04 நவம்பர் 2015

மலர் மஞ்சம் - தி. ஜானகிராமன்

நீண்டநாள் கழித்து மீண்டும் தி. ஜானகிராமன்.

மதுரை புத்தக கண்காட்சியில், விடுபட்டு போன சில புத்தகங்களை வாங்கினேன்.  பெரும்பாலும் தி. ஜா.

தி. ஜானகிராமன், ஒரே கதையே திரும்ப திரும்ப எழுதுகின்றார் என்ற கருத்து சிலருக்கு உண்டு. எனக்கு அப்படி தோன்றவில்லை, பாத்திரங்களின் தன்மை அப்படி அமைந்துவிடுவதுதான் அதற்கு காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அவரின் பல பாத்திரங்கள், ஒரே சாயல் கொண்டதாக தோன்றும்.

மலர் மஞ்சம், மீண்டும் ஒரு தஞ்சாவூர் கதை. தி.ஜாவின் பெரும்பாலான கதைகளின் அடிநாதம் ஆண் - பெண் உறவு, அதுவும் கொஞ்சம் நடைமுறைக்கு மீறிய, அதே சமயம் சாத்தியமான ஒன்று. ஒரு ஆணிற்கு இரண்டு பெண்கள் மீது ஆசை வருமா என்று கேள்வியே கேட்க முடியாது. பலதார மணம் சாதரணமாக இருந்த இடம். இரண்டு பெண்களிடமும் ஒரே மாதிரியான அன்பு, காதல் இருக்குமா என்றால், அதுவும் சாத்தியம்தான். ஆணிற்கு சாத்தியமென்றால், பெண்ணிற்கு?

பல குடும்பங்களில் நடக்கும் முட்டாள்த்தனம், ஒரு பெண் பிறந்தவுடனே அதற்கு மாப்பிள்ளை நிச்சயிப்பது, அவர்கள் முன்னாலே அதை பேசி பேசி, அவர்களை உருவேற்றி, இறுதியில் வேறு வகையில் செல்லும் போது புலம்புவது. அது போன்ற கதைதான் இது.

பெண்ணிற்கும் இரண்டு ஆண்களின் மீது காதல் வரலாமா? வந்தால் என்னவாகும். இந்த முடிச்சை வைத்து கொண்டு, ஒரு பெரிய நாவலை எழுதியிருக்கின்றார். முடிச்சு விழுவது என்னவோ முக்கால் நாவல் முடிந்த பின்னர்தான், அது வரை கதையை, அவரது எழுத்து வன்மையால் அடித்து தூக்கிக் கொண்டு போகின்றார்.


ராமையாவின் நான்காவது (!) மனைவி, பெண் குழந்தையை பெற்றவுடன், மாப்பிள்ளையையும் நிச்சயித்துவிட்டு மரணிக்கின்றாள். ராமையா, அந்த பெண் பாலியை, தங்கராஜுவிற்கு திருமணம் செய்து வைக்க படும் முயற்சி மிச்சக் கதை. நடுவில் ராஜாவால் பாலிக்கு வரும் சஞ்சலம் எப்படி தீர்ந்தது என்பதை கொஞ்சம் நீட்டி முழக்கி சொல்லியிருக்கின்றார். ஆனால் எங்கும் அலுப்பு தட்டாத கதை.

தி.ஜாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரின் உரையாடல்களும், பாத்திர அமைப்பும். ஒவ்வொரு பாத்திரத்தையும், மனதினுள் உயிருடன் நடமாட விடுகின்றார். அவர்கள் கொள்ளும் உணர்ச்சியை நம்முள்ளும் விதைத்துவிடுகின்றார்.

வர்ணனைகள், 'இதுதாண்டா வர்ணனை' என்று சாண்டில்யன் போல் பக்கம் பக்கமாக நீட்டாமல், சின்ன சின்ன வரிகளில் மொத்த சித்திரத்தை காட்டிவிடுகின்றார். தத்ரூபமாக வரையும் ஓவியங்களை விட, கரிக்கோடுகளால் அமைந்த சித்திரம் அதிக வலிமையாக இருக்கும். அது போன்ற நடை.

ராஜாங்காடு என்னும் கிராமத்தில் ஆரம்பிக்கும் கதை தஞ்சாவூர் சென்று, சென்னைக்கு சென்று காசியில் முடிகின்றது. கதை முழுக்க எத்தனை விதமான மனிதர்கள்.

