சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 ஜூன் 2016

நைலான் கயிறு - சுஜாதா

சுஜாதாவின் முதல் கதை.

இறங்கினான் என்பதை ஒவ்வொரு வரியில் எழுதினார் என்பது போன்ற புதுமைகளை(!) பலர் பல இடங்களில் வியந்தோதியிருப்பதை படித்திருக்கலாம். இப்புத்தகம் பதிப்பில் இருக்கின்றதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கவே கொஞ்ச நாள் ஆனது. உயிர்மையின் சுஜாதா தொகுப்புகளில் இது இல்லை. கணேஷ் வசந்த் தொகுதியில் இது இல்லை. தொகுப்பும் இரண்டுடன் நின்று விட்டது. கிழக்கில் வெளியானதும் கவனத்தில் படாமல் போய்விட்டது. 

கதை வெளிவந்த ஆண்டை கவனத்தில் வைத்து படித்தால், இதன் வீச்சு புரியும். கணேஷ் மட்டும் அறிமுகம். வசந்தை கணேஷ் என்ற பெயரில் அறிமுகம் செய்திருக்கின்றார். 

02 செப்டம்பர் 2015

ஆ - சுஜாதா

வெகு நாட்கள் கழித்து மீண்டும் புத்தகங்களை கையில் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

வார்ம் அப்பிற்காக சுஜாதாவிலிருந்து.

ஆ - கணேஷ் - வசந்த் கதை. சும்மா வருகின்றார்கள்.

எதில் தொடர்கதையாக வந்தது என்று தெரியவில்லை. தலைப்பை வைத்துவிட்டு கதையை யோசித்தாரோ, இல்லை நினைத்த கதைக்கு கிடைத்த தலைப்பு என்று வைத்தாரோ. தலைப்பை ஆ என்று வைத்ததால் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் ஆ. எரிச்சலாகவும், குழந்தைத்தனமாகவும் இருக்கின்றது. எவர் தந்த யோசனையோ!!!!

நன்றாக தினமும் அலுவலகம் சென்று, ரிசெசன், அப்ரைசல், எச் ஆர் தொந்தரவு ஏதுமின்றி, ப்ரொகராம் (தமிழில் என்ன? ஆ, நிரலி, பல்லில் சிக்கிய பருப்பை தேடும் நினைப்பு வருகின்றது) மட்டும் எழுத வேண்டியிருந்த பொற் காலத்தில் இருக்கும் ஒருவனுக்கு ஏற்படும் பிரச்சினை.

23 அக்டோபர் 2014

சிங்கமய்யங்கார் பேரன் - சுஜாதா

கரும்பு தின்ன கூலியா என்று கேட்பார்கள், சாப்பிடவும் கூலி தருவதும் உண்டு என்று தெரிந்த காரணத்தால் அதை மேற்கோள் காட்ட முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். உங்களுக்கு தெரிந்த நல்ல பழ மொழியை பயன்படுத்தி கொள்ளவும். ..... போல, புத்தகத்தையும் தந்து அதற்கு ஒரு மதிப்புரை(!!!)யும் எழுத சொன்னால் வேண்டாம் என்றா சொல்வார்கள். அதைத் தானே இங்கு செய்து கொண்டிருக்கின்றேன் என்று முயற்சி செய்தேன். உடனே புத்தகமும் கிடைத்தது. மதிப்புரை.காமில் வெளியான எனது புத்தகத்தை பற்றிய எனது கருத்துக்கள். 


சினிமா காலத்திற்கு முன்பு மக்களை மகிழ்வித்தது நாடகங்களே. நாடக நடிகர்களைக் கடவுளாகப் பார்த்த மக்களைக் கொண்டது நம் தமிழகம். பெரும்பாலான நாடகங்கள் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை, மெதுவாக சமூகக் கதைகள் உள்ளே வர ஆரம்பித்தன. திராவிட இயக்கங்களின் தாக்கம் அதை மேலும் வளரச் செய்தது. புராணங்கள் மூலம் பக்திக் கண்ணீரை பெருக்கெடுக்க வைக்கும் நாடகங்கள், குடும்ப, சமூகக் கதைகள் மூலம் சோகக் கண்ணீரை பெருக்கெடுக்க வைத்த நாடகங்கள், உள்ளத்தைக் கொதிப்படைய வைத்து வியர்வையைப் பெருக்கும் அரசியல் நாடகங்கள் என்று இருந்ததை மாற்றி, நக்கலும் கிண்டலுமாக மக்களை அடைந்தவர் எம். ஆர். ராதா. அந்த வகையில் சினிமாவின் வெற்றிக்கு பின்னும் நாடக உலகில் வெற்றி பெற்றவர் ராதா.


அதன் பின்னர் அத்தகைய வெற்றியை கண்டவர் சோ. சோவின் சிறப்பு நாடக எழுத்தாளரும் அவர்தான். சோவின் நாடகங்கள் அந்தக் காலத்தை ஒட்டியவை, நாடகத்தை ரசிக்க அக்கால கட்டத்தைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். நாடகம் என்றவுடன் இவர்களைத் தவிர மற்றவர்கள் பட்டென்று நினைவில் வரமாட்டார்கள். காரணம் நாடகத்தை அழகாகக் கையாண்டவர்கள் மிகவும் குறைவு. அப்படி குறிப்பிடத்தகுந்த நாடக ஆசிரியர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன், சுஜாதா.

24 ஜூலை 2014

கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா

சுஜாதாவின் மற்றுமொரு பெயர் பெற்ற நாவல்.

சிறு வயதில் பக்கத்து வீட்டு மாடியில் குப்பைக்கு நடுவில் கண்டெடுத்து படித்தது. மீண்டும் படிக்கலாம் என்று வாங்கினேன். சின்ன நாவல். ஒன்றிரண்டு மணி நேரத்தில் படித்துவிடலாம். 

கதை. மர்மக்கதை. துப்பறியும் கதை விதிப்படி ஒவ்வொரு அந்தியாயத்தின் முடிவில் ஒரு சின்ன சஸ்பென்ஸ். கொஞ்சம் அமானுஷ்யம். இரவில் சத்தம். பழைய வீடு. ஒரு கொலை, கொலை செய்தவனை விட்டு விட்டு யாரையோ பிடிக்கும் போலிஸ், கடைசியில் கொலைகாரன் தானே மாட்டி கொண்டு சுபம்.

நாட்டு பாடல் சேகரிக்கவரும் கல்யாணராமன் தங்குவது ஒரு பழைய ஜமீன் மாளிகையில். அடுத்தநாளே ஜமீன் பேத்தியும் ஆஜர். ஜமீன்ந்தார் மனைவி மரணமடைந்து ஆவியாக அலைவதாக பேச்சு. கிராமத்து பெண் வெள்ளி, அவளது முறைமாமன் மருதமுத்து. வெள்ளி மீது கல்யாணராமனுக்கு ஒரு ஈர்ப்பு, வெள்ளிக்கு மருதமுத்து என்றால் உயிர், மருதமுத்திற்கு சினேகலதா மீது ஒரு ஆசை. சினேகலதா, கல்யாணராமனை சீண்டி விளையாடுகின்றாள், கடைசியில் தலையில் அடிபட்டு செத்து போகின்றாள். வெள்ளி காணமல் போகின்றாள். கல்யாண ராமன் அடி வாங்குகின்றான், மருதமுத்து அடி கொடுக்கின்றான். போலிஸ் வேடிக்கை பார்க்கின்றது. கொலைகாரன் மாட்டிக் கொள்கின்றான். போலிஸ் பிடித்து செல்கின்றது. முடிந்தது.

27 மார்ச் 2014

கணேஷ் - வசந்த் கதைகள் - 1

என்னடா மறுபடியும் சுஜாதாவா என்பவர்களுக்கு, சாரி, என்ன செய்வது மனநிலையை பொறுத்துதான் படிக்கும் புத்தகமும் இருக்கும். ஜாலியான, கலகலப்பான புத்தகங்களை படிக்கலாம் என்பதால் சுஜாதா மட்டுமே மேஜையில்.

சுஜாதாவின் பிரபல நாயகர்கள் கணேஷ் - வசந்த். சீரியசான ஒரு சீனியர், அவனுக்கு ஜாலியான ஒரு ஜூனியர். ஏதோ ஆங்கில நாவலாசிரியரின் கதபாத்திரங்களின் இன்ஸ்ப்ரேஷன் என்று ஒரு வதந்தி கூட உண்டு. அவர்கள் தோன்றும் அனைத்து கதைகளும் சிறப்பானவை என்று கூற முடியாது. பெரும்பாலான கதைகள் பல பத்திரிக்கைகளுக்கு தொடர்கதைகளாக எழுதப்பட்டவை. பத்திரிக்கைகளின் தரத்தை பொறுத்தும் கதையின் தரம் வேறுபடும்.

உயிர்மை அவரின் பெரும்பாலான எழுத்துக்களை தொகுத்துள்ளது. அதில் குறுநாவல் வரிசையில் இது மூன்றாவது தொகுதி, கணேஷ் - வசந்த் கதைகளில் முதல் பகுதி. அதில் உள்ள கதைகள் பற்றி இனி

15 மார்ச் 2014

கொலையுதிர் காலம் - சுஜாதா

பரபரபரபரபரபர

மேற்கண்ட வரியை சுமார் அத்தியாத்திற்கு ஒன்று என்று படித்துக் கொள்ளவும். அத்தனை பரபரப்பு. நேற்று இரவுதான் வந்தது, பேய்க்கதை என்பதால் இரவில் படிக்காமல் பகலில் படித்தேன். இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்துவிடலாம். 

சுஜாதாவின் வழக்கமான கணேஷ் வசந்த் கதைகளில் எனக்கு தெரிந்து இதுதான் செம விறுவிறுப்பு. அமானுஷ்ய கதைகள் என்றாலே ஒரு பரபரப்பு இருக்கும். அதுவும் சுஜாதாவின் கதை என்றால் இன்னும் வேகம்.

லீனா வியாச குடும்பத்தின் வாரிசு. அவளது பதினெட்டாம் வயதில் குடும்ப சொத்துக்கள் அனைத்தும் அவளின் சித்தப்பா குமார வியாசரிடமிருந்து வர வேண்டும். அதை சரிபார்க்க லீனாவின் காதலனால் அனுப்பப்படும் கணேஷ் வசந்த் அங்கு விபரீத சூழலில் மாட்டிக்கொள்கின்றனர். லீனா மீது ஆவி இறங்கி ஒருவனை அடித்து ரத்தம் குடித்தது என்று குமார வியாசன் சொல்வதை ஆராய்வதில், அவர்கள் கண்ணிற்கும் அந்த ஆவி தரிசனம் கிடைக்கின்றது. மற்றொரு கொலை. 

08 மார்ச் 2014

வசந்த் வசந்த் - சுஜாதா

ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு தளத்தை எடுத்துக் கொள்ளும் சுஜாதா இக்கதைக்கு எடுத்துக் கொண்டது சரித்திரம்.

சரித்திர பேராசிரியரின் மகளுக்கு ரூட் போடும் வசந்த், அப்பேராசிரியரின் தொலைந்து போன கட்டுரையை தேடி போய், இக்கதையை ஆரம்பித்து வைக்கின்றனர். வழக்கம் போல ஆக்‌ஷனை வசந்தும், லாட்ரல் திங்கிங்கை கணேஷும் பிரித்துக் கொள்கின்றனர்.  இந்த கதையில் வசந்திற்கு ஆபத்து கொஞ்சம் ஓவர் டோஸாக் போய், சினிமா கதையாக மாறிவிட்டது.

அதிகம் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாத கதை. குற்றவாளிகளுக்கு தேவையில்லாத அந்த கட்டுரையை ஏன் திருட வேண்டும் என்ற கேள்வியை கேட்டாலே கதை ஓவர். கட்டுரையை வைத்து கதையை எழுத நினைத்து, பின்னால் மனசு மாறி கதையை வேறு எங்காவது ஓட்டிச் சென்றிருக்க வேண்டும். கடைசி வரை முடிவை யூகிக்க முடியாமல்தான் கதை நகர்த்தியிருக்கின்றார். 

05 மார்ச் 2014

விடிவதற்குள் வா! - சுஜாதா

ஆழி சூழ் உலகில் பல விஷயங்களிருந்தாலும் அதில் வரும் முக்கிய விஷயமான கிறிஸ்துவ மத மாற்றம் சம்பந்தமான உரையாடல்கள் அதிகம் கவர்ந்தது. கிறிஸ்துவர்களை தவிர மற்ற மதத்தினர் அவர்கள் மதத்தை பற்றி அதிகம் பேசி நான் பார்த்ததில்லை. பேசுவார்கள், பரஸ்பர ஆர்வத்தை பொறுத்து. கோவில்களில் அல்லது பண்டிகை நாட்களில் இது போன்றுதான் இருக்கும். ஆனால் கொஞ்சம் இடம் கிடைத்தாலும் போதனை செய்யும் பல கிறிஸ்துவர்களை கண்டுள்ளேன். போதனை, தங்கள் மதத்தின் சிறப்பு, அவர்களது பெருமை. அதோடு இருந்தால் பரவாயில்லை மற்றவர்களை வம்பிழுப்பதுதான் பிரச்சினை.

