உள்ளது.


இப்புத்தகம் இளையராஜா ரசிகனால், இளையராஜா ரசிகர்களுக்கு பிடிக்கும் படி எழுதப்பட்டது. நான் ஏ.ஆர். ரகுமான் ரசிகனாக இருந்து ராஜாவிற்கு மாறியவன். ரேடியோ கேட்டு வளர்ந்ததில்லை, டீவி அவ்வளவாக பார்ப்பதுமில்லை. சொந்தமாக டேப் வாங்கி பாடல் கேட்கும் வசதி வந்த போது ஏ.ஆர். ரகுமான் வந்துவிட்டார். சென்னை வந்தபின், ரேடியோ மிர்ச்சியில் இரவும் 11 - 1 வரை ஒலிபரப்பாகி வந்த காதல் காதல் (பெயர் சரிதானோ என்னவோ?)  ராஜாவை அதிகம் கேட்கவைத்து, ராஜாவை மட்டும் கேட்க வைத்துவிட்டது.