வெந்து தணிந்த காடு சுட்ட சூட்டின் ரணம் ஆறாமல் இப்புத்தகத்தை எடுத்தேன். நல்ல வேளை சூட்டின் வலி கொஞ்சம் குறைந்தது.
அரசியல்.டெல்லி வாலாக்களின் கதைகளில் கொஞ்சம் மறைவாக எட்டி பார்க்கும் ஒரு விஷயம். வேதபுரத்து வியாபாரிகளில் கொஞ்சம் மிகைப்படுத்தி கூறிய அரசியல் விளையாட்டை இதில் கொஞ்சம் யதார்த்ததிற்கு கொண்டு வந்துள்ளார் என்று கூறலாம்.
அரசியலை பற்றி அனைவருக்கும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும், ஆனால் அதில் இறங்குவது என்பது அனைவராலும் முடியாது. முழுக்க முழுக்க நல்லவர்களாக இருந்தாலும் கூட அரசியலில் தாக்கு பிடிப்பது சந்தேகம். ஏனென்றால் அரசியல் ஒரு புத்திசாலிகளின் விளையாட்டு. சதுரங்கம் போல. பலவித காய்களின் இயல்பையும், சேர்க்கைகளையும் ஆராய்ந்து, பலவித சினாரியோக்களை (தமிழ் வார்த்தை என்ன?) ஆராய்ந்து விளையாட வேண்டிய விளையாட்டு. எப்போதும் வெற்றி என்பது சாத்தியமில்லை.
நாட்டிற்கு நல்லது செய்ய நினைப்பது மட்டும் போதும் என்ற எண்ணம் எல்லாம் அரசியலுக்கு உதவாது. அன்னா ஹசாரே மாதிரி ஆக வேண்டியதுதான். கொஞ்சம் கிரிமினல் புத்தியும் வேண்டும் . கேஜ்ரிவால் மாதிரி இல்லை, மோடி மாதிரி கடின உழைப்புடன் சாதுர்யமும் வேண்டும்.
