25 மார்ச் 2017

மாவோயிஸ்ட் - பா ராகவன்

கிழக்கு பதிப்பகம் சில வருடங்களுக்கு முன்பு ஏகப்பட்ட புத்தகங்கள் வெளியட்டது. நான் கூட எங்கே இன்னொரு மணிமேகலை பிரசுரமாகிவிடுமோ என்று கூட யோசித்தேன். அப்போதே விமர்சனங்களையும் சந்தித்தது. இணையத்திலிருக்கும் தகவல்கலை திரட்டி புத்தகமாக்குகின்றார்கள் என்று. காரணம், அவர்களின் புத்தக வரிசை அப்படி, பெரும்பாலான புத்தகங்களின் உள்ளடக்கம் நீங்கள் தேடினால் கிடைக்கும் அல்லது அதைப்பற்றி ஏகப்பட்ட புத்தகங்கள் வெளியாகியிருக்கும். ஆனால் அவையனைத்தையும் ஒன்று திரட்டி தேவையானதை மட்டும், சுவாரஸ்யமாக தருவதே நல்ல ஆசிரியரின் திறமை. அந்த வகையில் பாரா ஒரு நல்ல ஆசிரியர். ஆனால் அனைத்து புத்தகங்களும் ஒரு தலை பட்சமாகவே இருக்கும் . நமது புராண மரபையொட்டி பாட்டுடை தலைவனை விதந்தோதும் மரபை அவர் உடைப்பதில்லை. அல்கொய்தா பற்றி எழுதினாலும் சரி, மாவோயிஸ்ட் பற்றி எழுதினாலும் சரி.

மாவோயிஸ்ட் என்பது இடதுசாரி தீவிரவாத கள் இருக்கும் மொந்தையின் தற்போதைய பெயர். 

நக்ஸலைட் வரலாற்றை சுருக்கமாக சொல்லும் ஒரு புத்தகம். அதே சமயம் வாசக சுவாரஸ்ய புல்லறிப்பு சொறிதலுக்கென்று ஏகப்பட்ட சாகசங்களையும் கலந்து எழுதப்பட்ட ஒரு வீர(!!) வரலாறு. சீனப்புரட்சியை கண்டு நாக்கில் நீர் ஊற இங்கும் அதே புரட்சியை நடத்த கிளம்பியவர்களின் நோக்கம், மக்கள் விடுதலை. சில சமயம் அந்த விடுதலையை அவர்களை கொல்வதன் மூலமும் தரலாம் என்ற நிலைக்கு இன்றுறு வந்து நிற்பதன் காரணம், அதிகாரப்பசி. அதை பற்றி பேசாமல் புத்தகம் முழுவதும் அவர்களை ஒரு விடுதலை வீரர்களாக, ஒரு கதாநாயக பிம்பத்தை காட்டி செல்கின்றது. 

சாரு மஜூம்தாரின் இயக்கம், மக்கள் யுந்தக்குழு போன்றவற்றின் தோற்றத்தின் காரணம் சரிதான். அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் கதாநாயகர்கள். ஆனால் கண்ணிவெடி வைப்பது, சிறைக்கைதிகளை விடுவிப்பது போன்றவை தீவிரவாதம் என்ற பெயரில்தான் அழைக்கப்படவேண்டும்.  ஆனால் புத்தகம் முழுவதும் அவர்கள் செய்வது அனைத்தும் ஒரு சாகச செயல் போல காட்டியிருப்பது எரிச்சலாக வருகின்றது. காவல்துறையினரின் அத்துமீறல் போன்றவற்றை அப்படியே நேரில் கண்டது போல எழுதும்போது, தீவிரவாகள் மக்களை மிரட்டி ஆள்வதை மட்டும் யாரோ எவரோ தூத்துக்குடி பக்கம் சொன்னாங்க என்பது போன்று எழுதுவதை ஏற்க முடியவில்லை. 

