சரஸ்வதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரஸ்வதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 நவம்பர் 2013

ஒரு நதியின் மரணம் - மிஷல் தனினோ

முகம்மது பின் துக்ளக்கில் வரும் ஒரு காட்சி
"உங்களுக்கு தமிழ் தெரியும்ன்னு சரித்திரத்துல இல்லையே"
"உங்கள் சரித்திரம் எல்லாம் பேத்தல்"
"எங்க பசங்க படிக்கின்றதெல்லாம் பேத்தலா"
"அது உங்கள் பிள்ளைகளை பார்த்தாலே தெரியுமே"

சரித்திரம் என்பது அன்றைய தேதிக்கு கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு புனையப்படுவது. ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள பல வழிமுறைகள் உண்டு என்பார்கள். நேரில் பார்ப்பது, அனுமானிப்பது என்று பல வழிகள். சரித்திரத்தில் பாதி அனுமானம்தான். கல்வெட்டுகள் மட்டுமே ஒரளவு நம்பகமானது என எண்ணலாம், ஆனால் அக்கல்வெட்டுகள் இன்றைய ஆட்சியாளர்கள் தம் சாதனைகளை அடித்து விடுவது போல இருந்திருந்தால்? புலவர்களின் பாடல்கள் என்பது, இன்றைய சினிமாக்காரர்கள் முதல்வர்களை பற்றி பேசுவதை போல இருந்திருந்தால்? சரித்திரம் என்பது இது போன்று ஒன்றிரண்டு விஷயங்களை கொண்டு அறியப்படுவதில்லையே? அதே போல் முழுமையான ஆதாரங்கள் இல்லை என்பதால் மட்டும் ஒரு விஷயம் நடக்கவில்லை என்றும் கூறமுடியாது.

நமது சரித்திரம் என்பது முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களால் பல உள் நோக்கங்களை கொண்டு எழுதப்பட்டது. அது இங்குள்ள பலரின் பிழைப்புக்கு வசதியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

அன்றைய தேதிக்கு சரித்திரம் உண்மை, நாளை அது மாறலாம். பள்ளியில் அனைவரும் படித்த ஒரு விஷயம் ஆரிய படையெடுப்பு. ஆரியர்கள் கைபர் போல கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்பது. பின்னர் படையெடுப்பு ஆரியர் இடப்பெயர்வாகியது. நாளை என்னவாகும் யாருக்கு தெரியும்.

சரஸ்வதி நமது புராணங்களிலும், வேதங்களிலும், இதிகாசங்களிலும் போற்றப்படும் நதி. திரிவேணி சங்கமத்தில் கங்கையுடனும் யமுனையுடனும் கண்ணிற்கு தெரியாமல் கலக்கும் நதி என்று நம்பப்படும் சரஸ்வதியின் சரித்திரத்தை பற்றிய புத்தகம்.