எனது ஊரில் இப்போது ஒவ்வொரும் மணிக்கும் பைபிள் வசனம் ஒலிப்பெருக்கி வழியே ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் என் வீடு வரை கேட்கின்றது. அனுமதி இலவசம். எங்கள் கோவில் ஊருக்கு வெளியே மலையடிவாரத்திலிருக்கின்றது. பெரும்பாலும் யாரும் வருவதில்லை, சனிக்கிழமைகளில் ஒன்றிரண்டு பேர் வருவதுண்டு. புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளில் நல்ல கூட்டமுண்டு. இந்த கூட்டம் கண்ணை உறுத்தி அங்கு சர்ச் கட்ட இடம் வாங்கி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பின்னர் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டது. இது போன்று பல கோவில்களுக்கு அருகில் கட்டப்பட்ட சர்ச்சுகளின் கதைகள் ஏராளம்.

15 அக்டோபர் 2013

கனவு தொழிற்சாலை - சுஜாதா

சமீபத்தில் சாரு நிவேதிதா அவரது தளத்தில் அசோகமித்திரனை போட்டு சாத்தியிருந்தார். காரணம் அ.மி ஜெயமோகனை பெரிய எழுத்தாளர் என்று கூறிவிட்டார். அந்த பாட்டை மட்டும் பாடி விட்டிருந்தால் பரவாயில்லை, அதோடு மற்றவர்கள் எல்லாம் சும்மா என்று அனுபல்லவியையும் பாடிவிட்டார். சாரு நிவேதிதாவின் தாக்குதலில் அவர் அசோகமித்திரனின் கரைந்த நிழல்களையும், சுஜாதாவின் கனவு தொழிற்சாலையையும் ஒப்பிட்டிருந்தார், இரண்டும் ஒரே மாதிரி என்று, இது கனவு தொழிற்சாலையை மீண்டும் எடுத்துப் படிக்க தூண்டியது.

கரைந்த நிழல்களையும், கனவு தொழிற்சாலையையும் ஒப்பிடவே முடியாது. இரண்டும் சினிமா சம்பந்தப்பட்ட கதை என்றாலும், கரைந்த நிழல்களின் உலகம் தனி, கனவு தொழிற்சாலையின் இடம் தனி. கரைந்த நிழல்கள் சில படிகள் மேலேதான் அமர்ந்திருக்கின்றது.

கனவுதொழிற்சாலை, சினிமாவின் பெரும்பாலான தளங்களை தொட்டு செல்கின்றது. அருண், அருமைராசன், மனோன்மனி என்று மூன்று ட்ராக். அருண் வெற்றி பெற்ற சினிமா நடிகன், வெற்றியை தக்கவைக்க போராடும் நடிகன். அருமைராசன் சினிமாவில் நுழைய போராடி, பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து ஜெயிப்பவன், மனோன்மணி போராடி கடையில் பொசுங்கி போகின்றாள்.

25 செப்டம்பர் 2013

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

விகடனில் வந்த தொடர்கதை. அந்த காலத்தில் பலரையும் கவர்ந்த கதை. ஆனந்த தாண்டவம் என்ற பெயரில் சினிமாவாகவும் வந்திருக்கின்றது.

மதுமிதா, ரகுபதி, ரத்னா, ராதா கிஷண். இவர்களை மையமாக வைத்து ஓடும் கதை. ரகுபதிக்கு நிச்சயம் செய்யப்பட்ட மதுமிதாவை புயல் போல கடத்திக்கொண்டு அமெரிக்கா போகும் ராதாகிஷண். அந்த தோல்வியினால் தூண்டப்பட்டு படிக்க அமெரிக்கா போகும் ரகுபதி, அங்கு அமெரிக்காவால் ஜீரணம் செய்யப்பட்ட மதுமிதாவை மீண்டும் சந்திக்கின்றான். மதுமிதாவால் அறிமுகம் செய்யப்பட்ட ரத்னாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் போது, மதுமிதாவின் மறு பிரவேசம். கடைசியில் அமெரிக்கா மதுமிதாவை ஒரு பெட்டியில் அடக்கி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கின்றது.

