இந்திரா பார்த்தசாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திரா பார்த்தசாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஏப்ரல் 2014

மாயமான் வேட்டை

வெந்து தணிந்த காடு சுட்ட சூட்டின் ரணம் ஆறாமல் இப்புத்தகத்தை எடுத்தேன். நல்ல வேளை சூட்டின் வலி கொஞ்சம் குறைந்தது.

அரசியல்.டெல்லி வாலாக்களின் கதைகளில் கொஞ்சம் மறைவாக எட்டி பார்க்கும் ஒரு விஷயம். வேதபுரத்து வியாபாரிகளில் கொஞ்சம் மிகைப்படுத்தி கூறிய அரசியல் விளையாட்டை இதில் கொஞ்சம் யதார்த்ததிற்கு கொண்டு வந்துள்ளார் என்று கூறலாம்.

அரசியலை பற்றி அனைவருக்கும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும், ஆனால் அதில் இறங்குவது என்பது அனைவராலும் முடியாது. முழுக்க முழுக்க நல்லவர்களாக இருந்தாலும் கூட அரசியலில் தாக்கு பிடிப்பது சந்தேகம். ஏனென்றால் அரசியல் ஒரு புத்திசாலிகளின் விளையாட்டு. சதுரங்கம் போல. பலவித காய்களின் இயல்பையும், சேர்க்கைகளையும் ஆராய்ந்து, பலவித சினாரியோக்களை (தமிழ் வார்த்தை என்ன?) ஆராய்ந்து விளையாட வேண்டிய விளையாட்டு. எப்போதும் வெற்றி என்பது சாத்தியமில்லை.

நாட்டிற்கு நல்லது செய்ய நினைப்பது மட்டும் போதும் என்ற எண்ணம் எல்லாம் அரசியலுக்கு உதவாது. அன்னா ஹசாரே மாதிரி ஆக வேண்டியதுதான். கொஞ்சம் கிரிமினல் புத்தியும் வேண்டும் . கேஜ்ரிவால் மாதிரி இல்லை, மோடி மாதிரி கடின உழைப்புடன் சாதுர்யமும் வேண்டும்.

23 ஏப்ரல் 2014

வெந்து தணிந்த காடுகள் - இந்திரா பார்த்தசாரதி

"உயிர்த் துடிப்பான பாத்திரங்களை படைத்து, அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு, நெருப்பு பொறி பறக்கும் விவாதங்களை உருவாக்குகிறார் இந்திரா பார்த்தசாரதி, பக்கங்களை புரட்டும் போதே கை விரல்களில் தீப்பற்றிக் கொள்கின்றது" என்று பின்னட்டையில் அச்சிடப்பட்டிருந்ததை படித்தவுடன் ஒரே அதிர்ச்சி. அப்படிப்பட்ட புத்தகத்தை சர்வசாதரணமாக பல புத்தகங்களுக்கு நடுவில் வைத்திருந்தனர். உடனே அதை கைப்பற்றி கடையை காப்பாற்றி விட்டேன்.  படிக்கும் போது எந்த ஆபத்தும் வரவில்லை, என் பெண் கூட அதை வைத்து விளையாடுகின்றாள். படித்த பின்னர் அது கிழக்கு பதிப்பகத்தின் அவதூறு என்று அறிந்து கொண்டேன்.

கொஞ்சம் முன்கதை,

கல்லூரியில் படிக்கும் போது என்னுடைய நண்பன் ஒரு நாள் வீட்டிற்கு வந்தான். அப்போது என்னிடம் இருந்த வசதிக்கு கொஞ்சம் கல்கி புத்தகங்களை வாங்கி வைத்திருந்தேன். அதை பார்த்த அவனுக்கு சந்தோஷம். கண்டேன் புத்தகப்புழுவை என்று. எனக்கும் சந்தோஷம். கொஞ்ச நாளைக்குதான். அவன் படிக்கும் புத்தகங்கள் பாலகுமாரனும், ஜெயகாந்தனும். நல்லவேளையாக பாலகுமாரனை அப்போது படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. படித்த முதல் ஜெயகாந்தனின் புத்தகமே ரிஷிமூலமாக போனது எனது துரதிர்ஷ்டம். புத்தகத்தை பதுக்கி வைத்து திரும்ப தந்துவிட்டேன். என்னிடம் இருந்து அவன் சில கல்கி புத்தகங்களை வாங்கி சென்றான். திரும்ப தரும் போது "என்னடா உங்க ஆள் (!!) கல்கி, பி.ஏ ஃபெயிலா போய் தற்கொலை செஞ்சிக்கப் போய்ட்டாரே" என்றான். தூக்கிவாரி போட்டது. கல்கி பி.ஏவா? அவன் வாங்கி சென்ற புத்தகங்களை ஆராய்ச்சி செய்த போது ஒரு அரிய உண்மை புலப்பட்டது. அன்னார் கூறியது சரிதான், ஆனால் அது "ஒற்றை ரோஜா" கதையில் வரும் சம்பவம், பாத்திரமே கதை சொல்லும் படி எழுதப்பட்டது. அதை படித்துவிட்டு குழம்பிய அவனுக்கு அதை எப்படி புரிய வைப்பது என்பது தெரியவில்லை. (இதை படிக்கும் துரதிஷ்டம் அவனுக்கு வாய்த்தால் அவனுக்கு : இப்போதாவது அது உனக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்)

