06 செப்டம்பர் 2016

இரும்பு குதிரைகள் - பாலகுமாரன்

கடந்த சில நாட்களுக்கு முன்னால் மதுரை, சென்னை செல்ல வேண்டியிருந்தது. தொடர்வண்டி நிலையத்திலிருந்த புத்தகக்கடையில் மேய்ந்ததில் ஒன்று தெரிந்தது. சென்ற வருடம் பார்த்ததற்கும் இந்த வருடம் பார்ப்பதற்கும் எவ்வித வித்தியாசமுமில்லை. அதே புத்தகங்கள். யாரும் வாங்குவதில்லையா என்ன? வழக்கம்போல பாலகுமாரனே அதிகம். சென்னையில் கொஞ்சம் பக்தி, கண்ணதாசன் போன்றவை. சரி, பாலகுமாரனையே வாங்குவோம் என்று இரும்பு குதிரைகளும், மெர்க்குரிப் பூக்களும் வாங்கினேன். 

பாலகுமாரனின் புத்தகங்களை முடிந்தவரை தவிர்ப்பது என் வழக்கம். காரணம், முன்பே ஏதோ ஒரு பதிவில் சொன்னதுதான். கல்லூரியில் சிலரின் கையில் இருந்த பாலகுமாரன் அவர்களை மாற்றியிருந்த விதம். சுத்த தொணதொணப்பு. எதைப்பற்றியும் ஒரு கருத்து இருப்பதாக நினைத்துக் கொண்டு அபத்தமாக பேசுவது, எதிராளியை பேச விடாமல் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பது. மற்றவர்களை விட நான் வித்தியாசமானவன் என்று அலட்டிக் கொள்வது என்று ஒரே போலித்தனம்.  சமீபத்தில் பார்த்த போது தெரிந்தது இன்னமும் திருந்தவில்லை. நான் எப்படி வேலை செய்ய வேண்டும், எங்கு வேலை செய்ய வேண்டும், எப்படி முதலீடு செய்யவேண்டும் என்று ஒரே அலட்டல். தாங்க முடியவில்லை. காரணம், எளிது. பாலகுமாரனையும், ஜெயகாந்தனையும் படித்து அதை போலி செய்ய முயற்சிக்கின்றார்கள். 

பாலகுமாரன் கதைகளில் எப்படியும் அவர் எங்காவது வந்து அமர்ந்து கொள்கின்றார். ("ஸீ, இதைச் சொல்றது பாலகுமாரன்தான். கேரக்டர் மூலமா அவர்தான் பேசறார்) அதற்கு பெயர் கட்டுரை. ஆனால் நான் படித்து பார்த்த நாவல்கள், பாலகுமாரன் "எழுத்து சித்தராக" பரிணாம வளர்ச்சி அடைந்த பின் எழுதியவை. இவ்விரண்டு நாவல்களும் அவரது நாவல்களில் ஓரளவு சுமாரானவை என்று கேள்விப் பட்டதால் துணிந்து வாங்கினேன். நல்லவேளை.

வருடத்திற்கு பத்து பதினைந்து தடவை சொந்த ஊருக்கு பஸ்ஸில் போவதுண்டு. பெரும்பாலும் சாந்திநகரில் ஏறினால், மடிவாலா வரும் முன்பே தூங்கிவிடுவேன். மறுபடியும் முழித்து பார்ப்பது தேனி வரும்போது. ஒரு முறை சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. காரில். தூக்கம் வரமுடியாத சூழல். அன்றுதான் நெடுஞ்சாலைகளை தெளிவாக பார்த்தேன். எத்தனை வண்டிகள். லாரிகள். பெரிய பெரிய கண்டெய்னர்கள். ஒவ்வொரு கனரக வண்டியிலும் எத்தனை விதமான பொருட்கள். காற்றாலை விசிறிகள், பெரிய பாய்லர்கள், இனம் தெரியாத பொருட்கள். ஒரு லாரியில் ஒரு பெரியகல். ஒரே ஒரு கல். ஒரு பெரிய கண்டெய்னர் அளவில். அங்கங்கு இளைப்பாறும் வண்டிகள். ஒரு புதிய உலகு இங்குள்ளது என்று காட்டியது. பின்னர் அலுவலக ரீதியாக மேலும் இதைப்பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு பெரிய பொருளை ஓரிடத்திலிர்ந்து இன்னொரு இடத்திற்கு அனுப்புவது என்பது எத்தனை பெரிய வேலை என்பது தெரியவந்தவுடன் ஒரு மலைப்பு. நமக்கு தெரியாத பல உலகங்கள் உள்ளன. பல கோடி மதிப்பிலான பொருளை, ஒரு ட்ரைவர், க்ளீனரை நம்பி அனுப்பி வைப்பவனுக்கு எப்படியிருக்கும். அதுவும் சில பொருட்கள் செல்ல மாதக்கணக்கில் ஆகும். ஓட்டிச் செல்பவனுக்கான பொறுப்பு எத்தகையது. எங்கு சாப்பிடுவார்கள், மற்ற இயற்கை கடன்களை எப்படி தீர்ப்பார்கள், தூக்கம் எப்படி, அத்தனை நாள் குடும்பத்தை விட்டு செல்லும் அவர்களின் மனநிலை...

