சரித்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரித்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 மார்ச் 2022

சங்கதாரா - "காலச்சக்கரம்" நரசிம்மா

நண்பர் ஸ்ரீராம் காலச்சக்கரம் நரசிம்மா என்னும் எழுத்தாளரைப் பற்றி முன்னர் குறிப்பிடிருந்தார். இந்திரா செளந்திரராஜன் பாணி எழுத்தாளர் என்று நினைத்தேன். உறவினர் வீட்டில் அவர் எழுதிய புத்தகம் ஒன்று கிடைத்தது. வானதி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. நரசிம்மா, பிரபல சினிமா இயக்குனர் சித்ராலயா கோபுவின் புதல்வர், இவரின் தாயரும் அறியப்பட்ட நாவலாசிரியர். கமலா சடகோபன். 

முன்னுரையிலேயே சாண்டில்யன் வாசகர்கள் தலையில் நறுக்கென்று கொட்டி விடுகின்றார். பின்னர் வரும் பக்கங்களில் கல்கி வாசகர்களை கொட்டு கொட்டு என்று தலை வீங்கும் அளவிற்கு கொட்டி விடுகின்றார். சரித்திர கதைகளுக்கு தமிழில் முன்னுதாரணம் என்றால் கல்கியும், சாண்டில்யனும். இவர்கள் பாணியிலேயே பெரும்பாலான கதைகள் எழுதப்பட்டன. விதிவிலக்குகள் சில டணாய்க்கன் கோட்டை, வீரபாண்டியன் மனைவி, ரத்தம் ஒரே நிறம், வானம் வசப்படும், மானுடம் வெல்லும், காவல்கோட்டம் போன்றவை. இந்த நாவல்கள் அண்மை கால சரித்திர குறிப்புகளை வைத்து பின்னப்பட்டவை. 

ஆனால் சாண்டில்யன், கல்கி எழுதியது சோழ, பாண்டிய சரித்திரம். அந்த காலத்தில் கிடைத்த ஆதாரங்களையும், அக்காலத்து ஆய்வு முடிவுகளையும் வைத்து எழுதினார்கள். இன்று ஐம்பது வருடங்களில் பல புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம். இருந்தாலும் அக்கால சரித்திரத்தை எழுதுவது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் என்ன செய்யலாம்

ஸ்பாய்லர் அலர்ட். பல திடுக்கிடும் திருப்பங்கள், அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், யூகிக்கவே முடியாத பல முடிச்சுகளை பற்றி எழுதப்பட்டுள்ளது. அடுத்து வரும் பகுதி நடை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அடிக்கடி  இது மாதிரி எழுதுவார், அந்த பாதிப்பில் எழுதியது.   நாவலும் அதுமாதிரிதானே பொன்னியின் செல்வனின் பாதிப்பில் எழுதியது. அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள். 

28 ஜனவரி 2022

குற்றப்பரம்பரை - வேல.ராமமூர்த்தி

குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ப்ரிட்டீஷ் ஆட்சி காலத்தில் ஒரு சில ஜாதி மக்களை குற்றப்பரம்பரையினர் என்று வகைப்படுத்தி அவர்களுக்கு என ஒரு தனிச்சட்டத்தை கொண்டு வந்தனர். அந்த ஜாதி ஆண்கள் அனைவரின் கை ரேகைகளையும் பதிவு செய்து கொண்டு அவர்களை காவல் நிலையத்தில் இரவு முழுவதும் தங்க வைத்தனர். 

இதில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளர், சேர்வை, அம்பலகாரார் போன்ற ஜாதியினர்கள் என்று கூறப்படுகின்றது. வடஇந்தியாவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் களவுக்கு போனவர்கள், போகாதவர்கள் என்று அனைவரும் பாதிக்கப்பட்டனர். காவல் கோட்டம் நாவலில் ஒரு பகுதியும் இதை அடிப்படையாகக் கொண்டது. 

வேல.ராமமூர்த்தி, இன்று திரைப்படங்கள் மூலம் இன்று பலருக்கு நன்கு தெரிந்தவர். பட்டத்து யானை என்ற படத்தில் அறிமுகமானார் என்று நினைக்கின்றேன். பெரும்பாலும் ஒரே மாதிரி நடிப்பதால் எந்தப் படம் என்ற குழப்பம் வேறு. பட்டத்து யானை திரைப்பட கதை இவருடையதா என்று தெரியவில்ல அதே பெயரில் இவர் ஒரு நாவலும் எழுதியுள்ளார். தனது தாய், தந்தை இருவரின் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து வேல என்று வைத்துக் கொண்டுள்ளார். தன் சமூகத்தின் கதையை எழுதுவதை விட, இன்று அவர்கள் மீது தேவையில்லாது சுமத்தப்பட்ட ஒரு களங்கத்தை களைய வேண்டும் என்பதே அவரது எண்ணம் என்று தோன்றும்படியான முன்னுரை. 

