26 ஜூன் 2016

நைலான் கயிறு - சுஜாதா

சுஜாதாவின் முதல் கதை.

இறங்கினான் என்பதை ஒவ்வொரு வரியில் எழுதினார் என்பது போன்ற புதுமைகளை(!) பலர் பல இடங்களில் வியந்தோதியிருப்பதை படித்திருக்கலாம். இப்புத்தகம் பதிப்பில் இருக்கின்றதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கவே கொஞ்ச நாள் ஆனது. உயிர்மையின் சுஜாதா தொகுப்புகளில் இது இல்லை. கணேஷ் வசந்த் தொகுதியில் இது இல்லை. தொகுப்பும் இரண்டுடன் நின்று விட்டது. கிழக்கில் வெளியானதும் கவனத்தில் படாமல் போய்விட்டது. 

கதை வெளிவந்த ஆண்டை கவனத்தில் வைத்து படித்தால், இதன் வீச்சு புரியும். கணேஷ் மட்டும் அறிமுகம். வசந்தை கணேஷ் என்ற பெயரில் அறிமுகம் செய்திருக்கின்றார். 


துப்பறியும் கதை. சொல்லப்போனால் ஒரு சிறுகதை எழுதமட்டுமே தகுதியான கதை. அவரின் எழுத்து வன்மையால் வளர்த்தியிருக்கின்றார். முதல் பகுதியில் வரும் ஒரு கைது, கோர்ட் விவாதங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், அதில் ஒன்றும் சஸ்பென்ஸ் இல்லை. கைதானவன் கொலையாளியா இல்லையா என்பது நமக்கே தெரியும் போது என்ன சஸ்பென்ஸ். உரையாடல்களில் இருக்கும் சின்ன சுவாரஸ்யங்கள் மட்டுமே அப்பகுதிகளை படிக்க செய்கின்றன.

இரண்டாம் பகுதி புத்திசாலித்தனமான் பகுதிகள். ஒரு நிகழ்ச்சி நடக்கின்றது, அது அப்படி நடப்பதற்கான காரணங்கள் என்ன, எப்படி நடந்திருக்க கூடும் என்பதை ஆராயும் பகுதிகள் விறுவிறுப்பானவை. கூடவே, பிரச்சினையின் மைய முடிச்சு பெரும்பாலும் ஒரு கிளிக்கில் கிடைக்கும். அது எங்கு, எப்போது என்பதுதான் த்ரில். சஸ்பென்ஸ். இக்கதையை படிக்கும் போது, ஒரு விபத்தின் அனாடமி நினைவிற்கு வந்தது. இரண்டும் ஒரே மாதிரியான வேட்டை. மூளைக்கு வேலை. 

ஒவ்வொரு பகுதியின் ஆரம்பத்திலும் வரும் டைரி குறிப்புகள், அவரது பல நாவல்களின் முன்னோடி. ஆ, காயத்ரி, இன்னும் இரண்டு மூன்று பெயர் நினைவில்லாத குறுநாவல்கள்.

ஒரு சாதரண கதை. முதல் கதை கணேஷின் அறிமுகம், அங்கங்கு வரும் சுவாரஸ்ய உரையாடல்கள் நாவலை ஒரு முக்கிய நாவலாக்குகின்றது.

கிழக்கு வெளியீடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக