26 செப்டம்பர் 2016

டணாயக்கன் கோட்டை - பாலகிருஷ்ண நாயுடு

பல சரித்திரக்கதைகளை படிக்கும் போது எப்போதும் தோன்றும் ஒரு எண்ணம்  " இத்தனை கோட்டைகள், சுரங்கங்கள் எல்லாம் எங்கே போயின". பள்ளியில் படிக்கும் போது படித்த இத்தகைய பல கதைகளின் விளைவால், எங்கள் கோவில் சுவர்களை எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன்.  கடைசியில் சுவரிடுக்கிலிருந்த பல்லியை கண்டதே மிச்சம். கோவிலுக்கு அருகிலிருந்த ஓரிடத்தில் ஒரு இயற்கை பள்ளம் திடீரென தோன்றியது. ஒரு ஆய்வு குடுவை போல, ஏதோ ரகசிய குகை என்ற ஆர்வத்தில் உள்ளிறங்கி வெளியே வர மற்றவர்கள் உதவ வேண்டியிருந்தது.  அவ்வளவு ஆர்வம் (அ) ஆர்வக்கோளாறு.

சரித்திரத்தில் இடம் பெற்ற பகுதிகளை பார்க்க ஆர்வம் வந்ததற்கு காரணமே இப்புத்தகங்கள்தான்.  பெங்களூர் அருகிலிருக்கும் நந்தி மலையும் சரித்திர புகழ் பெற்ற இடம் என்று அங்கு சென்ற பின்னர் தெரிந்தது. அங்கிருக்கும் குட்டி குட்டி மதில் சுவர்களை கண்டு ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. ஆனால் ஸ்ரீரங்கப்பட்டினம் சென்று வந்த பின்னரே தெரிந்தது அது ஒரு சரித்திரப் புகழ் பெற்ற ஒரு இடம் என்று. நான் அதை ஒரு கோவில் என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்தேன். முன்னமே தெரிந்திருந்தால் இன்னும் சற்று நேரம் செலவழித்து முழுவதும் பார்த்திருக்கலாம். அந்த ஸ்ரீரங்கப்பட்டினத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை டணாயக்கன்  கோட்டை.

டணாயக்கன்  கோட்டை பாலகிருஷ்ண நாயுடுவால் எழுதப்பட்டது. 1956ல் நவ இந்தியா பத்திரிக்கையில் தொடர்கதையாக வெளிவந்த நாவல். 1959ல் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு கரம்வீர் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

டணாயக்கன்  கோட்டை இன்று பவானி சாகர் அணைக்கட்டின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்த ஒரு அரண்மனை. இன்றும் அக்கோட்டையிலிருக்கும் கோவில், அணையின் நீர்மட்டம் குறையும் போது வெளிப்படுகின்றது. 

ஸ்ரீரங்கப்பட்டினக் கதைக்கு எதற்கு டணாயக்கன்  கோட்டை என்ற பெயர் என்ற கேள்வி சரிதான். கோட்டை வரிசைக் கதையில் வருவதாக இருந்திருக்கும். மற்றபடி டணாயக்கன்  கோட்டை வருவதே கொஞ்ச நேரம் மட்டுமே. கதை பெரும்பாலும் நடப்பது இன்றைய கர்நாடகாவில். திப்பு சுல்தான் காலத்தில் அவனது ராஜ்ஜியம் திண்டுக்கல் வரை பரவியிருந்ததாக கூறப்படுகின்றது. எங்கள் கோவிலில் ஒரு அழகான பெருமாள் சிலை உண்டு. அது நடுவில் திருடப்பட்டு, எங்கோ தோப்பில் கிடந்து கிடைத்தது. அவ்வளவு அழகான விக்கிரகம். அது திப்பு சுல்தான் காலத்தது என்பார்கள், அவனே தந்தது என்று சிலர் சொல்ல கேள்வி. திண்டுக்கல்லையும் தாண்டி பரவியிருந்திருக்கின்றது அவனது ராஜ்ஜியம்.

07 செப்டம்பர் 2016

ஸ்க்ரூ

சும்மா ஒரு மாறுதலுக்கு - பழைய குப்பைகளை கிளறியபோது கிடைத்த கதை(???)

ஒரு சின்ன ஸ்க்ரூ அவன் வாழ்க்கையை மாற்றும் அளவிற் பிரச்சினை தரும் என்று அவனுக்கு தெரிந்திருந்தால் அவன் அந்த பழைய இத்துப் போன ட்ரான்ஸ்ஸிஸ்டரை கழற்றியிருக்க மாட்டான். டெக்னிக்கல் ஆர்க்கிடெக்ட்டாக (தமிழில் என்ன?) பணி புரியும் அவன், அவ்வப்போது தான் படித்தது எலெக்ட்ரானிக்ஸ் என்பதை தனக்கும்,  மனைவிக்கும் நினைவுபடுத்த செய்யும் வேலை. அது கொஞ்சம் பழைய ட்ரான்ஸிஸ்டர், மொட்டைமாடியில் வைத்துக் கொண்டு இளையராஜா பாட்டு கேட்க வேண்டும் என்று ஆசை.

"ஏங்க காபி வேணுமா" என்று கேட்டபடி அவன் மனைவி குழந்தையுடன் வந்தாள்.

"கொண்டு வா" என்றான்.

"இந்தாங்க இவன கொஞ்சம் பாத்துக்கங்க" என்று குழந்தையை விட்டு விட்டு உள்ளே சென்றாள்.

"வேலையா இருக்கேன் இல்ல இவன இங்க விட்டுட்டு போற. டேய் ஒன்னையும் தொடக்கூடாது , தொட்ட அடி"

பையன் அதை எல்லாம் கண்டு கொள்ளாது, ஒன்றொன்றாக கலைத்து விளையாட ஆரம்பித்தான்.

"இனி இவன வச்சிட்டு ஒரு வேலையும் செய்ய முடியாது" என்று முனங்கி விட்டு, அனைத்தையும் திரும்ப அசெம்பிள் செய்ய ஆரம்பித்தான்.

தொலைபேசி மணி அடித்தது.

"என்னடா சொல்லு" "வரலியா?" "இதுக்கு எல்லாமா பொண்டாட்டிகிட்ட கேக்கனும். அவங்களுக்கு என்னடா தெரியும்" "என்ன எழவோ பண்ணு, கன்ஃபார்ம் பண்ணிட்டு கூப்டு"

பேசிவிட்டு திரும்பி பார்த்தான். குழந்தை அருகில் இல்லை, டீவியை அருகில் ஜாலியாக தரையை ஈரமாக்கிக் கொண்டிருந்தான்.

டிரான்ஸிஸ்டர் கவரை மாட்டிவிட்டு, ஒவ்வொரு ஸ்க்ரூவாக மாட்ட ஆரம்பித்தான்.  ஒரு ஸ்க்ரூவை காணவில்லை. தரை, சோபா, என அனைத்து இடத்தையும் தேடிப் பார்த்தான், கிடைக்கவில்லை.

"என்னத்த தேடிட்டு இருக்கீங்க" என்றபடி அவன் மனைவி வந்தாள்

"ஒரு ஸ்க்ரூவ காணோம், அத மாட்டிட்டா வேலை முடிஞ்சிடும், எங்கயோ விழுந்துடிச்சி போல, விளக்குமாற எடுத்துட்டு வா?"

"பையன் பக்கத்துல இருந்தானா?"

"ஆமா"

பையன் மெதுவாக நகர்ந்து பால்கனி பக்கம் போயிருந்தான். அங்கிருந்த க்ரில் நடுவில் இரண்டு காலையும் வெளியில் தொங்கப்போட்டுக் கொண்டு யாரையோ பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.

"கண்ணு, அப்பாகிட்டருந்து ஏதாவது எடுத்துட்டு வந்தியா"

மெதுவாக கையை விரித்து காட்ட ஒரு குட்டி ஸ்க்ரூ.

