காந்தியின் சர்ச்சைக்குரிய பரிசோதனைகளை வைத்து எழுதப்பட்ட புனைவு, ஆப்பிளுக்கு முன். தலைப்பை பைபிள் கதையிலிருந்து எடுத்துக் கொண்டுள்ளார். இந்நாவலை எழுதியுள்ளவர் சரவணகார்த்திகேயன். அவரது மற்ற புத்தகங்களைப் படித்ததில்லை. அவரது ஃபேஸ்புக் கருத்துக்களைப் பார்த்ததாலோ என்னவோ, அவரது எந்த எழுத்துக்களையும் படிக்க தோன்றவில்லை. ஒருவித எரிச்சலூட்டும் எழுத்துதான் இவருடையது. இருந்தும் படிக்க தோன்றியது கதையின் களம்தான்.
காந்தி மீது பலதரப்பட்ட பார்வை உண்டு. எந்தளவுக்கு அவர் புகழப்படுகின்றாரோ அதே அளவு விமர்சனமும் வைக்கப்படுகின்றது. பள்ளிப் பருவத்தில் அனைவருக்கும் அவர் ஒரு ஹீரோ. அதைத்தாண்டி பள்ளிகளில் ஏதும் கற்று தருவதில்லை. பள்ளிப் படிப்பைத் தாண்டி படிக்கும் போது மெதுவாக அவர் மீது விமர்சனங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அவர் மீது அனைவருக்கும் ஏதாவது ஒரு விமர்சனம் இருக்கும். ஹிந்துத்துவர்களுக்கு அவர் பேசும் ஒரு பக்க மதச்சார்பின்மை, திராவிடக்கட்சியினர் காந்தியார் என்று ஒரு மார்க்கமாக அழைப்பார்கள், அப்படி அழைப்பதே கடுப்பாகத்தான் இருக்கும். அவர் மீது விமர்சனம் சற்றுமில்லாத அவரது பக்தர்கள் என்று ஒரு கூட்டம் உண்டு. அந்த பக்தர்களையே எரிச்சலடைய வைத்த விஷயம் அவரது பாலியல் சோதனைகள்.
வெறுமனே பாலியல் சோதனை என்றால் விபரீத அர்த்தம் வருகின்றது. அவர் செய்த சோதனைகள் எல்லாம் அவர் மீதுதான், ஆனால் அந்த சோதனையில் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் உயிர் உள்ளவை. அவரது பேத்தி முறை கொண்ட மநு காந்தி அவருடன் இந்த சோதனைகளில் பங்கு பெற்றுள்ளார். அவரை மையமாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது.