20 நவம்பர் 2020

தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி

சிலிக்கான் ஷெல்பில் ஆர்.வி இந்த நாவலை பற்றி நல்லவிதமாக எழுதியிருந்தார். கிண்டில் அன்லிமிட்டடில் கிடைத்தது. எனக்கு அவ்வளவு சிறப்பாக தோன்றவில்லை. ஆதவனின் கதாநாயகன், பாலகுமாரன் நாவலில் வந்து குதித்தது போல இருந்தது. ஆதவன் கதைகளில் நாயகர்கள் எப்போதும் அனைத்தையும் பிளந்து ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள். எல்லாரையும் விட நாம் ஒரு படி மேல் என்பது போல. அது போன்ற ஒரு நாயகன், பாலகுமாரன் கதைகளில் வரும் பெண்கள் கலந்த நாவல்.

இது முப்பது வருடங்களுக்கு முந்தய காலகட்டத்தை பற்றி பேசுகின்றது. ஆர்வியே அந்த நாயகனுடன் தன்னை பொருத்தி பார்க்க முடிவதாக கூறியிருந்தார்.  கனவுகளுடன் திரியும் விஸ்வம், அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு பிழைப்பை பார்க்க போவதுதான் நாவல். முகவரி படத்திற்கான இன்ஸ்ப்ரேஷன் என்று படித்தேன்.

முப்பது வருடங்களுக்கு முன்பான ஒரு காலகட்டத்தை காட்சிப்படுத்வதில் வெற்றிதான். அதுவே இன்று இந்த நாவலை கொஞ்சம் பழையதாக்கி விட்டது.  நாவலை என்பதை விட, அந்த சூழலை பழையதாக்கி விட்டது. மொத்தமாக படிக்கும் போது எனக்கு ஓரளவு நல்ல முயற்சி அவ்வளவுதான். இதற்கு  மேல் எழுத ஒன்றும் தோன்றவில்லை.

09 செப்டம்பர் 2020

பதிமூனாவது மையவாடி - சோ. தர்மன்

தூர்வை, கூகை, சூல் ஆகிய நாவல்களை எழுதிய சோ.தர்மன் அவர்களின் அடுத்த நாவல் பதிமூனாவது மையவாடி.  ஜெயமோகன் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. முன்னுரை நாவலை எந்த கோணத்திலிருந்து படிக்கலாம் என்பதை மெலிதாக காட்டுகின்றது. எனக்கென்னவோ, வேறு ஒரு கோணத்தில் யாரும் படித்துவிட வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கை போலதான் தோன்றுகின்றது. தமிழ்ஹிந்து நாவலைப்பற்றி மிக எதிர்மறையான விமர்சனத்தை எழுதியிருந்தது. நாவலைப் பற்றியல்ல நாவலாசிரியரைப் பற்றி.சூல் நாவலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்ததும் இந்நாவலில் கிறிஸ்தவமத நிறுவனங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்ததும், வழக்கம் போல அவருக்கு சங்கி பட்டம் கட்டிவிட்டார்கள். விட்டால் இனி கோவிலுக்கு செல்பவன், நெற்றியில் விபூதி வைப்பவன் என அனைவருக்கு இந்த பட்டம் கிடைக்கும். முட்டாள்கள்.

ஒரு சிறுவன் எப்படி ஒரு இளைஞனாக மாறுகின்றான் என்பதுதான் நாவல். கருத்தமுத்து உருளக்குடி கிராமத்திலிருந்து படிப்பதற்காக கிராமத்தை விட்டு வெளியே செல்கின்றான். பாடப்படிப்புடன் உலகத்தையும் கற்று கொள்கின்றான். சமூகம் அவனுக்கு கற்று கொடுக்கின்றது. அவனுக்கு வரும் குழப்பங்கள் அதிர்ச்சிகள் வழியாக அவன் மெதுவாக கற்று கொள்கின்றான். கல்வி, மதம், காமம், களவு, அன்பு எல்லாம் அவனுக்கு அனுபவங்களாக கிடைக்கின்றன. அதை அவன் எப்படி பயன்படுத்தி கொள்கின்றான்? எதைப் பெற்று கொள்கின்றான் என்பதுதான் நாவல்.

