அசோகமித்ரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அசோகமித்ரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 நவம்பர் 2013

ஒரு பார்வையில் சென்னை நகரம் - அசோகமித்திரன்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

சென்னை எனக்கு பிடிக்காத நகரம். படிப்பிற்காகவும், வேலைக்காகவும் அங்கு சுமார் 2.5 ஆண்டுகள் இருந்தேன். இப்போது மாமனார் ஊர் வேறு ஆகிவிட்டது. முழுமுதல் காரணம் சென்னையின் வெப்பம் (இரண்டு வரிகளுக்கு நடுவில் ஒரு முற்றுப்புள்ளி உள்ளது, சேர்த்து படித்துவிட வேண்டாம்) . என்னுடைய ஊர் மலையடிவாரம். வருடத்தில் மூன்று மாதங்கள் கடும் வெயில் இருந்தாலும், வெக்கை தெரியாது. மற்ற மாதங்களில் சாரல் அல்லது குறைவான வெயில். அதை விட்டு சென்னையில் ஒரு அடுக்குமாடியில் ஒரு வீட்டில், புழுக்கத்தில் தங்குவது ஒரு தண்டனைதான். அடுத்தது அந்த நெரிசல், அவசரம். மரங்களை பார்ப்பது என்பதே அரிதான ஒரு விஷயமாகிப் போன அவலம். 

சிலருக்கு சென்னை சொர்க்கலோகம். பா.ராவிற்கு சென்னை சத்தம் ஒரு பாதுகாப்பை தருகின்றது. என் பாதுகாப்பிற்கு இப்பொதைக்கு பெங்களூரு சத்தமும், எங்களூரின் அமைதியான சத்தமுமே போதுமானதாக இருக்கின்றது. இனி தலைப்பிற்கு சம்பந்தமாக :

அசோகமித்திரன் ஒரு சென்னைவாசி. ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்து, பல ஆண்டுகளாக சென்னையில் வாழ்ந்துவருபவர். ஒரு காலத்திய சென்னையை பற்றிய ஒரு சித்திரம் இப்புத்தகம். சென்னையின் பல பகுதிகளை பற்றிய சின்ன சின்ன குறிப்புகள். அக்காலத்தில் எப்படி இருந்தது,எப்படி மாறியுள்ளது என்பதை அவருக்கே உரிய நடையில் எழுதியுள்ளார்.

தகவல்களை திரட்டுவது எளிது, அதை எழுதிவைப்பதும் எளிது. வெறும் தகவல்கள் என்பது வாய்ப்பாடு மாதிரி. அதை சுவாரஸ்யமாக்குவதுதான் திறமை. பாடபுத்தகத்தில் இருக்க கூடிய தகவல்களை, சுவாரஸ்யமான கட்டுரையாக்குவது எப்படி என்பதை இப்புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். "எப்படி" என்பதை விட, அது சாத்தியம் என்பதுதான் அறிந்து கொள்ள முடிவது. எப்படி என்று தெரிந்தால், அசோகமித்திரனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

15 அக்டோபர் 2013

கனவு தொழிற்சாலை - சுஜாதா

சமீபத்தில் சாரு நிவேதிதா அவரது தளத்தில் அசோகமித்திரனை போட்டு சாத்தியிருந்தார். காரணம் அ.மி ஜெயமோகனை பெரிய எழுத்தாளர் என்று கூறிவிட்டார். அந்த பாட்டை மட்டும் பாடி விட்டிருந்தால் பரவாயில்லை, அதோடு மற்றவர்கள் எல்லாம் சும்மா என்று அனுபல்லவியையும் பாடிவிட்டார். சாரு நிவேதிதாவின் தாக்குதலில் அவர் அசோகமித்திரனின் கரைந்த நிழல்களையும், சுஜாதாவின் கனவு தொழிற்சாலையையும் ஒப்பிட்டிருந்தார், இரண்டும் ஒரே மாதிரி என்று, இது கனவு தொழிற்சாலையை மீண்டும் எடுத்துப் படிக்க தூண்டியது.

கரைந்த நிழல்களையும், கனவு தொழிற்சாலையையும் ஒப்பிடவே முடியாது. இரண்டும் சினிமா சம்பந்தப்பட்ட கதை என்றாலும், கரைந்த நிழல்களின் உலகம் தனி, கனவு தொழிற்சாலையின் இடம் தனி. கரைந்த நிழல்கள் சில படிகள் மேலேதான் அமர்ந்திருக்கின்றது.

கனவுதொழிற்சாலை, சினிமாவின் பெரும்பாலான தளங்களை தொட்டு செல்கின்றது. அருண், அருமைராசன், மனோன்மனி என்று மூன்று ட்ராக். அருண் வெற்றி பெற்ற சினிமா நடிகன், வெற்றியை தக்கவைக்க போராடும் நடிகன். அருமைராசன் சினிமாவில் நுழைய போராடி, பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து ஜெயிப்பவன், மனோன்மணி போராடி கடையில் பொசுங்கி போகின்றாள்.

08 ஜூன் 2013

யுத்தங்களுக்கிடையில் - அசோகமித்திரன்

"கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் வரிசை மாறிக் கூறுவதுதானே கதை" என்று முன்னுரையில் கூறுகின்றார்.

 "இது வெற்றிக் கதையுமல்ல தோல்விக் கதையுமல்ல. பிழைத்திருத்தல் - அதுவும் கூடியவரை நியாயத்தையும் கண்ணியத்தையும் கைவிடாமல் பிழைத்திருத்தல். இவர்களை வீரர்களாகவும் கூறலாம்; சந்தர்ப்பவாதிகளாகவும் கூறலாம்" கதையை பற்றிய அவரது அறிமுகம்.

ஒரு குடும்பத்தின் கதை. கதை நடக்கும் காலம் இரண்டு உலக யுந்தங்களுக்கு நடுவில் நடக்கின்றது. ஒரு பள்ளி ஆசிரியருக்கு பிறந்த ஏகப்பட்ட குழந்தைகளில் மிஞ்சியவர்களின் கதை. 

ஒற்றனில் வரும் ஒரு கதையில், பல கதாபாத்திரங்கள், அவர்களின் உறவுகள் பற்றி வரைபடம் வரைந்து நாவல் எழுதுவது பற்றி எழுதியிருப்பார். அதே போல் எழுதியிருப்பார் போல், அத்தனை பாத்திரங்கள், அத்தனை உறவு முறைகள். இக்கதையில் வராத ஒரு உறவினர் மானசரோவரில் வருகின்றார். 

வழக்கமான ஆரம்பம் முடிவு என்ற அமைப்பு இல்லாத கதை. வாழ்க்கையின் ஒரு பகுதி. நான் லீனியர் கதை. அந்த ஆசிரியரின் பல குழந்தைகளில் மிச்சம் இருக்கும் மூன்று ஆண்கள், மூன்று பெண்களை பற்றி முன் பின்னாக சொல்லி வருகின்றார். 

முதலாம் உலக யுத்த முடிவில் ஒருவனுக்கு வேலை கிடைத்து ஊரை விட்டு போகின்றான், அவனுடன் சேர்த்து அவனது தம்பிகளுக்கும் வேலை தேடி தருகின்றார்ன். ரயில்வே. அசோகமித்திரன் அப்பா ஹைதராபாத்தில் ரயில்வேயில் வேலை செய்திருப்பாரோ. பல கதைகளில் நிஜாம் அரசும், ரயில்வேயும் வருகின்றது.


கதை ஆண்களை பற்றியே பேசினாலும், அடிநாதமாக இருப்பது பெண்கள்தான். பதினாறு குழந்தைகளை பெற்ற பெண், தன்னை விட இரண்டு மூன்று வயது அதிகமான கணவனை அடைந்த பெண், இருபது வயதில் கணவனை இழந்த பெண். 


//யார் இருந்தால் என்ன, யார் மறைந்தால் என்ன, பெண்கள் சுகப்படுவதில்லை//

முன்னுரையில் கூறுவது போல கதை மாந்தர்கள் அனைவரும் சாதரணர்கள். சாதரணர்கள் வீரன் கிடையாது, கோழையும் கிடையாது. வாழ்க்கையை முடிந்த வரை வாழ பார்க்கின்றார்கள். சிறிது சமரசத்துடன். பெண்கள் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு ஓடுகின்றனர்.

ஐம்பது வருடங்களுக்கு முந்தைய சமூகத்தை நமக்கு காட்டுகின்றார். யுந்த களேபரங்கள். ரயில்வேயின் பெருமை. 

சின்ன நாவல்தான். ஏகப்பட்ட கிளைகள். யார் யாருக்கு என்ன உறவு என்று மனதில் வரிசைப்படுத்திக் கொள்ளும் முன் கதை முடிந்துவிடுகின்றது. அசோகமித்திரனின் கூறாமல் கூறிச் செல்வதைப் பற்றி தனியாக சொல்லத்தேவையில்லை. அவரது வழக்கமான நகைச்சுவை இதில் அவ்வளவாக இல்லை. சர்வசாதரணமாக ஒரு வரியில் பெரிய திருப்பத்தை கூறிவிட்டு அடுத்த பகுதிக்கு போய்விடுகின்றார். சின்ன சின்ன வரிகள். ஆனால் சொல்ல வந்ததை கச்சிதமாக கூறிவிடுகின்றது. முதல் முறை படிக்கும் போது கொஞ்சம் குழப்பும். இரண்டாம் முறை படிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கின்றது.

ஒரு வரியில் சொன்னால், நமது பாட்டிகள், தாத்தாக்களின் கதை.

14 ஏப்ரல் 2013

தண்ணீர் - அசோகமித்திரன்

தண்ணீர் ஒரு மணி நேரத்தில் படித்து முடித்துவிடக் கூடிய் ஒரு குட்டி நாவல். ஆனால் அது எளிதல்ல. அது தரும் தாக்கம் அதை அப்படி எளிதில் படிக்க விடாது. 

"யாரோ ஒரு பெண் தண்ணீருக்காக இங்கும் அங்கும் அலைந்ததை தொடர்ச்சியாக பார்த்ததன் விளைவு இக்கதை" என்கின்றார் அசோகமித்திரன்.

தண்ணீர் பிரச்சினை என்றுமுள்ள ஒரு விஷயம். என் ஊரில் முன்பு தண்ணீர் பஞ்சம் படு பயங்கரம், பக்கத்து தெருவில் போய் தண்ணீர் சுமந்து வருவார்கள். வீட்டில் விஷேஷம் என்றால் தண்ணீரை விலைக்கு வாங்கி கொண்டு வருவோம். மழை பெய்யும் போது பிடித்து வைத்துக் கொள்வோம். பின்னர் முல்லையாற்றிலிருந்து தண்ணீர் வீட்டிற்கே வர ஆரம்பித்தது. கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டோம். ஆனால் இப்போதும் சில சமயம் வாரக்கணக்கில் தண்ணீர் வராமல் போய்விடும். இன்றும் தண்ணீரை ட்ரம்மில் கொண்டு வருவது நடக்கிக்ன்றது. ஆனால் முன்பிருந்த கொடுமை இல்லை. இப்போது தண்ணீருக்கு பதில் மின்சாரம்.

இக்கதை அது போன்ற ஒரு கொடுமையான தண்ணீர் பிரச்சினை காலத்தை பேசுகின்றது. அது ஒரு பின்புலம், அதன் மேல் இரண்டு சகோதரிகளின் கதை. அசோகமித்திரனின் தனிப்பட்ட பேட்டிகளை படிக்கும் போது அவர் கூறுவது வாழ்க்கை மேல் எவ்வித குற்றச்சாட்டுமில்லை, வருவதை ஏற்றுக் கொண்டேன் என்பது. அவரது கதைகளும் அவரைப் போலவே, வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து நம்மை கூறுபோடுவதில்லை. வாழ்க்கையை ஒரு அடி தள்ளி நின்று நமக்கு காட்டுகின்றது. நாம் அதை புரிந்து கொள்ள வேண்டியதுதான். 

19 ஜனவரி 2013

பயாஸ்கோப் - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் கட்டுரை தொகுப்பு. சினிமா பற்றிய கட்டுரைகள் மட்டும். அசோகமித்திரன் சினிமா துறையுடன் நெருங்கிய தொடர்புடன் இருந்து வந்திருக்கின்றார். அந்த அனுபவங்கள் ஏற்கனவே நாவல்களாக மாறி இருக்கின்றது. அதைத் தவிர சினிமா பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. 

இந்திய சினிமா, உலக சினிமா (இந்தியா வேறு உலகம் என்பது பலரின் எண்ணம் போல, பெரும்பன்மையோர் வழியே நம் வழி) பற்றி விபரமாக எழுதியுள்ளார். 

கட்டுரைகளை சினிமா புள்ளிகளை பற்றியவை, குறிப்பிட்ட சினிமாக்களை பற்றியவை, ஜெமினி ஸ்டூடியோவின் வரலாறு (கிழக்கில் இருந்து ஏன் இன்னும் ஜெமினி ஸ்டூடியோ - கனவின் கதை வரவில்லை?)  என பல வகையாக பிரிக்கலாம். பல சுவாரஸ்யமான தகவல்களை அவருக்கே உரித்தான சுருக் நறுக் நடையில் எழுதியுள்ளார். சில தகவலகள் மிகப் பழையவை, அது தேவையா, அது ஏன் இப்போது என்று கூட எண்ணலாம், அதற்கு பதில் அவரே தருகின்றார். "மனித நினைவு, மனித தேர்விற்கும் கட்டுபாட்டிற்கும் உட்பட்டதா என்பது சந்தேகத்திற்கு உரியது"

05 ஜனவரி 2013

1945ல் இப்படி இருந்தது - அசோகமித்திரன்

மற்றுமொரு அசோகமித்திரனின் சிறுகதை தொகுப்பு. முன்பு சொன்னதே மீண்டும். இது ஒரு சிறிய அறிமுகம், கதையின் அனுபவம். அவ்வளவே

காலச்சுவடு பதிப்பகத்தின் புத்தகம். ஒரு விநோதம், ஒரே பக்கம் இரண்டு தடவை அச்சாகியுள்ளது. தலைப்பு இரண்டு தடவை, நூல் அறிமுகம் இரண்டு தடவை, மறுபடியும் உள் தலைப்பு இரண்டு தடவை, அட்டவணை இரண்டு தடவை. பார்த்ததும் பயந்து போனேன். கதைகளும் இரண்டு இரண்டு பக்கம் இருக்குமோ என்று. நல்லவேளை இல்லை.

அசோகமித்திரனின் செகந்திராபாத், சென்னை அனுபவங்கள் கதையாகியுள்ளது, சாதாரணச் சம்பவங்கள் என்று தோன்றுவது எப்படி ஒரு கதையாக மாறுகின்றது என்பதற்கு உதாரணம் இக்கதைகள்.
1. கோல்கொண்டா

       கோல்கொண்டா எப்போதோ என் மாமா போய்விட்டு வந்து காட்டிய புகைப்படங்களில் பார்த்தது. அதைப் பற்றி அதிகம் கேள்விபட்டதுமில்லை.  கோல்கொண்டாவை ஆண்ட மன்னன் டணாஷா, கோல்கொண்டா மீது படையெடுத்து வருகின்றான் ஒளரங்கசீப். இவனைப் பற்றி மதனின் தயவால் கொஞ்சம் தெரியும். ஒளரங்கசீப்பின் விநோத நிபந்தனையை நிறைவேற்ற முடியாமல் இருப்பதால், டணாஷவிற்கு அவனை எதிர்ப்பதை விட வேறு தெரியவில்லை. கடைசியில் அவனது மந்திரி மாதண்ணா, அந்நிபந்தனையை நிறைவேற்றுகின்றார்.

2. உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள வித்தியாசம்*
       
          நீண்ட தலைப்பு. உண்மையை அப்படியே புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. பெரும்பாலும் உண்மைக்கும் புரிதலுக்கும் நடுவில் ஒர் இடைவெளி இருக்கும் சாத்தியம் அதிகம். குழந்தையில்லா தம்பதியர் வீட்டில் உறவாக வரும் அத்தை, அவள் இறந்த பின் தெரியவரும் உண்மை, தம்பதியரின் நெருக்கத்தை காட்டுகின்றது. தலைப்பையும் முடிவையும் சேர்த்தால் அவர்களுக்கு ஏன் குழந்தையில்லை என்று ஒரு யூகம் செய்ய வைக்கின்றது. கதை ஏற்கனவே கேள்விபட்ட கதை, படத்தில் கூட நகைச்சுவை பகுதிகளில் வந்துள்ளது என்று நினைக்கின்றேன்.

03 ஜனவரி 2013

அழிவற்றது - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் நாவல்களை விரட்டி விரட்டி படித்தபின் அவரது சிறுகதைகள் மேல் கவனம் திரும்பியது.  ஒரு எழுத்தாளனின் விஸ்வரூபம் அவரது சிறுகதைகளில் தான் தெரியும். தி. ஜா, சுஜாதா இவர்கள் இருவரின் சிறுகதைகள் அவர்களது நாவலைவிட அதிகம் சிறபபானதாக எனக்கு தோன்றுகின்றது.

அசோகமித்திரனின் அனைத்து சிறுகதைகளின் தொகுப்பை தேடித்தேடி களைத்துப் போனேன். மதுரையில் அசோகமித்திரனின் கதை என்றால் விற்பனைப் பெண் முழிக்கின்றார். பெங்களூர் புத்தக கண்காட்சியிலும் தேடினேன் இல்லை. காலச்சுவடில் அவரது சமீபத்திய சிறுகதைகள் என்று இரண்டு தொகுப்பு பார்த்தேன். வாங்கும் முன் சந்தேகம் வேறு, அண்ணே இது பெரிய தொகுப்பில் உள்ள கதைகளா? இல்லை புத்தம் புதுசா என்று கேட்டேன். சார் அப்படி எல்லாம் வராது, இது எல்லாம் புதிது என்று கூறி அனுப்பிவைத்தார். முழுத் தொகுப்பை பார்த்தால் தான் தெரியும்.

அவரின் ஒற்றன் நாவலே ஒரு சிறுகதை தொகுப்பு போலத்தான். நாவல்களிலேயே சுருங்கச் சொல்லி விரையும் அவரின் சிறுகதைகள் அதைப் போலவே கச்சிதம்.

ஒரு சில கதைகளைப் படித்தால் இது என்ன கதை என்று தோன்றாமல் இல்லை. இதை எழுத என்ன அவசியம், இதனால் நீவிர் சொல்ல வந்த சேதி என்ன என்று கேட்கத் தோன்றுகின்றது. சில கதைகள் குழந்தைகளுக்கான கதையாகவும் உள்ளது, நன்னெறி வகுப்புகளுக்கான கதைகள். ஒரு சில கதைகள் கதை என்று கூற முடியாதபடி ஒரு சம்பவத்தை கூறிச் செல்கின்றது முடிச்சுகளோ சிக்கல்களோ இல்லாமல் வாழ்வின் ஒரு பகுதியை முழுமையாக பார்க்கும் அனுபவம். சில கட்டுரையாக போக வேண்டியது, அவரின் திறமையால் கதையாக வாழ்வு பெற்றுள்ளது.

அழிவற்றது என்பது பவுதீகத்தின் ஒரு விதி. "ஆற்றல் அழிவற்றது".

22 நவம்பர் 2012

விழா மாலைப் போதில் - அசோகமித்திரன்

கிழக்கு வெளியிட்டுள்ள குறுநாவல் தொகுப்பு. மொத்தம் நான்கு குறுநாவல்கள்.

பெரும்பாலன புத்தகங்கள் எல்லாம் ஏற்கனவே அவசர கதியில் படித்தவை. இப்போது அனைத்தும் இரண்டாம் ரவுண்ட்.

1. இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
2. விழாமாலைப் போதில்
3. என்றும் இன்று
4. மணல்

இன்ஸ்பெக்டர் செண்பகராமன்

ஒரு சிறுவனுக்கும் ஒரு இன்ஸ்பெக்டருக்கும் இடையிலான நட்பை பற்றிய கதை. ஐந்தாவது பாரம் படிக்கும் ஒரு சந்திரசேகரன் கூடப் படிக்கும் சினேகிதன் காந்திமதி. காந்திமதியின் மாமா இன்ஸ்பெக்டர் செண்பகராமன். ஒரு நாள் காந்திமதியுடன் வீடு திரும்பும் சந்திரசேகரனை சந்திக்கும் செண்பகராமன், அவனைப் பிடித்து போக அவனுடன் நட்பாகின்றார்.

சினிமாவிற்கு சந்திரசேகரனின் குடும்பத்தை அழைத்து செல்கின்றார், அவன் உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றார். அதோடு அவனை வேறு ஒரு இடத்திற்கும் அழைத்து செல்கின்றார். அந்த இடத்தில் இருக்கும் பெண், செண்பகராமனின் மனைவிக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவளாக இல்லை.

ஒரு நாள் செண்பகராமன் இறந்து போகின்றார். செண்பகராமன் தொடர்பில் இருக்கும் பெண்ணை பார்க்க விரும்புகின்றார், அது நிறைவேறாமல் இறந்து போகின்றார். அந்த பெண்ணை கண்டு சந்துரு செண்பகராமன் குடுத்த பணத்தை தந்துவிட்டு விஷயத்தை சொல்கின்றான். கதை முடிந்தது.

இந்த சந்துருவும் 18ம் அட்சக்கோடு சந்துருவும் ஒரே ஆள் என்ற எண்ணம் தோன்றுகின்றது. அவனின் நாடக அனுபவம், லான்சர் பாரெக்ஸ் எல்லம் அதே போல் உள்ளது.  மிகச்சிறிய கதை, கொஞ்சம் பெரிய சிறுகதை என்றுதான் சொல்ல வேண்டும்.

07 நவம்பர் 2012

மானசரோவர் - அசோகமித்திரன்

அசோகமித்திரனைப் பற்றி நான் புதிதாக சொல்ல ஏதுமில்லை. இது அவரின் மற்றுமொரு சினிமா துறை பற்றிய நாவல். ஒரு எழுத்தாளனுக்கும், ஒரு சினிமா நடிகனுக்கும் உள்ள நட்பை பற்றிய கதை. கரைந்த நிழல்கள் போல் முழுவதும் சினிமா பின் சுற்றாமல் அந்த இருவரைச் சுற்றியே வருகின்றது.

கதையை எழுத்தாளனும் அவரது நண்பன் சினிமா நடிகனும் மாறி மாறி கூறிச்செல்கின்றார்கள். தமிழ் சினிமாவில் நடிக்கும் இந்தி நாயகன் சத்தியன் குமார், அவன் சினிமா தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரியும் ஒரு  எழுத்தாளர் கோபாலைக் கண்டு அவரிடம் நட்பு கொள்கின்றான். அந்த நட்பால் கோபாலுக்கு  அந்த கம்பெனியில் ஒரு மதிப்பு ஏற்படுகின்றது. ஒரு நாள் கோபாலனின் மகன் இறந்து போகின்றான், மனைவியின் மனநிலையும் தவறுகின்றது. மகன் இறந்ததை விட அவன் இறப்பிற்கு காரணம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது. வீட்டை விட்டு கிளம்பி எங்கோ செல்கின்றார்.

சத்தியன் குமார் அவரைத் தேடி அலைகின்றான் இதனிடையில் கோபாலனுக்கு தெரிந்த ஒரு பெண்ணை கூட்டிக் கொண்டு சென்று தன் வீட்டில் வைத்துக் கொள்கின்றான். கடைசியில் ஒரு கிராமத்தில் ஒரு ஓடைக் கரையில் ஒரு சித்தருடன் இருக்கும் எழுத்தாளரை சந்திக்கின்றான். சித்தர் அவனின் மானசரோவரை அவனுக்கு அடையாளம் காட்டுகின்றார்.

01 நவம்பர் 2012

ஆகாயத்தாமரை - அசோகமித்திரன்

"உடனே அங்குமிங்கும் சுற்றிப் பார், அலைந்து பார், தேடிப் பார். இந்த வேலையை விட்டொழித்துவிட்டு உடனே வேறிடத்தில் சேர்ந்துக்கொள். சொல்லாதே, என்னிடம் சொல்லாதே."

"உன்னுடைய இன்றைய எஜமானனுக்கு உன்னைத் துரோகம் செய்ய வைப்பவனாக என்னை மாற்றாதே."

ஒரு இளைஞனுக்கு இரவில் முகமறியா ஒருவர் செய்யும் உபதேசத்தில் ஆரம்பிக்கின்றது.

ஆகாயத்தாமரை என்பது குளம் குட்டைகளை நாசப்படுத்தும் ஒரு தாவரம் என்றுதான் தெரியும். ஆனால் ஆகாயத்தாமரை என்பதை, ஆகாயத்தில் உள்ள தாமரை என்று இல்லாத ஒரு பொருளுக்கு உவமையாக்குகின்றார்.

15 அக்டோபர் 2012

கரைந்த நிழல்கள்

"சினிமான்னா என்னாங்க  காரு சோறு இது இரண்டும் தானுங்களே. புரொடக்ஷன் நடக்கற வரைக்கும் அஞ்சு ரூபா பத்து ரூபா சாப்பாட்டுக்குக் குறைஞ்சு வேலைக்காரன் கூட சாப்பிடமாட்டான். பத்து பைசா பீடா வாங்க ஆறு மைல் எட்டு மைல் செளகார்பேட்டைக்கு இரண்டு கார் போகும்" என்று முடியும் இக்கதை சினிமாத்துறையினரின் கதையை இரண்டு வரியில் சொல்கின்றது.

02 அக்டோபர் 2012

ஒற்றன் - அசோகமித்திரன்

18வது அட்சக்கோடு படித்ததும் அசோகமித்ரனின் நூல்களை வாங்க ஆரம்பித்தேன். பெரும்பாலானவர்கள் ஒற்றனைப் பற்றி சிலாகித்து கூறியிருந்தனர். ஒற்றன் என்ற தலைப்பு எதோ உளவாளியைப் பற்றிய் கதை என்று தோன்றவைக்கின்றது. படித்தபின் தான் தெரிந்தது இது வேறு வகை, அமெரிக்கா சென்று "டகரஜான்" ஆன அசோகமித்திரனின் பயணக்கதை என்று. அவர் இதை புனைகதை என்கின்றார். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் போல இதுவும் நிஜமும் கற்பனையும் கலந்த கலவையாகத்தான் இருக்கும்.

அசோகமித்திரன் ஒரு எழுத்தாளர் சந்திப்பிற்கு அயோவா சிட்டிக்கு சென்று 7 மாதங்கள் தங்கியிருந்த அனுபவங்களை கதையாக்கி தந்துள்ளார். இது நாவல் எனப்படுகின்றது, இந்த வடிவத்தில் நான் படித்த முதல் நாவல் என்பதால் இது எப்படி நாவலகும் என்ற குழப்பம் இன்னும் உள்ளது. ஒவ்வொரு அந்தியாயமும் அதனளவில் முழுமையானது. தனியாக எடுத்தால் ஒரு சிறுகதையாகும், முதலிரண்டு அந்தியாயங்களைத் தவிர மற்ற பகுதிகளை வரிசை மாற்றினாலும் வடிவம் கெடாது.

18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்

புத்தகம் படிக்கும் வழக்கம் சிறுவயது முதலிருந்தாலும், இணையத்தின் மூலமாகத்தான் பல நல்ல எழுத்தாளர்கள், புத்தகங்கள் அறிமுகமானர்கள். சிலிக்கான் ஷெல்ப், ஜெயமோகன் இவர்களின் தளத்தில் பல புத்தக விமர்சனம், அறிமுகம் கிடைக்கப்பெற்றேன். அதே போல் புத்தகம் வாங்குவதும் பெரிய சவாலாக இருந்து. பெங்களூரில் தமிழ் புத்தகத்தை எங்குவாங்குவது. ஹிக்கின்பாதம்ஸில் சமையல் கலைதான் கிடைக்கின்றது. அதற்கும் இணையம் தான் துணை. கிழக்குப்  பதிப்பகத்தின் செயல்பாடு மிகச்சிறந்தது.

அசோகமித்திரனின் பெயரைக் கேட்டிருந்தாலும் அவரின் புத்தகங்கள் எதையும் படித்ததில்லை, புத்தகங்களைப் பற்றியும் கேள்விபட்டதில்லை. அவரின் தி.ஜாவை பற்றிய பேட்டியை சொல்வனத்தில் படித்து கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருந்தது. அதோடு அவரின் கதைகள் சீரியஸாக இருக்குமோ என்ற எண்ணம் வேறு. 18வது அட்சக்கோடு பற்றி பலரும் பேசுவதைக் கேட்டுத்தான் வாங்கினேன். எப்புத்தகத்தையும் வேகமாக பல முறை படிப்பது என் வழக்கம். முதலில் புத்தகத்தை முடிக்க வேண்டும் என்ற வெறி. பின்னர் மெதுவாக பல முறை படிப்பதுண்டு.