கடலுக்கு அப்பால். ஒரு வகையில் புயலிலே ஒரு தோணியின் தொடர்ச்சி எனலாம், அதே சமயம் இரண்டும் வேறு வேறு கதைகள். ஒன்றை விட்டு இன்னொன்றை படிக்கலாம். கதையின் கால வரிசைப்படி புயலிலே ஒரு தோணி முதலில், எழுதப்பட்ட கால வரிசைப்படி முதலில் எழுதப்பட்டது கடலுக்கு அப்பால்,சில கதாபாத்திரங்கள் இரண்டிலும் வருகின்றன. அவ்வளவுதான். இரண்டு கதைகளையும் அவர் யோசித்து வைத்திருக்கலாம். புயலிலே ஒரு தோணியின் ஒரு லீட், கடலுக்கு அப்பாலில் இருக்கின்றது. இதில் வரும் செல்லையா, அதில் ஒரு காட்சியில் தோன்றி மறைகின்றான்.
கடலுக்கு அப்பால் வாழும் தமிழர்களின் கதை. செல்லையா வானா யீனால் மார்க்காவின் அடுத்தாள். ஐ.என்.ஏவில் லெப்டினெட்டாக இருக்கும் செல்லையாவிற்கு, வயிரமுத்துப் பிள்ளையின் மகள் மீது காதல். வான யீனா, சண்டைக்கு போய்ட்டு வந்த பயலால், வட்டித் தொழில் செய்ய முடியாது என்று மகளை வட்டி தொழிலுக்கென்று பிறந்த ஒருவனுக்கு கட்டி தருகின்றார். செல்லையா தன் வழியில் போகின்றான்.
செல்லையா ஒரு சாதரண அடுத்தாள், ஐ.என்.ஏவில் சேர்ந்ததும் அவன் ஒரு போர் வீரனாக மாறுகின்றான். நேதாஜி இறந்ததும், வேறு வழியின்றி முகாமில் இருந்து வெளியேறி வீரர்களை சட்டை மாற்றி விடுகின்றனர். பின் மீண்டும் நெற்றியில் பட்டையுடன் பழைய செல்லையாவாக மாறுகின்றான். பாண்டியனின் ஒரு எதிர் துருவம் செல்லையா எனலாம். பாண்டியன் தேடிக் கொண்டே இருக்கின்றான், எதிலும் அவன் தன்னை முழுக்க ஈடுபடுத்திக் கொள்வதில்லை. செல்லையா அனைத்தாலும் பாதிக்கப்படுவன், உணர்ச்சிகளால் தூண்டப்படுவன். பாண்டியன் தேடி தேடி அடுத்தடுத்து போகின்றான், செல்லையா வாழ்வின் யதார்த்தை எதிர்கொண்டு அமைதியாகின்றான். ஐ. என். ஏவில் இருந்தவரைதான் போர் வீரன், அதற்கு பின் அவன் ஒரு சாதரணன் என்பதை உணர்ந்து கொள்கின்றான். மரகதத்தின் மீதான காதல் தோற்றபின் செல்லையா உணர்வது அவனை, அவனின் காதல் தோல்வியல்ல அவனது ஆணவத்தின், அகங்காரத்தின் தோல்வி. அதை அறிவதுடன் கதை முடிகின்றது.