"இவன் கிட்ட இருக்கு, டேய் கொண்டா அது அப்பாவுக்கு வேணும்"

டக்கென்று கையை பின்னால் வைத்துக் கொண்டு, "ம் ஹூம்" என தலையை ஆட்டிவிட்டு ஓட ஆரம்பித்தான். விரட்டி சென்று பிடித்தவுடன், ஸ்க்ருவை டபக்கென்று வாயில் போட்டுவிட்டான்.

"டேய், டேய் துப்பு துப்பு" என்று வாயில் விரலை விட்டு துழாவினாள், இல்லை.

கண்கள் மாறியது, வாந்தி வருவது போல குமட்டினான். ம்ஹூம். வாயை திறந்து திறந்து மூடி, கண்கள் சொருகியது. மயங்கி விழுந்தான்.

அவள் பையனை மடியில் குப்புற போட்டு முதுகில் தட்டினாள், லேசாக இருமினானே ஒழிய, ஸ்க்ரு வரவில்லை.

பிரமை பிடித்தது போல பார்த்துக் கொண்டிருந்த அவன் ஓ வென்று அழுக ஆரம்பித்தான்.

"ஏங்க, போய் ஆட்டோ கூட்டிட்டு வாங்க. ஆஸ்பத்திரிக்கு போலாம்"

அவள் கூறியது எதுவும் அவன் காதில் விழவில்லை. பையனை மடியில் போட்டுக் கொண்டு ஏதோ புலம்பிக் கொண்டிருந்தான். அவனை உலுக்கி உலுக்கி பார்த்துவிட்டு, ஒன்றும் செய்வதற்கில்லை என்று ஆட்டோ பிடிக்க வெளியே ஓடினாள்.

அவன் பிரமை பிடித்தவன் போல குழந்தையை வைத்துக் கொண்டிருந்தான். அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு, அவனையும் ஒரு கையால் இழுத்துக் கொண்டு ஓடினாள். இருவரையும் டாக்டரிடம் காட்ட வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.

ஆட்டோ ஓடிய வேகத்திற்கும், குலுக்கலுக்கும் கூட ஸ்க்ரூ வெளியே வரவில்லை.

குழந்தை மூச்சு விடுவதே தெரியவில்லை. உடலின் நிறமும் மாற தொடங்கியது. நீலமாக போவது போல அவளுக்கு தெரிந்தது.

விடாமல் அவனை தட்டி தட்டி எழுப்பிக் கொண்டே வந்தாள். அவன் தன் புலம்பலை விடாமல் தொடர்ந்து கொண்டே இருந்தான். "யோவ் சும்மா இருய்யா, அந்தம்மாவே தைரியமா வருது, ஞை ஞை ன்னுட்டு"

மருத்துவமனையில், மருத்துவர்

"ஆணி உள்ளே போகவில்லை, மூச்சுக் குழலுக்கும், உணவு குழலுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டது போல உள்ளது. ரொம்ப நேரம் இருந்தால் உயிருக்கு ஆபத்து. உடனே ஸ்கேனும் எக்ஸ்ரேயும் எடுக்க வேண்டும். அதன் பின் எப்படி எடுப்பது என்று முடிவு செய்ய வேண்டும்" என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்றார்.

ஸ்கேன் எடுக்கும் இடத்தில் பயங்கர கூட்டம்.

பையனை மடியில் வைத்துக் கொண்டு தளர்ந்து ஒரு சேரில் விழுந்தான். இந்த உலகத்தில் இருப்பவன் போலவே இல்லை. பிரமை முற்றிய பைத்தியக்காரன் போல இருந்தான். "முதல்ல அவன என்கிட்ட கொடுங்க, போய் எமெர்ஜென்சின்னு சொல்லி சீக்கிரம் ஸ்கேன் எடுக்க சொல்லுங்க" என்று கூறியப குழந்தையை இழுத்தாள். அவன் தராமல் இன்னும் இறுக்கிக்  கொண்டு ஏதோ புலம்ப ஆரம்பித்தா. இவள் இழுக்க, இழுக்க அவன் குழந்தையின் வயிற்றை பலமாக அழுத்தி பிடித்து தன்னிடம் வைத்துக் கொண்டான். அழுத்திய வேகத்தில் குழந்தை பலமாக இருமியது. டொ

ஸ்க்ரு வெளிய வந்து விழுந்தது.

