30 ஜூன் 2025

வேள்பாரி - சு. வெங்கடேசன்

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய தொடர்கதை. வீரயுக நாயகன் வேள்பாரி. விகடனில் தொடராக வெளிவந்து, ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேலாக விற்பனையாகி உள்ளது என்று புத்தக அட்டை சொல்கின்றது. 

இன்றைய நிலையில் ஒரு லட்சம் பிரதி என்பது உண்மையில் ஒரு சாதனைதான். காவல்கோட்டம் இந்த அளவிற்கு போகவில்லை என்று அனுமானிக்கலாம். அதே ஆசிரியர், வரலாற்று தளம் இருந்தும் ஏன் இந்த வித்தியாசம். கண்டிப்பாக விகடன்  காரணம் இல்ல. விகடனில் வரும் அனைத்து தொடர்களும் இப்படி விற்பதில்லை. பின் எப்படி என்று பார்த்தால் இரண்டு விஷயங்கள். நமது சினிமா ஆர்வம், புதிதாக கிளம்பி இருக்கும் தமிழர் உணர்வு (தமிழ் உணர்வு இல்லை, தமிழர் உணர்வு) 

இது ஒரு பாகுபலி டைப் கதை. ஏன் பாகுபலி ஓடியது, பிரம்மாண்டமான திரையில் நம்ப முடியாத காட்சிகளை ஒரு காமிக்ஸ் வடிவத்தில் காட்டியது. இது அது போன்ற ஒரு நாவல். தமிழர் என்ற வார்த்தை ஒரு நல்ல வியாபார வார்த்தை. எதோடு சேர்த்தாலும் விற்கும், தமிழனின் பானம், தமிழனின் கலை, தமிழனின் கட்டிடம், தமிழனின் உணவு, தமிழனின் அறிவு  இது அந்த வகையில்  இது தமிழனின் சரித்திரம். புல்லரிப்புகளுடன் படிக்க ஏற்ற கதை.

19 ஜூன் 2025

கர்மன் - ஹரன் பிரசன்னா

ஹரன் பிரசன்னா, சாதேவி, புகைப்படங்களின் கதைகள் என்ற சிறுகதை தொகுப்புகளும், மாயப்பெரு நதி என்னும் நாவலையும் வெளியிட்டுள்ளார். சுவாசம் பதிப்பகம் மூலம் பல புத்தகங்களை வெளியிட்டுவருகின்றார். அவரின் புதிய நாவல் கர்மன்.

மாயப்பெருநதி குறிப்புகளில் அந்த நாவலின் அட்டைப்படத்தை பற்றி பாரட்டி எழுதியிருந்தேன். இந்த நாவலை படிக்க தூண்டியதில் இந்நாவலின் அட்டை படத்திற்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால் அட்டைபடத்தை வைத்து நான் யூகித்தது மாதிரி இல்லை.

அட்டைப்படம், ஒரு கேத வீட்டை காட்டுகின்றது. ஒருவர் இறந்து போனால் அவருக்கு செய்யும் இறுதி சடங்கையும் கர்மா என்றே சொல்வதுண்டு. "கர்மா செய்யும் வயதா அது", "யார் கர்மாவை செய்வது" என்று எல்லாம் பேச்சு வழக்கில் பேசுவதுண்டு. அட்டைப்படத்தையும், தலைப்பையும் பார்த்து யாருடைய சாவுக்கோ கர்மா செய்யும் ஒருவனைப் பற்றிய கதை என்றே நினைத்தேன். இல்லை. கர்மா என்பது முன்வினைப்பயன் என்று கூறலாமா? கர்மா என்பது நமது செயல்களுக்கான வினை, இங்கு பெங்களூரில் கன்னடர்கள்  கடுப்பாகி போகும் போது, "நன்னு கர்மாபா", "ஹே, ஏனு கர்மாபா" என்று புலம்புவார்கள்.  கர்மன் என்பது கர்மாவிற்கு தந்த உருவம். 

மரண வீடுகள் பலருக்கு பல கேள்விகளை எழுப்பும், அந்த கேள்விகளின் அடிப்படையில் உருவானது இந்த நாவல் என்கின்றார் ஆசிரியர். 

02 ஜனவரி 2025

சிபிஐ கதைகள் - விமலாதித்த மாமல்லன்

சிபிஐ என்றவுடன் நம் நினைவிற்கு வருவது அரசியல் கட்சிகள் எதிர்கட்சி வரிசையில் இருக்கும் போது வேண்டும் என்றும், ஆளும் கட்சியாக இருக்கும் போது வேண்டாம் என்று எதிர்க்கும் அமைப்பு. பெரிய குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு, கொலைகளை, பெரிய ஊழல்களை விசாரிக்கும் அமைப்பு. ஆனால் பத்து ரூபாய் லஞ்சம் வாங்கும் ஒரு டிடிஆரை பொறிவைத்து பிடிக்க இறங்கும் என்றால் நம்ப முடிகின்றதா? நம்புங்கள் என்கின்றார் விமலாதித்த மாமல்லன்.

