26 மார்ச் 2022

சங்கதாரா - "காலச்சக்கரம்" நரசிம்மா

நண்பர் ஸ்ரீராம் காலச்சக்கரம் நரசிம்மா என்னும் எழுத்தாளரைப் பற்றி முன்னர் குறிப்பிடிருந்தார். இந்திரா செளந்திரராஜன் பாணி எழுத்தாளர் என்று நினைத்தேன். உறவினர் வீட்டில் அவர் எழுதிய புத்தகம் ஒன்று கிடைத்தது. வானதி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. நரசிம்மா, பிரபல சினிமா இயக்குனர் சித்ராலயா கோபுவின் புதல்வர், இவரின் தாயரும் அறியப்பட்ட நாவலாசிரியர். கமலா சடகோபன். 

முன்னுரையிலேயே சாண்டில்யன் வாசகர்கள் தலையில் நறுக்கென்று கொட்டி விடுகின்றார். பின்னர் வரும் பக்கங்களில் கல்கி வாசகர்களை கொட்டு கொட்டு என்று தலை வீங்கும் அளவிற்கு கொட்டி விடுகின்றார். சரித்திர கதைகளுக்கு தமிழில் முன்னுதாரணம் என்றால் கல்கியும், சாண்டில்யனும். இவர்கள் பாணியிலேயே பெரும்பாலான கதைகள் எழுதப்பட்டன. விதிவிலக்குகள் சில டணாய்க்கன் கோட்டை, வீரபாண்டியன் மனைவி, ரத்தம் ஒரே நிறம், வானம் வசப்படும், மானுடம் வெல்லும், காவல்கோட்டம் போன்றவை. இந்த நாவல்கள் அண்மை கால சரித்திர குறிப்புகளை வைத்து பின்னப்பட்டவை. 

ஆனால் சாண்டில்யன், கல்கி எழுதியது சோழ, பாண்டிய சரித்திரம். அந்த காலத்தில் கிடைத்த ஆதாரங்களையும், அக்காலத்து ஆய்வு முடிவுகளையும் வைத்து எழுதினார்கள். இன்று ஐம்பது வருடங்களில் பல புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம். இருந்தாலும் அக்கால சரித்திரத்தை எழுதுவது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் என்ன செய்யலாம்

ஸ்பாய்லர் அலர்ட். பல திடுக்கிடும் திருப்பங்கள், அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், யூகிக்கவே முடியாத பல முடிச்சுகளை பற்றி எழுதப்பட்டுள்ளது. அடுத்து வரும் பகுதி நடை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அடிக்கடி  இது மாதிரி எழுதுவார், அந்த பாதிப்பில் எழுதியது.   நாவலும் அதுமாதிரிதானே பொன்னியின் செல்வனின் பாதிப்பில் எழுதியது. அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள். 

08 மார்ச் 2022

பனி உருகுவதில்லை - அருண்மொழி நங்கை

பெரும்பாலான எழுத்தாளர்களின் குடும்பம் பற்றி நமக்கு பெரிதும் தெரியாது, மிக நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் ஜெயமோகன் பல கட்டுரைகளில் அவரது குடும்பத்தைப் பற்றி வெகு விரிவாக எழுதியிருக்கின்றார். அவரது தாய், தந்தை, அண்ணன், மனைவி, குழந்தைகள் அனைவரும் நமக்கு மிகவும் தெரிந்தவர்கள் போல ஆகிவிட்டனர். அவரது மாமனார் கூட தெரிந்தவர் போல ஆகிவிட்டார். இந்த புத்தகத்தைப் படிக்கும் போது நமக்கு மிகத் தெரிந்த ஒருவரின் எழுத்தை படிக்கப் போகின்றோம் என்பது போலத்தான் இருந்தது. அவரது மனைவி மிகச் சிறந்த வாசகி என்பது நன்கு தெரிந்தது. 

ஜெயமோகன் தளத்தில் அருண்மொழி நங்கை எழுதிவரும் தளத்தின் இணைப்பை ஒரு கட்டுரையில் கொடுந்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஜெயமோகன், இரா. முருகனின் தளம் மிக மோசமாக வடிவைக்கப்பட்டது என்று எழுதியிருந்தார், அதற்கு போட்டி போடும் அளவிற்கு இதுவும் இருந்தது. அந்த இணைய தளத்தில் அமைப்பு என்னை ஏனோ படிக்கும்படி செய்யவில்லை. ஒரு இணைய பக்கத்தில் ஒரு பக்கம் மட்டும் அதிக வெற்றிடம் இருக்கும்போது அது கவனத்தை பெரிதும் சிதறடிக்கும். 