07 ஜனவரி 2022

சிக்க வீர ராஜேந்திரன் - மாஸ்தி ஐயங்கார்

கன்னடத்திலிரிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட நாவல். பொதுவாக எனக்கு மொழி மாற்ற நூல்களைப் பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் கிடையாது. சில பல மோசமான மொழி பெயர்ப்பு நூல்கள் செய்த வினை. ஆனால் இந்த நாவல் எங்கும் இது ஒரு மொழி பெயர்ப்பு என்பதை நினைவு படுத்தவில்லை. 

கர்நாடகாவின் குடகு மலை காவிரி நதியின் பிறப்பிடம். மலைகள் சூழ்ந்த பகுதி. இன்று பெரும்பாலும் காபி தோட்டங்களால் நிறைந்த பகுதி. நல்ல மழை உண்டு. குடகின் கலாச்சாரமும், பண்டிகைகளும் தனித்தன்மையானவை. கன்னடர்களிடமிருந்து அவர்களின் கலாச்சாரம் கொஞ்சம் வேறு பட்டிருக்கும். அவர்களுக்கு என்று பல பண்டிகைகள் உண்டு. அதில் பெரும்பாலனவை விவசாயம் சார்ந்தவை. விதை விதைக்க ஒரு பண்டிகை, அறுவடைக்கு ஒரு பண்டிகை. குடி என்பது அவர்களின் வாழ்வில் ஒரு அங்கம். வீட்டில் செய்து விற்கப்படும் மதுவகைகளை அங்கு காணலாம். ஹோம் மேட் ஒயின். விதவிதமான ஒயின்களை அங்கு கண்டேன். பலவித பழங்களில் செய்யப்பட்டவை, பூக்களில் செய்யப்படுபவை, வெற்றிலையில் தயாரிக்கப்பட்டதை கூட பார்த்தேன். வேட்டையும், போரும் அவர்களது கலாச்சாரம். நாட்டு துப்பாக்கிகளும் புழக்கத்தில் உண்டு என்றும் கேள்வி. அவர்களுக்கு என்று தனிச் சின்னமும் உண்டு. அதில் இருப்பது விவசாயக்கருவிகள், சூரியன், கதிர். பொதுவாக வேட்டையயையும் விவசாயத்தையும், அடிப்படையாக கொண்ட சமூகம். 

04 ஜூன் 2021

சார்த்தா - எஸ்.எல்.பைரப்பா

பருவா, ஆவரணா நூல்களின் ஆசிரியர் பைரப்பாவின் மற்றொரு நாவல் சார்த்தா. பைரப்பாவின் ஒவ்வொரு நாவலுக்கு பின்னாலும் அவரின் மிகப்பெரிய உழைப்பு உள்ளது. பருவா நாவலுக்காக மகாபாரத நிகழ்ச்சிகள் நடந்த இடங்களுக்கு எல்லாம் நேரில் சென்று பார்த்திருக்கின்றார், ஆவரணாவிற்காக அவர் படித்த நூல்களின் வரிசை மிகப் பெரியது. ஒவ்வொரு நூலையும் ஆராயந்து எழுதும் பைரப்பா, இந்த முறை பருவா - ஆவரணா காலகட்டத்திற்கு இடைப்பட்ட ஒரு காலத்தை நாவலுக்கான காலமாக எடுத்துக் கொண்டுள்ளார். 

வடபகுதிகளில் யார் யார் ஆண்டார்கள், அவர்களின் வம்ச வரிசை எல்லாம் நமக்கு சரித்திரப் பாடத்தில் பரிட்சைக்கு மட்டும் படிப்பதால் மறந்து போகின்றது. அசோகர், சந்திரகுப்தர், சாளுக்கியர்கள், பாடலிபுத்திரம், ஹர்ஷர், பிம்பிசாரர், கன்யாகுப்தம் என்று சில பெயர்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. அந்த காலகட்டத்தை பற்றிய புத்தகம். இப்புத்தகம் அசோகரின் காலத்திற்கு பின்னால், புத்தமத எழுச்சி காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஆதி சங்கராச்சாரியர் காலத்தில் நடக்கின்றது. 

05 மே 2021

ராமோஜியம் - இரா.முருகன்



முதலிரவில் மனைவி மூக்குபொடி டப்பாவைத் தேடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு வித்தியாசமான கற்பனையில் விளைந்த நாவல். 

நாற்பதுகளில் சென்னையில் வாழும் ஒரு தம்பதியரின் தினசரி அனுபவங்களின் ஒரு சிறியத் தொகுப்பு. கருப்பு வெள்ளை பிண்ணனியில் சென்னை, டில்லி, கும்பகோணம் போன்ற இடங்களில் சுற்றித் திரிய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும், அந்த வாய்ப்பைத் தவற விடாமல் இருக்க இந்த நாவலைப் படிக்கலாம்.