14 செப்டம்பர் 2013

வேதபுரத்து வியாபரிகள் - இந்திரா பார்த்தசாரதி

கல்கியில் 1994ல் வந்த அங்கத நாவல் (அப்படின்னா என்னா?).  எதை வேண்டுமானாலும் மிகைப்படுத்தலாம், அரசியலில் அதை செய்ய முடியாது. நமது அரசியல்வாதிகள் அதை உண்மையாக்கி தொலைத்து விடுவார்கள். கற்பனை நாவலுக்கு பதிலாக எதிர்கால குறிப்பு கிடைக்கும். சோ அப்படித்தான் ஒரு தீர்க்கதரிசியாகிவிட்டார். அது போன்ற ஒரு நாவல்.

இது போன்ற நாவலுக்கு கதை எல்லாம் தேவைதானா? இருந்தும் அப்படி ஒரு வஸ்து இருக்கின்றது. வேதபுரம் என்பது ஒரு கற்பனை நகரம். நமது தமிழகத்தின் பிரதிபலிப்பு. வேதபுரத்து தலைவர் அரூபமாக ஆண்டு கொண்டிருக்கின்றார். அவரை கண்டு, வேதபுரத்தை வைத்து பேட்டி எடுக்க வரும் அபூர்வா, எப்படி வேதபுர ராணியாகின்றாள் என்பது கதை. 

முழுக்க முழுக்க திராவிட இயக்கத்தவர்களை தான் வாரியிருக்கின்றார். தமிழ் கலாச்சாரம் என்று பேசிவிட்டு இரண்டு மனைவி வைத்துக் கொள்வது, அடை மொழி வைத்துக் கொண்டு திரிவது, சுயமரியாதை என்று பேசிவிட்டு தலைவருக்கு ஜால்ரா அடித்துப் பிழைப்பது, கடவுள் சிலையை வணங்குவதை கிண்டலடித்துவிட்டு தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்குவது, புராணங்களை தூற்றி விட்டு தலைவர்கள் மீது புராணங்கள் எழுதிக் குவிப்பது, அரசியலுக்கும் சினிமாவிற்குமான தொடர்பு, என்று கடைத்த இடத்தில் எல்லாம் போட்டு தாக்கியுள்ளார். படிக்க சந்தோஷமாக இருந்தது.

அவர் எழுதிய சில நடந்தும் தொலைத்து விட்டன, இஷ்டப்படி மந்திரிகளை மாற்றுவது, 8450 நொடி உண்ணாவிரதம் இருப்பது, மிருகங்களுக்கு ஒன்று மனிதர்களுக்கு ஒன்று என்று கஞ்சி தொட்டி திறப்பது, கமிட்டி போடுவது, அதன் முடிவை ஆராய இன்னொரு கமிட்டி என்று. 

இன்னும் சில நடப்பதற்கு அதிக காலம் ஆகாது, அன்னிய முதலீடு அதிகமாகி, சி.பி.ஐயை ஒரு வெளிநாட்டு நிறுவனம் வாங்குவது, முடியாட்சி, கஜானாவை காணாமல் அடிப்பது எல்லாம் விரைவில் நடக்கு என எதிர்பார்க்கலாம். 

அங்கத நாவல் என்கின்றார்கள், என்ன அங்கதமோ. இ.பாவின் அங்கதம் எல்லாம் என்னை அவ்வளவாக கவரவில்லை.கிருஷ்ணா கிருஷ்ணாவில் இருந்த அளவிற்கு கூட இதில் இல்லை. சிறிய புன்னகை கூட வருவதில்லை. பேச்சும் மிகுந்த மிகை படுத்தப்பட்டதாகினறது.தனி மண்டை வேண்டும் போல இதை புரிந்து சிரிக்க. இதே போன்ற மிகைப்படுத்தலை சேர்ந்ததுதான் முகம்மது பின் துக்ளக் நாடகமும், ஆனால் அதில் இருந்த சுவாரஸ்யம் இதில் இல்ல. 

படிக்கலாம் ஓசியில் கிடைத்தால்.

17 பிப்ரவரி 2013

ராமானுஜர் - இந்திரா பார்த்தசாரதி

தமிழகத்தை பொறுத்தவரை சீர்திருத்தவாதி என்றவுடன் அனைவரும் கூறுவது ஈ.வெ.ராவைத்தான். அதற்கு முன்னால் செயல்பட்ட அனைவரும் மிகச்சுலபமாக மறக்க (மறக்கடிக்கப்) பட்டுள்ளனர். ராமானுஜர் அப்படிப்பட்ட மறக்கடிக்கப்பட்ட சீர்திருத்தவாதி. ராமானுஜர் விசிஷ்டாத்தைவத்தை நிலைநிறுத்தியவர், வைஷ்ணவ சம்பிராதயத்தை வழிமுறைப் படுத்தியவர் என்ற அளவிலேயே நினைவில் நிறுத்தப்படுகின்றார். மறக்கப்பட்டது அவரின் சீர்திருத்தக் கருத்துக்கள். 


எனக்கும் சோவின் புத்தகத்தை படிக்கும்வரை ராமானுஜரைத் பற்றி அதிகம் தெரியாது. எங்கோ அவர் கோபுரத்தில் ஏறி கூறிய கதையை படித்த நினைவு. அவர் அவ்வாறு கூறியதின் பின்னால் உள்ள தைரியம், அதன் நோக்கம் எல்லாம் தெரியாது. அவர் செய்த சீர்திருத்தங்கள், அனைத்து மக்களையும் அரவணைத்த பண்பு, ஆழ்வார் பாசுரங்களை பரப்பியது எல்லாம் தெரிந்து கொண்டது வெகு பின்னால்.


ராமானுஜர் இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ள ஒரு நாடகம். ஆனால் இது நாடகமல்ல. ஒரு கதை வடிவில் ராமனுஜரைப் பற்றி எழுதியுள்ளார். கதையுமல்ல ஒரு வாழ்க்கை குறிப்பு. அவரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை கோர்த்து எழுதியுள்ளார்.

06 நவம்பர் 2012

கிருஷ்ணா கிருஷ்ணா - இந்திரா பார்த்தசாரதி

 
"இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்து கிருஷ்ணனும் தெரிவான்;21ம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான். காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்" புத்தகத்தின் பின்னட்டையில்
 
இந்திய இதிகாச நாயகர்களுள் முக்கியமானவன் கிருஷ்ணன். பாகவதம், மகாபாரதம் போன்ற காவிய இதிகாசங்களின் முக்கிய பாத்திரம். அவற்றின் நாயகன் அவனல்ல, அவனில்லாமல் அக்காவியங்களில் ஒன்றுமில்லை. ராமாயணம், பாரதம் என்ற இரண்டு பெரும் இதிகாசங்களில் ராமாயணம் மக்களை சேர்ந்த அளவிற்கு பாரதம் போய்ச் சேரவில்லை என்பது என் எண்ணம்.

ராமாயணத்தைப் பற்றி எத்தனை விவாதம், எத்தனை மொழிபெயர்ப்பு, வித விதமான ராமாயணம். ஆனால் பாரதம்? தமிழில் கம்பராமாயணம் அனைவருக்கும் தெரியும், ஆனால் பாரதம் என்றால் சற்றே யோசித்தால் தான் வில்லிபுத்துரார் நினைவிற்கு வருகின்றார். அதைவிட்டால் பாரதியாரின் பாஞ்சாலி சபதம்.

பாரதம் மக்களிடம் முழுமையாக போய் சேராவிட்டாலும், அதன் கதைகள், கிளைக் கதைகள் மக்களிடம் உள்ளது. அதில் முக்கியமானது கிருஷ்ணனின் கதைகள்.