தி. ஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தி. ஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 நவம்பர் 2015

உயிர்த்தேன் - தி. ஜானகிராமன்

உயிர்த்தேன்.

தலைப்பு எதை குறிக்கின்றது என்பது கொஞ்சம் குழப்பமான விஷயம். கதையில் நாயகியையா இல்லை, கதையில் வரும் விவசாயத்தையா? ஏதோ ஒன்று, பெரும்பாலும் கதைக்கும் தலைப்பிற்கு சம்பந்தமிருப்பதில்லை.

தி. ஜாவின் சுமாரான கதை என்ற வரிசையில் தான் இதை என்னால் வைக்க முடியும். கதையமைப்பிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி மிகவும் சாதரணமான கதை.

சொந்த ஊருக்கு வந்து வாழ நினைக்கும் பூவராகனுக்கு செங்கம்மாவின் அறிமுகம். தி. ஜாவின் நாயகர்களை போல அவளை மனதில் வைத்து போற்றும் பூவராகன் ஒரு பக்கம், அதே போற்றுதலை செய்யும் பழனி ஒரு பக்கம். திருமணம் ஆனவள் என்பதால், பூவராகனின் போற்றுதல், ஒரு வித பக்தியாகின்றது. பழனியின் தாபம், வெறியாகின்றது.

11 நவம்பர் 2015

நளபாகம் - தி. ஜானகிராமன்

நளபாகம். 
சமையலில் சிறந்தவர்கள் நளனும், பீமனும் என்பார்கள். இது ஒரு நளபாகம் படைக்கும் ஒருவனின் கதை.

தி. ஜானகிராமனின் வழக்கமான அனைத்து விஷயங்களும் உண்டு. 

ஆரம்பமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது. யாத்ரா ஸ்பெஷல், ரயிலில் ஆரம்பிக்கும் கதை.

காமேச்வரன், யாத்ரா ஸ்பெஷெலில் யாத்ரீகர்களுக்கு வேண்டியதை வாய்க்கு ருசியாக சமைத்து போடும் தலைமை பரிசாரகன். அம்பாள் உபாசகன். அதே வண்டியில் வரும் ரங்கமணி என்னும் பெண் (வேறு பெயர் கிடைக்கலையா அய்யா) தன் மகனின் ஜாதகத்தை காட்டி, உடன் வரும் பெரிய  பண்டிதரிடம் கேட்க அவர் கூறும் பதில் விபரீதமாக இருக்கின்றது.

04 நவம்பர் 2015

மலர் மஞ்சம் - தி. ஜானகிராமன்

நீண்டநாள் கழித்து மீண்டும் தி. ஜானகிராமன்.

மதுரை புத்தக கண்காட்சியில், விடுபட்டு போன சில புத்தகங்களை வாங்கினேன்.  பெரும்பாலும் தி. ஜா.

தி. ஜானகிராமன், ஒரே கதையே திரும்ப திரும்ப எழுதுகின்றார் என்ற கருத்து சிலருக்கு உண்டு. எனக்கு அப்படி தோன்றவில்லை, பாத்திரங்களின் தன்மை அப்படி அமைந்துவிடுவதுதான் அதற்கு காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அவரின் பல பாத்திரங்கள், ஒரே சாயல் கொண்டதாக தோன்றும்.

மலர் மஞ்சம், மீண்டும் ஒரு தஞ்சாவூர் கதை. தி.ஜாவின் பெரும்பாலான கதைகளின் அடிநாதம் ஆண் - பெண் உறவு, அதுவும் கொஞ்சம் நடைமுறைக்கு மீறிய, அதே சமயம் சாத்தியமான ஒன்று. ஒரு ஆணிற்கு இரண்டு பெண்கள் மீது ஆசை வருமா என்று கேள்வியே கேட்க முடியாது. பலதார மணம் சாதரணமாக இருந்த இடம். இரண்டு பெண்களிடமும் ஒரே மாதிரியான அன்பு, காதல் இருக்குமா என்றால், அதுவும் சாத்தியம்தான். ஆணிற்கு சாத்தியமென்றால், பெண்ணிற்கு?

பல குடும்பங்களில் நடக்கும் முட்டாள்த்தனம், ஒரு பெண் பிறந்தவுடனே அதற்கு மாப்பிள்ளை நிச்சயிப்பது, அவர்கள் முன்னாலே அதை பேசி பேசி, அவர்களை உருவேற்றி, இறுதியில் வேறு வகையில் செல்லும் போது புலம்புவது. அது போன்ற கதைதான் இது.

பெண்ணிற்கும் இரண்டு ஆண்களின் மீது காதல் வரலாமா? வந்தால் என்னவாகும். இந்த முடிச்சை வைத்து கொண்டு, ஒரு பெரிய நாவலை எழுதியிருக்கின்றார். முடிச்சு விழுவது என்னவோ முக்கால் நாவல் முடிந்த பின்னர்தான், அது வரை கதையை, அவரது எழுத்து வன்மையால் அடித்து தூக்கிக் கொண்டு போகின்றார்.

28 அக்டோபர் 2013

செம்பருத்தி - தி. ஜானகிராமன்

செம்பருத்தி மோகமுள்ளிற்கு கீழே அன்பே ஆரமுதா வகையறாவிற்கு மேலே.சட்டநாதன் குடும்பத்தின் மூன்றாவது பிள்ளை. அவனது ஆசிரியர் மகளான குஞ்சம்மாளை காதலிக்கின்றான். பழைய சினிமா பாணியில் அவள் அவனது இரண்டாவது அண்ணனுக்கு மணமுடிக்கப் படுகின்றாள். சட்டநாதன் சின்ன அண்ணனுடன் கடையில் இருக்கின்றான். பெரிய அண்ணன் வெளியூரில் வசதியாக இருக்க, சின்ன அண்ணன் இறந்து போகின்றான். சட்டநாதனுக்கு சின்ன அண்ணன் பார்த்து வைத்திருந்த பெண் புவனாவுடன் திருமணம் நடக்கின்றது. கடையையும் நடத்த ஆரம்பிக்கின்றான். தன் குடும்பம், சின்ன அண்ணன் குடும்பம் என இரண்டு குடும்பங்களையும், பின்னர் பெரிய அண்ணன் குடும்பம் என மூன்று குடும்பங்களையும் சட்ட நாதன் பல பக்கங்களுக்கு காப்பாற்றுகின்றான். ஹாவ்வ்வ்

வழக்கமான தி. ஜா ப்ராண்ட் பெண்கள். காதலும் காமமும் கலந்த பெண்கள். ஜெயமோகன் எழுதியிருந்தது, "அம்மா வந்தாளின் இந்து தான் குஞ்சம்மாள், அலங்காரத்தம்மாள்தான் பெரிய அண்ணி, ஒரு சிறிய காட்சியில் தோன்றி மறையும் பெண் (அப்புவிற்கு அவனது அப்பா பார்த்து வைத்திருக்கும் பெண்) புவனா". சரிதான். குஞ்சம்மாள் கணவனை இழந்த பின்னும், சட்டநாதனின் காதலை மறவாமல் அவனை பார்த்துக் கொண்டிருப்பது மட்டும் போதும் என்று அங்கேயே இருக்கின்றாள். புவனாதான் செம்பருத்தி, தலைப்பின் நாயகி.

23 அக்டோபர் 2013

மரப்பசு - தி. ஜானகிராமன்

மரப்பசு. தலைப்பை பார்த்தவுடன் என்ன மாதிரியான கதை என்று யூகிக்க முடியாமல் தி. ஜானகிராமன் என்ற பெயரை பார்த்து வாங்கியது. மோகமுள்ளை பற்றி கேள்விபட்டு அதை தேடி அது இல்லாததால் இதை வாங்க நேர்ந்தது. அதோடு சற்று விலை குறைவாகவும் இருந்தது. இது நான் படித்த தி.ஜாவின் முதல் புத்தகம். வழக்கமான தி. ஜாவின் தஞ்சாவூர் பிண்ணணியில் ஆரம்பிக்கும் கதை எங்கெங்கோ போகின்றது.

அம்மிணி - கோபாலி. அம்மிணி ஒரு கல்லூரியில் படிக்கும் பெண், கோபாலி ஒரு பெரிய பாடகர். கோபாலியிடம் ஒரு தேங்காய் மூடி கச்சேரிக்காக வரும் அம்மிணியை கோபாலி மடக்கி போடுகின்றார். இது வரை ஏதோ ஒரு வகையில் கோப்பாக சென்ற கதை பின் தறிகெட்டு பாய்கின்றது. பார்ப்பவர்களை எல்லாம் தொட்டு பேச விரும்பும் அம்மிணி, அவளின் வெளிநாட்டு பயணம், அங்கு விளையாடும் விபச்சார விளையாட்டு, சந்திக்கும் ஒரு போர்வீரன், கோபாலியின் உறவினன், வேலைக்காரி. என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதே குழப்பம்தான். கடைசியில் தலை வெள்ளையாய் போய் அமர்கின்றாள். 

04 செப்டம்பர் 2013

அன்பே ஆரமுதே - தி. ஜா

ஒரு சன்னியாசியின் கதை.

1961ல் கல்கியில் தொடராக வந்த கதை. 

ஒரு சன்னியாசி அனந்தசாமி, சிறு வயதில் திருமண மண்டபத்திலிருந்து ஓடி போய் சன்னியாசியானவர். ஆனால் முழு சன்னியாசியல்ல. உலக கவலைகள் அனைத்தும் படும் ஒரு சன்னியாசி. மற்றவர்களுக்கு வைத்தியம் பார்க்கும் சன்னியாசி.

அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த பெண் ருக்மணி. அவள் அனந்தசாமியை தற்செயலாக காண்கின்றாள். திருமண முறிவின் கசப்பில் அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றாள். அவளின் உறவினர் பெண் சந்திரா. அவள் ஒருவனுடன் பழகி அவன் அவளை விட்டு போன கசப்பில் வாழ்ந்து வருகின்றாள்.

சினிமா நடிகன் அருண் குமார். அனந்தசாமி அவனின் பையனுக்கு வைத்தியம் செய்ய வருகின்றார். அருண் குமாரால் சினிமா சான்ஸ் என்னும் கவர்ச்சியில் ஏமாறும் பெண் டொக்கி. அவளை காப்பாற்றுவதற்காக அவளை திருமணம் செய்ய முடிவு செய்யும் ரங்கன். ரங்கன் சந்திராவுடன் பழகிக் கொண்டிருந்தவன்.

இவர்களுக்கு நடுவில் அனந்தசாமி. கடைசியில் ருக்மணியின் வீட்டு மாடியில் குடியேறுகின்றார். கூடவே டொக்கி. அவள் படிக்க புறப்படுகின்றாள். அப்பாடா, ஒரு வழியாக கதை சுருக்கம் முடிந்தது

23 ஆகஸ்ட் 2013

அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்

மோகமுள்ளை படித்துவிட்டு வைத்த போது இரவு 12. தண்ணீர் குடித்துவிட்டு வரும் போது கண்ணில் பட்டது அம்மா வந்தாள். படித்துவிட்டு படுக்கும் போது இரண்டு.

சின்ன நாவல். இரண்டு மணி நேரத்தில் படித்துவிடலாம். வெளிவந்த காலத்தில், படித்தவர்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியை தந்திருக்கலாம். தி. ஜாவை விலக்கி வைக்கும் அளவிற்கு கொந்தளிப்பை ஏற்படுத்திய கதை. இன்றும் ஜீரணக்க கொஞ்சம் கடினமான கதைதான்.

இரண்டு பெண்களை பற்றிய கதை. இந்து, அலங்காரம். இவர்களுக்கு இடையில் அப்பு. அப்பு வேதபாடசாலையில் படித்து முடித்துவிட்டு கிளம்ப தயாராக இருக்கின்றான். இந்து வேதபாடசாலை நடத்திவரும் பவானியின் மருமகள். சிறுவயது முதல் அங்கு வளர்ந்து, கணவனை இழந்து மீண்டும் அங்கு வந்து இருக்கின்றாள். இந்துவிற்கு அப்புவின் மீது காதல். சிறுவயது முதல். அதை மறுக்கும் அப்பு அவளை தன் அம்மாவுடன் ஒப்பிடுகின்றான், இந்து அவனின் அம்மாவை பற்றி கூறி ("அவ யாரையோ நினைஞ்சிண்டு உங்கப்பாவ ஏமாத்திட்டு இருக்கா, நான் உன்ன தவிர யாரையுன் நினைச்சதில்டா பாவி"), அவளோடு என்னை ஒப்பிடாதே என்று கத்துகின்றாள். சென்னை செல்லும் அப்பு அவள் கூறுவது உண்மை என்று கண்டு கொள்கின்றான்.

20 ஆகஸ்ட் 2013

மோகமுள் - தி.ஜானகிராமன்

சிறுவயது முதல் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தாலும், அது தீவிரமானது வேலை கிடைத்த பின்னர்தான். (புத்தகங்களை காசு குடுத்தும் வாங்கி படிக்கு வழி ஒன்று இருக்கின்றதல்லவா?) முதலில் ஆரம்பம் சுஜாதா. அதற்கு பின்னர் தி. ஜானகிராமன். தி. ஜானகிராமனின் முள்முடி சிறுகதை பள்ளியில் ஒரு துணைப்பாடம். அதைத் தவிர அவரைப் பற்றி தெரிந்த ஒரே விஷயம் மோகமுள்ளின் ஆசிரியர். 

மோகமுள் திரைப்படம் ஏற்கனவே பார்த்திருந்தேன். அது பிடித்தும் இருந்தது. மோகமுள்ளை படித்ததும், படம் நாவலின் அருகில் கூட வர முடியாது என்பது மிகத்தெளிவானது. வாங்கிய பின் அதை பல முறை படித்திருப்பேன். இன்றும் 
என்னால் அதை புதிது போல் ரசித்து படிக்க வைக்கின்றது. 

கதை, தன்னை விட பத்து வயது பெரிய பெண்ணின் மீது கொண்ட காதல். அந்த மோகம் முப்பது நாளில் போகாமல் முள்ளாக இருக்கின்றது. பாபுவை விட பத்து வயதில் பெரியவள் யமுனாவின் உடல் வனப்பும், அவளின் குணமும் பாபுவிடம் இரண்டு வித தோற்றம் கொண்டு நிற்கின்றது. அவளை தெய்வம் போல தொழும் பாபுவிற்கு அவள் அழகு அவனின் மோகத்தையும் தூண்டுகின்றது. மோகம், அனைவரையும் அர்ச்சகராக்காத வருத்தம் போல பாபுவின் நெஞ்சில் தைக்கின்றது.

09 மார்ச் 2013

உதயசூரியன் - தி. ஜானகிராமன்

உதயசூரியன் உதிக்கும் நாடு ஜப்பான். ஜப்பானுக்கு சென்ற ஜானகிராமனின் அனுபவங்கள்தான் உதயசூரியன். ஜப்பானுக்கும் நமது பாரதம் போல நீண்ட பாரம்பர்யம் உண்டு. அணுகுண்டு என்னும் பெரிய அடிக்கு பின் அவர்களின் முன்னேற்றம் அளப்பரியது. எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும், விவசாயத்திலும் அவர்களின் நவீன் உத்திகள் மற்றவர்களை விட ஒரு மேலானாதாகவே இருக்கின்றது.

ஜப்பானில் போய் வத்தல்குழம்பு சாப்பிட்ட கதை மட்டும் இல்லை. ஜப்பானைப் பற்றி பல செய்திகளை கூறுகின்றார். வெறுமனே கூறிக் கொண்டு சென்றால் டாக்குமென்டரி படம் பார்த்த மாதிரி இருக்கும். ஆனால் தி. ஜாவின் பண்பட்ட எழுத்தில் அது அழகான சிறுகதை போல அமைந்துவிட்டது. 

கட்டுரை ஏதோ பத்திரிக்கையில் தொடராக வந்துள்ளது போல, ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சின்ன அழகான முடிவுடன் அமைந்துள்ளது. ஜப்பானிற்கு சென்றாலும் அங்கும் நாம் காண்பது மனிதர்களைத்தான். அனைத்து மனிதற்களுக்கும் உள்ள உணர்ச்சிகள் அவர்களுக்கு உண்டு, ஆனால் ஜப்பான் என்னும் தேசம் அவர்களை எப்படி வடித்துள்ளது என்பதை காட்டுகின்றார். அதனுடன் ஜப்பானை பற்றியும் அதன் அழகையும் பழமையையும் நகைச்சுவையுடன் எழுதியுள்ளார்.

ஜப்பான் போக விமானத்தில் ஏறும் போது ஆரம்பிக்கின்றது. விமான பயம் என்பது பொதுவானது, அந்த பயத்துடம் ஆரம்பிக்கும் அவரது பயணம் அதே விமானத்தில் ஒரு அழகான சிறுகதைக்கான முடிவுடன் நிறைவடைகின்றது. 

30 ஜனவரி 2013

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 11



முந்தைய பகுதிகள்


பகுதி 9
பகுதி 10



101. பாரிமுனை டு பட்ணபாக்கம்

   
       இரு போன்ற மனிதர்களை பல முறை பல இடங்களில் பார்த்திருப்போம். அதை எப்படி ஒரு கதையாக்குவது என்பதுதான் சூட்சுமம். ஒரு குடிகாரன் டிராமில் செய்யும் அட்டகாசம். அவனது பேச்சுதான் கதை முழுவது. நன்கு ரசிக்கலாம்

102. கம்ப்ளெய்ண்ட்

       அரசாங்க அலுவலகத்தில் நாம் தரும் கம்ப்ளெய்ண்ட்களின் கதி என்ன? சாதாரண சிறு அலுவலகங்களிலேயே கஷ்டம். மிகப்பெரிய ஒரு யந்திரமான ரயில்வே பற்றி புகார் அளித்தால்? சாப்பாடைப் பற்றி ஒரு புகார், அது என்னவாகின்றது?

103. வேதாந்தியும் உப்பிலியும்

       வேதாந்தி முஸ்லீமாக மதம் மாறிவர், உப்பிலி ஒரு வாய்ச்சவடால் ஆசாமி. சீமாண்டி உப்பிலியின் அண்ணா பையன். அவர்களின் உரையாடல் தான் இக்கதை.


        நமது அரசியல்வாதிகளை நக்கலடிக்கும் கதை. டெல்லியில் யாரையாவது பார்த்திருப்பார் போல, தனியாக பார்க்க வேண்டுமா என்ன எல்லாரும் ஒரே மாதிரிதானே. உளுந்து வாரியத்தலைவருக்கு ஏகப்பட்ட மரியாதை, அதைக் கண்டு வியக்கும் ஒரு சாதரணர். அவர் ஒரு நாட்டின் மந்திரி.


        மீண்டும் உப்பிலியும் சீமாண்டியும். அவரைக் காண வரும் கோவிந்து. அவர்தான் நாதரட்சகர். தனக்குதானே அட்சதை போட்டுக் கொள்ளும் ஒரு கேரெக்டர்.

106. மிஸஸ் மாதங்கி.

        அதிகார வர்கத்தின் முகத்தைக் காட்டும் கதை. பெரிய பதவியில் இருப்பவர்கள் ஒரு தனி ரகம். அதுவும் அரசாங்க பதவியில் இருப்பவர்களை தனியாக கண்டு பிடிக்கலாம். ரயில் நிலையத்தில் நிற்கும் போது அவர்களை தனியாக கண்டு பிடிக்கலாம். ஒரு விரைத்த முகம், ஒரு அலட்சிய பார்வை, வித்தியாசமான உடல் மொழி. அப்படி பட்ட ஒரு அதிகார கோத்திரத்தின் ஒரு புள்ளி மாதங்கி. அவரிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு சாதாரண கோத்திரன்.


       ஒரு பெரிய மனிதர். அக்கால கிசு கிசு. பல பெரிய மனிதர்களின் ரசனை இப்படித்தான் இருக்கும் போல.

24 ஜனவரி 2013

தி.ஜானகிராமன் சிறுகதைகள் - 10


முந்தைய பகுதிகள்


       அனைவரும் விரும்பும் தபால்க்காரர் தாத்தாச்சாரி, தள்ளாத வயதிலும் ஊர் ஊராக நடக்கும் பெரியவர். அவர் நடந்து நடந்து மறக்க நினைப்பது அவர் மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையை. ரயிலில் தவறான பாதையில் ஒரு முறை சென்ற மனைவியுடன் ஒரே வீட்டில் இரண்டு குடித்தனங்கள் நடத்திய நினைவை மறக்க நடக்கின்றார், நடந்து கொண்டே இருக்க நினைக்கின்றார்.

92. பஞ்சத்து ஆண்டி

     தொழில் நசிந்து போன ஒரு நெசவாளி. பஞ்சம் பிழைக்க ஊர் விட்டு ஊர் வந்து கடைசியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வருகின்றான். அவனின் நிலையைக் கண்டு பரிதாபப்படும் குரங்காட்டி அவனது மற்றொரு குரங்கை அவனிடம் தந்து அவனை அதை வைத்து பிழைக்குமாறு கூறுகின்றான். பஞ்சத்து ஆண்டிக்கு பரம்பரை ஆண்டியைப் போல் இருக்க முடியாமல், குரங்கை சாக விட்டு விடுகின்றான். பாவம்.

93. நான்தான் ராமன் நாயர்

       ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒரு வித்தியாசமான கேரெக்டர். பிழைக்க வழியில்லாமல் மருத்துவமனையில் நோயாளி என்ற போர்வையில் உண்டு உறங்கும் ஒரு ஆள். கடைசியில் அதுவே ஒரு தொழிலாகின்றது, அங்குள்ள நோயாளிகளுக்கு எடுபிடி வேலை செய்து வாழ்கின்றான். கடைசியில் ஒரு நாள் வெளியேற்றப் படுகின்றான்

22 ஜனவரி 2013

நடந்தாய் வாழி காவேரி - தி. ஜா, சிட்டி

எப்போதும் போல சுயபுராணத்துடன் ஆரம்பிக்கின்றேன். என்னிடம் எனக்கு தெரிந்த ஒரு நல்ல குணம், அடுத்தவரைப் பார்த்து பொறாமை படும் குணம் இல்லை, அவரிடம் உள்ளது நம்மிடம் இல்லையே என்று யோசித்ததில்லை, நமக்கு தேவையானது நம்மிடம் உள்ளது என்று திருப்தி படும் ஜாதி. ஆனால் இரண்டு விஷயங்களை கண்டால் மட்டும் ஒரு பொறாமை, அல்லது ஒரு வயித்தெரிச்சல் என்று கூட சொல்லலாம்.

ஒன்று காடு மலை என்று சுற்றித்திரிபவர்களையும், இசையை அதன் நுணுக்கத்துடன் அனுபவித்து ரசிப்பவர்களையும் கண்டால், என்னால் அது முடியவில்லை என்று  கண்டிப்பாக ஒரு பொறாமை ஏற்படும். டபுள் வயித்தெரிச்சல் இப்புத்தகத்தை படித்து. 

என் சொந்த ஊர் ஒரு காய்ந்த பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் என்றாலும், அது ஒரு மழை மறைவு பிரதேசம். எங்களூரிலிருந்து ஆறு கி.மீ சென்றால் முல்லையாறு, ஒரு முறைகூட அதில் குளிக்கும் பாக்கியம் கிடைத்தில்லை. ஊரிலிருந்த பத்தொன்பது வருடங்களும், வீடு, பள்ளி, புத்தகங்கள் (பாட புத்தகங்கள் அல்ல) என்றே இருந்துவிட்டேன். ஊரிலிருந்த மலையில் கூட ஏறியதில்லை. ஆனால் அனைத்தையும் செய்ய ஆசை உண்டு. அந்த ஆசை இப்புத்தகம் மூலம் நிறைவேறியது.

பயணங்களைப் பற்றி படித்தது என்றால் வெகு குறைவு. எஸ். ரா விகடனில் எழுதியது, அது எனக்கு போரடிக்க ஆரம்பித்து. ஒரு கிராமத்தில் ஆட்டு மந்தை கடந்து செல்வதை சிலாகித்து பத்து பக்கம் எழுதினால் எப்படி படிப்பது. அதன் பின் ஜெ.மோ எழுதும் பயணக்கட்டுரைகள், படிக்கும் போதும், படங்களை பார்க்கும் போதும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இப்போது கூட அவரது குகைப்பயணத்தை படித்து காதில் புகைவருகின்றது. என்ன செய்ய? 

16 ஜனவரி 2013

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 9

முந்தைய பகுதிகள்




      செல்லுர் சொர்ணாம்பாவின் அழகு அக்கரைச் சீமை வரை பிரபலம். சிங்கப்பூரில் இருக்கும் கோவிந்த வன்னி அங்கு வரக்காரணமே அச்சொர்ணாம்பா. அவளின் ஒரு நாள் பணத்தை சம்பாதிக்க சிங்கப்பூர் வந்த கோவிந்த அதை சம்பாதித்து முடிக்க பத்து வருடங்கள் ஆகிவிட்டன. "ஒரு நாளுக்காக பத்து வருட உழைப்பா? அந்த ஒரு நாளுக்கு பின் மீண்டும் அதே உழைப்பிற்கு திரும்ப வேண்டுமே" என்று கூறும் நண்பரிடம் "அப்புறம் உயிர் வாழணும்தான் என்ன முடை? உசிரே இல்லாம இருந்திட்டா?" என்னுமளவிற்கு அவளின் நினைவு. திரும்பி வந்து பார்க்கும் போது, அவளுக்கு அறுபது வயது. அவனது தவத்தின் தரிசனம் விபரீதமாகிவிட்டது


       போன பதிவில் கூறியது போல பாயசம் அவரது மாஸ்டர் பீஸ் எனறால் இது அதை விட ஒரு படி மேலே என்றுதான் எனக்கு படுகின்றது. மிக அருமையான கதை. இரண்டு சம்பவங்களை இணைத்து ஒரே மூச்சில் எழுதியதாக கூறுகின்றார் தி.ஜா. ஒரு குட்டிப் பெண், கண்காணாத சீமைக்கு ஒரு பாவடைச் சட்டையுடன் வேலைக்கு போகின்றாள். அக்குழந்தையின் பொறுப்புணர்வும், தைரியமும், சமர்த்தும் அனைவரையும் கவர்கின்றது, கரைக்கின்றது. குமாஸ்தாவின் குட்டிப் பையனை அவன் தனக்கென்று வாங்கிய பழத்தை அப்பெண்ணிடம் தர வைக்கின்றது. கதை எழுதிய விதமும், குழந்தைகளின் உலகத்தை அவர் படம்பிடித்துள்ளதும், என்ன சொல்ல. படித்து முடித்தபின் அக்குழந்தை என்னவாகும், எங்கோ நன்றாக இருக்கும், இருக்கட்டும் என்று நம்மையறியாமல் வேண்ட வைக்கின்றது. எங்காவது சிறு குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டால் இக்கதை நினைவிற்கு வராமல் போகாது.

07 ஜனவரி 2013

தி. ஜானகிராமன் சிறுகதைகள் 8


இதுவரை எழுதியது அனைத்தும் தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1ல் உள்ள கதைகள். இனி வருவது தொகுதி 2ல் உள்ள கதைகள். இந்த பதிவில் வரும் பத்துக் கதைகளுமே அற்புதமானவை, எனக்கு மிகவும் பிடித்தவை. முதல் தொகுதியில் உள்ள கதைகளை விட இது எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

71. கொட்டு மேளம்

           ஒரு ஏமாந்த சோணகிரி டாக்டர். மற்றவர்கள் எல்லாம் ஒஹோ என்றிருக்க அவர் மட்டும் அதே ஊரில் ஏமாந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு பணம் தரவேண்டியவன் தேர்தலில் ஜெயித்து, கொட்டு மேளத்துடம் ஊர்வலம் போகின்றான். அவருக்கு வரும் பெண்ணும் அவரைப் போலவே இருக்கின்றாள். ஏமாறுவதில் கூட கொஞ்சம் சந்தோஷம்.

72. சண்பகப் பூ

         சுடர் மாதிரி ஒரு பெண். வெகு அழகான பெண், இளம் வயதில் திருமணமாகி கணவனையும் இழக்கின்றாள். கணவனின் அண்ணன் அவளை படிக்க வைக்க அழைத்துச் செல்கின்றான். தாத்தா செண்பகப் பூவை முகர்ந்தால் ரத்தம் வராமல் போகுமா என்கின்றார், பாட்டி எல்லாருக்கும் வராது என்கின்றார். ரத்தம் வராதவர்கள் பூவை கொண்டாடலாம், அனுபவிக்கலாம். கணவனின் அண்ணனுக்கு ரத்தம் வந்தது போல் தெரியவில்லை. இதைவிட பூடகமாக அந்த உறவைக் கூற முடியாது. செண்பகப் பூ தான் தெரியும், அதை முகர்ந்தால் மூக்கிலிருந்து ரத்தம் வருமா என்ன?

01 ஜனவரி 2013

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 7


முந்தைய பகுதிகள்


பகுதி 4

61. சந்தானம்

        எனக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும், நாய்கள் போன்று விசுவாசமானவை அல்ல என்றாலும், குழந்தை போல நம் மீது உரிமை எடுத்து விளையாடும். முத்தையா என்னும் சாகச போலிஸ்காரருக்கு பூனை என்றால் கொள்ளை பயம், அவரின் எதிர் வீட்டுக் காரருக்கு பூனைதான் குழந்தை. முத்தையாவின் பூனை பயம் யாருக்கும் தெரியாது. முதலியார் வளர்த்த பூனையை வைத்து, முத்தையாவின் மகன் அவரை பயப்படுத்தியதால் முதலியாருக்கும் அது தெரியவருகின்றது. முத்தையா இறந்த நாளன்று, பூனை கிணற்றில் விழ, முதலியார் துடித்து போகின்றார். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், தமக்கு வலி வந்து துடிப்பதை விட, அவைகளின் வலி கண்டு துடிப்பது அதிகம்.


      ஈகோ (சரியான தமிழ் வார்த்தை என்ன?). மனிதனின் மனதினுள் உள்ள அழுக்குகளை, அதன் விகாரங்களை, அதன் நியாய அநியாய வாதப்பிரதிவாதங்களை இது போல வேறு எந்தக் கதையும் சொன்னதில்லை அல்லது நான் படித்ததில்லை. தி.ஜாவின் மாஸ்டர் பீஸ். சாமநாது தன் அண்ணண் மகனைக் கண்டு பொறாமைப் படும் ஒரு வலுவான, வயதான பெரியவர். அவரின் மனதிற்குள் நடக்கும் போராட்டங்களை, அழுக்கை அழகாக எழுதியுள்ளார். ஆரம்ப வர்ணனையிலிருந்து, அவரின் மனதிற்குள் நினைக்கும்  சம்பாஷணைகள், இறுதியில் அவர் பாயசத்தை கவிழ்த்துவிட்டு ஒரு கணம் தடுமாறும் நிலை வரை அருமையான விவரிப்பு. அருமையான நடை. அந்த காவேரித்தமிழை இவரை விட அழகாக செய்தவர்கள் யாரவது உள்ளார்களா?

31 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 6


முந்தைய பகுதிகள்


பகுதி 1
பகுதி 4

51. நடராஜக் கால்

       என் உறவினர் ஒருவர், நான் பி.எஸ்.ஸி கம்யூட்டர் சைன்ஸ் சேர்ந்த போது அவர் அவர் பெண்ணிற்கும் அதே சீட் தேடினார். கிடைக்காமல் பி.சி.ஏ சேர்த்து விட்டார்.  அதோடு நில்லாமல் எங்கள் வீட்டில் வந்து, பி.எஸ்.ஸி எல்லாம் வேஸ்ட், இப்ப எல்ல்ல்லாம் பி.சி.ஏ தான் என்று கொளுத்தி போட ஒரு வாரம் எரிந்தது. எல்லா ஊரிலும் இது போல வெட்டிப் பந்தா மாகானுபாவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு சகலமும் தெரியும், எல்லாம் தூசி. தாம் வாழும் வாழ்க்கை எப்படி இருந்தாலும் அது பெரிது, மற்றவர்களின் வாழ்க்கை எல்லாம் வெறும் வெற்றுவேட்டு. அப்படி பட்ட நடராஜரின் தாண்டவம். வெட்டியாக பூர்வீக சொத்தை உக்கார்ந்து அழிக்கும் நடராஜர், ஊரான் பெண்ணின் திருமணத்திற்கு உபதேசம் செய்கின்றார். அக்கால மிராசுதார்களின் வெட்டி பஞ்சாயத்தை சரியாக கிண்டலடித்துள்ளார்.

52. நடேசண்ணா

       தன்னை போல பிறரையும் நினை என்பதை வேறு விதமாக புரிந்து கொண்டுள்ள மக்கள் நிறைந்த உலகம். தன் மன அழுக்குகளை அடுத்தவர் மேல் ஏற்றி, தான் அவ்விடத்தில் இருந்தால் நாம் எப்படி நடப்போமோ அப்படித்தான் அவரும் நடப்பார் என்று நினைப்பவர்கள்தான் அதிகம். ஒரு பாடகருக்கும் அவரது ரசிகைக்கும் இடையிலான் உறவை கொச்சைப் படுத்தி ஊரே பேச, பாடகரின் பாடல் வெளியில் யாருக்கும் கேட்காமல், உள்ளே இறைவனுக்கு மட்டும் கேட்கும் படியாகின்றது. நல்ல கதை. விவரிப்பு, உள்ளாடும் மெல்லிய கேலி.

53. ஆயிரம் பிறைகளுக்கு அப்பால்

    டைப்ரைட்டர் சொல்லும் கதை. யாரையோ, எதையோ மையப்படுத்தி எழுதியது போல இப்பொது ஒன்றும் புரியவில்லை.

30 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 5


முந்தைய பகுதிகள்


பகுதி 1

41. இவனும் அவனும் நானும்
            தி. ஜாவின் கதைகள் சில கொஞ்சம் வரம்பு மீறிய உறவுகளை, மன விகாரங்களைப் பற்றி நாசுக்காக தொட்டுச் செல்லும். பல இசையுடன் இழைந்து செல்லும். இவன் அவன் மனைவியைப் பற்றி மனதில் சேர்த்து வைத்திருக்கும் குப்பையை அவன் தன் இசையால் சுத்தப்படுத்துகின்றான். நான் என்னும் மனசாட்சி மீண்டும் குப்பை சேருமா? என கேட்டுக் கொண்டுள்ளது. பிடித்த கதையில் ஒன்று. அவன் பாடும் வர்ணனை நாமும் ஒரு தூய இசையை கேட்கும் அனுபவத்தை தருகின்றது. ஒரு அருமையான கதை.

           பல பழங்கால பெரியவர்கள் பேசுவதைக் கேட்டால் அப்படிப்பட்ட காலத்தில் நாம் இல்லையே என்று ஒரு ஏக்கம் உண்டாகும், சில சமயம் நமக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். இப்போது நேர்மைக் குறைவு என்பது அப்போது மரியாதை, அந்தஸ்த்தாக இருந்திருக்கின்றது. ராஜா காலத்து காணிக்கை மரியாதை சில காலம் வரை அதிகாரிகளுக்கும் இருந்து வந்துள்ளது. இப்போது உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பெரியவர் கதை. தி. ஜாவின் தஞ்சாவூர் வர்ணனை ஒரு கிராமத்திற்கு அழைத்து செல்கின்றது. லஞ்சமாக பெற்ற பணத்தை பெருமையாக பேசும் அவர் நித்திய நியமை தருவது ஒரு அருவெருப்பைத்தான்.


          பிடித்த சிறுகதை. முத்து ஒரு சமையல்காரர். வயது அவரின் திறமையின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. அவரது ஒரே மகன் அக்கண்ணா குட்டி, உருப்படாதது என்று ஆசிர்வதிக்கப்பட்டும், வெளியே எங்கோ வேலைக்கு சேர்ந்து அப்பாவிற்கும் பணம் அனுப்புகின்றான். அவனுக்கு சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் தரும் புண்ணியவானைப் பார்க்க போகும் முத்து, அவ்வளவு பணம் தரக்காரணத்தைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றார். முடிவில் அவர் மனம் மெதுவாக மாறக் காரணம் பணமா? இல்லை உண்மையான அறிதலா?

12 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 3

முந்தைய பகுதிகள்

பகுதி - 1
பகுதி - 2

21. திண்ணை வீரா !

         நாம் அடிக்கடி பார்க்கும் மனிதர்தான். வாயால் பேசியே காரியம் சாதிக்கும் ஒருவர். ஊரார் பஞ்சாயத்தை தீர்க்கும் பெரிய மனிதர். "எழுந்து வந்தேன்னா என்ன ஆகும் தெரியுமா" என்று மிரட்டியே அனைவரின் பஞ்சாயத்தை தீர்ப்பவரின் மிரட்டலின் முரண் கடைசியில். நடக்காத மிரட்டல் என்றாலும் அதற்கு கீழ்படியும் மக்கள். தி. ஜாவின் விவரிப்பும், வட்டார வழக்கும்  மிகவும் கவர்ந்துவிட்டது.

22. அடுத்த

          பிரசவத்திற்கு ஆம்புலேடத்திற்கு காத்திருக்கும் தம்பதியினரின் கதை. ஒரு குழந்தையை வளர்க்கவே அவனவன் திணறும் போது அக்காலத்தில் எப்படி இரட்டை இலக்க குழந்தைகளை வளர்த்தனரோ. செல்வம் உடையவருக்கும் மேலும் செல்வமும், இல்லாதவர்க்கு இல்லாமையே தொடர்வதும் குழந்தைச் செல்வத்திற்கும் பொருந்தும். எல்லாம் பகவான் செயல் (எஸ்.வி சேகர் குரலில் படித்துக் கொள்ளவும்)

11 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 2

இதன் முந்தைய பகுதி

11. இசைப் பயிற்சி

            சிலருக்கு பழமை மீது கோபம் இருக்கும், பழைய பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். அதே சமயம் அவர்களின் சூழல், வளர்ப்பு, அக்கம்பக்கம் அவர்களை மா(ற்)ற விடாது. அப்படிப்பட்ட ஒருவர் மல்லி. ஒரு கிறிஸ்தவனுக்கு சங்கீதம் சொல்லித்தர ஆசைப்படும் அவர், அவரின் சுற்றத்தை தாண்ட முடியாமல், தோட்டத்தில் நாற்பதடி தூரத்தில் வைத்துக் கற்றுத்தருகின்றார். கடைசியில் அவர் உணரும் பயமும், தனிமையும் யதார்த்தம்

12. விளையாட்டு பொம்மை

           ஒரு கட்டத்திற்கு மேல் உடலுக்கு வயது ஏற ஏற முதியவர்கள் மனம் இளமையாகிக் கொண்டே வருகின்றது. சிங்கம் போன்ற ஒரு வக்கீல், வயதாகி ஒரு குழந்தை போல் அனைத்தையும் மறந்து, மூன்று வயது குழந்தை சொல் படி கேட்டு நடக்கின்றார். நல்ல கதை, அப்பெரியவருக்கும் மனைவிக்கும் உண்டான பாசம், காதல் உருக்கம். பல வருடம் வாழந்தவரை விட்டு பிரிவது என்பது சாதரணமல்ல.

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 1

தி.ஜா ஒரு மிகச்சிறந்த நாவலாசிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியரும் ஆவர் என்பதை காட்டுகின்றது, அவரின் சிறுகதை தொகுப்பு. இது அவரின் படைப்புகளின் முதல் தொகுதி. மொத்தம் 70 கதைகள் பகுதி பகுதியாக வரும்.

அவர் சிறுகதைகளையும் நாவல்களைப் படிக்கும் போது ஒரு அமைதியான நதி அருகில் அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்ப்பது போன்ற சித்திரம் உண்டாகின்றது. இதிலும் பெரும்பான்மையானவை தஞ்சாவூர் ஜில்லா கதைகள் போலத் தெரிகின்றது. அனைத்து கதைகளிலும் பலம் உரையாடல்.


            கங்கைக்கு தன் அக்காவிற்காக வரும் சின்னசாமி, அங்கு தன்னை ஏமாற்றிய அன்னதாதா துரையப்பாவை பார்க்கின்றார். கதை என்று பெரிதாக இல்லை, ஏமாற்றும் மனிதர்களையும், தன்னை ஏமாற்றியவனின் பாவத்தை சேர்த்து கங்கையில் கரைக்கும் மனிதர்களையும் பற்றியது.