தேவனின் துப்பறியும் சாம்பு, சிஐடி சந்துரு போன்ற தேவனின்  புத்தகங்களைப் படிக்கும் போது சென்னையைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கும். நாற்பதுகளின் சென்னை, கொரட்டூர் கிராமம், வெளாச்சேரி கிராமம், ஊரை விட்டு எங்கோ இருக்கும் குரோம்பேட்டை, பங்களாக்கள் நிறைந்த நுங்கம்பாக்கம், வளர்ந்து வரும் மேற்கு மாம்பலம், ட்ராம் வண்டிகள் என்று,  ஒரு கருப்பு வெள்ளையில் ஒரு நகரம் நம் கற்பனையில் உருவாகிவரும். அந்தக் கற்பனையை இன்னும் விரிவாக்கும் இந்தப் புத்தகம்.

19 பிப்ரவரி 2021

அஞ்ஞாடி - பூமணி

காவல் கோட்டம், ஆழி சூல் உலகு வரிசையில் மற்றுமொரு பெரிய நாவல்.2014ம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருதினைப் பெற்ற நாவல்.  நூற்றாண்டு கால கதையை சொல்லும் நாவல். சுமார் 1200 பக்கங்கள். படித்து முடிக்க இரண்டு வாரத்திற்கு மேலாகிவிட்டது 

அஞ்ஞை என்றால் அம்மா என்று பொருளாம். அஞ்ஞாடி என்றால் அம்மாடி என்று பொருள் கொள்ளலாம். படித்து முடித்ததும், அம்மாடி எவ்வளவு பெரிய நாவல் என்றுதான் கூற முடிகின்றது. 

கலிங்கல் கிராமத்தில் வாழும் இரண்டு குடும்பங்களின் கதையோடு, ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை தந்துள்ளார். மிகப்பெரிய நாவல். அத்தனை குடும்பங்கள். கலிங்கல் என்னும் ஊரில் வாழும் இரண்டு சிறுவர்கள் ஆண்டி - மாரி. ஆண்டி நிலபுலங்களுடன் வாழும் ஒரு சம்சாரி குடும்பத்து சிறுவன், மாரி கலிங்கல் கிராமத்து மக்களின் அழுக்குகளை வெளுக்கும் குடும்பத்து சிறுவன். இருவரின் நட்பு, மெதுவாக வளர்ந்து, பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றது. அவர்களின் குடும்ப கதையோடு, அந்த பிரதேச வரலாறும் சேர்ந்து சொல்லப்படுகின்றது.

21 மே 2020

ஆவரணா - The Veil - திரை - SL பைரப்பா

அப்யாரோஹ மந்திரம் – ப்ரஹதாரண்யக உபனிஷதம் 1.3.28

ஓம் அஸதோமா ஸத்மய தமஸோ மா ஜ்யோதிர் மய ம்ருத்யோர்மா அம்ருதம் மய |
உண்மையற்ற நிலையிலிருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக ! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக! மரணத்திலிருந்து என்னை மரணமில்லா பெரு நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!
இன்று ஒரு முக்கிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.  ராமர் கோவில் கட்ட நிலத்தை சீர்படுத்தும் பணியின் போது பழங்கால சிற்பங்கள், தூண்கள், கடவுள் சிலைகள் என ராமர் கோவிலிற்கான சான்றுகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன. ஆனால் அவை அனைத்தையும் தொல்லியல் துறை முன்னமே கண்டு பிடித்து இருக்கலாமே என்ற கேள்வி எழுகின்றது. அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.  கே.கே.முகமது, அயோத்தியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கு கோவிலின் கட்டுமானம் இருப்பதை உறுதி செய்த ,பின்னரும், இடதுசாரிகள் உள்ளே புகுந்து அதை குழப்பி ஒரு பெரிய பிரச்சினையாக ஆக்கினார்கள். அது கோவிலே அல்ல, பெளத்த மடம் என்று வரலாற்றையே திரிக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் திரிப்பு இந்திய வரலாறு முழுவது பரவி கிடக்கின்றது.
திப்பு சுல்தானை விடுதலை போராட்ட வீரனாக்கி, அவன் மலபார் பகுதிகளில் செய்த அட்டூழியங்களை மறைத்தது, அவனின் மத வெறி மீது நாட்டு பற்று என்ற போர்வையை போட்டு மூடியது, காசியின் மசூதி இடிப்பிற்கு ஒரு கதை கட்டிவிட்டது என்று அவர்களின் செயல் நீளுகின்றது. காரணம், ஹிந்து மூஸ்லீம்களிடம் அமைதியை உண்டாக்குகின்றார்களாம். உண்மையின் மேல் அமையாத எதுவும் ஒரு நாள் அழிந்து படும் என்பதை அறியாத மூடர்கள். அதை கண்கூடாக அவர்களின் காசி, ராமேச்வரமான ரஷ்யாவிலேயே காணலாம். 

22 நவம்பர் 2017

மகாத்மா காந்தியின் கொலை வழக்கு - சொக்கன்

காந்தியை கொன்றவன் யார்? கோட்சே. பள்ளி சரித்திரம் கற்று தருவது அவ்வளவுதான். காந்தியின் கொள்கைகள் பிடிக்காமல் கோட்சே என்பவன் சுட்டு கொன்றான் என்ற அளவிற்கு மேல் நமக்கு சொல்லி தருவதில்லை. சமூக வலைதளங்களில் வரும் பிதற்றல்களுக்கு அளவில்லை. காந்தி கொலையைப் பற்றி ஒரு முழுமையான சித்திரத்தை அறிந்து கொள்ள உதவும் ஒரு நல்ல புத்தகம் இது.

