29 ஜூன் 2022

பேட்டை - தமிழ்ப்பிரபா

வட்டார வழக்கை எழுத்தில் கொண்டு வருவது மிகவும் கடினமான விஷயம். வட்டார வழக்கில் முக்கிய இடம் வகிப்பது அதன் ராகமும், ஏற்ற இறக்கமும். "ஏய் என்னாப்பா" என்பது மதுரையில் ஒரு வகையிலும், கோம்பையில் வேறு மாதிரியும் ஒலிக்கும். அதை அந்த ஊர்க்காரர்கள் மட்டுமே உணர முடியும். இதை எழுத்தில் ஓரளவிற்கே கொண்டுவர முடியும். அதை பலர் வெற்றிகரமாக செய்துள்ளனர். சுகா, ஜெயமோகன், சோ.தர்மன், ஜோ.டி.க்ரூஸ், வைரமுத்து, வெங்கடேசன், கி.ரா போன்றவர்கள்  திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், நாகர்கோவில், நாஞ்சில் நாடு, கோவை, தஞ்சை,மதுரை, தேனி வட்டர வழக்குகளில் பல நாவல்களை எழுதியுள்ளனர். 

சென்னை வழக்கில் எந்த நாவலும் படித்ததில்லை இதுவே முதல். ஜெயகாந்தன் ஒன்றிரண்டு கதைகளில் எழுதியிருந்தாலும் அந்தளவிற்கு ஈர்க்கவில்லை. சோ சில அரசியல் நையாண்டிகளில் பயன்படுத்தியிருந்தது எனக்கு கொஞ்சம் செயற்கையாக தெரிந்தது. இந்த நாவலில் எங்கும் வட்டார வழக்கு செயற்கையாக தெரியவில்லை. சென்னையில் மூன்று வருடம் மின்சார ரயிலில் சென்று வரும்போது கேட்ட அந்த மொழியை படிக்க முடிந்தது.  இயல்பாக அந்த மொழியை பேசினாலும், அதை எழுத்தில் கொண்டுவருவது கடினம். அதை சிறப்பாக செய்துள்ளார்.