ஆசிரியர் "அவர்களின் நியாத்தையும் கூறவேண்டும் " என்பதாக தீவிரவாதிகளைப் பற்றி எங்கோ எழுதியிருந்ததை படித்தேன். மிகச்சரி. அவர்களின் நியாயம் என்பது அவர்ள் ஆயுதம் ஏந்துவதற்கான காரணம் மட்டுமே. ஆயுதத்தை ஏந்திய பின் அவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம், அரசின் செயல்களுக்கு எதிர்வினை என்று புரிந்து கொள்வது அல்லது விளக்குவது சரியாகாது. அவர்கள் தொடுப்பது இந்திய அரசின் மீதான யுத்தம் என்றால் அவர்களை அழிப்பதற்கு இந்திய அரசு செய்வது எதையும் தவறு என்று கூறமுடியாத நிலைக்கு அவர்கள்தான் காரணம் என்பதையும் சொல்ல வேண்டும். பல கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமே அவர்களை ஆயுதம் ஏந்த வைக்கின்றது என்ற உண்மையை சொல்லும் போது, அதே அரசு அமைதிக்காக அங்கு செய்ய முற்படும் வளர்ச்சிப் பணிகளை தடை செய்வதும் அவர்களே என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். இப்போது அரசு அவர்கள் பகுதிகளில் செய்யும் அனைத்தையும் தடுப்பது அவர்கள்தான். வெளிநாட்டிலிருந்து உதவிகள் இல்லை என்று புத்தகம் கூறுகின்றது. மாவோயிஸ்ட்டுகளை வளர்ப்பதே சீனாதான் என்று அரசு சொல்வதையும் காற்றில் விட முடியாது. 

அடக்குமுறைக்கு எதிராக எழுந்ததுடன் புரட்சி வேகம் எல்லாம் முடிந்துவிடுகின்றது. அதன் பின்னால் இருப்பது வெறும் வன்மம். அறத்தை விட்டுவிட்ட புரட்சி வெறும் தீவிரவாதம். அதை புரட்சி என்று  விதந்தோதுவது மக்களுக்குத்தான் ஆபத்து. 

24 மார்ச் 2017

அசோகமித்திரன்

பெரும்பாலான ஆத்மாக்களை போல, சிறுவர்மலரில் ஆரம்பித்து ராஜேஷ்குமார் வழியாக கல்கி சுஜாதா என்று படித்துக் கொண்டிருக்கும் போது, திஜாவின் எழுத்து ஒரு தட்டி தட்டி தூக்கிப் போட்டது. என்ன ஒரு எழுத்து என்று வியந்த பொழுது, ஆர்வியின் தளத்தில் ஒற்றன் பற்றி படித்தேன். யார்ரா இந்த அசோகமித்திரன் திஜாவை விட பெரிய ஆளா என்றுதான் படித்தேன். சே, இந்தாளை இவ்வளவு நாள் படிக்காமல் விட்டுவிட்டோமே என்று வெட்கப்படவைத்தது. பெரிய பெரிய வாக்கியங்கள் கிடையாது, அலங்கார வர்ணனைகள் கிடையாது ஆனாலும் மிகப்பெரிய தாக்கத்தை தந்துவிட்டு போய்விட்டார். பின்னர் தேடி தேடி படித்தேன். கரைந்த நிழல்கள், மானசரோவர், தண்ணீர், ஆகாயத்தாமரை, விழாமாலைப்பொழுதில், யுந்தக்களுக்கிடையில் என்று ஓவ்வொன்றும் எனக்கு மிகப்பிடித்தமானதாகிவிட்டது. பதினெட்டாம் அட்சக்கோடு மேலும் அவரை எனக்கு மிகவும் நெருக்கமானவராக்கியது. அவரது பழைய புகைப்படங்கள் கண்ணில் பட்டது, அவரின் தோற்றம் எனது மாமாவை நினைவு படுத்தியது. எனக்கு புத்தகங்களை அறிமுகம் செய்தவரும், பல புத்தகங்களை வாங்கி தந்தவரும், வீட்டிற்கு தெரியாமல் சேர்த்து வைத்த காசில் சிவகாமியின் சபதம் வாங்க ரகசியமாக உதவியவரும் அவர்தான். அவரைப் போலவே இருந்த அவரது தோற்றமும், அவரை ஏதோ எனக்கு மிகத்தெரிந்த ஒரு சொந்தக்காரர் போல நினைக்கவைத்தது. நேற்று அவர் இறந்ததும் ஏதோ நெருங்கிய சொந்தம் ஒன்றை இழந்தது போலத்தான் இருந்தது. அவரது பேட்டிகள் எல்லாம் கூட பலவற்றை கற்று தந்தன. வாழ்க்கை தரும் எந்த கசப்பையும் மனதில் ஏற்றி வைத்துக் கொள்ளாத அந்த மனம். அதுதான் பலருக்கு தேவை.