முன்னுரையில் ஜெயமோகன் கல்வியே ஒருவன் தன் தடைகளை விட்டு வெளியேறும் வழி என்பதே இந்நாவலின் அடிநாதம் என்பது போல சொல்கின்றார். ஓரளவுதான் அது சரி. கல்விதான்  ஒருவனை எவ்வித தளைகளிலிருந்தும் அகற்றும். சமூக ஏற்றதாழ்வோ, பொருளாதார ஏற்றதாழ்வோ அனைத்தும் அறிவின் முன் அடங்கிதான் போக வேண்டும். அது இந்நாவலின் மிக மெலிதான ஒரு சரடு. ஆனால் தலைப்பை பின்தொடர்ந்தால் நமக்கு கிடைப்பது நாவலின் முக்கிய சரடான நிறுவனமயமாக்கப்பட்ட மதமும், அதனுள் இருக்கும் முரண்கள், பிரச்சனைகளும்.

12 ஆகஸ்ட் 2020

மாயப் பெரு நதி - ஹரன் பிரசன்னா

"கவிஞர் ஹரன் பிரசன்னா" எழுதியுள்ள புதிய நாவல் மாயப் பெரு நதி. சாதேவி, புகைப்படங்களின் கதை என்று இரண்டு சிறுகதை தொகுப்பு வெளியிட்டுள்ளார். இது அவரின் முதல் நாவல். சாதேவி தொகுப்பை பற்றிய குறிப்பில், 

//தமிழகத்தில் தமிழை தாய் மொழியாய் கொண்டவர்களை விட பிற மொழியை வீட்டில் பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். எனது ஊரிலேயே வீட்டில் தமிழ் பேசுபவர்கள் குறைவுதான். கன்னடமும், தெலுங்கும் பேசுபவகளே அதிகம். அந்த மொழியும் தமிழுடன் கலந்து மிகவும் திரபடைந்து போயிருக்கும். பிராமணத்தமிழ் என்பதாக ஒன்று உண்டு, ஆனால் அந்த தமிழ் இந்த பிற மொழி பிராமணர்களிடம் இயல்பாக வருவது கிடையாது. என்னுடைய தமிழைக்கேட்டு பலருக்கு ஐயருன்னு சொல்லிட்டு அந்த பாஷை பேச மாட்டேங்கிறியே என்பார்கள். அது வராது, அந்தந்த ஊரின் வட்டார வழக்குதான் வாயில் வரும்.  அதே போல பல பழக்க வழக்கங்கள், பண்டிகைகள் எல்லாம் தமிழகத்து பிராமணர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே இருக்கும். உதாரணம், ஆடி மாதத்தில் யாரும் திருமணம் வைத்துக் கொள்ள மாட்டார்கள், ஆனால் தெலுங்கு, கன்னட பிராமணர்களுக்கு அம்மாவாசை தாண்டியது என்றால் அடுத்த மாதம் பிறந்ததாக கணக்கு. இந்த கூட்டத்தைப் பற்றி எந்த எழுத்தாளரும் பதிவு செய்ததில்லை. பிரசன்னா அதை ஓரளவிற்கு தீர்த்து வைக்கின்றார், சில கதைகள் மூலமாக மட்டும். சும்மா இப்படியும் ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்று தெரிந்து வைத்துக் கொள்ளமட்டும் பயன்படும்.// என்று எழுதியிருந்தேன். 

இந்த நாவலில் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றார். 

03 ஆகஸ்ட் 2020

கரமுண்டார் வூடு - தஞ்சை பிரகாஷ்

சாரு நிவேதிதா அவரது தளத்தில் மிகவும் புகழ்ந்து எழுதியிருந்த ஒரு எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ். அதிலும் குறிப்பாக இந்த நாவலைப் பற்றி மிக உயர்வாக எழுதியிருந்தார். பொண்டாட்டி நாவலின் சூடு நினைவிலிருந்தாலும், இவர் பழைய எழுத்தாளர், அதனால் பரவாயில்லை என்று ஒரு எண்ணம். 

இந்நாவலை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. நூறாண்டுகளுக்கு முன் வசதியாக இருந்த பல குடும்பங்கள், கால மாற்றத்தை உள் வாங்கததால் தேய்ந்து போனன. அது போன்று கால மாற்றத்தை சந்திக்கும் ஒரு குடும்பத்தின் கதை. அந்த குடும்பத்தின் சமூக கதையோடு பெண்களின் கதைகளையும் சொல்லியிருக்கின்றார். இரண்டையும் ஒன்றாக சேர்த்ததில் குழம்பிவிட்டது. கதை உடைப்பெடுத்த காவிரி வெள்ளம் போல நாலாப்பக்கமும் ஓடுகின்றது. 

வாழ்ந்து கெட்ட ஒரு வீட்டின் கதையையும், வீட்டி வெவ்வேறு வகைகளில் அடைக்கப்பட்ட பெண்களின் கதைகளும் இணைந்து வருகிறது. ஆற்றின் நடுவே இருக்கும் ஒரு வீடு. காவிரி அலைகள் எப்போதும் சுவற்றில் மோதும் சத்தக் கேட்கும் ஒரு வீடு. வீட்டு வெளிச்சுவரில் ஏறி காவிரியில் குதிக்கலாம், ஈரம் பட்டு பட்டு பாசி படிந்த சுவர்கள். இதுதான் முதலில் நாவலில் உள்ளே ஈர்க்கும் கண்ணி. இறுதியில் அதுவே இறுக்கவும் செய்கின்றது. 

31 ஜூலை 2020

காணாமல் போன பை

இந்த ப்ளாக் ஆரம்பித்த புதிதில் எழுதி வைத்தது, அப்படியே புதைந்து போனது. இன்று அகழ்வார்ய்ச்சியில் கிடைத்தது. சராசரிக்கும் மோசமான கதைதான், இருக்கட்டுமே என்ன இப்போ.....


"லாரில போங்கய்யா"

பஸ் ஸ்டாண்டில் எங்கள் கூட்டத்தை கண்டவுடன் டபுள் விசில் குடுத்து பறந்தது பஸ். காரணம்  பதினைந்து பேர், நாற்பது பெட்டி, பைகள். தவிர ஐந்து (இல்லை ஏழு, எட்டு, நினைவில்லை விடுங்கள்) குழந்தைகள். திருச்சிக்கு ஒரு திருமணத்திற்கு போய்விட்டு வந்திறங்கினோம். 

"பேசாம ஒரு வேன் பிடிச்சி போய்டலாமா?"

"வேண்டாம் ஒரு ஆட்டோல லக்கேஜ் எல்லாம் போட்டு விட்டுட்டு நாம பஸ்ல போய்டலாம்"

"ம்கும் ஆட்டோ, ஒரு மினி டோர் கூட பத்தாது"

"ஒன்னும் வேண்டாம், இப்போ ஒரு ப்ரைவேட் பஸ் வரும் போலாம்"

"இப்ப லாரில போங்கன்னு சொல்லிட்டு போனானே அதுதான் நீங்க சொன்ன பஸ்"

"அப்படியா"

19 ஜூலை 2020

நாரத ராமாயணம் - புதுமைபித்தன்


கிண்டிலில் மேய்ந்து கொண்டிருந்த போது நாரத ராமாயணம் என்று ஒன்று கண்ணில் பட்டது. புதுமை பித்தன் எழுதியது. ஒரு முறை சரிபார்த்து கொண்டேன், ஒரிஜினல் புதுமைபித்தன் தான் என்று. 300 வகை ராமாயணங்கள் உண்டு என்பார்கள். ராமரை அனைவரும் சொந்தம் கொண்டாடியதன் விளைவு. ஜைனர்கள், புத்தர்கள் என்று அனைவரும் ராமரை அவரவர் வசதிக்கு மாற்றி கொண்டார்கள். திராவிட புத்திசாலிகள், பிராமண ராவணனை சொந்தக்காரனாக்கி, ராவண காவியம் எழுதிக் கொண்டார்கள். 

புதுமைபித்தன் கிண்டலான எழுத்துக்கு சொந்தக்காரர். புதுமைபித்தன் நடை திருவிளையாடல் சிவாஜி  நடையை விட பிரபலமானது என்பதால் என்ன எழுதியிருக்கின்றார் என்று படிப்போம் என்று படித்தால், சரியான திராபை.

கடவுளும் கந்தசாமி பிள்ளையும், அகல்யை, காஞ்சனை போன்றவற்றை எழுதியவரா இதையும் எழுதினார் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கின்றது. ஹிந்து மதத்தில் கடவுள்களை ஜாலியாக நாம் கிண்டல் செய்யலாம், திட்டலாம். (பக்தியுடன் அவனை நம்பும் பக்தர்களுக்குதான் அந்த உரிமை, நம்பாத பொறுக்கிகளுக்கு இல்லை), அதனால் முதல் பகுதி கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. வயதான ராமருக்கு போரடிக்கின்றது. அதனால் மீண்டும் காட்டிற்கு சீதையுடனும், அனுமனுடனும் போகின்றார். வேறு ஏதாவது அரக்கன் வருவான், அவனுடன் போர் செய்யலாம் என்று. அனுமனுக்கு பர்ணசாலை கட்ட தெரியவில்லை என்று கொஞ்சம் ஜாலியா போகின்றது. 

17 ஜூலை 2020

பாலகுமாரன் - சில நாவல்கள்

கிண்டில் அன்லிமிட்டடில் கங்கை கொண்ட சோழன் படிக்கலாம் என்று நினைத்தால், கடைசி பாகத்தை மட்டும் அன்லிமிட்டடில் வைக்கவில்லை. வியாபார உத்தி போல. லைப்ரேரியில் முடிவு பகுதியை கிழித்து வைக்கும் ஆசாமி யாரோ ஐடியா கொடுத்துள்ளார். சரி போகட்டும், உடையார் எப்படி என்றால், அதில் சில பகுதிகளை காணவேயில்லை. சரி கிடைத்த சில நாவல்களை படிக்கலாம் என்று படித்தேன்.

பந்தயப்புறா

பாலகுமாரனைப் படித்து தெளிந்தேன், குரு என்றெல்லாம் பலர் பேசுவதற்கு காரணம், இது போன்ற நாவல்கள்தான். 80களில் இருந்த சூழல் இன்று எந்தளவிற்கு மாறியுள்ளது என்று தெரியவில்லை. ஒரு பெண் தன் தடைகளை விட்டு விலகி பறக்க நினைப்பதும், பறப்பதும்தான் கதை. புதிதாக வேலைக்கு சேரும் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவங்கள், அங்குள்ளவர்களின் முறைப்புகள், தரப்படும் சில வெட்டி வேலைகள் எல்லாம் பலரை நாவலுடன் தன்னை இணைத்து கொள்ள செய்யும். நான் முதன் முதலில் வேலைக்கு சென்றதுதான் நினைவிற்கு வந்தது. எனக்கு என்ன வேலை தருவது என்று தெரியாமல், சில நூறு பக்க ரிப்போர்ட்களை டைப் செய்ய சொன்னார்கள். வெட்டியாக அதையும் செய்து கொண்டிருந்தேன். இதில் பாலகுமாரனின் மனைவி ஒரு பாத்திரமாக வருகின்றார், சுயவிமர்சனம் போல. இறுதியில் வரும் காதல் எல்லாம் சினிமாக்கு லாயக்கான கதை. இருந்தும் ஓரளவிற்கு நல்ல நாவல்.

12 ஜூலை 2020

பாம்பு - சிறுகதை

சும்மா, டச் விட்டு போகக்கூடது என்பதற்கு எழுதி பார்த்தது. 

ராஜு வாட்ஸாப்பில் வந்த வடிவேலு மீம்ஸை பார்த்துவிட்டு மோடியை திட்டிக் கொண்டிருந்த பொழுது, கதவை திறந்து கொண்டு வினோத் வந்தான். 

"வாட்ஸாப்ல வர குப்பைய படிக்கிறத நிறுத்து, அப்பதான் மூளை வளரும், வா வேலை வந்திருக்கு"

"என்ன அண்ணா எங்க தீப்பிடிச்சிருக்கு"

"ஏண்டா, தீப்பிடிச்சா மட்டும்தான் கூப்பிடுவாங்கன்னு உனக்கு எவன் சொன்னது. எல்லா ஆபத்துக்கும் நம்மளதான் கூப்பிடுவாங்க. போலீஸிக்கு அப்புறம்  நாமதான்,வா வா" 

"அண்ண எதுல போறது"

"ஜீப்ப எடு"

"எங்க போறோம்"

"அங்க புது அப்பார்ட்மென்ட் இருக்குல்ல, அங்க ஏதோ பாம்பு வந்திருச்சாம் அதான் பயந்து போய் போன் பண்ணுனாங்க"

ராஜு கொஞ்சம் மிரண்டது தெரிந்தது. "நாமதான் பிடிக்கனுமா, ஏன ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல இருந்து வரமாட்டாங்களா?"

21 மே 2020

ஆவரணா - The Veil - திரை - SL பைரப்பா

அப்யாரோஹ மந்திரம் – ப்ரஹதாரண்யக உபனிஷதம் 1.3.28

ஓம் அஸதோமா ஸத்மய தமஸோ மா ஜ்யோதிர் மய ம்ருத்யோர்மா அம்ருதம் மய |
உண்மையற்ற நிலையிலிருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக ! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக! மரணத்திலிருந்து என்னை மரணமில்லா பெரு நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!
இன்று ஒரு முக்கிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.  ராமர் கோவில் கட்ட நிலத்தை சீர்படுத்தும் பணியின் போது பழங்கால சிற்பங்கள், தூண்கள், கடவுள் சிலைகள் என ராமர் கோவிலிற்கான சான்றுகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன. ஆனால் அவை அனைத்தையும் தொல்லியல் துறை முன்னமே கண்டு பிடித்து இருக்கலாமே என்ற கேள்வி எழுகின்றது. அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.  கே.கே.முகமது, அயோத்தியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கு கோவிலின் கட்டுமானம் இருப்பதை உறுதி செய்த ,பின்னரும், இடதுசாரிகள் உள்ளே புகுந்து அதை குழப்பி ஒரு பெரிய பிரச்சினையாக ஆக்கினார்கள். அது கோவிலே அல்ல, பெளத்த மடம் என்று வரலாற்றையே திரிக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் திரிப்பு இந்திய வரலாறு முழுவது பரவி கிடக்கின்றது.
திப்பு சுல்தானை விடுதலை போராட்ட வீரனாக்கி, அவன் மலபார் பகுதிகளில் செய்த அட்டூழியங்களை மறைத்தது, அவனின் மத வெறி மீது நாட்டு பற்று என்ற போர்வையை போட்டு மூடியது, காசியின் மசூதி இடிப்பிற்கு ஒரு கதை கட்டிவிட்டது என்று அவர்களின் செயல் நீளுகின்றது. காரணம், ஹிந்து மூஸ்லீம்களிடம் அமைதியை உண்டாக்குகின்றார்களாம். உண்மையின் மேல் அமையாத எதுவும் ஒரு நாள் அழிந்து படும் என்பதை அறியாத மூடர்கள். அதை கண்கூடாக அவர்களின் காசி, ராமேச்வரமான ரஷ்யாவிலேயே காணலாம். 

இன்றைக்கான தலை

கணேஷ் பாலா - அவருடைய பக்கத்தில் படம் பார்த்து கதை சொல் என இந்தப் படத்தை வெளியிட்டிருந்தார். சுஜாதாவின் தேஜஸ்வி பாதிப்பில் சும்மா எழுதியது

டொக் டொக்

"திறந்துதான் கதவு இருக்கு வா உள்ள" என்ற சத்தம் கேட்டது

"சார் நீங்க கேட்ட உப்பு போட்ட காப்பி" என்ற படி, கதவை திறந்து வந்த பேரர் உறைந்து போய் நின்றான், வலது கையிலிருந்த ட்ரே நடுங்கியது, அந்த குளிரிலும் வியர்வை அரும்பியது.

உள்ளே டீப்பாயின் மேலிருந்த தலையில் கையை வைத்து கொண்டிருந்த அவன், திரும்பி பார்த்து "வா இங்க" என்றான்.

பேரர் கால் நகர மறுத்தது. அந்த தலையை பார்த்தவாரே மெதுவாக நடந்து வந்தான். வாய் குழற "சாழ் சாழ், எனக்கு கல்லியாணம் கூட ஆகல"

"வா இங்க" என்று குரல் அழுத்தமாக வந்தது

ட்ரேயை அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு அருகில் வந்தான்

இந்த ரெண்டு விரல்ல ஒன்ன தொடு என்று சொல்ல, பேரர் பயந்து கொண்டே ஒரு விரலைத் தொட்டான், விரல் ஐஸ் மாதிரி குளிர்ச்சியாக இருந்தது.

ஹூம், என்றபடி, தன் தலையை கழட்டி டீப்பாயில் வைத்துவிட்டு, டீப்பாயிலிருந்த தலையை எடுத்து மாட்டிக் கொண்டு, பேரர் கொண்டு வந்த காப்பியை மூக்கின் அருகில் வைத்து உறிஞ்சினான். கப்பில் வெறும் பால் மட்டும் மிச்சமிருந்தது. சுவற்றில் மாட்டியிருந்த ஓவியத்தை கழட்டி, தலையுடன் சேர்த்து ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டு அறையை விட்டு சென்றான்.


30 ஏப்ரல் 2020

ரூஹ் - லக்‌ஷ்மி சரவணக்குமார்

கானகன் எழுதிய நாவலாசிரியரின் மற்றொரு படைப்பு.

எழுத்தாளர் சாருநிவேதிதா இவரைப் பற்றி மிக பெரிதாக எழுதியிருந்தார். வழக்கமாக அவர் பாராட்டினாலும், திட்டினாலும் எக்ஸ்ட்ரீம் லெவலி போவது வழக்கம். இந்த நாவலை பலமாக பாராட்டியிருந்தார்.

அன்பை பேசுகின்றது, கருணை, தூய உள்ளம், எக்ஸட்ரா எக்ஸட்ரா. இதுமாதிரிதான் இந்நாவலை பற்றி பலர் எழுதியிருந்தார்கள்.

இஸ்லாமிய பிண்ணனி கதை என்பதாகவும், சூஃபிகள் பற்றிய கதை என்றும் பல அறிமுகங்கள்.

உண்மையில் நாவல் அப்படித்தான் என்றால் இல்லை. இஸ்லாமிய பிண்ணனி என்றவுடன் ஒரு கடலோரக கிராமத்தில் அளவிற்கு நினைத்து கொள்ளக் கூடாது, சூஃபியிசம் பற்றி ஏதாவது வருமா என்றால் அதுவும் இல்லை. இஸ்லாமிய பாத்திரங்கள் இருக்கின்றன அவ்வளவுதான்.

