19 பிப்ரவரி 2021

அஞ்ஞாடி - பூமணி

காவல் கோட்டம், ஆழி சூல் உலகு வரிசையில் மற்றுமொரு பெரிய நாவல்.2014ம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருதினைப் பெற்ற நாவல்.  நூற்றாண்டு கால கதையை சொல்லும் நாவல். சுமார் 1200 பக்கங்கள். படித்து முடிக்க இரண்டு வாரத்திற்கு மேலாகிவிட்டது 

அஞ்ஞை என்றால் அம்மா என்று பொருளாம். அஞ்ஞாடி என்றால் அம்மாடி என்று பொருள் கொள்ளலாம். படித்து முடித்ததும், அம்மாடி எவ்வளவு பெரிய நாவல் என்றுதான் கூற முடிகின்றது. 

கலிங்கல் கிராமத்தில் வாழும் இரண்டு குடும்பங்களின் கதையோடு, ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை தந்துள்ளார். மிகப்பெரிய நாவல். அத்தனை குடும்பங்கள். கலிங்கல் என்னும் ஊரில் வாழும் இரண்டு சிறுவர்கள் ஆண்டி - மாரி. ஆண்டி நிலபுலங்களுடன் வாழும் ஒரு சம்சாரி குடும்பத்து சிறுவன், மாரி கலிங்கல் கிராமத்து மக்களின் அழுக்குகளை வெளுக்கும் குடும்பத்து சிறுவன். இருவரின் நட்பு, மெதுவாக வளர்ந்து, பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றது. அவர்களின் குடும்ப கதையோடு, அந்த பிரதேச வரலாறும் சேர்ந்து சொல்லப்படுகின்றது.

05 பிப்ரவரி 2021

சண்டை (அவர் போடாதது)

 நமச்சிவாயமும், ஐயப்பனும் பண்டு கடை பெஞ்சில் அமர்ந்து கொண்டு சிய்யத்தை சாப்பிட்டு முடித்து விட்டு டீக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். 

எதிரில் குமார் வருவதை முதலில் ஐயப்பன்தான் பார்த்தார், “பண்டு இன்னம் ஒரு ரெண்டு காராச்சிய்யம் கொண்டு வா” என்றார்.


அவர் கொண்டு வரவும் குமார் அருகில் வரவும் சரியாக இருந்தது. நேற்றைய தினபூமியில் வைக்கப்பட்ட சிய்யத்தை கையில் வாங்கியபடி, “என்ன செட்டியாரே, இன்னும் பேப்பர்ல தர. தேனியில பாரு, ஒரு தட்டுல வச்சி நல்ல சட்டினி  ஊத்தி தரான். பாளையம் பைபாஸ்ல எலையில வச்சி சட்னி ஊத்தி தரான்” என்றபடி வடிசட்டியில்  இருந்ததிலேயே பெரிய சிய்யத்தையும் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தான். 


“அங்க எல்லாம் சாப்டு முடிச்ச உடனே காசு தரணும் இல்ல” என்றார் ஐயப்பன்


அதை கண்டு கொள்ளாத குமார், “சித்தப்பா வழக்கம் போல இங்கதான் இருப்பன்னு தெரிஞ்சிதான் வந்தேன்.” 


04 பிப்ரவரி 2021

சமாதானம் (அவர் செய்யாதது)

 ஐயப்பன் ஊருக்கு போயிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த நமச்சிவாயத்தை அவர் மனைவியின் குரல் எழுப்பி கூடத்திற்கு அழைத்து வந்தது.

கூடத்தில் ஒரு ஓரமாக ஒரு உருவம், தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தது. குமார்


"என்ன குமாரு, இந்த நேரத்துல இங்க, ஏய் ஏண்டா அழுவுற, என்னடா ஆச்சு"


"சித்தப்பா. நீயே சொல்லு நான் எம்புட்டு தூரம் நியாய தர்மத்திற்கு பயந்தவன், ஏதாவது அநியாயமா பேசி பாத்திருக்கியா, சொல்லு சித்தப்பா"


"இப்ப எதுக்குடா அது எல்லாம்"


"சொல்லு சித்தப்பா, நீதான் நம்ம வீட்லயே மனசுல உள்ளத பட்டுன்னு சொல்ற ஆளு, சொல்லு சித்தப்பா"


நமச்சிவாயம் மனைவியை ஏறிட்டு பார்த்தார், அவர் முகத்திலிருந்த கேலியை கண்டு கோபம் வந்தவராக "உன்னவிட நியாயஸ்தன் யாருடா, எல்லாருக்கும் எது நல்லதுன்னு பாத்து பாத்து செய்வ, அதுக்கு என்ன இப்ப"


03 பிப்ரவரி 2021

பங்கு (அவர் பிரிக்காதது)

 "நா வரலப்பா, என்ன விடு. எனக்கு பேங்க் வரை போகனும்" என்று ஐயப்பன் அடம் பிடித்துக் கொண்டிருந்தார். 

"பத்து மணிக்கு முதல்ல நம்ம ரிஜிஸ்ட்ரேஷன்தான், முடிஞ்ச உடனே நீ பேங்க் போகலாம்" என்று ஐயப்பனை கிளப்பிக் கொண்டிருந்தார் நமச்சிவாயம். 


"நீயும் உன் அண்ணனும் பாகம் பிரிச்சி ரிஜிஸ்ட்டர் பண்ற விஷயத்துக்கு என்னை ஏன் கூப்டுற. நீ ஏற்கனவே அவங்க என்ன கொடுத்தாலும் சரின்னு சொல்லிட்டு வந்திருக்க முட்டாப்பய மாதிரி, இப்ப எதுக்கு நான்"


"நீ இல்லாம எப்படி"


"சரி வந்து தொலையுறேன்"


பத்திர பதிவு அலுவலகத்தில் நல்ல கூட்டம். நமச்சிவாயம் கூட்டத்தில் குமாரை தேடி கண்டு பிடித்தார். கூடவே அவரது அக்காவும், தங்கையும். 


"பாருய்யா குமாரோட நல்ல மனச, அவன் அத்தைங்களுக்கும் பங்கு கொடுக்க கூப்பிட்டு அனுப்பியிருக்கான் பாரு, எங்க அவனோட அக்காவ காணோம்”


ஐயப்பன், நமச்சிவாயத்தை பரிதாபமாக பார்த்தார். 


02 பிப்ரவரி 2021

கடன் (அவர் வாங்காதது)

 ஐயப்பன் காலையில் எழுந்து அவர் வீட்டில் காப்பி குடித்துவிட்டு, வழக்கம் போல நமச்சிவாயத்துடன் டீ குடிக்க நமச்சிவாயம் வீட்டிற்கு வந்தார். வழக்கத்திற்கு மாறாக நமச்சிவாயமே வெளியில் நின்று வரவேற்றார்.


"யே, என்னப்பா இது, வழக்கமா நா வரும்போதுதான் பல்ல விளக்கிட்டு இருப்ப, இப்ப என்னடான்னா ரெடியா நிக்கிற"


"ஐயப்பா உனக்கோசோரம் தான் காத்திட்டு இருக்கேன், நம்ம சொசைட்டி பேங்கல இருந்து வந்திருக்காய்ங்க ஏதோ கடன் விஷயமாம்"


"உனக்கு எதுக்குடா கடன், உங்கய்யா  கட்டி விட்ட கடை வாடகை வருது, உங்கண்ணன் வேற உன் பங்க பிரிச்சி கொடுத்துட்டாரு அதுல வேற கொஞ்சம் வருது"


"யோவ் நீ வேற கடுப்பு மயிர ஏத்தாத, அவனுங்க வந்திருக்கிறது கடன் கொடுக்க இல்ல. கொடுத்த கடன வசூல் பண்ண"


ஐயப்பன் மாறிய குரலில், "பாத்தியா ஏங்கிட்ட ஒரு வார்த்த சொல்லாம போய் கடன் எல்லாம் வாங்கியிருக்க. சொன்னா நான் என்ன ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மேலயா கேட்டிருப்பேன்"


நமச்சிவாயம் கோபம் முற்றிய குரலில்,"டேய் வெண்ணை. முழுசா கேட்டுட்டு பாட்டுப்படி. நான் எந்த கடன் மயிரும் வாங்கல, இப்ப வந்து கடன கட்டுங்கறாய்ங்க. கேட்டா நீதான் உன் கடைய வச்சி வாங்குனங்க்ராய்ங்க"


ஐயப்பன் சுதாரித்துக் கொண்டு "வா உள்ள போலாம்" என்று கூறிவிட்டு உள்ளே வந்தார்.


உள்ளே அமர்ந்திருந்தவர்களிடம் ஐயப்பன் தாழ்ந்த குரலில் பேசிவிட்டு வந்தார். ஐயப்பன் “குமார்” என்றார். நமச்சிவாயம் புரிந்து கொண்டு, குமாரை போனில் அழைத்தார். "தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கின்றார்னு வருது"


ஐயப்பன் தலையை சொறிந்தார். 


01 பிப்ரவரி 2021

கையெழுத்து (அவர் போடாதது) - குட்டி கதை

 நமச்சிவாயம் கையில் தபால்க்காரர் தந்த கடிதத்தை வைத்து கொண்டு முழித்துக் கொண்டிருந்தார். 

"சுத்த நச்சு பிடிச்ச மழையப்பா" என்றபடி உள்ளே வந்தவர் நமச்சிவாயத்தின் நண்பர் ஐயப்பன். "என்னப்பா லெட்டர்".


"இந்தா நீயே படிச்சி என்ன எழவுன்னு சொல்லு, எனக்கு ஒன்னும் புரியல."


ஐயப்பன் படித்து முடித்துவிட்டு, "ஒன்னுமில்லப்பா இன்னைக்கி இருந்து நீ நமச்சிவாயம் இல்ல, சின்னப்பா"


"அதுதான் ஊருக்கே தெரியுமே"


"ஆமா, ஆனா அது அரசாங்கத்துல செல்லாது இல்ல. இப்ப அரசாங்கமே உன் பேர சின்னப்பான்னு மாத்தி அரசாங்க இதழ்ல வந்துடிச்சி அம்புட்டுதான். நீ எதுக்குப்பா பேர மாத்த எழுதி கொடுத்த"


"நா எதுக்குயா எழுதிக் கொடுக்கணும்"


"சமீபத்துல எதுலயாவது கையெழுத்து போட்டியா, ஆதார் அது இதுன்னு" 


"இல்லயா, இப்படி பேர மாத்தாலாம்னே எனக்கு தெரியாதேப்பா. குமார் என் ஆதார் கார்டு வாங்கிட்டு போனான். நம்ம பெரிய வீட்ட விக்கனும் அதுக்காக ஏதோ வேணும்னு வாங்கிட்டு போனான். நீ கூட சொன்னியே என் கையெழுத்து இல்லாம ஒன்னும் பண்ண முடியாதுன்னு."


"ஆமா இப்பவும் சொல்றேன், உன் கையெழுத்து இல்லாம ஒன்னும் பண்ண முடியாது. அவனுக்கு போன போடு. ஸ்பீக்கர்ல போடு."


"டேய் குமாரு, என்னடா என் பேரு என்னவோ மாறியிருகுன்னு தபால் வந்திருக்கு."


"வந்திருச்சா சித்தப்பா, அனுப்பி எவ்வளவு நாள் ஆச்சு. ஒரு வேலை சரியா நடக்குதா இந்த அரசாங்கத்துல."


"யார கேட்டு என் பேர மாத்துன, எதுக்கு மாத்துன"


"இதுவா, அது ஒன்னுமில்ல சின்னப்பா. பங்கு பிரிச்சோமில்ல அப்ப உன் பேர பத்திரம் எழுதும் போது பேச்சு வழக்குல நான் உன் பேர எல்லா இடத்துலயும் சின்னப்பான்னே சொல்லி, அப்படியே ரெஜிஸ்ட்டரும் ஆயிடுச்சு.அத யாரும் கவனிக்கல. இப்ப அந்த வீட்ட விக்க போனா, யாரு சின்னப்பான்னு கேக்குராய்ங்க. அதான் பேர மாத்திட்டேன்."


"என் கையெழுத்து இல்லாம இது எல்லாம் பண்ண முடியாது, நீ என் கையெழுத்த போட்டுட்டன்னு சொல்றான் ஐயப்பன். "


"என்ன சின்னப்பா, இப்டி கேக்குறாரு உங்காளு. நான் போடுவனா. அப்படிப்பட்ட ஆளா நானு."


"பின்ன எப்படிடா மாத்துன. "


"ப்ரோக்கர்தான் போட்டான். "


"நீ போடல ப்ரோக்கர் போட்டான்,அத நீ பெருமையா வேற சொல்ற. கர்மம்டா. எவன கேட்டு என் பேர நீ மாத்துன"


"சித்தப்பா உன் நல்லதுக்குதான நான் மாத்துனேன், அதுக்கு போய் குதிக்கிறயே."


"ஏண்டா, கையெழுத்த போர்ஜரி பண்ணிட்டு, அத கேட்டா என்ன தப்புங்கிற. ஒருத்தன் கையெழுத்த இன்னொருத்தன் போடறது பேரு வேறடா. இதுக்கு எத்தன வருஷம் தெரியுமா. இன்னம் வேற எதுல எல்லாம் என் கையெழுத்த போட்டிருக்க. "


"என்ன விட்டா ரொம்ப குதிக்கிற, நான் என்ன உன் செக் புக்லயா கையெழுத்து போட்டேன். இல்ல நீதா உன் பாஸ்புக்கு, செக் புக்கு எல்லாத்தையும் என்கிட்ட கொடுத்து வச்சிருக்கியா. சும்மா பேசிட்டு இருக்க.நீ தான் படிக்கல , அந்த ஐயப்பனுக்கு அறிவில்ல. இப்ப என்ன நடந்து போச்சுன்னு கத்துற.  ஊருக்குள்ள எல்லாருக்கும் நீ சின்னப்பாதான். நியாயமா உன்  பேர நீதான் மாத்தியிருக்கனும். கூடவே இருக்காரே ஐயப்பன் சொன்னாரா அவரு. "


"டேய் நான் எதுக்குடா மாத்தனும், என்னக்கு என்ன தேவை மயிரு இருக்கு. "


"மாத்துனதுக்கு எம்புட்டு பணம் செலவாச்சு தெரியுமா, அத கூட உன்கிட்ட கேக்கலயே நான். அதுக்கு நீ காட்ற நன்றி இதுதானா. எங்கப்பா கையெழுத்த போட்ட எத்தன தடவ பணம் எடுத்துருப்பேன், எங்கப்பா ஒரு கேள்வி கேட்டிருப்பாரா என்ன. அதவிடு எத்தன தடவ என் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்ல எங்கம்மா கையெழுத்த போட்டிருக்கேன். என் கட்சி சார்பா அனுப்புற மனுல எத்தன கையெழுத்த போட்டுருப்பேன், எத்தன் மொட்ட கடுதாசில கையெழுத்து போட்டிருப்பேன். நீ என்னடான்னா ஒரு பேர மாத்துனதுக்கு இந்த பேச்சு பேசுற. "


"டேய் அது எல்லாமே ஃப்ராடுத்தனம்தான்டா"


"எல்லாம் என் கிரகம். நல்லது பண்ண போய் இப்ப நா பேச்சு வாங்கிட்டு இருக்கேன். நம்ம சித்தப்பா இப்படி ரெண்டு பேரோட இருக்காரே, ஒரு பேருக்கு ரெக்கார்டே கிடையாதே அப்படின்னு மனசு நொந்து பல நாள் தூக்கம் வந்ததே இல்ல. அவருக்கு ஏதாவது நல்லது பண்ணனும் பண்ணனும்னு மனசு கிடந்து தவிச்சது எனக்குதான் தெரியும். சரி ஒரு 5000 செலவானாலும் பரவாயில்ல அவருக்கு பேர மாத்தி நல்லது பண்ணனும் நினைச்சா இப்படி பேசிட்டயே. உன் கையெழுத்த போட எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு தெரியுமா. எனக்கே அவ்வளவு கஷ்டமாயிருக்கும் போது, உன் வயசுக்கு அது எவ்வளவு கஷ்டம், எப்படி உன் கையெழுத்த போடுவ. அத எல்லாம் நினச்சு பாரு உனக்கே தெரியும். இப்படி இருக்க உன் கிட்ட வந்து உன்ன கஷ்டப்படுத்துவனா நானு."


"ஒரு சின்ன கையெழுத்துக்காக உன்ன கார் வச்சி கூட்டிட்டு போய கஷ்டப்படுத்த முடியுமா, பாவம் இல்ல. வயசான காலத்துல நீ எப்படி கார்ல வருவ. நீயே இங்க சோத்துக்கு கஷ்டப்பட்டுட்டு இருக்க. இதுக்கு மேல கார்ல போற கஷ்டம் வேறயா. நீ வேற நாங்க வேறயா சித்தப்பா. என்னதான் சொத்து பிரிக்கும் போது உனக்கு கம்மியா கொடுத்தாலும், உன் மேல பாசத்த கம்மியாவா கொடுத்தோம். வருஷ வருஷாவரும் எங்களுக்கு வர பொங்கல் வேட்டிய உனக்குதான் தரோம். "


"யோவ் ஐயப்பா அழுகுறான்யா, டேய் வேணான்டா"


"விடு மறுபடியும் நான் மாத்தி கொடுத்துடறேன். ஏற்கன்வே மாத்தினதுக்கும், இப்ப மறுபடியும் மாத்துறதுக்கும் சேத்து ஒரு பத்தாயிரம் கொடு போது. நீ கையெழுத்து கூட போட வேண்டாம்." 


போனை வைத்த நமச்சிவாயம் கண்ணில் நீர். 


நமச்சிவாயம் "யோவ், பாவம்யா அவன் என் நல்லதுக்குதான் பண்ணியிருக்கான் போலய்யா"


ஐய்யப்பன் அவஸ்தையாய் தலையை அசைத்தர்.