காந்தி கொலை செய்யப்பட்டார், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்று இரண்டு வரிகளில் முடிகின்ற விஷயமல்ல. காந்தியை கொல்ல நினைக்கும் அளவிற்கு ஒருவன் செல்லக் காரணம் என்ன? தேசம் முழுவதும் மதித்த ஒருவரை ஒருவன் கொல்ல நினைக்கும் போது அவனின் தரப்பு என்ன, எந்த ஒரு வலுவான காரணம் அவனை அங்கு தள்ளுகின்றது. பள்ளியில் குண்டுவைக்கும் ஒருவனுக்கே, அவனுக்கும் காரணம் இருக்கும் என்று அனுதாபத்தோடு பார்க்க வேண்டும் என்று பல முற்போக்காளர்கள் கூறுகின்றார்கள்.

கோட்சேவிற்கான காரணம் என்ன?
என்ன?
கோட்சேவிற்கு காரணம் கேட்க கூடாதா?
ஏன்?
அவன் சிறுபான்மை சமூகத்தவன் இல்லையா?
ம்ம்ம், சரி நான் முற்போக்கு வாதியில்லையே அதனால் பரவாயில்லை, காரணம் என்னவென்று பார்ப்போம் என்று படித்தேன்.

12 ஜூலை 2017

ரத்தத்தில் முளைத்த என் தேசம்

அமர்நாத் யாத்திரை சென்ற ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சிலர் உயிரை இழந்துள்ளனர். ஹிந்துக்களின் ரத்தம் அவர்கள் ஹிந்துக்களாக இருப்பதன் காரணத்தால் மட்டுமே சிந்தப்படுவது இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாகவே நடந்து வரும் துயரம். அதுவும் ஹிந்துக்களின் பூர்வீக பூமியான நமது பாரதத்தில். முதல் காரணம், ஹிந்து மதம்தான். வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஹிந்துக்களுக்கே உரித்தான பெருந்தன்மை, தர்மத்தின்பாலிருக்கும் பற்று, நேர்மை அதுவே இன்று இந்த நிலைமையை உண்டாக்கிவிட்டது. ஆனால் தர்மம் என்றும் தன்னை நம்பியவர்களை கைவிடாது என்பதே நமக்கு போதிக்கப்பட்டது. அதை சரித்திரம் பல முறை நிரூபித்து வருகின்றது. இல்லை என்றால் இன்று ஹிந்து மதம் என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்கும். ஹிந்து மதம் என்பதே கிடையாது என்று உளரும் முட்டாள்கள் யாராவது துரதிருஷ்டவசமாக இதை படிக்க நேர்ந்தால், மூடி வைத்துவிட்டு கிளம்பலாம்.

நாட்டில் மதக்கலவரம் வரும் போது நமது டம்ப்ளர்களும், புர்ச்சியாளர்களும், பஹூத்தறிவாளர்களும் கூறுவது, பெரியார் மண். இங்கு இஸ்லாமியனும் நானும் சகோதரன். ஒரு மண்ணும் கிடையாது. முக்கியக்காரணத்தை தமிழர்களுக்கு பிடித்த சினிமா வசனத்தாலேயே காட்டலாம், ஹே ராமில் வரும் ஒரு வசனம், "நீ ஒரு செளத் இண்டியன், என் வேதனை உனக்கு புரியாது ராம்". அதுதான். வட இந்தியா அந்நிய படையெடுப்பின் வலியை முழுவதும் தாங்கியுள்ளது. அதன் வலி அவர்களுக்கு தலைமுறை கடந்தும் இருக்கின்றது. 

அந்த வலியை ஆரம்பம் முதல் கூறுகின்றது. எப்படி கொஞ்சம் கொஞ்சமாக நமது பாரதம் விழுந்தது. எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டன. கோரி, கஜினி, கில்ஜி, துக்ளக், பக்தியார், குத்புதீன் என்று ஒவ்வொரு அரசனும் செய்த அக்கிரமங்கள். இடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோவில்கள். காசி, மதுரா, ஹம்பி. சோம்நாத் கோவிலின் ரத்த பக்கங்கள இங்கு எத்தனை பேருக்கு தெரியும். சோம்நாத் ஐம்பதினாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களை கொன்று இடிக்கப்பட்ட கோவில். பெயர் அறியாத எத்தனை கோவில்கள், ஹிந்துக்கள். 