புனைவு என்னும் புதிர், விளக்கும் வெளிச்சமும் போன்ற புத்தகங்களுக்கு பின் அவர் வெளியுட்டுள்ள புத்தகம் சிபிஐ கதைகள். 

சிபிஐ கதைகள் விமலாதித்த மாமல்லனின் புதிய புத்தகம். சிபிஐ விசாரணையை மையமாக கொண்ட கதைகள். சிறுகதை தொகுப்பு என்றும் வைத்து கொள்ளலாம், அல்லது அசோகமித்திரனின் ஒற்றன் நாவல் போன்ற நாவல் என்றும் வைத்து கொள்ளலாம். நரஹரி என்னும் பாத்திரம் அனைத்து கதைகளைக்குமான சரடு. 

15 செப்டம்பர் 2024

I have the streets - Ashwin

சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் 100 டெஸ்ட் ஆடுவது என்பது சாதரண விஷயம் இல்லை என்று பேசியிருந்தார். அவர் பேசியது இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பற்றி. ஸ்ரீகாந்த் பல ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டில் பல நிலைகளில் இருந்தவர். ஆட்டக்காரர், தேர்வு கமிட்டி தலைவர், வர்ணனையாளர், பயிற்சியாளர். பல உள் விவகாரங்களை அறிந்தவர் என்பதால் அந்த கூற்றிற்கு பல வண்ணங்கள் இருக்கலாம்.  

நூறு டெஸ்ட் போட்டிகள் 500 விக்கெட்கள், உலககோப்பை. ஆஸ்திரேலியாவை கலக்கியவர். சயன்டிஸ்ட் அஷ்வினின் குட்டி ஸ்டோரிஸ்தான் இந்த புத்தகம். 

இந்த புத்தகம் அஷ்வினின் வாழ்க்கை வரலாறு என்று எல்லாம் கூறி அவரை வயதானவராக்க வேண்டாம். புத்தகமும் அப்படி எல்லாம் இல்லை. இந்த புத்தகம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை மட்டும் பேசுகின்றது. அவரது தொழில்முறை கிரிக்கெட் இல்லை. அவது வீட்டு கிரிக்கெட், தெரு கிரிக்கெட், க்ளப் கிரிக்கெட். 

16 மார்ச் 2024

மிளகு - இரா. முருகன்

மிளகு என்றால் நமக்கு பொங்கலில் இருந்து பொறுப்பாக பொறுக்கி தூரப்போடும் ஒரு வஸ்து, இல்லை என்றால் ஜல்தோஷம் பிடித்தால் கஷாயம் வைக்க பயன்படும் ஒரு பொருள். பாரம்பர்யத்தை காப்போம் என்று குதிரைவாலி சோறு உண்பவர்கள், வெளியில் பனங்கல்கண்டு பால் குடிக்கும் போது அதில் கொஞ்சமே கொஞ்சம் போடப்படும் வஸ்து. ஆனால் மிளகு ஒரு காலத்தில் நாடுகளின் வர்த்தகத்தையே ஆட்டி வைத்துள்ளது. மிளகை வாங்க போட்டி போட்டுக் கொண்டு வந்துள்ளார்கள், இன்றைய அரபு நாடுகள் பெட்ரோல் விற்று கொழிப்பது போல மிளகு விற்று கொழித்த குட்டி நாடுகள் இருந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு குட்டி நாட்டின் ராணி மிளகு ராணி.

இந்தியாவிலும் சரி, வேறு நாடுகளிலும் சரி ஒரு பெண் ஆட்சி செய்வது என்பது கொஞ்சம் அரிதான விஷயம், விதிவிலக்குகள் உண்டு. அப்படி வந்தாலும் மிக அதிக காலம் அவர்கள் ஆட்சி நீடித்தது இல்லை. பெரும்பாலான அரசிகள் கணவனை இழந்தபின் அடுத்த வாரிசு பட்டத்திற்கு வரும் வரை ஆட்சி பொறுப்பை பார்த்து கொண்ட கதைதான் அதிகம். சென்ன பைரவா தேவி, தந்தைக்கு பின் ஆட்சிக்கு வந்து சுமார் 54 வருடங்கள் ஆட்சி செய்துள்ளார்.

சாளுக்கிய வம்சத்த்தை சேர்ந்த இந்த அரசிக்கு அன்றைய போர்ட்ச்சுக்கல் அரசு மிளகு ராணி என்ற பட்டத்தை வழங்கியிருக்கின்றது. இறுதியில் நெருங்கிய நட்பு நாடுகளால் விழுங்கப்பட்டு ஆட்சியையும், நாட்டையும் இழந்தார்.  அவர் கட்டிய மிர்ஜான் கோட்டையும், சதுர் முக பஸதியும்தான் இன்று மிச்சம்.