26 அக்டோபர் 2014

வாஸவேச்வரம் - கிருத்திக்கா

கிருத்திகாவை அறிமுகம் செய்தது ஆர்வியின் தளம். ஜெயமோகனின் தளத்திலும் அந்த பெயர் பரிச்சியம். இந்த நாவலை பற்றி சிலாகித்து பேசியிருப்பதை கண்டே வாங்கினேன். முன்னுரையை முதலில் படித்து தொலைத்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது, இருந்தும் தொடர்ந்து படித்த பின்னரே தெரிந்தது இது ஒரு முக்கிய நாவல் என்று.

வாஸவேச்வரம், ஒரு மலையோர கிராமம். செழிப்பான பூமி. சுகவாசிகள். உற்சவம், உற்சாகம் என்று வாழ்பவர்கள். அவர்களை பற்றிய ஒரு சிறிய பார்வை. பிராமணர்கள் மட்டுமே பாத்திரங்கள். வாஸ்வேச்வரம், கிருத்திகா கண்ட பல கிராமங்களின் கலவை என்று கூறுகின்றார். ஒரு கற்பனை கிராமம். எந்த இடம் என்று கூட கூறவில்லை, தஞ்சாவூர் பக்கம் இருப்பதாக நினைத்து கொள்ளலாம். முன்னுரையில் 1930 கதை நடக்கும் காலம் என்கின்றார். அது எல்லாம் செல்லாது, கதையின் படி கிராமத்தில் வீட்டிற்கு வீடு குழாயில் தண்ணீர் வருகின்றது. அக்காலத்தில் எத்தனை கிராமங்களுக்கு அந்த வசதி கிடைத்திருந்தது. சிப்பாய், கச்சேரி, கம்யூனிசம் என்று பேசுவதை கண்டால் சுதந்திரமடைந்து பத்திருபது வருடங்களை சேர்த்து கொள்ளலாம்.

23 அக்டோபர் 2014

சிங்கமய்யங்கார் பேரன் - சுஜாதா

கரும்பு தின்ன கூலியா என்று கேட்பார்கள், சாப்பிடவும் கூலி தருவதும் உண்டு என்று தெரிந்த காரணத்தால் அதை மேற்கோள் காட்ட முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். உங்களுக்கு தெரிந்த நல்ல பழ மொழியை பயன்படுத்தி கொள்ளவும். ..... போல, புத்தகத்தையும் தந்து அதற்கு ஒரு மதிப்புரை(!!!)யும் எழுத சொன்னால் வேண்டாம் என்றா சொல்வார்கள். அதைத் தானே இங்கு செய்து கொண்டிருக்கின்றேன் என்று முயற்சி செய்தேன். உடனே புத்தகமும் கிடைத்தது. மதிப்புரை.காமில் வெளியான எனது புத்தகத்தை பற்றிய எனது கருத்துக்கள். 


சினிமா காலத்திற்கு முன்பு மக்களை மகிழ்வித்தது நாடகங்களே. நாடக நடிகர்களைக் கடவுளாகப் பார்த்த மக்களைக் கொண்டது நம் தமிழகம். பெரும்பாலான நாடகங்கள் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை, மெதுவாக சமூகக் கதைகள் உள்ளே வர ஆரம்பித்தன. திராவிட இயக்கங்களின் தாக்கம் அதை மேலும் வளரச் செய்தது. புராணங்கள் மூலம் பக்திக் கண்ணீரை பெருக்கெடுக்க வைக்கும் நாடகங்கள், குடும்ப, சமூகக் கதைகள் மூலம் சோகக் கண்ணீரை பெருக்கெடுக்க வைத்த நாடகங்கள், உள்ளத்தைக் கொதிப்படைய வைத்து வியர்வையைப் பெருக்கும் அரசியல் நாடகங்கள் என்று இருந்ததை மாற்றி, நக்கலும் கிண்டலுமாக மக்களை அடைந்தவர் எம். ஆர். ராதா. அந்த வகையில் சினிமாவின் வெற்றிக்கு பின்னும் நாடக உலகில் வெற்றி பெற்றவர் ராதா.


அதன் பின்னர் அத்தகைய வெற்றியை கண்டவர் சோ. சோவின் சிறப்பு நாடக எழுத்தாளரும் அவர்தான். சோவின் நாடகங்கள் அந்தக் காலத்தை ஒட்டியவை, நாடகத்தை ரசிக்க அக்கால கட்டத்தைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். நாடகம் என்றவுடன் இவர்களைத் தவிர மற்றவர்கள் பட்டென்று நினைவில் வரமாட்டார்கள். காரணம் நாடகத்தை அழகாகக் கையாண்டவர்கள் மிகவும் குறைவு. அப்படி குறிப்பிடத்தகுந்த நாடக ஆசிரியர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன், சுஜாதா.