அடுத்த வாரம் முதல் அவள் மீண்டும் வேலை தேட ஆரம்பித்தாள்.

06 செப்டம்பர் 2016

இரும்பு குதிரைகள் - பாலகுமாரன்

கடந்த சில நாட்களுக்கு முன்னால் மதுரை, சென்னை செல்ல வேண்டியிருந்தது. தொடர்வண்டி நிலையத்திலிருந்த புத்தகக்கடையில் மேய்ந்ததில் ஒன்று தெரிந்தது. சென்ற வருடம் பார்த்ததற்கும் இந்த வருடம் பார்ப்பதற்கும் எவ்வித வித்தியாசமுமில்லை. அதே புத்தகங்கள். யாரும் வாங்குவதில்லையா என்ன? வழக்கம்போல பாலகுமாரனே அதிகம். சென்னையில் கொஞ்சம் பக்தி, கண்ணதாசன் போன்றவை. சரி, பாலகுமாரனையே வாங்குவோம் என்று இரும்பு குதிரைகளும், மெர்க்குரிப் பூக்களும் வாங்கினேன். 

பாலகுமாரனின் புத்தகங்களை முடிந்தவரை தவிர்ப்பது என் வழக்கம். காரணம், முன்பே ஏதோ ஒரு பதிவில் சொன்னதுதான். கல்லூரியில் சிலரின் கையில் இருந்த பாலகுமாரன் அவர்களை மாற்றியிருந்த விதம். சுத்த தொணதொணப்பு. எதைப்பற்றியும் ஒரு கருத்து இருப்பதாக நினைத்துக் கொண்டு அபத்தமாக பேசுவது, எதிராளியை பேச விடாமல் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பது. மற்றவர்களை விட நான் வித்தியாசமானவன் என்று அலட்டிக் கொள்வது என்று ஒரே போலித்தனம்.  சமீபத்தில் பார்த்த போது தெரிந்தது இன்னமும் திருந்தவில்லை. நான் எப்படி வேலை செய்ய வேண்டும், எங்கு வேலை செய்ய வேண்டும், எப்படி முதலீடு செய்யவேண்டும் என்று ஒரே அலட்டல். தாங்க முடியவில்லை. காரணம், எளிது. பாலகுமாரனையும், ஜெயகாந்தனையும் படித்து அதை போலி செய்ய முயற்சிக்கின்றார்கள். 

பாலகுமாரன் கதைகளில் எப்படியும் அவர் எங்காவது வந்து அமர்ந்து கொள்கின்றார். ("ஸீ, இதைச் சொல்றது பாலகுமாரன்தான். கேரக்டர் மூலமா அவர்தான் பேசறார்) அதற்கு பெயர் கட்டுரை. ஆனால் நான் படித்து பார்த்த நாவல்கள், பாலகுமாரன் "எழுத்து சித்தராக" பரிணாம வளர்ச்சி அடைந்த பின் எழுதியவை. இவ்விரண்டு நாவல்களும் அவரது நாவல்களில் ஓரளவு சுமாரானவை என்று கேள்விப் பட்டதால் துணிந்து வாங்கினேன். நல்லவேளை.

