24 மே 2021

மிதவை - நாஞ்சில் நாடன்

தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ந்த பின் வேலை கிடைப்பது என்பது கொஞ்சம் சுலபமாகிவிட்டது. தகுதிக்கு ஏற்ற வேலை என்பது எப்போது கடினம்தான். ஆனால் பெரும்பாலனவர்களுக்கு இன்று ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கூட, மாலையில் ஸ்விகி, ஜொமொட்டோ போன்ற நிறுவனங்களில் வேலைக்கு சேர முடிகின்றது. 

இதற்கு முன்னால் இருந்த நிலை வேறு. எழுபதுகளின் இறுதிகள், எண்பதுகளின் ஆரம்பகாலப் படங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். தாடி வளர்த்த நாயகன், வேலை காலி இல்லை போர்டுகள், விண்ணப்பம் வாங்க பணம் தராத அப்பா, வேலைவெட்டி இல்லாதவன் மீது காதல் கொள்ளும் மக்கு பெண்கள்.

19 மே 2021

கல்லுக்குள் ஈரம் - ர.சு.நல்லபெருமாள்

அகிலன், நா.பா போன்ற எழுத்தாளர்களின் நாவல்களை படிக்கும் போது "இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் எந்த கிரகத்தில் வசிக்கின்றார்கள்" என்ற எண்ணம் ஏற்படும்.  நாவலில் அனைவரும் தத்துவமாகவும், உயர்ந்த லட்சியங்களை பற்றியும் பேசிக் கொண்டே இருப்பார்கள். இந்த நாவல் கொஞ்சம் தப்பியிருந்தால் அந்த வகையில் விழுந்திருக்கும்.

சுதந்திர போராட்ட காலத்து நாவல். கல்கி  சுதந்திர போராட்டத்தை பின்புலமாக வைத்து பல நாவல்கள் எழுதியிருக்கின்றார் அலையோசை, தியாகபூமி, சோலைமலை இளவரசி. ஆனால் அவரின் நாவல்களில் அனைவரும் கற்பனை பாத்திரங்களே. இந்நாவலில் கற்பனை பாத்திரங்களுடன் பல சுதந்திர போராட்ட வீரர்களும் பாத்திரங்களாக வருகின்றனர். காந்தி, சிதம்பரம் பிள்ளை, பாரதியார், வாஞ்சி நாதன், ராஜாஜி, நேரு.

10 மே 2021

சதுரங்க குதிரைகள் - நாஞ்சில் நாடன்

வழக்கம் போல தலைப்பிற்கும் நாவலுக்கும் என்ன தொடர்பு என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. கதையின் நாயகன் அலைவதற்கு தொடர்பானது என்றால், சதுரங்கத்தின் குதிரைகள் அப்படியல்ல. மிகவும் சக்தி வாய்ந்தவை, மிகவும் ஆபத்தானவை. என்னவோ ஒன்று.

நாஞ்சில் நாடனின் மற்றொரு பம்பாய் கதை. மீண்டும் பலவித மனிதர்கள் அறிமுகம் செய்கின்றார். தனியனாக வாழும் நாரயணனின் கதை.

நாகர்கோவில் தாண்டிய ஒரு கிராமத்திலிருந்து, பிழைக்க பம்பாய் சென்ற ஒருவனின் அனுபவத் தொகுப்பு. அவனின் பம்பாய் வாழ்க்கை, கிராம வாழ்க்கை, பயண அனுபவங்கள் அனைத்தையும் சேர்த்து பின்னிய ஒரு நாவல்.

நாஞ்சில் நாடனின் வழக்கமான கதை சொல்லும் பாணி, மேலோட்டமாக படிக்கும் போது ஒரு சாதரண கதை என்றாலும், உள்ளே நமக்கு சின்ன சின்ன அனுபவங்களை ஒளித்து வைத்துள்ளார். தனியாக ஏதோ ஊரில் சென்று வேலை செய்த பலருக்கு நெருக்கமாக தோன்றும். 

நாவலில் எனக்கு பிடித்தமாக இருந்தது, நாராயணின் பயண அனுபவங்கள். என்னுடைய அலுவலக நண்பருடன் ஒரு முறை திருப்பதி சென்றோம், ஜாலியாக குளித்து விட்டு வந்தபின் துண்டுகளை காயப்போட இடம் தேடிய போது அவர் தன் பையிலிருந்து ஒரு கயிறை எடுத்து கொடுத்தார். அவர் கொண்டு வந்திருந்த பொருட்கள், டார்ச், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கயிறு, நக வெட்டி, சிறியகத்தி, தலைவலி காய்ச்சல் மாத்திரைகள், பேண்டேய்ட், கவர்கள். அவர் இதற்கு முன்னால் வேலை செய்த அலுவலகத்தில் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருக்கும், அப்படி சென்று பழகியதன் விளைவு. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில், முன்பதிவு டிக்கெட் இல்லாத ட்ரெயினில் ஏறி, ஊர் பேர் தெரியாத ஏதோ ஒரு நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டியிருக்கும். அவரின் அந்த அனுபவங்களை, இதில் மீண்டும் நெருக்கமாக காண முடிந்தது. 

நாஞ்சில் நாடன் நாவலில், உணவு இல்லாமலா, பாவ், வடா பாவ், டால் ஃபிரை, புல்கா, உருளை கிழங்கு வடை, கடலை மாவு பண்டம் என்று விதவிதமான உணவு, ஒரு கல்யாண பந்தியும் உண்டு. 

அவரின் தலைசிறந்த நாவல், படித்தே தீர வேண்டும் என்ற லிஸ்டில் வராது, ஆனால் கிடைத்தால் தவறவிடாமல் படிக்க வேண்டிய நாவல். 

05 மே 2021

ராமோஜியம் - இரா.முருகன்



முதலிரவில் மனைவி மூக்குபொடி டப்பாவைத் தேடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு வித்தியாசமான கற்பனையில் விளைந்த நாவல். 

நாற்பதுகளில் சென்னையில் வாழும் ஒரு தம்பதியரின் தினசரி அனுபவங்களின் ஒரு சிறியத் தொகுப்பு. கருப்பு வெள்ளை பிண்ணனியில் சென்னை, டில்லி, கும்பகோணம் போன்ற இடங்களில் சுற்றித் திரிய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும், அந்த வாய்ப்பைத் தவற விடாமல் இருக்க இந்த நாவலைப் படிக்கலாம்.

தேவனின் துப்பறியும் சாம்பு, சிஐடி சந்துரு போன்ற தேவனின்  புத்தகங்களைப் படிக்கும் போது சென்னையைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கும். நாற்பதுகளின் சென்னை, கொரட்டூர் கிராமம், வெளாச்சேரி கிராமம், ஊரை விட்டு எங்கோ இருக்கும் குரோம்பேட்டை, பங்களாக்கள் நிறைந்த நுங்கம்பாக்கம், வளர்ந்து வரும் மேற்கு மாம்பலம், ட்ராம் வண்டிகள் என்று,  ஒரு கருப்பு வெள்ளையில் ஒரு நகரம் நம் கற்பனையில் உருவாகிவரும். அந்தக் கற்பனையை இன்னும் விரிவாக்கும் இந்தப் புத்தகம்.