26 செப்டம்பர் 2016

டணாயக்கன் கோட்டை - பாலகிருஷ்ண நாயுடு

பல சரித்திரக்கதைகளை படிக்கும் போது எப்போதும் தோன்றும் ஒரு எண்ணம்  " இத்தனை கோட்டைகள், சுரங்கங்கள் எல்லாம் எங்கே போயின". பள்ளியில் படிக்கும் போது படித்த இத்தகைய பல கதைகளின் விளைவால், எங்கள் கோவில் சுவர்களை எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன்.  கடைசியில் சுவரிடுக்கிலிருந்த பல்லியை கண்டதே மிச்சம். கோவிலுக்கு அருகிலிருந்த ஓரிடத்தில் ஒரு இயற்கை பள்ளம் திடீரென தோன்றியது. ஒரு ஆய்வு குடுவை போல, ஏதோ ரகசிய குகை என்ற ஆர்வத்தில் உள்ளிறங்கி வெளியே வர மற்றவர்கள் உதவ வேண்டியிருந்தது.  அவ்வளவு ஆர்வம் (அ) ஆர்வக்கோளாறு.

சரித்திரத்தில் இடம் பெற்ற பகுதிகளை பார்க்க ஆர்வம் வந்ததற்கு காரணமே இப்புத்தகங்கள்தான்.  பெங்களூர் அருகிலிருக்கும் நந்தி மலையும் சரித்திர புகழ் பெற்ற இடம் என்று அங்கு சென்ற பின்னர் தெரிந்தது. அங்கிருக்கும் குட்டி குட்டி மதில் சுவர்களை கண்டு ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. ஆனால் ஸ்ரீரங்கப்பட்டினம் சென்று வந்த பின்னரே தெரிந்தது அது ஒரு சரித்திரப் புகழ் பெற்ற ஒரு இடம் என்று. நான் அதை ஒரு கோவில் என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்தேன். முன்னமே தெரிந்திருந்தால் இன்னும் சற்று நேரம் செலவழித்து முழுவதும் பார்த்திருக்கலாம். அந்த ஸ்ரீரங்கப்பட்டினத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை டணாயக்கன்  கோட்டை.

டணாயக்கன்  கோட்டை பாலகிருஷ்ண நாயுடுவால் எழுதப்பட்டது. 1956ல் நவ இந்தியா பத்திரிக்கையில் தொடர்கதையாக வெளிவந்த நாவல். 1959ல் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு கரம்வீர் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

டணாயக்கன்  கோட்டை இன்று பவானி சாகர் அணைக்கட்டின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்த ஒரு அரண்மனை. இன்றும் அக்கோட்டையிலிருக்கும் கோவில், அணையின் நீர்மட்டம் குறையும் போது வெளிப்படுகின்றது. 

ஸ்ரீரங்கப்பட்டினக் கதைக்கு எதற்கு டணாயக்கன்  கோட்டை என்ற பெயர் என்ற கேள்வி சரிதான். கோட்டை வரிசைக் கதையில் வருவதாக இருந்திருக்கும். மற்றபடி டணாயக்கன்  கோட்டை வருவதே கொஞ்ச நேரம் மட்டுமே. கதை பெரும்பாலும் நடப்பது இன்றைய கர்நாடகாவில். திப்பு சுல்தான் காலத்தில் அவனது ராஜ்ஜியம் திண்டுக்கல் வரை பரவியிருந்ததாக கூறப்படுகின்றது. எங்கள் கோவிலில் ஒரு அழகான பெருமாள் சிலை உண்டு. அது நடுவில் திருடப்பட்டு, எங்கோ தோப்பில் கிடந்து கிடைத்தது. அவ்வளவு அழகான விக்கிரகம். அது திப்பு சுல்தான் காலத்தது என்பார்கள், அவனே தந்தது என்று சிலர் சொல்ல கேள்வி. திண்டுக்கல்லையும் தாண்டி பரவியிருந்திருக்கின்றது அவனது ராஜ்ஜியம்.

17 ஆகஸ்ட் 2016

வீரபாண்டியன் மனைவி - அரு. ராமநாதன்

சரித்திர நாவல்கள் என்றால் நினைவிற்கு வருவது கல்கி, சாண்டில்யன் மட்டுமே. இவர்களைத் தவிர இன்னும் பலர் எழுதியிருந்தாலும் இவர்கள் இருவர் அளவிற்கு புகழடைந்தவர்கள் எவருமில்லை. கல்கியின் கதைகளில் சரித்திரம் என்பது வெகு சொற்பமே. சரித்திர சம்பவங்களை ஒரு அடிப்படையாக வைத்துக் கொண்டு, முழுக்க முழுக்க தன் கற்பனையால் வாசகர்களை கவர்ந்தார். ஒரு ஃபேண்டசி வகையில்தான் சேர்க்க வேண்டும். கல்கி வெகு குறைவாகவே எழுதினாலும், ஒவ்வொன்றையும் வித்தியாசமாக எழுதியதால் எங்கும் அலுப்பு தட்டாத நாவல்கள். சாண்டில்யன், கல்கியை ஒட்டியே எழுதினாலும், இவர் வித்தியாசப்படுவது வர்ணனைகளால். சிருங்கார வர்ணனைகள், அமானுஷ்யமான கதாநாயகர்கள். இரும்புச் சலாகையால் உரசும் குரல் வில்லன்கள்.ஒரே டெப்ளேட். இருந்தும் ஒரு சில கதைகள் சுவாரஸ்யமானவை. தொடர்கதைகளுக்கேற்றவை. ஒரு நல்ல எடிட்டரை கொண்டு வெட்டி எறிந்தால், க்ரிஸ்ப்பான

பல நாவல்களும், பல சிறுகதைகளும் கிடைக்கும்.

இவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் எழுதிய சரித்திர கதைகள் பெரும்பாலும் அலுப்பூட்டுபவையாகவே இருக்கின்றது. பாண்டிமாதேவி, மணி பல்லவம் என்று இரண்டு நாவல்கள். தண்டத்திற்கு காசு கொடுத்து வாங்கியதற்கு இன்று வரை வருந்துகின்றேன். அவை என் கண்ணில் படக்கூடாது என்று ஊரிலேயே வைத்துவிட்டு வந்திருக்கின்றேன். சுஜாதா எழுதிய காந்தளூர் வசந்தகுமாரன் கூட ஒரு சுமாரான நாவலே. அகிலன், ஜெகச்சிற்பியன், உதயணன், என்று  பலர் பல சரித்திர தொடர்கதைகளை எழுதியுள்ளார்கள். ஆனால் அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை என்று எதையும் சொல்ல முடியவில்லை. அனைத்து கொஞ்சம் ஃபேண்டசி கதைகள். படிக்கவும் சுவாரஸ்யமற்ற மொக்கைகளே. ஆனால் வீரபாண்டிய மனைவியை அந்த வகையில் சேர்க்க முடியாது.

சரித்திரக் கதைகள் என்ற அளவில்லல்ல. சரித்திரத்தை அடிப்படையாக் கொண்ட, சுவாரஸ்யமான கற்பனை நாவல் (அ) தொடர்கதை ஆசிரியர் என்ற வகையில். கல்கி, சாண்டில்யனுக்கு அடுத்த வகையில் அரு. ராமநாதனை வைக்கலாம். அரு. ராமநாதன் பிரேமா பிரசுரத்தில் பணி புரிந்தார் என்று தகவல். உரிமையாளரா என்பதெல்லாம் தெரியவில்லை. பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். வீரபாண்டியன் மனைவி அரு. ராமநாதனின் காதல் என்னும் பத்திரிக்கையில்  வெளிவந்த ஒரு தொடர்கதை. தொடர்கதைகளுக்குரிய பலவீனங்களை கொண்ட ஒரு நாவல். தியாக வினோதர் என்று பட்டம் பெற்ற குலோத்துங்கச்சோழன், பாண்டிய மன்னனான வீரபாண்டியனை வென்று அவன் சகோதரான் விக்கிரமபாண்டியனை அரியணை ஏற்றினான் என்ற சரித்திர சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு நாவல்.

10 செப்டம்பர் 2015

உப்புவேலி - ராய் மாக்ஸிம்

வரலாற்று பாடம் என்பது எனக்கு எப்போதும் தலைவலியை தரும் ஒன்று. குறிப்பாக வருடங்கள். ஆறாம் வகுப்பிலோ, எட்டாம் வகுப்பிலோ, ஒரு பெரிய பகுதி. இந்திய வரலாற்றை முழுவதும் கரைத்து புகட்டும் ஆர்வத்தில் எவரோ தயாரித்தது. ஏகப்பட்ட வருடங்கள், காந்தி இர்வின் ஒப்பந்தம், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம். தேர்வில் அப்படியே எழுதுவது என்பது, புத்தகத்தை வைத்துக் கொண்டு கூட சாத்தியமில்லாதது. என்னைப் பலரின் தூக்கத்தை கெடுத்த , பத்தாம் வகுப்பு வரை  படித்த வரலாற்றில் ஒரு வரி கூட இல்லாத ஒன்றை பற்றி பேசுகின்றது இந்த புத்தகம்.

ராய் மாக்ஸம் என்னும் ஆங்கிலேயேர் எழுதிய THE GREAT HEDGE OF INDIA என்னும் நூலின் தமிழாக்கம். தமிழில் சிறில் அலெக்ஸ் மொழி பெயர்த்துள்ளார். இப்புத்தகம் வெளிவந்த பொழுதே ஜெயமோகன் இதைப் பற்றி சிறந்த அறிமுகத்தை தந்திருந்தார். ஆங்கிலத்தை விட தமிழில் படிப்பது எனக்கு சுலபமாக இருந்தது.

இணையத்தில் கண்டதையும் படிக்க ஆரம்பித்த புதிதில் தன் விஷயங்கள் புரியாமல் இருந்தன. முக்கியமானது பலருக்கு இருக்கும் இந்திய வெறுப்பு. அவர்களை பொறுத்த வரை இந்தியா எப்போதும் சிறப்பாக இருந்ததே இல்லை. ஆங்கிலேயர்கள் வந்த பின்னால் தான் இந்தியா பல துறைகளில் முன்னேறியது. எப்படி சிலரால் அந்தளவிற்கு முட்டாள்த்தனமாக யோசிக்க முடியும் என்பது ஆச்சர்யமாகவும், பின்னர் வேடிக்கையாகவும் இருந்தது.

