ஆங்கிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆங்கிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 டிசம்பர் 2019

A Century Is Not Enought - Saurav Ganguly

Harsha: "Do you think Sachin will be more popular than you in that Kolkata Test match?"
Ganguly: "Yes, but only for those five days!"

படிக்கும் போதே அவரது குணம் தெரிகின்றது அல்லவா. தன்னம்பிக்கை. தன் மாநில மக்கள் தன்னை கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை. தன் திறமை மீது கொண்ட நம்பிக்கை. புத்தகம் முழுவதும் விரவிக் கிடப்பது அதுதான். முதல் மாதம் அணியின் கேப்டனாக இருந்தவர், அடுத்த மாதம்  அணியிலிருந்தே விலக்கப்படுவது எல்லாம் கனவில் நினைக்க முடியாத விஷயம், அதைத் தாண்டி எப்படி மீண்டு வந்தார் என்பதை சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.

கங்கூலியின் ஆரம்ப கிரிக்கெட் வாழ்வில் பெரிய சுவாரஸ்யம் ஏதுமில்லை. பலரை போன்ற நிதானமான முன்னேற்றம், சில பல சிறப்பான ஆட்டங்கள், பல மோசமான ஆட்டங்கள். அணியின் உள்ளே வெளியே என்று சென்று கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் அணித்தலைவர் ஆன பின் வரும் நிகழ்வுகள் சுவாரஸ்யமானவை. 

அதுவரை இருந்த இந்திய அணி, மன்மோகன் சிங்கின் அரசாங்கம் மாதிரி. வெளிநாட்டுக்காரன் ரெண்டு கொடுத்தால் வாங்கிக் கொண்டு வருவது. போராட்ட குணமற்ற ஒன்று.  கபில்தேவ் உண்டாக்கிய அணியின் அணுகுமுறை மாறி, உள்ளூர் குழி பிட்சுகளில் ஸ்பின்னை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருந்தது. சச்சினை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலை. சச்சினையும் அணித்தலைவராக ஆக்கி, அவர் ஆட்டத்தையும்  கெடுத்து வைத்திருந்தது. கங்கூலி அணித்தலைவரான பின் அவர் அணியை மறு கட்டமைப்பு செய்ய வேண்டியிருந்தது. அதை அவர் செய்ததன் விளைவுதான் உலகக் கோப்பை. 

12 ஜனவரி 2017

Scion of Ikshvaku - Amish Tiripathi

அமிஷ் திரிபாதியின் அடுத்த நாவல். ராம் சந்திரா சீரீஸ் என்ற தலைப்பில் ஆரம்பமாகியுள்ளது. 

ராமாயணத்தை முந்தயை நாவல் பாணியில் எழுத ஆரம்பித்துள்ளார். ராமாயணத்தை மாற்றி எழுதுவது கொஞ்சம் சுலபமானதுதான். ஏனென்றால் ஏற்கனவே பல ராமாயணங்கள் வழக்கில் இருக்கின்றன. புத்திசாலியான எழுத்தாளர் அனைத்தையும் கலந்து கட்டி ஒரு புதிய ராமாயணத்தை உண்டாக்கிவிடலாம். ராவணன் சீதையை கடத்துவதுடன் நாவல் ஆரம்பமாகின்றது. ஏன்? அப்பொழுதுதானே வாசகன் முதல் அந்தியாத்திலேயே எழுந்து உட்காருவான். பிறகு மெதுவாக முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் கதை செல்கின்றது.

தசரதனுக்கும் ராவணனுக்குமான் போரில் கதை ஆரம்பிக்கின்றது. சரியாகத்தான் எழுதியிருக்கின்றேன். தசரதன் தோற்கின்றான். ராமன் பிறக்கின்றான். ராமனை தோல்விக்கு காரணமானவாக கருதி தசரதன் வெறுக்கின்றான். நான்கு சகோதரர்களுக்கான குணங்களை சமைப்பதில் மகாபாரதத்தை கடன் வாங்கிக் கொண்டிருக்கின்றார். ராமன் சத்தியசீலன், விதிகளை கண்டிப்பாக பின்பற்றுபவன் தர்மபுத்திரனின் சாயலை அதிகமாக புகட்டியுள்ளார். பரதன் ஜாலியான் ஆள், பெண்கள் விஷயத்தில் அர்ஜ்ஜுனன். லக்ஷ்மணன், பீமன் சாயல் நல்ல உணவு, பலசாலி. சத்ருக்கணன் - சகாதேவன். படிப்பாளி.  தசரதனின் ஆட்சியில் அயோந்தியின் நிலை பரிதாபமாக இருக்கின்ற நிலையில், ராமன் நாட்டின் பாதுகாப்பை பொறுபேற்று கொண்டு சிறப்பாக செயல்படுகின்றான். மந்திரை ஒரு பணக்கார வியாபாரியாக வருகின்றாள். ராமனின் மீதான அவள் வன்மத்திற்கு வேறு ஒரு காரணத்தை காட்டுகின்றார். இருபுறமும் தவறில்லாமல் பேலன்ஸ் செய்யும் வகையில் அமைத்து தன் ஐஐடி புத்திசாலித்தனத்தை காட்டுகின்றார்.

27 டிசம்பர் 2016

Siva Triology - Amish Thiripathi

ஆங்கிலப் புத்தகங்களை பெரும்பாலும் படிப்பதில்லை. முதல் காரணம், அந்தளவிற்கு ஆங்கில அறிவு கிடையாது. 12 வரை தமிழ் மீடியம் என்பதால், ஆங்கிலத்தை மூளைக்குள் மொழி பெயர்க்காமல் படிக்க முடியாது. பொறுமை தேவை. ஆங்கில அகராதியை வைத்து கொண்டு படிக்கும் பொறுமையெல்லாம் கிடையாது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களின் நடை கொஞ்சம் படிக்கின்றபடி இருக்கும். சேத்தன் பகத்தின் முதல் மூன்று, நான்கு நாவல்களை படித்திருக்கின்றேன்ன். ஆர்வக்கோளாறு என்ன செய்ய. குப்பை நாவல்கள் என்பதை தவிற வேறு எதுவும் கூற இல்லை. மூன்றாம்தர சினிமா கூட பரவாயில்லாமல் இருக்கும். மட்டமான மசாலா. குழந்தைகள் பிறந்தபிறகு அப்புத்தகங்களுக்கு பயன் இருந்தன. 

சேத்தன் பகத் தந்த நம்பிக்கையில் வேறு எதையும் ஆங்கிலத்தில் வாசிக்க விரும்பவில்லை. சிவா டிரையாலஜி, விளம்பரம் அடிக்கடி கண்ணில் பட்டுக்கொண்டிருந்து. இந்தியாவின் டோல் கின் என்ற அடைமொழி வேறு. (டோல் கின்னின் கதைகள் பாதி படித்து அந்தரத்தில் நிற்கின்றது). பல மில்லியன் விற்ற நாவல் என்பதாலும், சும்மா ஒரு மாறுதலுக்காகவும் வாங்கினேன். தமிழில் மொழி பெயர்த்திருந்தாலும், ஆங்கில நூலை வாங்கியதன் முக்கிய காரணம் விலை குறைவு. மூன்று புத்தகங்களும் சேர்ந்து 500க்குள் வந்ததுதான். இரண்டாவது, மொழி பெயர்ப்பாளர்கள் மீது இருக்கும் அதீத நம்பிக்கை. 

புராணங்களை மீண்டும் எழுதுவது என்பது வழக்கமான ஒன்று. மகாபாரதம் அப்படி பல முறை எழுதப்பட்டுள்ளது. ஆனால் புராண பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு கதையை பின்னுவது என்பதை இப்போதுதான் படிக்கடிகின்றேன். முழுக்க முழுக்க கற்பனையான ஒரு மசாலா நாவல். ஆனால் அமீஷ் திரிபாதி, புத்திசாலித்தனத்துடன் எழுதியுள்ளார். புராண பாத்திரங்ளை மனிதர்களாக கற்பனை செய்து, சில நிகழ்ச்சிகளை கற்பனையாக சேர்த்து எழுதியுள்ளார். சிவன் அழிக்கும் கடவுள். தீயவற்றை அழிப்பது அவர் வேலை. அதுவே இதன் அடிப்படையும். நாம் படிக்கும் போது சிந்து சமவெளி நாகரீகம் என்று இருந்தது இன்று சரஸ்வதி சிந்து சமவெளி நாகரீகமாக மாறியுள்ளது. அதை ஒரு அடிப்படையாக வைத்து கொண்டு, அன்றைய பாரதத்தை காட்ட ஒரு முயற்சி செய்திருக்கின்றார்.