சோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 அக்டோபர் 2018

சோவின் சில புத்தகங்கள்

ஒசாமஅசா

இது போன்று தலைப்புகள் எல்லாம் இந்த மனிதருக்குத்தான் தோன்றும். சோவின் அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் தொடரின் நீட்சி என்று இதை  சொல்லலாம். அந்த தொடரில் வந்த பல சம்பவங்கள் இதிலும் இருக்கின்றன. அதில் வந்த சில சம்பவங்களின் நீட்சியும் உண்டு.  உண்மையில் சோவிற்கு அதிர்ஷ்டம் என்பது உண்டு, அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதிர்ஷ்டம் தந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள், ஒசாம அசா இரண்டையும் சேர்த்து ஒரே புத்தகமாக மாற்றலாம். செலவு குறையும்.

திரையுலகை திரும்பிப்பார்க்கின்றேன்

சோவின் திரையுலக அனுபவங்கள். அதிக சுவாரஸ்யம் ஏதுமில்லை. முடிந்தவரை யாரையும் புண்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில்  எழுதியிருக்கின்றார். கட்டுரைகளை விட, இணைப்பாக வந்திருக்கும்  ஒரு நான்கு வயது மாணவன் தேர்வு எழுதப்போகும் கதை படும் பாடு சுவாரஸ்யம். பல நாள் கழித்து பயங்கரமாக சிரித்து, வீட்டு கொலுவிற்கு வந்தவர்கள் பீதியடைய காரணமாக இருந்தது.

காமராஜரை சந்தித்தேன் 

காமராஜரை பற்றிய ஒரு நல்ல சித்திரம் உண்டாக்கும் கட்டுரைத் தொகுப்பு. காமராஜர் இறந்த வேகத்தில் எழுதியதால் வழக்கமான பாணியில் இல்லாமல், வெகுவாக உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்கின்றார். கட்டுரையும் சட்டென்று முடிந்தது போன்ற உணர்வு. காமராஜரைப் பற்றி பலர் எழுதிய கட்டுரைகளும் சேர்ந்துள்ளது. 

இன்றைக்கு மீம்ஸ் மட்டும் படித்துவிட்டு அரசியல் புளிகளாக இருப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. அரசியல் என்பது எப்படி இருந்து இன்றைய கதியை அடைந்திருக்கின்றது என்பதை காட்டும் கட்டுரைகள்.

30 ஜூலை 2016

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - சோ

சோ.

ஒரு எழுத்து என்றாலும் அதன் பின்னால் இருக்கும் ஆளுமை பெரியது. வழக்கறிஞர், நாடக நடிகர், நாடக ஆசிரியர், நாடக இயக்குனர், திரைப்பட நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல்வாதி என்று பல முகங்கள். அவரது சமீபத்திய சில செயல்பாடுகளில் உடன்பாடில்லை என்றாலும், எனக்கு மிகப்பிடித்த ஒருவர். இவரின் பலமும், பலவீனமும் இவரது நகைச்சுவை உணர்வே.

மகாபாரதத்தை நன்கு கற்றவர். அவரது மகாபாரதம் பேசுகின்றது நூலே, எனக்கு மகாபாரதத்தை பற்றிய மற்றொரு பார்வையை அளித்தது. அதுவரை எனக்கு அது ஒரு சுவாரஸ்யமான கதை நூலே. ராமாயணமும், அதே போல் கம்பராமாயண பகுதிகளுடனும், துளசிதாசரின் ராமாயண பகுதிகளையும் சேர்த்து தந்திருந்தார். 

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் அவரது வாழ்க்கையில் அவர் சந்தித்த முக்கியமானவர்களுடனான அவரது அனுபவங்கள். ஆரம்பம் முதல் கடைசி வரை அக்மார்க் சோ குசும்பு. இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதுதான் அவரது உண்மையான குணம் என்றால், அனைத்தும் அதிர்ஷ்டம்தான். கடவுள் அவருக்கான வாய்ப்பை அருமையாக அமைத்து தந்திருக்கின்றார், அதை அவர் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். உண்மையில் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த அனுபவங்கள். அனைத்தும் தற்செயலாக நடந்தவை, ஆனால் அதை ஏற்றுக் கொண்டு அதில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருந்திருக்கின்றது.

07 செப்டம்பர் 2013

ராமாயணம் - சோ, ராஜாஜி

ராமாயணமும், பாரதமும் இதிகாசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதிகாசம் என்றால் நடந்தது என்று பொருள். இந்த இரண்டில் ராமாயணம் நாடு முழுவதும் பரவியுள்ளது. நம் நாட்டில் மட்டுமின்றி அண்டை அயல் நாடுகளில் கூட ராமாயணம் பரவியுள்ளது.


ராமாயணத்தில் எத்தனையோ வகையான ராமாயணங்கள் வழக்கத்தில் உள்ளது. நூற்றுக் கணக்கான ராமாயணங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.  அது பாடப்படும் இடத்திற்கு தகுந்த மாதிரியும், பாடுபவர்களின் மனோ தர்மப்படியும் விதவிதமாக வழங்கப்படுகின்றது. சில காலப் போக்கில் மாறியும் இருக்கலாம். அனைத்திற்கும் மூலம் வால்மீகி ராமாயணம். தமிழ் ஹிந்துவில் படித்தது "சீதை ராமனிடம் தன்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறுகின்றாள், ராமன் அதை மறுத்து பலவிதமாக சமாதானப்படுத்துகின்றான். கடைசியில் சீதை அது எப்படி இதற்கு முன்னால் இருந்த அத்தனை ராமாயணங்களிலும் சீதையை ராமன் அழைத்து செல்கின்றான், நீங்கள் மட்டும் எப்படி விட்டு விட்டு போக முடியும் என்று கேட்க, அவனும் அழைத்து செல்கின்றான்". படிக்க சுவாரஸ்யமாகவும், ராமாயணம் எந்த அளவிற்கு நமது கலாச்சாரத்தில் கலந்துள்ளது என்பதையும் காட்டுகின்றது. 

புத்த, ஜைன மதம் தோன்றி வளர்ந்த போது அவர்களும் ராமாயணத்தை தம் போக்கில் எழுதியுள்ளனர். 


தென்னிந்தியாவில் அதிகம் பேர் அறிந்தது, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், துளசிதாசரின் ராம மானச சரிதம்.

ராமாயணத்தை அனைவரும் படிக்கும் படி எளிதாக ஆக்கி தந்தவர்களில் முதன்மையானவர், ராஜாஜி. கல்கியில் சக்ரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதிவந்த தொடர் ராமாயணம் என்ற பெயரில் வானதி பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெகு எளிமையான நடையில், சுருக்கமாகவும் அதே சமயம் படிப்பவர்களுக்கு தேவையானதை தந்திருக்கின்றார். முக்கியமான விஷயம் இது சிறுவர்களும் படிக்கும் அளவிற்கு எளிமையாக இருக்கின்றது.

27 ஜூலை 2013

எங்கே பிராமணன்? - சோ

சில பல வருடங்கள் முன்பு நான் விகடன் ஆன்லைன் வாசகன்.(இப்போது அந்த குப்பையை ஓசியில் படிப்பதுடன் சரி). அப்போது பிரபலமான ஒரு தொடர் வரலாற்று நாயகர்கள். அதில் அம்பேத்கரை பற்றி எழுதிவந்தார்கள். முதல் பத்தியிலேயே, ஆரியர் வருகை, ஆரியர்கள் வந்து இங்குள்ளவர்களை ஏமாற்றினார்கள் என்று  அளந்து விடப்பட்டிருந்தது. பின்னூட்ட பெட்டியில், அந்த புளுகை எதிர்த்து எழுதியிருந்தேன். 

உடனே அடுத்தடுத்து பல வாசகர்கள் சண்டைக்கு வந்துவிட்டார்கள். விவாதம் என்று முழுவதும் கூற முடியாது. அப்போது அலுவலகத்திலும் எனக்கு வேலை அவ்வளவாக இல்லை. எனவே, இச்சண்டையை முழு நேர தொழிலாக கொண்டேன். அந்த சண்டைக்கு பாயிண்ட் தேடவே இதை வாங்கினேன். -இதிலிருந்து மகாபாரதம், இந்துமகா சமுத்திரம் என்று அவரது மற்ற புத்தகங்களும் அலமாரிக்கு வந்தன. எதற்கு சோ? என்றால், சண்டை போட வக்கீலின் துணை வேண்டுமல்லவா.