17 நவம்பர் 2013

ஒரு நதியின் மரணம் - மிஷல் தனினோ

முகம்மது பின் துக்ளக்கில் வரும் ஒரு காட்சி
"உங்களுக்கு தமிழ் தெரியும்ன்னு சரித்திரத்துல இல்லையே"
"உங்கள் சரித்திரம் எல்லாம் பேத்தல்"
"எங்க பசங்க படிக்கின்றதெல்லாம் பேத்தலா"
"அது உங்கள் பிள்ளைகளை பார்த்தாலே தெரியுமே"

சரித்திரம் என்பது அன்றைய தேதிக்கு கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு புனையப்படுவது. ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள பல வழிமுறைகள் உண்டு என்பார்கள். நேரில் பார்ப்பது, அனுமானிப்பது என்று பல வழிகள். சரித்திரத்தில் பாதி அனுமானம்தான். கல்வெட்டுகள் மட்டுமே ஒரளவு நம்பகமானது என எண்ணலாம், ஆனால் அக்கல்வெட்டுகள் இன்றைய ஆட்சியாளர்கள் தம் சாதனைகளை அடித்து விடுவது போல இருந்திருந்தால்? புலவர்களின் பாடல்கள் என்பது, இன்றைய சினிமாக்காரர்கள் முதல்வர்களை பற்றி பேசுவதை போல இருந்திருந்தால்? சரித்திரம் என்பது இது போன்று ஒன்றிரண்டு விஷயங்களை கொண்டு அறியப்படுவதில்லையே? அதே போல் முழுமையான ஆதாரங்கள் இல்லை என்பதால் மட்டும் ஒரு விஷயம் நடக்கவில்லை என்றும் கூறமுடியாது.

நமது சரித்திரம் என்பது முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களால் பல உள் நோக்கங்களை கொண்டு எழுதப்பட்டது. அது இங்குள்ள பலரின் பிழைப்புக்கு வசதியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

அன்றைய தேதிக்கு சரித்திரம் உண்மை, நாளை அது மாறலாம். பள்ளியில் அனைவரும் படித்த ஒரு விஷயம் ஆரிய படையெடுப்பு. ஆரியர்கள் கைபர் போல கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்பது. பின்னர் படையெடுப்பு ஆரியர் இடப்பெயர்வாகியது. நாளை என்னவாகும் யாருக்கு தெரியும்.

சரஸ்வதி நமது புராணங்களிலும், வேதங்களிலும், இதிகாசங்களிலும் போற்றப்படும் நதி. திரிவேணி சங்கமத்தில் கங்கையுடனும் யமுனையுடனும் கண்ணிற்கு தெரியாமல் கலக்கும் நதி என்று நம்பப்படும் சரஸ்வதியின் சரித்திரத்தை பற்றிய புத்தகம்.

01 நவம்பர் 2013

ஒரு பார்வையில் சென்னை நகரம் - அசோகமித்திரன்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

சென்னை எனக்கு பிடிக்காத நகரம். படிப்பிற்காகவும், வேலைக்காகவும் அங்கு சுமார் 2.5 ஆண்டுகள் இருந்தேன். இப்போது மாமனார் ஊர் வேறு ஆகிவிட்டது. முழுமுதல் காரணம் சென்னையின் வெப்பம் (இரண்டு வரிகளுக்கு நடுவில் ஒரு முற்றுப்புள்ளி உள்ளது, சேர்த்து படித்துவிட வேண்டாம்) . என்னுடைய ஊர் மலையடிவாரம். வருடத்தில் மூன்று மாதங்கள் கடும் வெயில் இருந்தாலும், வெக்கை தெரியாது. மற்ற மாதங்களில் சாரல் அல்லது குறைவான வெயில். அதை விட்டு சென்னையில் ஒரு அடுக்குமாடியில் ஒரு வீட்டில், புழுக்கத்தில் தங்குவது ஒரு தண்டனைதான். அடுத்தது அந்த நெரிசல், அவசரம். மரங்களை பார்ப்பது என்பதே அரிதான ஒரு விஷயமாகிப் போன அவலம். 

சிலருக்கு சென்னை சொர்க்கலோகம். பா.ராவிற்கு சென்னை சத்தம் ஒரு பாதுகாப்பை தருகின்றது. என் பாதுகாப்பிற்கு இப்பொதைக்கு பெங்களூரு சத்தமும், எங்களூரின் அமைதியான சத்தமுமே போதுமானதாக இருக்கின்றது. இனி தலைப்பிற்கு சம்பந்தமாக :

அசோகமித்திரன் ஒரு சென்னைவாசி. ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்து, பல ஆண்டுகளாக சென்னையில் வாழ்ந்துவருபவர். ஒரு காலத்திய சென்னையை பற்றிய ஒரு சித்திரம் இப்புத்தகம். சென்னையின் பல பகுதிகளை பற்றிய சின்ன சின்ன குறிப்புகள். அக்காலத்தில் எப்படி இருந்தது,எப்படி மாறியுள்ளது என்பதை அவருக்கே உரிய நடையில் எழுதியுள்ளார்.