வருடத்திற்கு பத்து பதினைந்து தடவை சொந்த ஊருக்கு பஸ்ஸில் போவதுண்டு. பெரும்பாலும் சாந்திநகரில் ஏறினால், மடிவாலா வரும் முன்பே தூங்கிவிடுவேன். மறுபடியும் முழித்து பார்ப்பது தேனி வரும்போது. ஒரு முறை சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. காரில். தூக்கம் வரமுடியாத சூழல். அன்றுதான் நெடுஞ்சாலைகளை தெளிவாக பார்த்தேன். எத்தனை வண்டிகள். லாரிகள். பெரிய பெரிய கண்டெய்னர்கள். ஒவ்வொரு கனரக வண்டியிலும் எத்தனை விதமான பொருட்கள். காற்றாலை விசிறிகள், பெரிய பாய்லர்கள், இனம் தெரியாத பொருட்கள். ஒரு லாரியில் ஒரு பெரியகல். ஒரே ஒரு கல். ஒரு பெரிய கண்டெய்னர் அளவில். அங்கங்கு இளைப்பாறும் வண்டிகள். ஒரு புதிய உலகு இங்குள்ளது என்று காட்டியது. பின்னர் அலுவலக ரீதியாக மேலும் இதைப்பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு பெரிய பொருளை ஓரிடத்திலிர்ந்து இன்னொரு இடத்திற்கு அனுப்புவது என்பது எத்தனை பெரிய வேலை என்பது தெரியவந்தவுடன் ஒரு மலைப்பு. நமக்கு தெரியாத பல உலகங்கள் உள்ளன. பல கோடி மதிப்பிலான பொருளை, ஒரு ட்ரைவர், க்ளீனரை நம்பி அனுப்பி வைப்பவனுக்கு எப்படியிருக்கும். அதுவும் சில பொருட்கள் செல்ல மாதக்கணக்கில் ஆகும். ஓட்டிச் செல்பவனுக்கான பொறுப்பு எத்தகையது. எங்கு சாப்பிடுவார்கள், மற்ற இயற்கை கடன்களை எப்படி தீர்ப்பார்கள், தூக்கம் எப்படி, அத்தனை நாள் குடும்பத்தை விட்டு செல்லும் அவர்களின் மனநிலை...

இந்த பெரிய உலகில் ஒரு சிறிய துளியை நமக்கு காட்டுகின்றது இப்புத்தகம். அந்தவகையில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த புத்தகம். 

தண்ணித்தொட்டி தெரு. லாரிகள் புழங்குமிடம். இரண்டு லாரிக்கம்பெனிகள். காந்திலால், ராவுத்தர். ராவுத்தரின் லாரிகள் இரண்டும் ஒரே நாளில் பிரச்சினையில் மாட்டுகின்றன. ஒன்று ஆளை அடித்து போட்டுவிட்டு வருகின்றது. இன்றொன்று கிணற்றை இடித்து தொற்றிக் கொண்டு நிற்கின்றது. காந்திலாலின் லாரி, இங்கிலீஷ் கம்பெனியின் லோடை ஏற்றி வரும் வழியில் காணவில்லை. அதைத்தேடி இங்கிலீஷ்க் கம்பெனி ஆள் விஸ்வநாதன் போகின்றான். இங்குதான் கதை ஆரம்பம். லாரிகள் அடிபடமுதல் காரணமாக, கீறல்விட்ட சக்கரத்தை தட்டி, ஒட்டி விற்பதில் ஆரம்பிக்கின்றது. காயலாங்கடையில் எடுத்த சக்கரம், லாரியில் மாட்டப்படுகின்றது. யாரோ ஒருவருடைய வியாபர தந்திரம், மற்றொருவருடைய வியாபாரத்தை சாய்க்கின்றது. 

சாதரணமாக நாம் பார்க்கும் ஒரு லாரியின் பின்னால் எத்தனை கைகள் உள்ளன. லாரியின் முதலாளி, வாடகைக்கு எடுத்து ஓட்டும் டிரைவர் அல்லது லாரிக் கம்பெனியின் டிரைவர். லாரிக்கு லோடு பிடித்து தரும் தரகர்கள், லோடை ஏற்றிவிட்டு பத்திரமாக சேர்ந்ததா என்று நகம் கடிக்கும் கைகள். லோடிற்கு மேல் லோடடிக்கும் டிரைவர்கள், க்ளீனர்கள். லாரியில் பணம் குடுத்து செல்லும் பிரயாணிகள். இவர்களை நம்பி பிழைக்கும் ரோட்டோரப் பெண்கள், அவர்களுக்கு ஆள் பிடிக்கும் பையன்கள். பெரிய வலை. அவையனைத்தையும் இதில் காட்டுகின்றார் பாலகுமாரன்.

