ஆதவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 மே 2014

இரவுக்கு முன் வருவது மாலை - ஆதவன்

சென்ற வருட பெங்களூரு புத்தக கண்காட்சியில் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் புத்தகத்தை வாங்கினேன். அப்போது அங்கிருந்தவர் அவரது மற்ற நாவல்களை பரிந்துரை செய்தார். தயக்கமாக இருந்ததால் வாங்கவில்லை. ஆனால் அப்புத்தகம் நன்றாக இருந்தது. துணிந்து மற்ற புத்தகங்களும் வாங்கினேன்.

இரவுக்கு முன் வருவது மாலை ஆதவனின் குறுநாவல்களின் தொகுப்பு. "இந்த திறமையான இளைஞரின் குறுநாவல்களை ஏன் நீங்கள் புத்தகமாக வெளியிடக் கூடாது" என்று சுஜாதாவால் அனுப்பி வைக்கப்பட்டு முதல் பிரசுரம் வந்துள்ளது. மீண்டும் இப்போது கிழக்கு செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது.
    
எ.பெ.ரா நாவலின் மூலம் கிடைக்கும் ஆதவனின் பிம்பம் இதிலும் தொடர்கின்றது கொஞ்சம். ஆதவனின் எழுத்துக்கள் அனைத்து மனிதனின் உள்ளே புகுந்து பார்க்க விளைகின்றது. சாதரண மனிதனின் உள்ளே ஓடக்கூடிய எண்ணங்களை பிரித்து நம் கண்முன் வைக்கின்றது.

08 ஏப்ரல் 2013

என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

பெங்களூர் புத்தக கண்காட்சிக்கு சென்ற போது கண்ணில் பட்டது. ஏற்கனவே கேள்வி பட்டிருந்ததால் வாங்கினேன். ஸ்டாலில் இருந்தவர், "சார் இவரின் காகித மலர்கள், படிச்சிருக்கீங்களா. நல்லா இருக்கும் சார்" என்றார்." ஏற்கனவே சில புத்தகங்களில் வாங்கிய சூடு இன்னும் ஆறாததால் "முதல்ல இத படிப்போம் சார், நல்லா இருந்தா அப்புறம் வாங்கலாம்" என்று கூறிவிட்டு வந்தேன். வாங்கியிருக்கலாம்.

புத்தகத்தின் அட்டைப்படமே கதையை முழுவதும் காட்டுகின்றது. முகமூடி அணிந்த ஒரு கோமாளி. ராம்சேஷ் என்னும் ஒரு காசனோவாவிற்கு உள்ளே ஒளிந்திருக்கும் ராமசேஷனின் கதை.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ள ஒரு முகமூடி இருக்கும். மனைவியிடம் ஏன் உற்ற நண்பர்களிடம் கூட மாட்டிக் கொள்ள ஒரு முகமூடி இருக்கும். தனிமையில் இருக்கும் போது நம்மையே இது தான் நாம் என்று நம்ப வைக்க ஒரு முகமூடி இருக்கும். அதை ஒரு கை திறக்க விரும்பினாலும், மறு கை அதை விடாமல் இழுத்து மாட்டிக் கொண்டே இருக்கும்.அந்த முகமூடிகளை கிழித்து தோரணம் கட்டியுள்ள புத்தகம். ஒவ்வொருவருக்கும் அடுத்தவரிடம் நிரூபிக்க ஏதோ ஒன்று இருக்கின்றது. அந்த அபத்தத்தை வெட்ட வெளிச்சமாக காட்டுகின்றது இப்புத்தகம்.

ராமசேஷன். ஒரு கர்நாடக பெயர். கேட்டாலே ஒரு படு ஆச்சரமான மாமாதான் நினைவில் வருகின்றார். ஏதோ அது போல ஒருவர்தான் கதை நாயகன் என்று நினைத்தேன். ராமசேஷன் ஒரு நடுத்தர வர்க்கத்து பிராமண பையன். அவன் கல்லூரிக்கு செல்வதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது. ராம்சேஷன் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள், ஒவ்வொருவரிடமும் அவன் ஆடும் விளையாட்டு.