இவரின் சில சிறுகதைகள் பிடிபடவில்லை என்றாலும், பெரும்பாலனவை மனதிற்கு நெருக்கமானவை. பிராயணம், ரிஷ்கா, புலிக்கலைஞன், ஐநூறு கோப்பை தட்டுகள்,அம்மாவுக்காக ஒரு நாள், என்று ஒரு லிஸ்ட் இருக்கின்றது. அவரை படிக்கும் பலருக்கு அவர் இணையம் மூலமே அறிமுகமாகியிருக்க கூடும் என்னைப் போல. ஜாதி காரணமாக ஆட்சியாளர்களின் பார்வை அவர் மீது பட்டதில்லை.  அவர்களுக்கு ஆனாவுக்கு ஆனா, கானவுக்கு கானா போட்டு எழுதும் எழுத்துக்களே போதும். உண்மையான எழுத்து எப்படியும் அதற்கான பெருமையை அடையும்.

அஞ்சலிகள். 

மனிதனும் மர்மங்களும் - மதன்

ஏதோ  ஒரு பத்திரிக்கையில் தொடராக வந்திருக்கும் போல. மதன் ஒரு நல்ல கார்ட்டூனிஸ்ட், எழுத்தாளர். சுவாரஸ்யமான எழுத்தாளர். ஆனால் எதைப்பற்றி அவர் எழுதுகின்றார் என்பதை பொறுத்தே அதை படிக்கலாமா வேண்டாமா என்று நாம் முடிவு செய்ய வேண்டும். இது அவர் படித்த பல புத்தகங்களில் எக்ஸ்ட்ராக்ட். சாறு.

இன்றும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் பேய்கள். அந்த பேய்களை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள். வழக்கம்போல அனைத்தும் வெளிநாட்டு பேய்கள். விதவிதமான பேய் அனுபவங்கள். பல வித சக்தி கொண்ட மனிதர்களை பற்றிய தகவல்கள். மீன் மழை, தவளை மழை, பெரிய ஐஸ் கட்டி மழை. ஏலியன்கள் பற்றிய கட்டுரைகள்.

அனைத்து கட்டுரைகளும் சுவாரஸ்யமான நடையில் எழுதியிருக்கின்றர். ஜாலியாக பக்கத்தில் அமர்ந்து கொண்டு பேசும் எழுத்து நடை. அப்புறம் அந்த பேய் வந்து ஒரே அடி, சே என்ற மாதிரி எழுதிக் கொண்டு போகும் போது படிக்க நன்றாகத்தான் இருக்கின்றது. இந்தியப்பேய்களை பற்றி ஒன்றுமே காணோம். ஒரு வேளை எழுத ஆரம்பித்தால் பக்கம் பத்தாது என்று விட்டு விட்டு போய்விட்டார் போல.

சுவாரஸ்யமான புத்தகம்.

23 மார்ச் 2017

கிமு கிபி - மதன்

மதனின் பிரச்சினை அவர் படிக்கும் வரலாறு அனைத்து பாரதக்கண்டத்திற்கு வெளியேதான் இருக்கும். கில்காமேஷ் வரலாறு, ராமாயணம் புராணம் என்ற வகையில் தான் அவர் பார்வை போகின்றது. இந்தியப்புராணங்கள் பற்றி அவர் எங்கும் எதுவும் பேசுவதில்லை. அதை வெறும் கதை என்று மட்டும் ஒதுக்க முடியுமா என்ன? ஒரு முறை விகடனில் ஹாய் மதனில், பூமாதேவிக்கும் இரண்யகசிபுவிற்கும் பிறந்தவன் நரகாசுரன் என்று எழுதியிருந்தார். இன்னும் சில பல தவறுகளும் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்த நினைவு. 