அனைவருக்கும் ஒரு முன் முடிவு இருந்தது. அதை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. அடுத்தவர் கூறுவதை கேட்பதை விட, அதில் குற்றம் காண்பது மட்டுமே வேலையாக இருந்தது. விளக்கம் சொன்ன கேள்வியையே மாற்றி மாற்றி கேட்டு, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்தது. ஒரு கட்டத்தில் சலிப்பு வந்துவிட்டது. இதனால் ஒரு பயனுமில்லை என்ற ஞானமும் வந்தது. இதற்கு பதில் நாய் வாலை நிமிர்த்தலாம் என்ற உண்மையும் தெரிந்தது.

20 ஏப்ரல் 2013

மகாபாரதம்

நான் அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் டவண்டை அடிக்கும் விஷயம், நான் ஒரு மகாபாரத பைத்தியம். சிறுவயதில் இதை ஆரம்பித்த பெருமை தூர்தர்ஷனுக்குத்தான்.ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும் போது டிவியில் தொடராக வந்தது. அதோடு தினமலர். தினமலரில் முதல் நாள் அடுத்த நாள் காட்சிகளின் வசனம் வரும். சிறுவயதில் புத்தகம் படிக்கும் வழக்கம் இருந்ததால் அதை சுவாரஸ்யமாக படிக்கவும் முடிந்தது. வசனம் புரிந்து பார்க்கும் போது இன்னும் பிடித்து போனது.

முதலில் பிடித்ததற்கு காரணம் அதில் வரும் சாகசங்கள். போர் முறைகள், சண்டை, வில் அம்பு, கதை என்று சிறுவர்களை கவரும் அனைத்தும் போதுமான அளவிற்கு இருந்தது. இன்னும் என்னால் அதன் கதாபாத்திரங்களை கண் முன் கொண்டுவர முடிகின்றது. நல்ல காஸ்டிங், சகுனி, துரியோதனன், பீமன், கிருஷ்ணன் (நிகில் பரத்வாஜ்?), பீஷ்மர் எல்லாம் கனகச்சிதம். இதை எழுதும் போது கர்மம் புதிய மகாபாரதம் நினைவில் வந்து தொலைக்கின்றது. சை.

ஏழாவது படிக்கும் போது என் தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டிற்கு போகும் போது அங்கு பாரதம் அனாதையாக கிடந்தது. திரும்பி வரும்போது பதுக்கிக் கொண்டு வந்துவிட்டேன். வந்த வேகத்தில் படித்தேன். பல நாட்களுக்கு அது உள்ளேயே ஓடிக் கொண்டிருந்தது. நான்கு புத்தகங்கள். ஆதி பர்வம், சபாபர்வம், வன பர்வன் இரண்டு புத்தகங்கள், யுந்த பர்வங்கள் ஒரு புத்தகம், சாந்தி பர்வம் முதல் ஒரு புத்தகம். யார் எழுதியது ஒரு விவரமும் நினைவில் இல்லை. 

24 நவம்பர் 2012

முகம்மது பின் துக்ளக் - சோ

சோ இவரை எந்த வகையில் சேர்ப்பது. எழுத்தளாரா, பத்திரிக்கையாளரா, நாடக ஆசிரியரா, சினிமா நடிகரா, நாடக நடிகரா, அரசியல்வாதியா, வழக்கறிஞரா, இயக்குனாரா? எல்லா துறைகளிலும் காலைவைத்துள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார். நடுநிலைமை என்றால் சோ என்று கூறப்படும். இப்போது அதிமுகவிற்கு பாஜக விற்கும் அதிகம் சப்போர்ட் செய்வது போல்தான் தோன்றுகின்றது.

தமிழ்நாட்டின் நாடக உலகில் சோ ஒரு முக்கிய மைல் கல். இன்று நாடகம் நடத்து கிரேஸி மோகன், மெளலி போன்றவர்களுக்கு இன்ஸ்பெரெஷன். சில வருடங்களுக்கு முன்பு அவர் மீண்டும் நாடகம் போட்ட போது அரங்கு நிறைந்தது. பெரும்பாலனவர்கள் இளைஞர்கள்.

அரசியல் கலந்த நாடகங்களை எம்.ஆர். ராதாவிற்கு பின் வெற்றிகரமாக நடத்தியவர் சோ. சோவின் நாடகங்களும் பலத்த கலவரங்களுக்கு நடுவில் நடந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டுள்ளேன். படம் வெளிவந்த போது கலட்டா நடந்துள்ளது.