27 டிசம்பர் 2022

ஆடி - மகாபாரத கதை

நண்பர்  சிலிக்கான் ஷெல்ஃப் ஆர்.வி எழுதிய மகாபாரத கதையை சொல்வனத்தில் படித்தேன். அந்த கருவும், வடிவமும் எனக்கு பிடித்திருந்தது. அதை கொஞ்சம் மாற்றி எழுதிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. அவரும் இதற்கு எல்லாம் கேட்க வேண்டுமா என்றார். அவருக்கு நன்றி. இனி கதை...

பதினான்காம் நாள் போர் முடிந்த மாலை


துரியோதனனின் வார்த்தைகளால் கோபமுற்ற துரோணர் சிறிய ஓய்விற்கு பின் இரவிலும் போரை தொடர ஆணையிட்டு விட்டு கூடாரத்திற்கு வந்தார், கூடவே அஸ்வத்தாமனும் 


திருஷ்டத்யும்னன் துருபதரின் கூடாரத்துக்குள் நுழைந்தபோது துருபதர் கவசங்களை கழட்டாமல் இருப்பதை கண்டவுடன் ஒரு கணம் ஆச்சர்யம் வந்து சென்றது.

23 ஆகஸ்ட் 2022

விளக்கும் வெளிச்சமும் - விமலாதித்த மாமல்லன்

விமலாதித்த மாமல்லன் சமீபத்தில் நேரடியாக கிண்டிலில் வெளியிட்ட சில சிறுகதைகள், குறுநாவல்களின் தொகுப்பு. கிண்டிலை தனது தளமாக வைத்துக் கொண்டுள்ளார். பலர் கிண்டிலில் புத்தகம் வெளியிடுவதற்கு பெரும் உதவி செய்துள்ளார். கிண்டிலில் எப்படி புத்தகத்தை வெளியிடுவது என்பது பற்றி ஒரு புத்தகம் எழுதி கிண்டிலில் வெளியிட்டு உள்ளார். அவரது அச்சுப் புத்தகங்களை நேரடியாக அவரது சத்ரபதி பதிப்பகம் மூலம் வெளியிட்டு வருகின்றார். இதற்கு முன் அவர் வெளியிட்ட விமலாதித்த மாமல்லன் கதைகள் என்னும் சிறுகதை தொகுப்பை வாங்கியிருந்தேன். முழுவதும் படித்து முடிக்கும் முன், வீட்டில் தண்ணீர் புகுந்து பல புத்தகங்கள் நாசமாகி, பல புத்தகங்களை ஊரில் கொண்டு வைத்து அதன் பின் கொரானாவில் வீட்டை காலி செய்த கலவரத்தில் இந்த புத்தகம் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டது. போன மாதம்தான் மீண்டும் கையில் கிடைத்தது. படிக்க வேண்டிய லிஸ்ட்டில் இருக்கின்றது. 

மாமல்லன் எழுதிய புனைவு என்னும் புதிர் புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். அந்த பதிவிற்கு பின்னால் ஒரு குட்டி கதை உள்ளது அது கடைசியில். ப்ளாக் ஆரம்பித்த காலத்தில் ஒழுங்காக இருந்த பதிவுகள், என்னையறியாமல் மாற தொடங்கின. எழுத்துப் பிழைகள்,  இலக்கணப் பிழைகள் எல்லாம் அதிகமானது. காரணம் ஒரு பதிவை பல நாட்கள் எழுதுவது, அதனால் கோர்வையில்லாமல் போவது, சொன்னதையே திரும்ப வேறு வரிகளில் சொல்வது போன்றவை அதிமாக வர தொடங்கின. பெரும்பாலும் சரி செய்தாலும் தொடர்ந்தன. தற்போது வெகுவாக அது குறைந்துள்ளது என்று தோன்றுகின்றது. அதற்கு ஒரு முக்கிய காரணம் மாமல்லன். அவரது பதிவுகளில் பிழை இருந்து பார்த்த நினைவில்லை. கச்சிதமான மொழியில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு.

தொகுப்பில் இருக்கும் இரண்டு  கதைகளின் தலைப்பை இணைத்து தொகுப்பின் தலைப்பாக வைத்துள்ளார். 

29 ஜூன் 2022

பேட்டை - தமிழ்ப்பிரபா

வட்டார வழக்கை எழுத்தில் கொண்டு வருவது மிகவும் கடினமான விஷயம். வட்டார வழக்கில் முக்கிய இடம் வகிப்பது அதன் ராகமும், ஏற்ற இறக்கமும். "ஏய் என்னாப்பா" என்பது மதுரையில் ஒரு வகையிலும், கோம்பையில் வேறு மாதிரியும் ஒலிக்கும். அதை அந்த ஊர்க்காரர்கள் மட்டுமே உணர முடியும். இதை எழுத்தில் ஓரளவிற்கே கொண்டுவர முடியும். அதை பலர் வெற்றிகரமாக செய்துள்ளனர். சுகா, ஜெயமோகன், சோ.தர்மன், ஜோ.டி.க்ரூஸ், வைரமுத்து, வெங்கடேசன், கி.ரா போன்றவர்கள்  திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், நாகர்கோவில், நாஞ்சில் நாடு, கோவை, தஞ்சை,மதுரை, தேனி வட்டர வழக்குகளில் பல நாவல்களை எழுதியுள்ளனர். 

சென்னை வழக்கில் எந்த நாவலும் படித்ததில்லை இதுவே முதல். ஜெயகாந்தன் ஒன்றிரண்டு கதைகளில் எழுதியிருந்தாலும் அந்தளவிற்கு ஈர்க்கவில்லை. சோ சில அரசியல் நையாண்டிகளில் பயன்படுத்தியிருந்தது எனக்கு கொஞ்சம் செயற்கையாக தெரிந்தது. இந்த நாவலில் எங்கும் வட்டார வழக்கு செயற்கையாக தெரியவில்லை. சென்னையில் மூன்று வருடம் மின்சார ரயிலில் சென்று வரும்போது கேட்ட அந்த மொழியை படிக்க முடிந்தது.  இயல்பாக அந்த மொழியை பேசினாலும், அதை எழுத்தில் கொண்டுவருவது கடினம். அதை சிறப்பாக செய்துள்ளார்.

26 மார்ச் 2022

சங்கதாரா - "காலச்சக்கரம்" நரசிம்மா

நண்பர் ஸ்ரீராம் காலச்சக்கரம் நரசிம்மா என்னும் எழுத்தாளரைப் பற்றி முன்னர் குறிப்பிடிருந்தார். இந்திரா செளந்திரராஜன் பாணி எழுத்தாளர் என்று நினைத்தேன். உறவினர் வீட்டில் அவர் எழுதிய புத்தகம் ஒன்று கிடைத்தது. வானதி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. நரசிம்மா, பிரபல சினிமா இயக்குனர் சித்ராலயா கோபுவின் புதல்வர், இவரின் தாயரும் அறியப்பட்ட நாவலாசிரியர். கமலா சடகோபன். 

முன்னுரையிலேயே சாண்டில்யன் வாசகர்கள் தலையில் நறுக்கென்று கொட்டி விடுகின்றார். பின்னர் வரும் பக்கங்களில் கல்கி வாசகர்களை கொட்டு கொட்டு என்று தலை வீங்கும் அளவிற்கு கொட்டி விடுகின்றார். சரித்திர கதைகளுக்கு தமிழில் முன்னுதாரணம் என்றால் கல்கியும், சாண்டில்யனும். இவர்கள் பாணியிலேயே பெரும்பாலான கதைகள் எழுதப்பட்டன. விதிவிலக்குகள் சில டணாய்க்கன் கோட்டை, வீரபாண்டியன் மனைவி, ரத்தம் ஒரே நிறம், வானம் வசப்படும், மானுடம் வெல்லும், காவல்கோட்டம் போன்றவை. இந்த நாவல்கள் அண்மை கால சரித்திர குறிப்புகளை வைத்து பின்னப்பட்டவை. 

ஆனால் சாண்டில்யன், கல்கி எழுதியது சோழ, பாண்டிய சரித்திரம். அந்த காலத்தில் கிடைத்த ஆதாரங்களையும், அக்காலத்து ஆய்வு முடிவுகளையும் வைத்து எழுதினார்கள். இன்று ஐம்பது வருடங்களில் பல புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம். இருந்தாலும் அக்கால சரித்திரத்தை எழுதுவது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் என்ன செய்யலாம்

ஸ்பாய்லர் அலர்ட். பல திடுக்கிடும் திருப்பங்கள், அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், யூகிக்கவே முடியாத பல முடிச்சுகளை பற்றி எழுதப்பட்டுள்ளது. அடுத்து வரும் பகுதி நடை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அடிக்கடி  இது மாதிரி எழுதுவார், அந்த பாதிப்பில் எழுதியது.   நாவலும் அதுமாதிரிதானே பொன்னியின் செல்வனின் பாதிப்பில் எழுதியது. அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள். 

08 மார்ச் 2022

பனி உருகுவதில்லை - அருண்மொழி நங்கை

பெரும்பாலான எழுத்தாளர்களின் குடும்பம் பற்றி நமக்கு பெரிதும் தெரியாது, மிக நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் ஜெயமோகன் பல கட்டுரைகளில் அவரது குடும்பத்தைப் பற்றி வெகு விரிவாக எழுதியிருக்கின்றார். அவரது தாய், தந்தை, அண்ணன், மனைவி, குழந்தைகள் அனைவரும் நமக்கு மிகவும் தெரிந்தவர்கள் போல ஆகிவிட்டனர். அவரது மாமனார் கூட தெரிந்தவர் போல ஆகிவிட்டார். இந்த புத்தகத்தைப் படிக்கும் போது நமக்கு மிகத் தெரிந்த ஒருவரின் எழுத்தை படிக்கப் போகின்றோம் என்பது போலத்தான் இருந்தது. அவரது மனைவி மிகச் சிறந்த வாசகி என்பது நன்கு தெரிந்தது. 

ஜெயமோகன் தளத்தில் அருண்மொழி நங்கை எழுதிவரும் தளத்தின் இணைப்பை ஒரு கட்டுரையில் கொடுந்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஜெயமோகன், இரா. முருகனின் தளம் மிக மோசமாக வடிவைக்கப்பட்டது என்று எழுதியிருந்தார், அதற்கு போட்டி போடும் அளவிற்கு இதுவும் இருந்தது. அந்த இணைய தளத்தில் அமைப்பு என்னை ஏனோ படிக்கும்படி செய்யவில்லை. ஒரு இணைய பக்கத்தில் ஒரு பக்கம் மட்டும் அதிக வெற்றிடம் இருக்கும்போது அது கவனத்தை பெரிதும் சிதறடிக்கும். 

கட்டுரை, முகப்பு படம், தலைப்புகள், பதிவு வகைகள் போன்றவைகள் எல்லாம் கோடு போடாத பேப்பரில் எல்லாப்பக்கமும் எழுதி வைத்தது போல இருந்தது. தற்போது பெரும்பாலான தளங்கள் ஸ்மார்ட்  போனில் படிப்பதற்கு ஏதுவாகவே அமைக்கப்படுகின்றது. என்னைப் போல கம்ப்யூட்டர் ப்ரெளசரில் படிப்பவனுக்கு கஷ்டம். தளத்தின் பின்புல வண்ணமும் ஒரு மாதிரியாக இருந்ததால் படிக்க முடியவில்லை. படிப்பவனுக்கு உள்ளடக்கம்தானே முக்கியம், வடிவம் எல்லாம் எதற்கு என்று கேட்டால் அது அப்படித்தான் தொழில் புத்தி. ஜெயமோகன் தளத்தில் பதிவுகள் நடுவில் இருக்கும், பதிவுச் சுருக்கம் அளவாக இருக்கும், மற்ற பகுதிகள் சிறிய கோடு அல்லது தலைப்புகளால் பிரிக்கப்பட்டிருக்கும். அது படிக்க எளிதாக இருக்கும். சரி எப்படியும் புத்தகமாக வரும் படித்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது

02 மார்ச் 2022

கு.ப.ரா கதைகள்

கு.ப.ராஜகோபாலன் நாற்பதுகளில் எழுதிவந்த எழுத்தாளர். அவரது சிறுகதைகளை தொகுத்து அழிசி பதிப்பகம் கிண்டில் பதிப்பாக வெளியிட்டது. வெளியிட்டதை சில நாட்கள் இலவசமாகவும் தந்தது. மாதொருபாகன் புத்தகத்தால் உலகப்புகழ் பெற்ற பெருமாள் முருகன் என்னும் பேராசிரியர் ஏற்கனவே கு.ப.ராவின் கதைகளை தொகுத்து, அதை காலச்சுவடு புத்தகமாக வெளியிட்டுள்ளது. அவர் தொகுத்த அதே கதைகளை அழிசியும் வெளியிட்டதால் பிரச்சினையாகி அமேசான் அழிசி வெளியிட்டதை நீக்கி விட்டது. ஏற்கனவே நாட்டுடைமை ஆக்கப்பட்ட க.நா.சு நூல்களுக்கும் இதே கதிதான். அழிசி குபராவின் கதைகளை ரிவர்ஸ் ஆர்டரில் வெளியிட்டு இருக்கலாம். இலவசமாக கிடைத்த ஒன்றிரண்டு நாட்களில் வாங்கியது. 

குபரா தெலுங்கு பேசும் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். கவிஞர் நா. பிச்சமூர்த்தியின் நெருங்கிய நண்பர்.சொந்த ஊர் கும்பகோணம், திருச்சியில் படிப்பு, மதுரை மேலுரில் வேலை. பின் பார்வைக் குறைபாடால் அரசு வேலையை விட நேர்ந்தது. பார்வை குறைபாடு இருந்த காலத்தில்  குபரா சொல்ல சொல்ல  அவரது சகோதரி எழுதுவாராம். பின்னர் மணிக்கொடி ஆசிரியர் வேலை, புத்தகக்கடை என்று அலைந்து திரிந்து காங்கரின் நோயால் 42ம் வயதில் மறைந்தார். குபரா, கும்பகோணத்தில் வாழ்ந்து வரும் போது தி.ஜா அவருடன் நெருங்கி பழகினார். மோகமுள்ளில் வரும் எழுத்தாளர் பாத்திரம் குபராதான் என்று எங்கோ படித்த நினைவு. தி.ஜாவின் நாவல்களை விட எனக்கு அவரது சிறுகதைகளே அதிகம் பிடிக்கும், அவரே குபரா எழுதுவது போன்று ஒரு வரி எழுதிவிட்டால் போதும் என்கின்றார். அந்தளவு அவர் குபரா மீது மதிப்பு வைத்துள்ளார். 

09 பிப்ரவரி 2022

நெஞ்சம் மறப்பதில்லை - சித்ரா லட்சுமணன்

சித்ரா ராமு-லட்சுமணன் திரைப்படத்துறையில் பிரபலமானவர்கள். சித்ரா லட்சுமணன், தற்போது டூரிங்க் டாக்கீஸ் என்ற பெயரில் ஒரு யூட்யூப் சானல் நடத்தி வருகின்றார். அதில் வரும் பேட்டிகளைத் தவறாமல் பார்ப்பதுண்டு. பிரபலமானவர்களுடன், அட இவர்தானா அது என்று வியக்கும் சிலரையும் பேட்டி எடுப்பதுதான் இவரின் சிறப்பு. அதோடு பேட்டி எடுக்கும் விதமும் சிறப்பானது, குறுக்கே விழுந்து பேசாமால், விருந்தினரை பேச வைத்துப் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளி கொண்டு வருகின்றார். அவரின் பத்திரிக்கை உலக அனுபவமும், மக்கள் தொடர்பாளர் பணியும் அவருக்கு பெரிய உதவி செய்கின்றது. படத்தில் பணிபுரிந்தவரே மறந்து போன பல விஷயங்களை இவர் நினைவு படுத்துவதைப் பார்க்கும் போது ஆச்சர்யம்தான் வருகின்றது. 

அவர் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பெயரில் எழுதிய தொடரை ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ் புத்தகமாக வெளியிட்டுள்ளது. நல்ல டிஸ்கவுண்ட் கிடைத்ததால் வாங்கி விட்டேன். மூன்று பாகம், கிட்டத்திட்ட 150 கட்டுரைகள்.

சினிமா உலகம் என்று அல்ல, பொதுவாக வாழ்க்கை வரலாறு, வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை படிப்பது எனக்கு பிடிக்கும். அடுத்தவர் டைரியை எட்டிப்பார்ப்பது போன்ற ஒரு அல்ப குஷி என்றும் வைத்துக் கொள்ளலாம். நிஜவாழ்வில் நடக்கும் பல விஷயங்கள் நம் கற்பனையில் கூட வராது. நிஜத்தில் நடக்கும் பல சம்பவங்கள் எவ்வித தர்க்கத்திலும் அடங்காது. 

28 ஜனவரி 2022

குற்றப்பரம்பரை - வேல.ராமமூர்த்தி

குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ப்ரிட்டீஷ் ஆட்சி காலத்தில் ஒரு சில ஜாதி மக்களை குற்றப்பரம்பரையினர் என்று வகைப்படுத்தி அவர்களுக்கு என ஒரு தனிச்சட்டத்தை கொண்டு வந்தனர். அந்த ஜாதி ஆண்கள் அனைவரின் கை ரேகைகளையும் பதிவு செய்து கொண்டு அவர்களை காவல் நிலையத்தில் இரவு முழுவதும் தங்க வைத்தனர். 

இதில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளர், சேர்வை, அம்பலகாரார் போன்ற ஜாதியினர்கள் என்று கூறப்படுகின்றது. வடஇந்தியாவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் களவுக்கு போனவர்கள், போகாதவர்கள் என்று அனைவரும் பாதிக்கப்பட்டனர். காவல் கோட்டம் நாவலில் ஒரு பகுதியும் இதை அடிப்படையாகக் கொண்டது. 

வேல.ராமமூர்த்தி, இன்று திரைப்படங்கள் மூலம் இன்று பலருக்கு நன்கு தெரிந்தவர். பட்டத்து யானை என்ற படத்தில் அறிமுகமானார் என்று நினைக்கின்றேன். பெரும்பாலும் ஒரே மாதிரி நடிப்பதால் எந்தப் படம் என்ற குழப்பம் வேறு. பட்டத்து யானை திரைப்பட கதை இவருடையதா என்று தெரியவில்ல அதே பெயரில் இவர் ஒரு நாவலும் எழுதியுள்ளார். தனது தாய், தந்தை இருவரின் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து வேல என்று வைத்துக் கொண்டுள்ளார். தன் சமூகத்தின் கதையை எழுதுவதை விட, இன்று அவர்கள் மீது தேவையில்லாது சுமத்தப்பட்ட ஒரு களங்கத்தை களைய வேண்டும் என்பதே அவரது எண்ணம் என்று தோன்றும்படியான முன்னுரை. 

07 ஜனவரி 2022

சிக்க வீர ராஜேந்திரன் - மாஸ்தி ஐயங்கார்

கன்னடத்திலிரிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட நாவல். பொதுவாக எனக்கு மொழி மாற்ற நூல்களைப் பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் கிடையாது. சில பல மோசமான மொழி பெயர்ப்பு நூல்கள் செய்த வினை. ஆனால் இந்த நாவல் எங்கும் இது ஒரு மொழி பெயர்ப்பு என்பதை நினைவு படுத்தவில்லை. 

கர்நாடகாவின் குடகு மலை காவிரி நதியின் பிறப்பிடம். மலைகள் சூழ்ந்த பகுதி. இன்று பெரும்பாலும் காபி தோட்டங்களால் நிறைந்த பகுதி. நல்ல மழை உண்டு. குடகின் கலாச்சாரமும், பண்டிகைகளும் தனித்தன்மையானவை. கன்னடர்களிடமிருந்து அவர்களின் கலாச்சாரம் கொஞ்சம் வேறு பட்டிருக்கும். அவர்களுக்கு என்று பல பண்டிகைகள் உண்டு. அதில் பெரும்பாலனவை விவசாயம் சார்ந்தவை. விதை விதைக்க ஒரு பண்டிகை, அறுவடைக்கு ஒரு பண்டிகை. குடி என்பது அவர்களின் வாழ்வில் ஒரு அங்கம். வீட்டில் செய்து விற்கப்படும் மதுவகைகளை அங்கு காணலாம். ஹோம் மேட் ஒயின். விதவிதமான ஒயின்களை அங்கு கண்டேன். பலவித பழங்களில் செய்யப்பட்டவை, பூக்களில் செய்யப்படுபவை, வெற்றிலையில் தயாரிக்கப்பட்டதை கூட பார்த்தேன். வேட்டையும், போரும் அவர்களது கலாச்சாரம். நாட்டு துப்பாக்கிகளும் புழக்கத்தில் உண்டு என்றும் கேள்வி. அவர்களுக்கு என்று தனிச் சின்னமும் உண்டு. அதில் இருப்பது விவசாயக்கருவிகள், சூரியன், கதிர். பொதுவாக வேட்டையயையும் விவசாயத்தையும், அடிப்படையாக கொண்ட சமூகம்.