கிமு கிபி என்ற பெயரில் மனித குல வரலாற்றை சொல்லும் புத்தகம் என்றே முன்னுரை சொல்கின்றது. மனிதன் எவ்வாறு தோன்றினான், நாகரீகம் எப்படி வளர்ந்தது என்பதை பற்றியெல்லாம் வெகுவிரிவாக பேசுவதாக் குறிப்பு சொல்கின்றது. நாகரீகம் போன்றவை என்றாலே அவை இந்தியாவிற்கு வெளியில்தானே இருக்க வேண்டும். பாபிலோன், கில்காமேஷ் என்று மந்திய ஆசிய புராண வரலாறுகளை பற்றி விரிவாக பேசுகின்றது. கிமுவிற்கு முற்பட்ட காலத்தில் பாபிலோனில் நாகரீகம் செழித்து வளர்ந்த காலத்தில், இந்தியாவில் ஒன்றுமே கிடையாது. சிறு சிறு கூட்டங்கள் மட்டுமே இருந்தன என்று கூறப்பட்ட பகுதிகள் வந்தவுடன் படித்து கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டேன். மேற்கொண்டு புத்தகம் எப்படி இருக்கும் என்பது தெரிந்துவிட்டது. 

மேற்கொண்டு ஏதும் சொல்வதற்கில்லை.

யாராவது படித்தவர்கள் உருப்படியாக ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் கேட்டுக் கொள்கின்றேன்

16 மார்ச் 2017

டாலர் தேசம் - பா ராகவன்

குமுதம் ரிப்போர்ட்டரில் சுமார் இரண்டு  வருடங்களாக வெளிவந்த தொடர். அமெரிக்காவின் வரலாறு. 

அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்று பாடப்புத்தகத்தில் படித்த வரலாறு அதோடு நின்று போகின்றது. மார்ட்டின் லூதர் கிங், கருப்பர்களுக்காக போராடினார் என்று படித்திருப்போம். "தாடி வைத்திருப்பது என்பது முகத்திற்கு நாம் செய்யும் மரியாதை" என்று ஆபிரகாம் லிங்கன் சொன்னார் என்று யாராவது ஃபேஸ்புக்கில் பரப்பியதை படித்திருப்போம். அனைத்து துண்டு துண்டாக வேறு வேறு காண்டெக்ஸ்டுகளில். அமெரிக்காவின் முழு சரித்திரமும் தெரிந்திருக்குமா என்றால் தெரியாது. அதை தெரிந்து கொள்ள இதைப் படிக்கலாம்.

அமெரிக்கா என்பது இன்று பக்கத்து ஊர் மாதிரி ஆகிவிட்டது. அமெரிக்காவின் பெப்ஸியை எதிர்ப்போம் என்று ஐபோனில் ஸ்டேட்டஸ் போட்டு கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் பொருட்கள் எங்கும் நிறைந்திருக்கின்றது. எப்படி இந்த வளர்ச்சி சாத்தியமானது? உலகில் எது நடந்தாலும் அமெரிக்க சதி, அமெரிக்க ஆக்கிரமிப்பு என்று ஆரம்பிக்கின்றார்கள். கூடங்குளத்திலிருந்து, நெடுவாசல், தேவாரம் நியூட்ரினோ வரை அமெரிக்கா வசை பாடப்படுகின்றது. அதே சமயம் அவர்களின் பணமும், தொழில் நுட்பமும் தேவையாக இருக்கின்றது. இதற்கு காரணம் என்ன? உலகத்தின் எந்த மூலையிலிருக்கும் இஸ்லாமியர்களில் கொஞ்ச பேரையாவது அமெரிக்க எதிர்ப்பாளர்களாக எளிதில் மாற்ற முடிவதன் காரணம் என்ன? எங்கிருந்து அமெரிக்கர்களுக்கும் பணம் கொட்டுகின்றது? என பல கேள்விகளுக்கு பதிலளிக்கின்றது.

அமெரிக்காவின் காலனி குடியேற்றங்களில் தொடங்கி, அவர்களின் விடுதலைப் போர்கள் வழியாக அனைத்து அதிபர்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம். பெரும்பாலும் போர்களை பற்றியே பேசுகின்றது. வியட்னாம், க்யூபா (கூபா என்றுதான் சொல்ல வேண்டுமாம்), ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் என்று அவர்கள் நடத்திய யுத்தங்கள் பற்றிதான் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. பல விஷயங்கள் ஏற்கனவெ இதே ஆசிரியரின் "நிலமெல்லாம் ரத்தம்", "மாயவலை", சதாம் உசேன், ஹிட்லர் புத்தகங்களில் வந்த அதே தகவலகள்.. சில இடங்களில் வார்த்தை அமைப்பு கூட மாறவில்லை. 