தகவல்களை திரட்டுவது எளிது, அதை எழுதிவைப்பதும் எளிது. வெறும் தகவல்கள் என்பது வாய்ப்பாடு மாதிரி. அதை சுவாரஸ்யமாக்குவதுதான் திறமை. பாடபுத்தகத்தில் இருக்க கூடிய தகவல்களை, சுவாரஸ்யமான கட்டுரையாக்குவது எப்படி என்பதை இப்புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். "எப்படி" என்பதை விட, அது சாத்தியம் என்பதுதான் அறிந்து கொள்ள முடிவது. எப்படி என்று தெரிந்தால், அசோகமித்திரனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

02 அக்டோபர் 2012

18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்

புத்தகம் படிக்கும் வழக்கம் சிறுவயது முதலிருந்தாலும், இணையத்தின் மூலமாகத்தான் பல நல்ல எழுத்தாளர்கள், புத்தகங்கள் அறிமுகமானர்கள். சிலிக்கான் ஷெல்ப், ஜெயமோகன் இவர்களின் தளத்தில் பல புத்தக விமர்சனம், அறிமுகம் கிடைக்கப்பெற்றேன். அதே போல் புத்தகம் வாங்குவதும் பெரிய சவாலாக இருந்து. பெங்களூரில் தமிழ் புத்தகத்தை எங்குவாங்குவது. ஹிக்கின்பாதம்ஸில் சமையல் கலைதான் கிடைக்கின்றது. அதற்கும் இணையம் தான் துணை. கிழக்குப்  பதிப்பகத்தின் செயல்பாடு மிகச்சிறந்தது.

அசோகமித்திரனின் பெயரைக் கேட்டிருந்தாலும் அவரின் புத்தகங்கள் எதையும் படித்ததில்லை, புத்தகங்களைப் பற்றியும் கேள்விபட்டதில்லை. அவரின் தி.ஜாவை பற்றிய பேட்டியை சொல்வனத்தில் படித்து கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருந்தது. அதோடு அவரின் கதைகள் சீரியஸாக இருக்குமோ என்ற எண்ணம் வேறு. 18வது அட்சக்கோடு பற்றி பலரும் பேசுவதைக் கேட்டுத்தான் வாங்கினேன். எப்புத்தகத்தையும் வேகமாக பல முறை படிப்பது என் வழக்கம். முதலில் புத்தகத்தை முடிக்க வேண்டும் என்ற வெறி. பின்னர் மெதுவாக பல முறை படிப்பதுண்டு.

25 செப்டம்பர் 2012

நான், கிருஷ்ண தேவராயன்

தமிழில் வந்த சரித்திர நாவல்களை பட்டியலிட்டால் எப்படியும் ஒரு 100 நாவலாவது தேறும். நான் முதலில் படித்த சரித்திரக்கதை என்னவென்று யோசித்தால்; பெரும்பாலானோர் கூறும் பதில்தான் "பொன்னியின் செல்வன்". ஏழாவது படிக்கும் போது நூலகத்தில் படித்தது. மீண்டும் அதை +2 படிக்கும் போது படித்தேன். கல்லூரி படிக்கும் போது சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு. வேலையில் சேர்ந்த பின் நிறைய சாண்டில்யன் கதைகள். என் நண்பனிடம் நிறைய சாண்டில்யன்கள் இருந்தன்.

கல்கியின் மூன்று கதைகளும் வேறுபட்டவை. முதல் கதையான பார்த்திபன் கனவு ஒரு பயிற்சி கதைபோலத்தான், சிவகாமியின் சபதம் - பொன்னியின் செல்வனும் இரு வேறுபட்ட வடிவங்கள்.சிவகாமியின் சபதம் ராமாயணச்சாயலும், பொன்னியின்செல்வன் மகாபாரதச்சாயலும் கொண்டது என்று என் அபிப்ராயம். சாண்டில்யனுக்கு ஒரு தனி பாணியே இருந்தது. கதாநாயகன் ஒரு சூப்பர் ஹீரோ. எல்லாம் தெரியும் அவனுக்கு, எல்லாம் ஜெயம், யாரவது உதவுவார்கள். ஜேம்ஸ்பாண்ட் மாதிரி பெண் (அ) பெண்கள் உதவி உண்டு. கண்டிப்பாக கதையில் கொஞ்சம் சரித்திரமும் உண்டு. முதல் இரண்டு கதைகள் சுவாரஸ்யமாக இருந்தாலும் பின்பு அந்த டெம்ளேட் பழகி விட்டது. கதையை சுலபமாக யூகிக்கமுடிந்தது. அங்கங்கு போரடித்தாலும் படிக்கலாம் என்றே தோன்றும்.