28 பிப்ரவரி 2020

யதி - பா. ராகவன்

சில நாட்களுக்கு முன்னால் ஒரு காணொளி பலரால பகிரப்பட்டு வந்தது. இமயமலையில் ஒரு சன்னியாசி, சிறிய கோவணம் மட்டும் அணிந்து கொண்டு உறை பனியில் நடந்து சென்று கொண்டு இருக்கின்றார். பனியில் அமர்ந்து அவரது நித்யகர்மாவை முடித்து விட்டு செல்கின்றார். இன்னொரு காணொளியில் அதே இமயச்சாரலில் குளிர்ந்த நீரில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருக்கின்றார் மற்றொரு சன்னியாசி. 

இதைப் பார்க்கும் மேலை நாட்டவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம்.  நமக்கு நம்ப கடினமான விஷயம் அல்ல, இவர்களைப் போன்று ஆயிரக்கணக்கானவர்கள் வாழும் நாடு இது. இந்திய வாழ்க்கை முறையில் துறவறம் என்பது மிகவும் இயல்பானது. பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்று வாழ்க்கை படிநிலைகளை முன்னோர்கள் வகுத்து வாழ்ந்து வந்தனர். சிலருக்கு துறவறமே முழு வாழ்க்கை முறையாகவும் போகலாம்.

துறவிகளைப் பற்றிய கதைகளை ஆதிகாவியத்திலிருந்து நாம் படித்து வருகின்றோம். சித்தர்கள், யோகிகள், முனிவர்கள், ரிஷிகள். ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபடுபவர்கள், யோக சாதகர்கள், காவிய ஆசிரியர்கள், ஜாபாலி, சார்வாகர் போன்ற நாத்திகர்கள், மருத்துவத்தை அறிந்த சித்தர்கள் என்று பல வகை துறவிகள். துறவறம் என்றாலும் அவர்களாலும் முழுவதும் துறந்து செல்ல முடியாது, அவர்களுக்கும் சில கடமைகள் இருக்கலாம். ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், காஞ்சி பெரியவர், விவேகானந்தர், அரவிந்தர்  போன்ற துறவிகள் அனைத்தையும் துறந்து சென்றுவிடவில்லை. காஞ்சி பெரியவர் ஒரு மடத்தின் தலைவர், அரவிந்தர் அரசியல் தொடர்புடையவர், விவேகானந்தர் அமெரிக்கா வரை சென்று பேசினார். ஏன் துறவிகள் என்ற வார்த்தை என்றால்,  செய்யும் அனைத்தையும் பற்றின்றி ஒரு கடமையாக செய்ததால் அவர்கள் துறவிகள்.