இந்த பெரிய உலகில் ஒரு சிறிய துளியை நமக்கு காட்டுகின்றது இப்புத்தகம். அந்தவகையில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த புத்தகம். 

தண்ணித்தொட்டி தெரு. லாரிகள் புழங்குமிடம். இரண்டு லாரிக்கம்பெனிகள். காந்திலால், ராவுத்தர். ராவுத்தரின் லாரிகள் இரண்டும் ஒரே நாளில் பிரச்சினையில் மாட்டுகின்றன. ஒன்று ஆளை அடித்து போட்டுவிட்டு வருகின்றது. இன்றொன்று கிணற்றை இடித்து தொற்றிக் கொண்டு நிற்கின்றது. காந்திலாலின் லாரி, இங்கிலீஷ் கம்பெனியின் லோடை ஏற்றி வரும் வழியில் காணவில்லை. அதைத்தேடி இங்கிலீஷ்க் கம்பெனி ஆள் விஸ்வநாதன் போகின்றான். இங்குதான் கதை ஆரம்பம். லாரிகள் அடிபடமுதல் காரணமாக, கீறல்விட்ட சக்கரத்தை தட்டி, ஒட்டி விற்பதில் ஆரம்பிக்கின்றது. காயலாங்கடையில் எடுத்த சக்கரம், லாரியில் மாட்டப்படுகின்றது. யாரோ ஒருவருடைய வியாபர தந்திரம், மற்றொருவருடைய வியாபாரத்தை சாய்க்கின்றது. 

சாதரணமாக நாம் பார்க்கும் ஒரு லாரியின் பின்னால் எத்தனை கைகள் உள்ளன. லாரியின் முதலாளி, வாடகைக்கு எடுத்து ஓட்டும் டிரைவர் அல்லது லாரிக் கம்பெனியின் டிரைவர். லாரிக்கு லோடு பிடித்து தரும் தரகர்கள், லோடை ஏற்றிவிட்டு பத்திரமாக சேர்ந்ததா என்று நகம் கடிக்கும் கைகள். லோடிற்கு மேல் லோடடிக்கும் டிரைவர்கள், க்ளீனர்கள். லாரியில் பணம் குடுத்து செல்லும் பிரயாணிகள். இவர்களை நம்பி பிழைக்கும் ரோட்டோரப் பெண்கள், அவர்களுக்கு ஆள் பிடிக்கும் பையன்கள். பெரிய வலை. அவையனைத்தையும் இதில் காட்டுகின்றார் பாலகுமாரன்.

டிரைவர்களுக்கும், க்ளீனர்களுக்குமான உறவுமுறை. எழுதப்படாத சட்டங்கள். குருதட்சிணை. வண்டியை ஓட்டுவது என்பது அந்த வண்டியை கையாள்வது மட்டுமல்லவே, மனிதர்களையும் சேர்த்து கையாள வேண்டியது. மற்ற வண்டிகளை ஒட்டும் ஓட்டுனர்கள், முதலாளிகள், அங்கங்கு இருக்கும் டோல் கேட், காவல்துறை எனப்பலவித சூட்சுமங்களை க்ளீனருக்கு, ட்ரைவர் கற்று தருகின்றான். அதற்கான தட்சிணை, கட்டைவிரலுக்கு பதிலாக சிறைவாசம். 

ஒரு நல்ல முதலாளி என்பவன் தான் வளர்வதுடன், தன் தொழிலாளர்களையும் சேர்த்து வளர்ப்பது. இப்போதும் அது போன்ற மனிதர்கள் இருப்பார்கள் என்று நம்புகின்றேன். ஜெயகாந்தனின் "லவ் பண்ணுங்கோ சார்" கதை என்று நினைக்கின்றேன், அதில் முதலாளி - தொழிலாளியை பற்றி அழகாக வரும். கோஷம் போடும் கூட்டம் வரும் முன்னமே, இங்கு பெரும்பாலனவர்கள் அப்படித்தான் இருந்திருக்கின்றனர். ராவுத்தர் பாத்திரம் அப்படிப்பட்ட ஒன்று. 