கதையின் ஆரம்பத்தில் வரும் ஒரு சிறிய காட்சியே கதை மீது முதல் ஒவ்வாமையை உண்டாக்கிவிட்டது.   மாராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் கடற்படை தளபதி கானோஜி ஆங்க்ரே, அவர் ஏதோ ஒரு கொள்ளைக்காரர் போல சித்தரிக்கப்படுகின்றார்.

மராட்டிய கடற்படை பற்றிப் பேசிவிட்டு, கானோஜி ஆங்க்ரே பற்றிப் பேசாதிருக்க முடியுமா என்ன?  இவர்தான் மராட்டிய கடற்படையை புதியதொரு சிகரத்துக்கே கொண்டு சென்றவர்

மேலே உள்ளவை நமது பிரதமர் பேசியவை. இதைப் படித்தவுடனே நாவலின் மீது ஒரு விலக்கம் வந்துவிட்டது.

அதன் பின்னால் கதை தட்டு தடுமாறி செல்கின்றது. ஒரு இஸ்லாமிய பெண்ணிற்கும் ஒரு சிறுவனுக்கும் இடையிலான பாசத்தை பற்றி பேச ஆரம்பித்து, கதையை ஜிலேபி மாதிரி சுற்றி, நடுநடுவே ஆசிரியர் வந்து அமர்ந்து கொண்டு தத்துவங்கள் பல பேசி, ஒரு வழியாக எங்கோ சென்று முடித்துவிட்டார்.

படித்தவனுக்கும் அப்பாடா முடிந்ததே என்று ஒரு திருப்தி. வளவள என்று ஆசிரியர் பேசுவது பயங்கர எரிச்சல்.

ஒரு அரைகுறை முயற்சி.  

23 ஏப்ரல் 2020

கானகன் - லக்‌ஷ்மி சரவணகுமார்

காடு பற்றிய ஒரு நாவல். 

காட்டைப் பற்றி ஏற்கனவே காடு நாவல் பதிவில் எழுதியிருக்கிறேன். காடு நாவல் நினைவில் வராமல் இதை படிக்க இயலவில்லை. இரண்டும் வேறு வேறு விஷயங்களை பேசுபவை.

கானகன், காட்டை வேட்டையாடுவதன் மூலம் காட்டை அறிய நினைக்கும் ஒருவன், காட்டின் மிருகங்களை நேசிப்பதன் மூலம் காட்டை அறிய நினைக்கும் ஒருவன் இந்த இருவரைப் பற்றிய கதை. 

ஒரு புலி வேட்டையில் ஆரம்பிக்கும் கதை புலி வேட்டையில் முடிகின்றது.

கதை மேற்குதொடர்ச்சி மலையில் இருக்கும் அகமலை என்னும் பகுதியில் நடக்கின்றது. கதை ஆரம்பத்தில் புலி வேட்டையில் ஆரம்பிக்கின்றது, ஊருக்குள் புகுந்து நாசம் செய்யும் புலியை கொல்லும் தங்கப்பன், சிறந்த வேட்டைக்காரன். இருந்தும் கொன்றது தாய்ப்புலியை என்று தெரிந்த பின் வருந்துகின்றான். அதற்கு பின் கதையை எந்த தளத்தில் நகர்த்துவது என்ற குழப்பம் வந்து விட்டது போல தெரிகின்றது. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இருக்கும் உறவை வைத்து நகர்த்துவதா இல்லை காட்டிலேயே வாழும்  பூர்வகுடிகளின் நிலையை அரசியலாக  பேசுவதா என்று இரண்டிலும் கவனம் குவியாமல் போய்விட்டது.

09 மார்ச் 2020

இறவான் - பாரா

யதிக்கு பின்னால் எழுதப்பட்ட நாவல். யதியின் ஹேங்க் ஓவர் என்று சொல்லலாம். ஒரு இசைக்கலைஞனின் கதை என்று பொதுவாக அனைவராலும் கூறப்படுகின்றது. நூற்றாண்டிற்கு முன்னால் இசைக்கப்பட்ட ஹீப்ரூ மொழி இசை ஒருவனால் வாசிக்க முடிகின்றது, சிம்போனியை ஒரு நாற்பது பக்க நோட்டில் எழுத முடிகின்றது, கஞ்சா அடிக்கின்றான், சம்பந்தமில்லாமல் பேசுகின்றான். யதியில் தப்பிய ஏதோ ஒரு சகோதரன் இங்கு வந்து குதித்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும், அந்தளவிற்கு மாயாஜாலம். 