அமெரிக்காவை பற்றி மறுபடியும் ஒற்றைப்படையான பார்வையையே தருவதாக தெரிகின்றது. வெளிநாட்டில் அமெரிக்கா ரெளடிதான். உள்ளூரில் எப்படி அந்த வளர்ச்சி சாத்தியமானது. இன்றைய தகவல் தொழில் நுட்ப புரட்சியில் அமெரிக்காவின் முக்கிய பங்கு, அவர்களின் கல்வித்தரம், அவர்களின் இப்போதிருக்கும் வாழ்க்கைமுறை, குடும்ப அமைப்புகளின் சிதைவு, ஆன்மீக ஏரியா, போதை கலாச்சாரம், ஹிப்பிகள் போன்ற பல ஏரியாக்கள் தொடப்படவில்லை அல்லது சும்மா கொஞ்சம் எட்டி பார்த்துவிட்டு போயிருக்கின்றார். 

அமெரிக்காவை பற்றி ஒன்றும் தெரியாததற்கு இது எவ்வளவோ பரவாயில்லை

10 மார்ச் 2017

போக புத்தகம் - போகன் சங்கர்

போகன் சங்கர் என்ற பெயர் ஃபேஸ்புக்கில்தான் பரிச்சியம். அவ்வப்போது அவர் எழுதும் மூன்று நான்கு வரி கட்டுரைகள் கண்ணில் படும். சான்றோர்கள் கவிதை என்றார்கள். அவ்வப்போது சின்ன சின்ன சம்பவங்கள், கட்டுரைகளையும் எழுதுவார். சின்னஞ்சிறு கதைகள் எனலாம். அவற்றை தொகுத்து போக புத்தகம் என்ற பெயரில் தொகுத்திருக்கின்றார்கள். பெயரை மட்டும் கேட்டால் கொஞ்சம் தயக்கம் இருக்கும். வீட்டம்மா என்ன நினப்பார்களோ, வீட்டிற்கு வருபவர்கள் கண்ணில் பட்டால் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் தோன்றும். ஆனால் நல்ல புத்தகம். 

அட்டை எப்படி இருக்கின்றது என்று சரியாக தெரியவில்லை. ப்ளாஸ்டிக்காக இருக்காது என்று நம்புவோமாக.

நாவலை விட சிறு கதை மிகவும் கடினமானது. இரண்டு மூன்று பக்கங்களில் சில திறப்புகளை உண்டாக்குவது மிகக்கடினம். வடிவம் குறைய குறைய அது கடினமாகிக் கொண்டே செல்லும். ஆனால் அது முழுக்க முழுக்க கற்பனை செய்து எழுதும் போதுதான். நிஜவாழ்விலிருந்து நாம் பெறும் அனுபவங்களை எழுதும் போது, அதை பெரிய சிறு கதையாக மாற்றுவதுதான் கடினம். உதாரணம் அசோகமித்திரனின் ரிஷ்கா. அதைப் படிப்பவர்கள், அது போன்ற அனுபவத்தை வாழ்வில் ஒருமுறையாவது அடைந்திருப்பார்கள். அது போன்ற சில தருணங்களை, பட்டென்று ஒரு புகைப்படம் போல ஓவியம் போல காட்சிப்படுத்தி மனதில் வைத்துக் கொள்ள பயன்படுவது இந்த குட்டி வடிவம். அதை வளர்த்தி எழுதினால் வளவளவென்றுதான் போகும்.

07 மார்ச் 2017

மாயவலை - பா ராகவன்

நிலமெல்லாம் ரத்ததிற்கு பின் அதன் பின்னால் இருக்கும் மாயவலை பற்றிய புத்தகம். உலகளவில் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும் சில ரெளடி இயக்கங்கள் பற்றிய நூல். தீவிரவாதத்தால் வெகுவாக பாதிக்கப்பட்ட நாடுகளில் நாமும் ஒன்று. ஆனால் நமக்கு அண்ணன்கள் எல்லாம் இருக்கின்றார்கள். தினமும் அடிவாங்கிக் கொண்டு பதிலுக்கு அடித்து, அழுது என்று. அந்தளவிற்கு அனைவரையும் இம்சை படுத்தும் தீவிரவாத இயக்கங்களை பற்றி விரிவாக எழுதப்பட்ட ஒரு தொகுப்பு. ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஜமா இஸ்லாமியா, அல் கொய்தா, லஷ்கர் ஈ தொய்பா என்று ஒரேடியாக் இஸ்லாமிய இயக்கங்களை பற்றி மட்டும் எழுதினால் மதச்சார்பு தீட்டு வந்துவிடும் என்று ஒரு ஜப்பானிய இயக்கம், ஓம் என்று ஆரம்பிக்கும் அந்த இயக்கத்தின் பெயரே வாயில் நுழையவில்லை, ஈடிஏ என்னும் இடதுசாரி இயக்கம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.

அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுக்கும் பொதுவான எதிரி அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா. இதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. இஸ்ரேல், இந்தியாவும் அவர்களின் மதத்திற்காகவே எதிர்க்கப்படுகின்றது. அகண்ட இஸ்லமிய தேசத்க்கனவிற்கு பாதகமாக இருப்பது இவையே என்ற எண்ணம் அவர்களிடையே வலுவாக இருக்கின்றது. ஆனால் அவர்களின் சரித்திரத்தை பார்த்தால், அவர்களுக்கான விரோதிகள் வெளியில் எல்லாம் கிடையாது. அவர்கள்தான். 

கிறிஸ்துவத்தில் ஜாதிகள் உண்டு, அங்கும் பிரச்சினைகள் உண்டு. எங்களூரில் கிறிஸ்துவ நாடார் உறவின்முறை என்ற பதத்தை கேட்டு குழம்பியிருக்கின்றேன். என்னாங்கடா, ஜாதியில்லைன்னுதானடா அங்க போனீங்க, அங்கயும் போயுமா? பின்னர் தலித் கிறிஸ்துவத்தில் ஆரம்பித்து கிறிஸ்துவ பிராம்மணர்கள் வரை வந்தாகிவிட்டது. இஸ்லாமில் ஏற்றத்தாழ்வு கிடையாது, அனைவரும் ஒன்று, கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதே பொதுவான சித்திரம். அதுவும் தவறு தம்பி என்கிறது இப்புத்தகம். இனக்குழுக்களின் சண்டை என்பது ஜாதிச்சண்டையை விட மோசமானது. ஷியா - சுன்னி பிரிவு சண்டை, இன்னும் பல உயிர்களை குடித்து வருகின்றது. பிறகு என்ன சமத்துவ பொங்கல் வேண்டியிருக்கின்றது.

உலகளாவிய தீவிரவாதிகளின் வலைப்பின்னல், அவர்களின் இயக்கங்களின் நிர்வாக அடுக்குகள், வருமானம், போன்ற நிழலுகத்தை காட்டுகின்றது. சிங்கம் புலிகளைகூட வேட்டையாடிவிடலாம். எலிகளையும், கரப்பான் பூச்சிகளையும் கொல்வதுதான் கடினம் இவர்கள் அந்த வகைதான். வளைகளுக்குள் ஒளிந்து கொண்டும் தாக்கும் இவர்களை போராளிகள் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுமென்றால் கூறிக் கொள்ளலாம். 

இந்த சரித்திரங்களை எல்லாம் படிக்கும் போது இஸ்லாமியர்கள் வேறு எந்த நாட்டைவிடவும் இந்தியாவில்தான் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் இருக்கின்றார்கள் என்று கூற முடியும். மேடை போட்டு பெரும்பான்மை மதத்தை திட்டும் வாய்ப்பு எங்கு கிடைக்கும். மற்ற நாடுகளில் செய்தால் ஒட்ட நறுக்கிவிடுவார்கள்.

புத்தகத்தில் எரிச்சலூட்டும் விஷயங்களும் இருக்கின்றன. முதலில் தீவிரவாதிகளுக்கு கொஞ்சம் கதாநாயக அந்தஸ்து தருவது. இரண்டாவது, ஜனரஞ்சகமாக எழுதுவது என்ற பெயரில், ஒட்டத நடைக்கு பாய்வது. ஐயன்மீர் என்று ஆரம்பித்து ஆசிரியர் குறுக்கே புகுவது, எங்கோ அரபு நாட்டில் நடக்கும் விஷயங்களை நம்மூர் ஸ்டைலில் தரும் போது பீட்சாவில் பெங்களூரு சாம்பாரை ஊற்றி தின்பதை போல இருக்கின்றது. 

சினிமாவில் மொக்கை பாட்டு வரும் போது போய் ஒரு காபி குடித்துவிட்டு வருவது போல, மொக்கை பகுதிகளை தாண்டி போனால் ஒரு சுவாரஸ்யமான புத்தகம்

06 மார்ச் 2017

ஆர் எஸ் எஸ் - மதம் மதம் மதம் - பா ராகவன்

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் என்ற பெயரில் ஹெட்கேவரால் ஆரம்பிக்கப்பட்டு, குருஜி என்றழைக்கப்படும் கோல்வாக்கரால் வளர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பற்றி பா ராகவன் எழுதியுள்ள வரலாற்று புத்தகம். 

ஆர்.எஸ்.எஸ்ஸை பற்றி புத்தகம் என்றவுடன், அதனை பற்றி முழுமையாக எழுதப்பட்ட புத்தகம் என்று நினைத்தது என் தவறுதான். ஆர்.எஸ்.எஸ் பற்றி தமிழக மக்களுக்கு அந்தளவிற்கு பரிச்சியம் கிடையாது. ஏதோ ஒரு ஹிந்திக்கழகம் என்று பலர் நினைத்து கொண்டிருக்கலாம். அதைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம் என்பது நமக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றி முழுமையான் சித்திரத்தை தருகின்றது என்றால் இல்லை. இல்லவே இல்லை. விமர்சனம் என்பது தேவைதான்.ஆர்.எஸ்.எஸ் ஒன்றும் தவறே செய்யாத இயக்கமல்ல, ஆனால் மதத்தின் பெயரால் தவறை மட்டுமே செய்கின்ற இயக்கம் என்னும் சித்திரத்தை இந்நூல் தருகின்றது.

காந்தி படுகொலையில் ஆரம்பித்து குஜராத் கலவரம் வரை பல விஷயங்களில் ஆர்.எஸ்.எஸ் பெயர் அடிபட்டு எதையும் நிரூபணம் செய்ய முடியாமல் போனது. அதே வேலைதான் இப்புத்தகமும் செய்கின்றது. ஆர்.எஸ்.எஸ் மதத்தை மட்டும் கட்டிக் கொண்டிருக்கும் இயக்கம் என்று பேசும் ஆசிரியர், ஆர்.எஸ்.எஸ் செய்யும் பல நல்ல விஷயங்களை பற்றி எவ்வித அறிமுகமும் செய்யவில்லை. முழுக்க முழுக்க மக்கள் அமைதியை கெடுக்கும் ஒரு இயக்கம் என்ற தோற்றத்தையே தர முயற்சி செய்கின்றார். அவர்களின் சேவையை குறிப்பிடும் சில இடங்களில் கூட அதற்கு ஒரு உள்நோக்கம் உள்ளது போன்றே குறிப்பிடுகின்றார்.

ஆர்.எஸ்.எஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் தவிர்க்க வேண்டிய முக்கிய புத்தகம். காரணம் விமர்சனமல்ல, விமர்சனம் செய்யக்கூடாத இயக்கம் என்று ஒன்றுமில்லை. ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற இயக்கங்களையே போராளிகள், மக்கள் ஆதரவு பெற்றவர்கள் பாலஸ்தீனத்தில் பல நல்லது செய்பவர்கள் என்றெல்லாம் எழுதும் அதே ஆசிரியர், ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவைகளில் ஒன்றை கூட பாராட்டி எழுத மாட்டேன் என்பது அவர் உரிமை. அப்புத்தகத்தை தவிர்ப்பதும் நம் உரிமை. 

03 மார்ச் 2017

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன்

கிண்டில் கையில் கிடைத்ததும் பல புத்தகங்களை படிக்க வாய்ப்பு கிடைக்கின்றது. பல புத்தகங்களை படிக்க ஆர்வமிருந்தும் விலை காரணமாக வாங்காமல் விட்டிருந்தேன். கிண்டில் அன்லிமிட்டடில் இலவசமாக படிக்க முடிகின்றது. நன்றாக இருந்தால் வாங்கிக்கொள்ளலாம். நல்ல டீல்.

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையின் வயது நமது சுதந்திர இந்தியாவின் வயதைவிட மிக அதிகம். அடிக்கடி பேப்பரில் வரும் குண்டுவெடிப்புகள், பதில் தாக்குதல்கள் என்ற அளவில் மட்டுமே பரிச்சியம். அந்த பிரச்சினையில் அடி வேரில் ஆரம்பித்து அலசும் ஒரு புத்தகம் இது. குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக ஒரு வருடம் வந்திருக்கின்றது. பா. ராகவனின் எழுதியிருக்கின்றார்.

இஸ்ரேல் - பால்ஸ்தீன பிரச்சினை இரண்டு நாட்டிற்கான பிரச்சினை என்பதை விட இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினை என்பதுதான் சரி. சிங்கள - தமிழர் பிரச்சினை போல. யூத - அரேபிய இனத்தவர்களுக்கிடையிலான மோதல் இன்று யூத - இஸ்லாமிய மோதலாக பரிணமித்துள்ளது.  எழுதியிருப்பவர் இரண்டு மதத்தை சாராதவர், அதனால் நடுநிலையாக எழுதியிருப்பார் என்று நம்பியிருந்தால் மன்னிக்கவும். இல்லை.  வெகு திறமையாக எழுதப்பட்டு,  ஒரு வேளை நடுநிலையாக, பக்கச்சார்பில்லாமல் தான் எழுதப் பட்டிருக்கின்றதோ என்ற தவறான தோற்றத்தை தரும் புத்தகம்.

01 மார்ச் 2017

ஒரு கூர்வாளின் நிழலில் - தமிழினி


ஒரு இனம் இன்னொரு இனத்தை எதிர்த்து போரிடுவது என்பது உலகில் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வு. பல சமயம் இந்த இன வேற்றுமையை செய்வது மூன்றாவது இனமாக இருக்கும், அவர்கள் குளிர் காய ஒரு வாய்ப்பு.
இலங்கையில் நடந்த பிரச்சினைகளுக்கு மூல காரணத்தை தேடும் போது அது ஆங்கிலேயர்களிடமே போய் நிற்கின்றது. மெதுவாக ஆரம்பித்த இன வேற்றுமை உச்சகட்டமாக தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த, பிரச்சினை வெடித்தது. பல போராட்ட குழுக்கள் தோன்றினாலும், புலிகளுக்கு இந்திய ஆதரவு பலமாக இருந்தது. இந்திராகாந்தி மற்றும் எம்.ஜி.ஆரின் வலுவான ஆதரவு அவர்களை பலமாக்கியது. ஆனால் கடைசியில் அவர்களுக்கு கிடைத்தது தோல்வி. அதற்கு அவர்கள் தந்த விலை மிக அதிகம். இந்தியாவும் அவர்களால் ஒரு தலைவரை இழந்தது. 

சிறிய ஆயுத குழுவாக  இருந்த இயக்கம் வளர்ந்து முப்படையும் வைத்திருக்க முடிந்தது. கடல், வான், தரை என்று மூன்று வழிகளிலும் தாக்குதல் நடத்த முடிந்த இயக்கம் அடைந்த தோல்வியை ஆராய்கின்றது இந்த புத்தகம். தமிழினி புலிகளின் அரசியல் பிரிவில் பணியாற்றியவர். இறுதிப்போரில் சரண்டைந்து, பின்னர் புற்றுநோய் தாக்குதலில் காலமானார். அவர் நோயுடன் போராடிக் கொண்டே எழுதிய புத்தகம். ஒரு வகையில் மரண வாக்குமூலம் என்றே கொள்ளலாம்.

புலிகள் நடத்தியது ஒரு தனி அரசாங்கம், பல பிரிவுகளை கொண்ட மிகப்பெரிய அமைப்பு. இளவயதில் இயக்கத்தில் சேர்ந்த தமிழினி, அரசியல் பிரிவில் பணியாற்றியிருக்கின்றார். இரண்டு மூன்று போர்களிலும் பங்கு பெற்றிருக்கின்றார். ஆனால் இப்புத்தகம் முக்கியத்துவம் பெற முக்கியகாரணம், அவர் பணியாற்றிய பிரிவு. மக்களையும் இயக்கத்தின் தலைவர்களையும் இணைக்கும் கண்ணியாக இருந்திருக்கின்றார்.