டிரைவர்களுக்கும், க்ளீனர்களுக்குமான உறவுமுறை. எழுதப்படாத சட்டங்கள். குருதட்சிணை. வண்டியை ஓட்டுவது என்பது அந்த வண்டியை கையாள்வது மட்டுமல்லவே, மனிதர்களையும் சேர்த்து கையாள வேண்டியது. மற்ற வண்டிகளை ஒட்டும் ஓட்டுனர்கள், முதலாளிகள், அங்கங்கு இருக்கும் டோல் கேட், காவல்துறை எனப்பலவித சூட்சுமங்களை க்ளீனருக்கு, ட்ரைவர் கற்று தருகின்றான். அதற்கான தட்சிணை, கட்டைவிரலுக்கு பதிலாக சிறைவாசம். 

ஒரு நல்ல முதலாளி என்பவன் தான் வளர்வதுடன், தன் தொழிலாளர்களையும் சேர்த்து வளர்ப்பது. இப்போதும் அது போன்ற மனிதர்கள் இருப்பார்கள் என்று நம்புகின்றேன். ஜெயகாந்தனின் "லவ் பண்ணுங்கோ சார்" கதை என்று நினைக்கின்றேன், அதில் முதலாளி - தொழிலாளியை பற்றி அழகாக வரும். கோஷம் போடும் கூட்டம் வரும் முன்னமே, இங்கு பெரும்பாலனவர்கள் அப்படித்தான் இருந்திருக்கின்றனர். ராவுத்தர் பாத்திரம் அப்படிப்பட்ட ஒன்று. 

டீஸல், பெட்ரோல் கண்டெய்னர்களில் இருந்து அவை கொஞ்சம் திருடப்படும் என்பது தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை. சென்னையில் இருந்த போது, எனக்கு தெரிந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் கூறியது, டீஸல் கண்டெய்னகள், பங்கில் சரக்கை சேர்த்த பின்னும் கண்டெய்னரில் கொஞ்சம் இருக்கும். கண்டெய்னரின் உருளை வடிவத்தால் அடியில் கொஞ்சம் இருக்கும் அதை பம்ப் செய்ய முடியாது. வண்டியை ஸ்டார் செய்து, சடன் ப்ரேக் அடிக்கும் போது வண்டி குலுங்கும், அந்த குலுக்கலில் டீஸல் பைப் வழியாக வெளிய கொட்டும். அப்படியே மிச்சமிருக்கும் டீஸல் பெட்ரோல் எடுக்கப்படும். இப்புத்தகத்தில் வருவது இன்னும் சயன்டிஃபிக்கான முறை. 



லாரிக்கதைகளுடன் மனிதக்கதைகளையும் அழகாக கோர்த்துள்ளார். விஸ்வநாதன் அவரது நண்பர் சுப்ரமணிய ராஜுவின் கேரக்டர் என்று முன்னுரையில் மாலன் கூறுகின்றார். அவரும் ஒரு எழுத்தாளர். பாலகுமாரன் விஸ்வநாதன் பாத்திரத்தையும், காயத்ரி பாத்திரத்தையும் எழுதும் போது வந்து உட்கார்ந்து கொள்கின்றார். விஸ்வநாதன் கூட ஓகே, ஏதோ எழுத்துக்கும், வாழ்க்கைக்கும் நடுவில் போராடும் ஒரு சராசரி ஆசாமி. விஸ்வநாதனின் மனைவியாக வரும் தாரிணி பாத்திரம் யதார்த்தவாதி, கற்பனையில் பறக்கும் புருஷனை தலையில் தட்டி தரைக்கு கொண்டுவருகின்றாள். நான் ஒரு கவிஞன், எழுத்தாளன் எனவே எனக்கு மரியாதை அதிகம் என்று கூறுவதை கண்டிருக்கலாம். ஆனால் அனைத்தையும் விட, ஒரு நல்ல மனிதனாக வாழ்பவன், தன் வாழ்க்கையின் மூலமாக அவர்களை விட பல செய்திகளை சொல்லிவிட்டு போகின்றான். தாரிணி கூறுவது அதையே. அனைவரும் பாரதியாக முடியாது.  

பாலகுமாரன் ஏன் தவிர்க்கமுடியாத எழுத்தாளர் ஆனார் என்பதற்கும் விடை கிடைக்கின்றது. கதை மாந்தர்வாயிலாக இயல்பாக வரும் சின்ன சின்னவிஷயங்கள். அப்பம் வடை தயிர்சாதம் நாவலில் வரும் ஒரு சின்ன விஷயம் "பிழைக்க ஊரைவிட்டு வரக்கூடாது, வந்தால் அதைப்பற்றியே நினைத்துபுலம்பக்கூடாது" எனபது போன்றுவரும். இதன் முன்னும், பின்னும் வரும் விஷயங்கள், ஹோம்சிக் வந்து பெங்களூரில் புலம்பிக்கொண்டிருந்த என்னை கொஞ்சம் மாற்றியது. இப்புத்தகத்திலும் அது போன்று இயல்பாக வரும் விஷயங்களே கவர்கின்றது. கெளசல்யாவிற்கு முதலி சொல்லும் யோசனைகள், ராவுத்தர் பேசும் வார்த்தைகள் என்று. பலருக்கு இது போன்ற நேரடியான அறிவுரையும் தேவையாக இருக்கின்றது.

நாவலை கெடுப்பது என்பது நான் நினைப்பது காயத்ரி பாத்திரம் மட்டுமே.  

இம்மாதிரி பாத்திரங்கள்தான், நான் முதல் பத்தியில் சொன்ன ஆசாமிகளை உருவாக்குவது. ஓவர் இண்டெல்க்சுவலாக நினைத்துக் கொண்டு பேசுவது. எரிச்சல்தான் வருகின்றது. கல்யாணமாகாமல் குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்ள விரும்பும் பெண். அது ஒன்றும் பெரிய அதிர்ச்சி லெவல் இல்லை, ஆனால் பேசுவது அப்பா. தாங்க முடியவில்லை.

நாவலில் வரும் கவிதைகள், மற்றுமொரு ஸ்பீட் ப்ரேக்க்கர். ஏகப்பட்ட கவிதைகள். கவிதை விரும்பிகள் படித்து இன்புறுவார்களாக.

அவரரிந்த உலகில் ஒரு சிறு பகுதியை இதில் காட்டியுள்ளதாகவே நினைக்கின்றேன்.

இதுவரை படித்த பாலகுமாரனின் பல நாவல்களின் இதுதான் நல்ல நாவல் என்று நினைக்கின்றேன். இது போன்ற நாவல்கள் என்றால் படிக்கலாம்.

பாலகுமாரனின் தளம்

இரும்பு குதிரைகள் வாங்க

02 செப்டம்பர் 2016

ஹிந்துத்துவ சிறுகதைகள் - அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்ஹிந்து தளத்தில் ஆலந்தூர் மள்ளன் என்ற புனைப்பெயரில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கதைகளின் தொகுப்பு. 

அரவிந்தன் நீலகண்டனை எனக்கு அறிமுகம் செய்தது திண்ணை இணைய தளம். அவரது பல கட்டுரகள் எனக்கு பல புதிய அறிமுகங்களை தந்துள்ளன. அவரின் கம்யூனிசம் பற்றிய புத்தகம் வெகு சுவாரஸ்யமான, விவரங்கள் நிறைந்த ஒரு புத்தகம். 

சிறுகதைகள் என்பது மிகக்கடினமான ஒரு வடிவம். பலர் அதை பலவிதமாக கையாண்டுள்ளனர். அதில் ஒரு வகை சிறுகதைகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது. கல்கி மதுவிலக்கை பற்றி ராஜாஜியின் இதழ்களில் பல கதைகள் எழுதியிருக்கின்றார். அவை மிக வெளிப்படையான பிரச்சாரக்கதைகள். அவற்றில் அவர் கூறவந்த கருத்து வெகு தெளிவாக, வெளிப்படையாக வரும். பேங்கர் வினாயக்ராவ் என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது ஆனால் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இக்கதைகள் அனைத்தும் அத்தகையவை அல்ல. ஒரே ஒரு சிறுகதையை மட்டும் அப்படி முழுக்க முழுக்க பிரச்சாரக்கதை என்று கூறலாம். மற்றவை அனைத்தும் சிறந்த சிறுகதைகள் என்ற அளவிலேயே படிக்கலாம். வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம்.