கட்டுரை, முகப்பு படம், தலைப்புகள், பதிவு வகைகள் போன்றவைகள் எல்லாம் கோடு போடாத பேப்பரில் எல்லாப்பக்கமும் எழுதி வைத்தது போல இருந்தது. தற்போது பெரும்பாலான தளங்கள் ஸ்மார்ட்  போனில் படிப்பதற்கு ஏதுவாகவே அமைக்கப்படுகின்றது. என்னைப் போல கம்ப்யூட்டர் ப்ரெளசரில் படிப்பவனுக்கு கஷ்டம். தளத்தின் பின்புல வண்ணமும் ஒரு மாதிரியாக இருந்ததால் படிக்க முடியவில்லை. படிப்பவனுக்கு உள்ளடக்கம்தானே முக்கியம், வடிவம் எல்லாம் எதற்கு என்று கேட்டால் அது அப்படித்தான் தொழில் புத்தி. ஜெயமோகன் தளத்தில் பதிவுகள் நடுவில் இருக்கும், பதிவுச் சுருக்கம் அளவாக இருக்கும், மற்ற பகுதிகள் சிறிய கோடு அல்லது தலைப்புகளால் பிரிக்கப்பட்டிருக்கும். அது படிக்க எளிதாக இருக்கும். சரி எப்படியும் புத்தகமாக வரும் படித்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது

02 மார்ச் 2022

கு.ப.ரா கதைகள்

கு.ப.ராஜகோபாலன் நாற்பதுகளில் எழுதிவந்த எழுத்தாளர். அவரது சிறுகதைகளை தொகுத்து அழிசி பதிப்பகம் கிண்டில் பதிப்பாக வெளியிட்டது. வெளியிட்டதை சில நாட்கள் இலவசமாகவும் தந்தது. மாதொருபாகன் புத்தகத்தால் உலகப்புகழ் பெற்ற பெருமாள் முருகன் என்னும் பேராசிரியர் ஏற்கனவே கு.ப.ராவின் கதைகளை தொகுத்து, அதை காலச்சுவடு புத்தகமாக வெளியிட்டுள்ளது. அவர் தொகுத்த அதே கதைகளை அழிசியும் வெளியிட்டதால் பிரச்சினையாகி அமேசான் அழிசி வெளியிட்டதை நீக்கி விட்டது. ஏற்கனவே நாட்டுடைமை ஆக்கப்பட்ட க.நா.சு நூல்களுக்கும் இதே கதிதான். அழிசி குபராவின் கதைகளை ரிவர்ஸ் ஆர்டரில் வெளியிட்டு இருக்கலாம். இலவசமாக கிடைத்த ஒன்றிரண்டு நாட்களில் வாங்கியது. 

குபரா தெலுங்கு பேசும் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். கவிஞர் நா. பிச்சமூர்த்தியின் நெருங்கிய நண்பர்.சொந்த ஊர் கும்பகோணம், திருச்சியில் படிப்பு, மதுரை மேலுரில் வேலை. பின் பார்வைக் குறைபாடால் அரசு வேலையை விட நேர்ந்தது. பார்வை குறைபாடு இருந்த காலத்தில்  குபரா சொல்ல சொல்ல  அவரது சகோதரி எழுதுவாராம். பின்னர் மணிக்கொடி ஆசிரியர் வேலை, புத்தகக்கடை என்று அலைந்து திரிந்து காங்கரின் நோயால் 42ம் வயதில் மறைந்தார். குபரா, கும்பகோணத்தில் வாழ்ந்து வரும் போது தி.ஜா அவருடன் நெருங்கி பழகினார். மோகமுள்ளில் வரும் எழுத்தாளர் பாத்திரம் குபராதான் என்று எங்கோ படித்த நினைவு. தி.ஜாவின் நாவல்களை விட எனக்கு அவரது சிறுகதைகளே அதிகம் பிடிக்கும், அவரே குபரா எழுதுவது போன்று ஒரு வரி எழுதிவிட்டால் போதும் என்கின்றார். அந்தளவு அவர் குபரா மீது மதிப்பு வைத்துள்ளார்.