டீஸல், பெட்ரோல் கண்டெய்னர்களில் இருந்து அவை கொஞ்சம் திருடப்படும் என்பது தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை. சென்னையில் இருந்த போது, எனக்கு தெரிந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் கூறியது, டீஸல் கண்டெய்னகள், பங்கில் சரக்கை சேர்த்த பின்னும் கண்டெய்னரில் கொஞ்சம் இருக்கும். கண்டெய்னரின் உருளை வடிவத்தால் அடியில் கொஞ்சம் இருக்கும் அதை பம்ப் செய்ய முடியாது. வண்டியை ஸ்டார் செய்து, சடன் ப்ரேக் அடிக்கும் போது வண்டி குலுங்கும், அந்த குலுக்கலில் டீஸல் பைப் வழியாக வெளிய கொட்டும். அப்படியே மிச்சமிருக்கும் டீஸல் பெட்ரோல் எடுக்கப்படும். இப்புத்தகத்தில் வருவது இன்னும் சயன்டிஃபிக்கான முறை. 



லாரிக்கதைகளுடன் மனிதக்கதைகளையும் அழகாக கோர்த்துள்ளார். விஸ்வநாதன் அவரது நண்பர் சுப்ரமணிய ராஜுவின் கேரக்டர் என்று முன்னுரையில் மாலன் கூறுகின்றார். அவரும் ஒரு எழுத்தாளர். பாலகுமாரன் விஸ்வநாதன் பாத்திரத்தையும், காயத்ரி பாத்திரத்தையும் எழுதும் போது வந்து உட்கார்ந்து கொள்கின்றார். விஸ்வநாதன் கூட ஓகே, ஏதோ எழுத்துக்கும், வாழ்க்கைக்கும் நடுவில் போராடும் ஒரு சராசரி ஆசாமி. விஸ்வநாதனின் மனைவியாக வரும் தாரிணி பாத்திரம் யதார்த்தவாதி, கற்பனையில் பறக்கும் புருஷனை தலையில் தட்டி தரைக்கு கொண்டுவருகின்றாள். நான் ஒரு கவிஞன், எழுத்தாளன் எனவே எனக்கு மரியாதை அதிகம் என்று கூறுவதை கண்டிருக்கலாம். ஆனால் அனைத்தையும் விட, ஒரு நல்ல மனிதனாக வாழ்பவன், தன் வாழ்க்கையின் மூலமாக அவர்களை விட பல செய்திகளை சொல்லிவிட்டு போகின்றான். தாரிணி கூறுவது அதையே. அனைவரும் பாரதியாக முடியாது.  

பாலகுமாரன் ஏன் தவிர்க்கமுடியாத எழுத்தாளர் ஆனார் என்பதற்கும் விடை கிடைக்கின்றது. கதை மாந்தர்வாயிலாக இயல்பாக வரும் சின்ன சின்னவிஷயங்கள். அப்பம் வடை தயிர்சாதம் நாவலில் வரும் ஒரு சின்ன விஷயம் "பிழைக்க ஊரைவிட்டு வரக்கூடாது, வந்தால் அதைப்பற்றியே நினைத்துபுலம்பக்கூடாது" எனபது போன்றுவரும். இதன் முன்னும், பின்னும் வரும் விஷயங்கள், ஹோம்சிக் வந்து பெங்களூரில் புலம்பிக்கொண்டிருந்த என்னை கொஞ்சம் மாற்றியது. இப்புத்தகத்திலும் அது போன்று இயல்பாக வரும் விஷயங்களே கவர்கின்றது. கெளசல்யாவிற்கு முதலி சொல்லும் யோசனைகள், ராவுத்தர் பேசும் வார்த்தைகள் என்று. பலருக்கு இது போன்ற நேரடியான அறிவுரையும் தேவையாக இருக்கின்றது.

நாவலை கெடுப்பது என்பது நான் நினைப்பது காயத்ரி பாத்திரம் மட்டுமே.  

இம்மாதிரி பாத்திரங்கள்தான், நான் முதல் பத்தியில் சொன்ன ஆசாமிகளை உருவாக்குவது. ஓவர் இண்டெல்க்சுவலாக நினைத்துக் கொண்டு பேசுவது. எரிச்சல்தான் வருகின்றது. கல்யாணமாகாமல் குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்ள விரும்பும் பெண். அது ஒன்றும் பெரிய அதிர்ச்சி லெவல் இல்லை, ஆனால் பேசுவது அப்பா. தாங்க முடியவில்லை.

நாவலில் வரும் கவிதைகள், மற்றுமொரு ஸ்பீட் ப்ரேக்க்கர். ஏகப்பட்ட கவிதைகள். கவிதை விரும்பிகள் படித்து இன்புறுவார்களாக.

அவரரிந்த உலகில் ஒரு சிறு பகுதியை இதில் காட்டியுள்ளதாகவே நினைக்கின்றேன்.

இதுவரை படித்த பாலகுமாரனின் பல நாவல்களின் இதுதான் நல்ல நாவல் என்று நினைக்கின்றேன். இது போன்ற நாவல்கள் என்றால் படிக்கலாம்.

பாலகுமாரனின் தளம்

இரும்பு குதிரைகள் வாங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக