22 ஏப்ரல் 2015

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்

ஒரு நகைச்சுவை எழுத்தாளர் என்று மட்டும் பலரால் அறியப்படும் தேவன் பல வித்தியாசமான முயற்சிகளையும் செய்துள்ளார். ராஜத்தின் மனோரதம் என்னும் கதை முழுக்க முழுக்க ஒரு வீடு கட்டுவதை அடிப்படையாக கொண்டது. சி.ஐ.டி சந்துரு ஒரு இரண்டு நாளில் பல இடங்களில் நடக்கும் கதையை சொல்வது, துப்பறியும் சாம்பு அனைவருக்கும் தெரியும்.

ஜஸ்டிஸ் ஜகந்நாதன், முழுக்க முழுக்க ஒரு நீதிமன்ற விசாரணையை காட்டும் ஒரு நாவல். ஒரு கொலை வழக்கை பற்றிய கதை. ஒருவன் தன் மாமனாரை கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிற்கின்றான். அவன் கொலை செய்தான் என்று கூறும் சாட்சிகள், இல்ப்லை செய்திருக்க மாட்டான் என்று நிரூபிக்க வரும் சாட்சிகள், ஜுரிகள், நீதிபதி, வக்கீல்கள் இவர்களே பாத்திரங்கள். 

மொத்த கதையும் விசாரணைகள் மட்டும்தான். ஒவ்வொரு சாட்சியையும் அரசாங்கத்தரப்பு, எதிர்தரப்பு வக்கீல்களின் விசாரணை செய்வதை வைத்தே மொத்த கதையையும் நகர்த்திச் சென்றிருக்கின்றார். விருமாண்டிக்கு முன்னோடி. ஒரே சம்பவத்தின் பலவித வெர்ஷன்கள். கேள்வி - பதில் வாயிலாக மொத்த சம்பவங்களையும் காட்டி விடுகின்றார். குற்றவாளியா இல்லையா என்பதை கூட சொல்வதில்லை. 

19 ஏப்ரல் 2015

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

கல்கி எழுத்திற்கு பின்பு எனக்கு அறிமுகமானவர் ஜெயகாந்தன். கல்லூரியில் படிக்கும் போது நண்பன் கையில் எப்போதும் சில புத்தகங்கள் இருக்கும். கண்டிப்பாக பாட புத்தகங்கள் அல்ல. பாலகுமாரன், ஜெயகாந்தன், ஓஷோ. நல்ல காம்பினேஷன் இல்லையா?

இவர்களில் பாலகுமாரன் மீது அந்தளவிற்கு ஒரு ஈர்ப்பு இல்லை. காரணம் அவரின் பேட்டி ஒன்றை எங்கோ படித்ததுதான். ஜெயகாந்தன் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை. நண்பனிடமிருந்து ஜெயகாந்தனின் இரண்டு புத்தகங்களை வாங்கி சென்றேன். ஒரு சிறுகதை தொகுப்பு. எதுவும் இன்று நினைவில் இல்லை. மற்றுமொரு புத்தகம், ரிஷிமூலம். ஜெயகாந்தனை அதிகம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். கல்கியை படித்தவனுக்கு இந்த புத்தகம் கொஞ்சம் அதிகம்தான். அந்த புத்தகத்தை மொட்டைமாடியில் புகைபோக்கியில் படுத்து கொண்டு படித்தேன். அங்கேயே பதுக்கி வைத்துவிட்டு வந்தே. யார் கண்ணிலாவது பட்டால் என்னாவது?