17 ஜனவரி 2017

இந்திரா செளந்திரராஜன் நாவல்கள்

சீரியஸ் புத்தகங்களாக் படித்து படித்து மண்டை காய்ந்து போயிருந்தது. ஜாலியான, விறுவிறுப்பான கதைகளை படிக்க வாய்ப்பில்லை. அது போன்ற கதைகளை ஒருதடவை அல்லது இரண்டு தடவை படிக்கலாம். பணம் கொடுத்து வாங்க மனமில்லை. என்ன செய்ய என்று யோசித்த போது கண்ணில் பட்டது கிண்டில் அன்லிமிட்ட. மாதம் 199 மட்டும், கிண்டில் அன்லிமிட்டட் வகையில் வரும் புத்தகங்கள் அனைத்தையும் இலவசமாக படிக்கலாம். நல்ல சான்ஸ். கிண்டில் வாங்க வேண்டும் என்றும் நீண்டநாள் ஆசை. இரண்டையும் சேர்த்ததில் ஏராளமான புத்தகங்கள் கையில். வகையாக மூன்று நாள் பொங்கல் விடுமுறை வேறு. படித்து தள்ளிவிட்டேன். உண்மையில் சொல்லப்போனால், சிறு வயதில் படித்த அந்த வேகம் மீண்டும் கிடைத்த குஷி. சும்மா சொல்லக்கூடாது கிண்டில் சூப்பர்தான். கண் வலி, கை வலி ஏதுமில்லை. புத்தகத்தில் படிப்பது போன்ற பிரமையும் தருகின்றது. என்ன சைஸ் தான் கொஞ்ச சிறியது.

முதலில் படிக்க நினைத்தது மசாலா கதைகள்தான். சிறுவயதில் விகடனில் தொடராகவந்த ரகசியாமாய் ஒரு ரகசியம். விகடனை வாரா வாரம் எதிர்பார்க்க வைத்த ஒரு தொடர். ஒரு கச்சிதமான மர்ம நாவல். அதில் ஆரம்பித்து இந்திரா செளந்திரராஜனின் பெரும்பாலான நாவலகளை படித்து முடித்தேன். மூன்று நாட்கள் போனது தெரியவில்லை. 

க்ரைம் கதைகள் எழுதுவது ஒரு வகை.சில பல கொலைகள், அதற்கு சில காரணங்கள். பணம், புகழ், பதவி. இவை பெரும்பாலும் நவீன யுக கதைகள். அதில் கொஞ்சம் அமானுஷ்யத்தை சேர்த்தால், இவரின் கதைகள். ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிராபகர், சுபா இவர்களின் கதைகள் ஒரு வகை. இந்திரா செளந்திரராஜன் பாணி தனி பாணி. இவரை போன்று எழுதும் மற்ற எழுத்தாளர்கள் மிகக்குறைவு. கலாதர் என்று ஒருவரின் சில கதைகள் படித்திருக்கின்றேன், பிறகு தெலுங்கு எழுத்தாலர் எண்டமூரி வீரேந்திரநாத். இவர்களின் எழுத்து நமது பாரதத்திலிருக்கும் பல அமானுஷ்ய, பழைய விஷ்யங்களை நவீன குற்றங்களுடன் கலந்தளிப்பது. முடிவில் எது உண்மை என்பதை வாசகர் யூகத்திற்கே விட்டுவிட்டு போவது. உதாரணம் எண்டமூரி வீரேந்திரநாத்தின் துளசி. சைக்கியாட்ரிஸ்ட், மந்திரவாதி, டாக்டர் மூவருமே தன் வெற்றி என்பதாக கதை முடியும். 
தமிழில் வெற்றிகரமாக இது போன்ற கதைகளை எழுதுவது இவர் மட்டுமே. அதுவும் தொலைக்காட்சி தொடராகவும் எடுக்கப்பட்டு நல்ல வெற்றி பெற்றது. 

வெற்றிகரமான ஒரு டெம்ப்ளேட். ஒரு கிராமம் இதுதான் முக்கியம். முடிந்தவரை மலையடிவாரமாக இருப்பது சிலாக்கியம். அடுத்தது ஒரு சிவன் கோவில். அப்போதுதான் சித்தர்கள் எல்லாம் வரமுடியும். பெருமாளை வைத்து கொண்டு என்ன செய்ய, அவர் யோகநித்திரையில் இருப்பவர், ஒன்றும் செய்யமாட்டார். தண்டனை தருவது எல்லாம் சிவனே. அடுத்த தேவை, அந்த ஊருக்குள் வரும் ஒரு ஸ்ட்ரேஞ்சர், அவன்(ள்) வந்து தங்க ஒரு வீடு. வரும் போதே சில மர்ம நிகழ்ச்சிகள். ஊர்க்காரர்களின் மிரட்டல் (இது சாமி விஷயம் தலையிடாதே, ஊர விட்டு போய்டு, உனக்கு மரணம்) கேள்வி கேட்பவர்கள் சிலருக்கு மரணம். நாயகன் கண்ணில் மட்டும் சில அதிசய நிகழ்ச்சிகள். ஆனாலும் அவனுக்கு சந்தேகம். இறுதியில் மனித சதி + அமானுஷ்ய சக்தி. எது உண்மை என்ற குழப்பத்துடன் ஊரை விட்டு வெளியேறுதல்.

இதை வைத்து கொண்டு ஏராளாமன கதைகளை எழுதி தள்ளிவிட்டார். ஆனால் முக்கியாமனவை, ஒரே டெம்ப்ளேட்டை எழுதும் போது சுவாரஸ்யம் கொஞ்சம் கூட குறையக்கூடாது. புதிய களம் வேண்டும். அதில்தான் வெற்றி இருக்கின்றது. இவர் கெட்டிக்காரர்.

டாப் கதைகள் 

ரகசியமாய் ஒரு ரகசியம்
ஊரில் இருக்கும் ஒரு சிவன் கோவில். சூரிய அஸ்தமனத்திற்கு பின் யாரும் கோவிலில் இருக்கக்கூடாது என்ற கட்டளை. அருகிலிருக்கும் ஆசிரமத்தில் அனைத்து வியாதிகளை குணப்படுத்தும் ஊமைச்சாமியார். படு விறுவிறுப்பான கதை. இறுதிவரை குற்றவாளியை யூகிக்க விடாத கதை. இறுதி அந்தியாயத்தில் சிறிய குறிப்பு இருக்கின்றது. சில லாஜிக் மீறல்கள் உண்டு. எடுத்தால் வைக்க விடாது. இதை கொஞ்சம் நீட்டி வளர்த்தி தொடராக எடுத்தனர். அதுவும் பிரமாதமாக இருந்தது.

விட்டு விடு கருப்பா

கருப்பு காவல்காக்கும் ஊர். இன்னொரு விறுவிறுப்பான கதை. நாவலைவிட தொலைக்காட்சி தொடர் இன்னும் விறுவிறுப்பானது. உண்மையில் பல யூகிக்க முடியாத திருப்பங்களை வைத்த ஒரு செம திரில்லர்.

ஐந்துவழி மூன்று வாசல்

படித்த மொத்த கதைகளில் சிறந்த ஒன்று. இரண்டு திரிகள். பூலித்தேவன் காலத்து வீரபாண்டியன் கதையையும் இன்றையகாலத்து புரொபசர் கதையும் பயணிக்கும் இரண்டையும் சரியான இடத்தில் இணைத்துள்ளார். இது ஒரு புதையல் வேட்டை கதை. அடுத்தது என்ன என்ன என்று பரபரக்கவைக்க கூடிய கதை. முடிவு கொஞ்சம் சுமார். நல்ல பொழுதுபோக்கு கதை

வானத்து மனிதர்கள்

தொடராக வந்த கதை. தொடர் மொக்கையாய் போனது. நாவல் நன்றாக வந்துள்ளது. இதுவும் சித்தர்கள் பற்றிய கதை. தாணுமாலயன் மலை, கற்பக மரம், பிணத்துடன் திரியும் அகோரி, பதினெட்டு சித்தர்கள் என்று ஜாலம் காட்டும் மலைக்கு வரும் வன அதிகாரி. அங்கு நடக்கும் குற்றங்கள் என்று ஓடும் கதை. சித்தர்கள் பற்றிய பல விஷயங்களை கலந்து எழுதியுள்ளார். இதுவும் பரபரப்பாக படிக்க வைக்கும் கதை.

சுமாரான, படிக்க சுவையான கதைகள்

தினம் ஒரு உயிர்

பரபரப்பாக போகும் ஒரு கதை. ஜமீன் மாளிகைக்கு செல்லும் திரைப்பட இயக்குனரும் உதவியாளரும் அக்கதை கேட்டு அதிர்ந்து திரும்புகின்றனர். அங்கு சென்ற யாரும் உயிருடன் இருப்பதில்லை என்பதை அறிந்து அதை நம்பாமல் திரும்ப, உதவியாளன் இறக்கின்றான். இயக்குனர் உண்மையறிய செல்ல, சுழலில் மேலுல் மேலும் செல்ல கதை ஆங்கிலேயர் காலத்திற்கு செல்கின்றது. ரசவாதத்தை அடிப்படையாக கொண்ட கதை. நல்ல வேகம்

கிருஷ்ண தந்திரம்

சும்மா சிவனை மையமாக கொண்டு எழுதி போரடித்ததால், கிருஷ்ணன் பக்கம். கிருஷ்ணன் பாவம் இந்த யோகம் எல்லாம் தெரியாதா ஜாலி ஆள். குழலூதி வெண்ணையுண்டு திரிந்தவனல்லவா, அதனால் அவனின் குழலை வைத்தே ஒரு கதை எழுதிவிட்டார். சுமாரான கதை.