கதை என்ற வஸ்து இருந்தால் அதைப் பற்றி ஏதாவது எழுதலாம், ஒரு க்ராக்கின் வாழ்க்கையை துண்டு துண்டாக வெட்டி போட்டிருக்கின்றார். ஒருவனுக்கு திடீரென்று தான் ஒரு இசை மேதை என்றும், யூதன் என்றும் தோன்றுகின்றது. அதன் பின் அவன் என்ன ஆனான் என்று வளவளவென்று பல பக்கங்களில் அடித்து துவைத்திருக்கின்றார் வாசகனை.

கதையுடன் எங்கும் வாசகனை ஒன்ற விடக்கூடாது என்பதில் பாரா மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளார் என்றே சொல்லவேண்டும். 

28 பிப்ரவரி 2020

யதி - பா. ராகவன்

சில நாட்களுக்கு முன்னால் ஒரு காணொளி பலரால பகிரப்பட்டு வந்தது. இமயமலையில் ஒரு சன்னியாசி, சிறிய கோவணம் மட்டும் அணிந்து கொண்டு உறை பனியில் நடந்து சென்று கொண்டு இருக்கின்றார். பனியில் அமர்ந்து அவரது நித்யகர்மாவை முடித்து விட்டு செல்கின்றார். இன்னொரு காணொளியில் அதே இமயச்சாரலில் குளிர்ந்த நீரில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருக்கின்றார் மற்றொரு சன்னியாசி. 

இதைப் பார்க்கும் மேலை நாட்டவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம்.  நமக்கு நம்ப கடினமான விஷயம் அல்ல, இவர்களைப் போன்று ஆயிரக்கணக்கானவர்கள் வாழும் நாடு இது. இந்திய வாழ்க்கை முறையில் துறவறம் என்பது மிகவும் இயல்பானது. பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்று வாழ்க்கை படிநிலைகளை முன்னோர்கள் வகுத்து வாழ்ந்து வந்தனர். சிலருக்கு துறவறமே முழு வாழ்க்கை முறையாகவும் போகலாம்.

துறவிகளைப் பற்றிய கதைகளை ஆதிகாவியத்திலிருந்து நாம் படித்து வருகின்றோம். சித்தர்கள், யோகிகள், முனிவர்கள், ரிஷிகள். ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபடுபவர்கள், யோக சாதகர்கள், காவிய ஆசிரியர்கள், ஜாபாலி, சார்வாகர் போன்ற நாத்திகர்கள், மருத்துவத்தை அறிந்த சித்தர்கள் என்று பல வகை துறவிகள். துறவறம் என்றாலும் அவர்களாலும் முழுவதும் துறந்து செல்ல முடியாது, அவர்களுக்கும் சில கடமைகள் இருக்கலாம். ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், காஞ்சி பெரியவர், விவேகானந்தர், அரவிந்தர்  போன்ற துறவிகள் அனைத்தையும் துறந்து சென்றுவிடவில்லை. காஞ்சி பெரியவர் ஒரு மடத்தின் தலைவர், அரவிந்தர் அரசியல் தொடர்புடையவர், விவேகானந்தர் அமெரிக்கா வரை சென்று பேசினார். ஏன் துறவிகள் என்ற வார்த்தை என்றால்,  செய்யும் அனைத்தையும் பற்றின்றி ஒரு கடமையாக செய்ததால் அவர்கள் துறவிகள்.


14 ஜனவரி 2020

ஓநாய் குலச்சின்னம் - ஜியாங் ரோங்

சீனாவில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்த நாவல். தமிழில் சி. மோகன் மொழிபெயர்த்துள்ளார்.

தலைப்பை பார்த்தவுடன் எவ்வித பிம்பமும் கிடைக்காத நாவல்கள் பல உண்டு. அதில் இதுவு ஒன்று. ஆங்கிலத்தில் Wolf Totem என்ற பெயரில் வெளிவந்த நாவல். Totem என்பதை குலமரபு என்று கூகுள் மொழி பெயர்க்கின்றது. ஓரளவிற்கு அது சரியாக வருகின்றது. நாவலின் உள்ளேயும் அதையே பயன்படுத்தியிருந்தால் இன்னும் எளிதாக இருந்திருக்கும். குலச்சின்னம் என்றால் ஏதோ ஒருவர் ஒரு பெரிய பதாகையை பிடித்து கொண்டு போவது போல தோன்றுகின்றது. 

முதலில்  சில செய்திகளைப் பார்க்கலாம். 

ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களை கொல்ல முடிவு. ஒட்டகங்கள் அதிகமாக பெருகி, அங்கிர்ந்த நீர் நிலைகளை அனைத்தையும் காலி செய்வதால் அவற்றைக் கொல்ல முடிவு. ஒட்டகம் ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்கு அல்ல. வெளியிலிருந்து வந்தவை, இன்று அவை லட்ச்சக்கணக்கில் பெருகியுள்ளன, ரோகிங்கியாஸ் மாதிரி. 

வயலில் இருக்கும் பாம்புகளை அனைத்தையும் கொன்றதால், எலிகளின் அதிகமாகி பயிர்கள் அழிவு. 

சீனாவில் குருவிகளால் பயிர்களுக்கு சேதம் என்று மாவோ காலத்தில் அனைத்து குருவிகளும் கொல்லப்பட்டன, ஆனால் குருவிகள் பயிர்களை மட்டுமல்ல, அதில் இருக்கும் புழுக்களையும் சேர்த்து தின்கின்றன என்பதை அறிய கொஞ்சம் காலம் ஆனது, குருவிகளை விட குருவிகள் இல்லாததால் பிழைத்த  பூச்சிகள் அழித்த பயிர்கள் அதிகம். பின்னால் குருவிகளை மார்க்சியத்தின் பெயரால் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தது.

இவை அனைத்தும் இயல்பான இயற்கை சமநிலையை மனிதன் மாற்ற முயன்றதன் விளைவு. இயற்கை தன் சமநிலையை எப்போது பேணிக் கொண்டிருக்கும். நமது முன்னோர்கள் அதை தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். அந்த சமநிலையை குலைக்கும் எவையும் பின்னாளில் மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. சீனாவின் மங்கோலியப் பகுதிகளில் நடந்த அப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பற்றி பேசுகின்றது இந்த நாவல்.

04 ஜனவரி 2020

கரும்புனல் - ராம் சுரேஷ்

தமிழில் வெளி மாநிலங்களை அல்லது வெளி நாட்டை மையமாக வைத்து புனையப்பட்ட நாவல்கள் மிகக்குறைவு. துப்பறியும் நாவல்கள், பயணநூல்கள் எல்லாம் கணக்கில் கிடையாது. இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, ஆதவன் போன்றவர்கள் டெல்லி, பெங்களூரை வைத்து பல கதைகள் எழுதியிருந்தாலும், அந்த கதைகளை மதுரைக்கோ அல்லது சுஜாதா பாணியில் சொல்வதானால் கருத்தாங்குடிக்கோ மாற்றினாலும் ஒன்றும் கெட்டுவிடாது. 

புயலிலே ஒரு தோணி மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனிஷியாவை நமக்கு கண்முன் காட்டினாலும், அங்கு இருக்கும் நம் மக்களின் பிரச்சினைதான் பேசப்பட்டது, இந்தோனேஷிய சுதந்திரப் போராட்டம்,மலேஷிய புரட்சிக்காரர்கள் பற்றி இருந்தாலும் அது ஒப்பீடளவில்  குறைவே. 

முழுக்க முழுக்க ஒரு பகுதியின் பிரச்சினையை மையமாக  கொண்டு வந்த முதல் நாவல் கலங்கிய நதி (இங்கு முதலாமிடம், இரண்டாமிடம் அனைத்தும் நான் படித்த அளவில்தான்) அது அஸ்ஸாம் மக்களின் அடிப்படைப் பிரச்சினையை சிறப்பாக பேசியது. இன்று CAA, NRC க்கு போராடும் கூட்டம் படிக்க வேண்டிய நூல்.

அதன்பின் ஒரு பிராந்தியத்தின் பிரிச்சினையை மிகச்சிறப்பாக பேசுகின்றது இந்த நாவல். அன்றைய பீகார், இன்றைய ஜார்க்கண்ட் மாநிலத்தின் பிண்ணனியில் அமைந்த நாவல். ராம் சுரேஷ் எழுதியுள்ளார். பினாத்தல் சுரேஷ் என்று பிரபலமானவர். ஹரன்பிரசன்னா இந்நூலைப் பற்றி பகிர்ந்திருந்தார். ஏற்கனவே அவர் பகிர்ந்திருந்ததை நம்பி ஒளிர்நிழல் என்னும் நாவலை வாங்கி நொந்து போயிருந்தேன். மிகச்சிறிய புத்தகம், இன்றுவரை அதை படிக்க என்னால் முடியவில்லை. இதுவேறு, கரும்புனல் என்ற தலைப்பு. பயந்து கொண்டே ஆரம்பித்தேன், ஆனால் முதல் அந்தியாயத்திலிருந்தே புத்தகம் பிடித்து உள்ளே இழுத்து விட்டது.