16 மார்ச் 2024

மிளகு - இரா. முருகன்

மிளகு என்றால் நமக்கு பொங்கலில் இருந்து பொறுப்பாக பொறுக்கி தூரப்போடும் ஒரு வஸ்து, இல்லை என்றால் ஜல்தோஷம் பிடித்தால் கஷாயம் வைக்க பயன்படும் ஒரு பொருள். பாரம்பர்யத்தை காப்போம் என்று குதிரைவாலி சோறு உண்பவர்கள், வெளியில் பனங்கல்கண்டு பால் குடிக்கும் போது அதில் கொஞ்சமே கொஞ்சம் போடப்படும் வஸ்து. ஆனால் மிளகு ஒரு காலத்தில் நாடுகளின் வர்த்தகத்தையே ஆட்டி வைத்துள்ளது. மிளகை வாங்க போட்டி போட்டுக் கொண்டு வந்துள்ளார்கள், இன்றைய அரபு நாடுகள் பெட்ரோல் விற்று கொழிப்பது போல மிளகு விற்று கொழித்த குட்டி நாடுகள் இருந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு குட்டி நாட்டின் ராணி மிளகு ராணி.

இந்தியாவிலும் சரி, வேறு நாடுகளிலும் சரி ஒரு பெண் ஆட்சி செய்வது என்பது கொஞ்சம் அரிதான விஷயம், விதிவிலக்குகள் உண்டு. அப்படி வந்தாலும் மிக அதிக காலம் அவர்கள் ஆட்சி நீடித்தது இல்லை. பெரும்பாலான அரசிகள் கணவனை இழந்தபின் அடுத்த வாரிசு பட்டத்திற்கு வரும் வரை ஆட்சி பொறுப்பை பார்த்து கொண்ட கதைதான் அதிகம். சென்ன பைரவா தேவி, தந்தைக்கு பின் ஆட்சிக்கு வந்து சுமார் 54 வருடங்கள் ஆட்சி செய்துள்ளார்.

சாளுக்கிய வம்சத்த்தை சேர்ந்த இந்த அரசிக்கு அன்றைய போர்ட்ச்சுக்கல் அரசு மிளகு ராணி என்ற பட்டத்தை வழங்கியிருக்கின்றது. இறுதியில் நெருங்கிய நட்பு நாடுகளால் விழுங்கப்பட்டு ஆட்சியையும், நாட்டையும் இழந்தார்.  அவர் கட்டிய மிர்ஜான் கோட்டையும், சதுர் முக பஸதியும்தான் இன்று மிச்சம்.