அது மட்டும் ரகசியம்
  
மேலே சொன்ன டெம்ப்ளேட்டில் கச்சிதாமாக அமர்ந்த கதை.

காற்றாய் வருவேன்

பேய்க்கதை போல ஆரம்பித்து, விற்றென்று சென்று குற்றத்தில் முடியும்கதை. இதுமாதிரியான கதைகளை படித்தவர்கள் குற்றவாளியை கண்டுபிடித்துவிடலாம். 

படிக்கலாம், அவ்வளவுதான் வகை

சொர்ண ரேகை

ரேகை சாஸ்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. மாத நாவலுக்கு எழுதி தந்திருப்பார் போல. அமானுஷ்யமாக ஆரம்பித்து. சப்பென்று முடியும் ஒரு கதை. டைம்பாஸ்

சொர்ண தாரா

மறுபடியும் ஒரு சித்தர் கதை. மகேந்திரகிரியில் தொலைந்து போகும் தம்பியை தேடி செல்லும் அண்ணன் கதை. ரசவாதம் எல்லாம் கலந்து ஒரு சுமாரான கதை. சுவாரஸ்யமில்லை

சொர்ண ஜாலம்

ரசவாதம் பற்றிய கதை. சித்தர்களில் பெண் இருந்தால் எப்படி என்று கொஞ்சம் மாறுபட்டு யோசித்தகதை. சுவாரஸ்யமில்லை

ஆனந்த தாண்டவம், மரகதலிங்கம் - சுமாரான கதைகள். 

தூக்க மாத்திரைக்கு பதிலாக படிக்கலாம்

எந்திர ஜாலம்
ஆயிரம் ஜன்னல் மாளிகை

மந்திரவிரல், மந்திர வாசல், மந்திரவலை, ஓடாதே கருப்பு - சொல்வதற்கு அதிகமில்லை. பஸ்ஸில் படித்துவிட்டு அங்கேயே போட்டுவிட்டு வரவேண்டும், இல்லையென்றால் சிவகோபத்திற்கும், சித்த சாபத்திற்குமாளாவீர்கள். காசு குடுத்து வாங்கியிருந்தால் வரும் சாபம் தனி

அவரின் நடை தெளிவான நடை. முடிந்தவரை தேவையற்ற திடீர் திருப்பங்களை வைப்பதில்லை. அந்தியாய முடிவில் நாயகி வீல் என்று கத்த அடுத்த அந்தியாய ஆரம்பத்தில் கரப்பான் பூச்சியை காட்டுவதில்லை. கதை நடக்குமிடத்திற்கு நம்மை இழுத்து செல்வதில் அவர் எழுத்து வெற்றி பெற்றுள்ளது. முதல் ஐந்தாறு கதைகளை எடுத்தால் வைக்க முடியாது. அடுத்தது என்ன என்ன என்று பரபரவைக்கும் திருப்பங்கள். மனைவி சாதாரணமாக அழைத்து, கோபமாக அழைக்கும் வரை காதில் விழவில்லை. 

பல நாவல்களில் நாமறியா பல தகவல்கள். பிரச்சினை என்னவென்றால், அதில் எவ்வளவு உண்மை, கதைக்கான கற்பனை என்பதை அறியமுடிவ்தில்லை. இவருக்கும் பாலகுமாரனுக்கு நேர்ந்த ஆபத்து நேர்ந்திருக்கின்றது. கதையில் தத்துவங்கள், புராண விளக்கங்களை அளிக்கலாம். ஆனா. அளவிற்கு மீறி செல்ல ஆரம்பித்து விட்டதை சமீபத்திய கதைகளில் காண முடிகின்றது. ஒரு வித பிரசங்க தொனி கேட்க ஆரம்பித்துவிட்டது. அனைவரும் பக்கம் பக்கமாக பேசுகின்றனர். ஆயாசமாக இருக்கின்றது. 

பத்து பதினைந்து வருடத்திற்கு முந்தைய இந்திரா செளந்திரராஜனே என் சாய்ஸ்.

சீக்கிரம் சிவம், ருத்திரவீணை நாவல்களையும்  கிண்டிலில் ரிலீஸ் செய்யுங்கள் பார்க்கலாம். 


1 கருத்து: