14 ஜனவரி 2020

ஓநாய் குலச்சின்னம் - ஜியாங் ரோங்

சீனாவில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்த நாவல். தமிழில் சி. மோகன் மொழிபெயர்த்துள்ளார்.

தலைப்பை பார்த்தவுடன் எவ்வித பிம்பமும் கிடைக்காத நாவல்கள் பல உண்டு. அதில் இதுவு ஒன்று. ஆங்கிலத்தில் Wolf Totem என்ற பெயரில் வெளிவந்த நாவல். Totem என்பதை குலமரபு என்று கூகுள் மொழி பெயர்க்கின்றது. ஓரளவிற்கு அது சரியாக வருகின்றது. நாவலின் உள்ளேயும் அதையே பயன்படுத்தியிருந்தால் இன்னும் எளிதாக இருந்திருக்கும். குலச்சின்னம் என்றால் ஏதோ ஒருவர் ஒரு பெரிய பதாகையை பிடித்து கொண்டு போவது போல தோன்றுகின்றது. 

முதலில்  சில செய்திகளைப் பார்க்கலாம். 

ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களை கொல்ல முடிவு. ஒட்டகங்கள் அதிகமாக பெருகி, அங்கிர்ந்த நீர் நிலைகளை அனைத்தையும் காலி செய்வதால் அவற்றைக் கொல்ல முடிவு. ஒட்டகம் ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்கு அல்ல. வெளியிலிருந்து வந்தவை, இன்று அவை லட்ச்சக்கணக்கில் பெருகியுள்ளன, ரோகிங்கியாஸ் மாதிரி. 

வயலில் இருக்கும் பாம்புகளை அனைத்தையும் கொன்றதால், எலிகளின் அதிகமாகி பயிர்கள் அழிவு. 

சீனாவில் குருவிகளால் பயிர்களுக்கு சேதம் என்று மாவோ காலத்தில் அனைத்து குருவிகளும் கொல்லப்பட்டன, ஆனால் குருவிகள் பயிர்களை மட்டுமல்ல, அதில் இருக்கும் புழுக்களையும் சேர்த்து தின்கின்றன என்பதை அறிய கொஞ்சம் காலம் ஆனது, குருவிகளை விட குருவிகள் இல்லாததால் பிழைத்த  பூச்சிகள் அழித்த பயிர்கள் அதிகம். பின்னால் குருவிகளை மார்க்சியத்தின் பெயரால் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தது.

இவை அனைத்தும் இயல்பான இயற்கை சமநிலையை மனிதன் மாற்ற முயன்றதன் விளைவு. இயற்கை தன் சமநிலையை எப்போது பேணிக் கொண்டிருக்கும். நமது முன்னோர்கள் அதை தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். அந்த சமநிலையை குலைக்கும் எவையும் பின்னாளில் மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. சீனாவின் மங்கோலியப் பகுதிகளில் நடந்த அப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பற்றி பேசுகின்றது இந்த நாவல்.

04 ஜனவரி 2020

கரும்புனல் - ராம் சுரேஷ்

தமிழில் வெளி மாநிலங்களை அல்லது வெளி நாட்டை மையமாக வைத்து புனையப்பட்ட நாவல்கள் மிகக்குறைவு. துப்பறியும் நாவல்கள், பயணநூல்கள் எல்லாம் கணக்கில் கிடையாது. இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, ஆதவன் போன்றவர்கள் டெல்லி, பெங்களூரை வைத்து பல கதைகள் எழுதியிருந்தாலும், அந்த கதைகளை மதுரைக்கோ அல்லது சுஜாதா பாணியில் சொல்வதானால் கருத்தாங்குடிக்கோ மாற்றினாலும் ஒன்றும் கெட்டுவிடாது. 

புயலிலே ஒரு தோணி மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனிஷியாவை நமக்கு கண்முன் காட்டினாலும், அங்கு இருக்கும் நம் மக்களின் பிரச்சினைதான் பேசப்பட்டது, இந்தோனேஷிய சுதந்திரப் போராட்டம்,மலேஷிய புரட்சிக்காரர்கள் பற்றி இருந்தாலும் அது ஒப்பீடளவில்  குறைவே. 

முழுக்க முழுக்க ஒரு பகுதியின் பிரச்சினையை மையமாக  கொண்டு வந்த முதல் நாவல் கலங்கிய நதி (இங்கு முதலாமிடம், இரண்டாமிடம் அனைத்தும் நான் படித்த அளவில்தான்) அது அஸ்ஸாம் மக்களின் அடிப்படைப் பிரச்சினையை சிறப்பாக பேசியது. இன்று CAA, NRC க்கு போராடும் கூட்டம் படிக்க வேண்டிய நூல்.

அதன்பின் ஒரு பிராந்தியத்தின் பிரிச்சினையை மிகச்சிறப்பாக பேசுகின்றது இந்த நாவல். அன்றைய பீகார், இன்றைய ஜார்க்கண்ட் மாநிலத்தின் பிண்ணனியில் அமைந்த நாவல். ராம் சுரேஷ் எழுதியுள்ளார். பினாத்தல் சுரேஷ் என்று பிரபலமானவர். ஹரன்பிரசன்னா இந்நூலைப் பற்றி பகிர்ந்திருந்தார். ஏற்கனவே அவர் பகிர்ந்திருந்ததை நம்பி ஒளிர்நிழல் என்னும் நாவலை வாங்கி நொந்து போயிருந்தேன். மிகச்சிறிய புத்தகம், இன்றுவரை அதை படிக்க என்னால் முடியவில்லை. இதுவேறு, கரும்புனல் என்ற தலைப்பு. பயந்து கொண்டே ஆரம்பித்தேன், ஆனால் முதல் அந்தியாயத்திலிருந்தே புத்தகம் பிடித்து உள்ளே இழுத்து விட்டது.