ராமையா, பரம் சாதுவான ஒரு பிராணி. நான்கு திருமணம் செய்தும், கடைசியில் ஒரு குழந்தை மட்டுமே மிஞ்சும் ஆத்மா. என்ன ஒரு ஆளய்யா என்று பல இடங்களில் ஒருவித எரிச்சலையும் தருகின்றார். சின்ன வயது பாலியுன் துறுதுறுப்பை என்ன அழகாக காட்டிச் செல்கின்றார். படிப்பவர்களையும் மனதினுள் கொஞ்ச வைத்து விடுகின்றார்.

ஒரு காலகட்டத்து மனிதர்கள், திண்ணையில் அமர்ந்து கொண்டு ஊர் வம்பு பேசி திரியும் அந்த சவடால் பேர்வழிகளை தி. ஜாவின் பல கதைகளில் காணலாம்.

கதையின் முக்கிய முடிச்சே, பாலியின் ஊசலாட்டம், அதுவரை கதை, பாலியையும் படிப்பவர்களையும் தயார் படுத்துகின்றது.

கோணவாய் நாயக்கர், வக்கீல், நாய்க்கரின் மகன் என்று அனைத்து பாத்திரங்களையும் மனதில் தங்க வைத்துவிடுகின்றார்.  இரண்டாம் பகுதியில் வரும் செல்லம்மாள். தி.ஜாவின் எழுத்து அவரது கதைகளில் பெண்கள் அனைவரையுமே நமக்கு ஒரு நெருக்கமான, பிடித்தமான ஒரு பெண்ணாக்கிவிடும் மாயத்தை காட்டுகின்றது.

பாலியின் குழப்பத்தை கூட மிக நாசுக்கான வரிகளில் கூறி சென்று விடுகின்றார். தங்கராஜூவின் மீது பெரியவர்களின் வார்த்தையிலான் உண்டாகும் ஈர்ப்பு அப்படியே இருக்க, ராஜாவின் மீது காதல் பிறக்கின்றது.

ஒரு பெரிய வெளிச்சத்தை பார்க்க கூட இருட்டு தேவையாக இருக்உழ்கின்றது - இறுதியில் வரும் வரிகள். பல திறப்புகளை காட்டும் வரி.

சில இடங்கள், கதையை வலுவில் கட்டி இழுப்பது போன்றே தோன்றுகின்றது, சுவாரஸ்யமாக இருந்தாலும் அவை கதைக்கு எவ்விதம் வலுவூட்டுகின்றது என்பது எனக்கு புரியவில்லை.

தி. ஜா என்றவுடன் அவரது மற்ற புத்தகங்களை ஒப்பிடாமல் முடிக்க முடியவில்லை. மோகமுள், அம்மா வந்தாள் டாப் என்றால், இது அதற்கு அடுத்த வரிசையில் வைக்கலாம்.

4 கருத்துகள்:

  1. மிக அருமையான விமரிசனம். ரொம்பச் சின்ன வயசில் இந்த உறவின் அர்த்தங்கள் புரியாத காலகட்டத்தில் படிச்ச நாவல்! பல பெரியவங்க அவரோட அம்மா வந்தாள், மலர்மஞ்சம், மோகமுள் முக்கியமாய் மரப்பசு ஆகியவற்றைப் படிக்க அனுமதி கொடுத்ததில்லை! அவசரம் அவசரமாகப் படிச்ச நாவல். என்றாலும் கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கின்றனர். என்னைப் பொறுத்தவரை தி.ஜானகிராமனின் மாஸ்டர்பீஸ் என்றால் அது அன்பே, ஆரமுதே தான்! அதன் பின்னர் உயிர்த்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகங்கள் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை தரும் என்று நான் நினைப்பதற்கு மற்றுமொரு சான்று...

      அன்பே ஆரமுதே பற்றி

      http://rengasubramani.blogspot.in/2013/09/blog-post.html

      நீக்கு
  2. நான் நேற்றுதான் படித்து முடித்தேன். மிகவும் அருமை. கோணவாய் நாயக்கர் மறக்கமுடியாத மனிதர்.

    பதிலளிநீக்கு
  3. இப்போது தான் மலர் மஞ்சம் வாசித்து வருகிறேன்,310 பக்கங்கள்,இந்வித வமர்சனம் ஒரு அழகிய உண்மை.தி.ஜா.ஒரு அழகியல் எழுத்துகர்த்தா.அவரை வாசிப்பது ஒரு இலக்கிய கொண்டாட்டம்.

    பதிலளிநீக்கு