கதை ஒரு சாதாரண கதை. அதை சொல்லும் விதத்தில்தான் கதையின் முழு வெற்றியும் அடங்கியுள்ளது. சுஜாதாவின் கதை சொல்லும் திறன் கதைக்குள் நம்மை இழுக்கின்றது. அழகான வர்ணனை, சின்ன ட்விஸ்டுகள், சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமான சம்பவங்கள் என்று அடுத்தடுத்து இழுத்து கொண்டு போய்விடுகின்றார். முதல்பாகத்தில் பாபநாச சிலுசிலுப்பில் இருக்கும் கதை, அடுத்த பகுதியில் அமெரிக்க வேகத்தில் பறக்கின்றது.

29 ஏப்ரல் 2013

சொர்க்கத் தீவு - சுஜாதா

சுஜாதாவின் முதல் சைன்ஸ் ஃபிக்‌ஷன். ஒரு அய்ங்காரின் (கவனிக்க அய்யங்காரின் அல்ல) அனுபவம். எதில் தொடராக வந்தது என்று தெரியவில்லை. எப்படி சைன்ஸ்ஃபிக்‌ஷன் என்பதற்கு பதில் சுஜாதாவின் முன்னுரையிலேயே இருக்கின்றது. ஒரு எதிர்கால சமுதாயம் இப்படி இருக்க வாய்ப்புள்ளது. 

அய்ங்கார் ஒரு கம்ப்யூட்டர் ஆசாமி. பழைய கம்ப்யூட்டர். (கதை எழுதப்பட்டது ). மாதம் 2000 ரூபாய் சம்பளத்தை எப்படி செல்வு செய்வது என்பதை வேலைக்கு நடுவில் யோசிக்கும் ஒருவன். அலமேலு என்னும் ஒரு மசால்வடை மூலம் அய்ங்காரை பிடித்துக் கொண்டு சொர்க்கத்தீவிற்கு செல்கின்றனர் ஒரு கூட்டம். அவனை தூக்கிக் கொண்டு போகக் காரணம் அங்கிருக்கும் ஒரு கம்ப்யூட்டரை சரி செய்ய.

முதலில் முரண்டு பிடிக்கும் அவன் மெதுவாக ஒத்துழைக்க எண்ணும் அவனுக்கு அத்தீவின் நடைமுறைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. //இன்று எத்தனை பேர் பிறக்க வேண்டும், எத்தனை பேர் இறக்க வேண்டும் என்பதை சரியாக கணிக்கவில்லை. அதனால் சிலர் கொல்லப்படவில்லை// தீவின் தலைவர் ஆத்மா. ஒரே ஒரு மூன்றெழுத்துக்காரர். மற்றவர்கள் எல்லாம் பெரி, பொரி, சரி என்று இரண்டெழுத்து ஆசாமிகள்.

எல்லருக்கும் ஒரே மாதிரியான ஆடை, ஒரே மாதிரி உணவு, ஒரே மாதிரி உறைவிடம். ஒரிஜினல் கம்யூனிசம். சர்வமும் கம்ப்யூட்டர் கையில். யார் இருக்கலாம், யார் இறக்கலாம், யார் என்னெ செய்ய வேண்டும் எல்லாம் கம்ப்யூட்டர். மனிதனின் ஆதார உணர்ச்சிகளை மருந்துகள் மூலமும், பயிற்சிகள் மூலமும் மட்டுப் படுத்தி ஒரு பொம்மைகளை போல வைத்திருக்கும் தீவு. சொர்க்கத்தீவு.

" ஆடு கூட தழை தின்னாமல் இருக்க நினைத்தால் தின்னாமல் இருக்கலாம், இங்கு மக்களால் அது கூட முடியாது".

"எங்கள் தமிழில் மொத்தம் ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் கிடையாது"

"அம்மா என்று கூறும் போதெல்லாம் அக்குழந்தைகளுக்கு மெல்லிய மின் அதிர்ச்சி குடுப்போம்"

இதில் ஒருவனுக்கு மட்டும் எப்படியோ சுய உணர்ச்சி வருக்கின்றது. அவனால் உணர்ச்சி பெற்ற அவன் காதலியும் இணைந்து சொர்க்கத்தீவை மாற்ற முயன்று அய்ங்காரிடம் உதவி கேட்கின்றனர். அய்ங்காரின் உதவியும் தோல்வியில் முடிகின்றது.

ஊருக்கு கிளம்பும் முன் ஒரு சிறிய வேலையால் அய்ங்கார் அத்தீவை மாற்றத்தின் பாதையில் திருப்பி விட்டு வருகின்றான். மீண்டும் கடத்திக் கொண்டு போகப்பட்டால் புதிய தீவைக் காணலாம்.

சைன்ஸ்ஃபிக்‌ஷனுக்கு சைன்ஸ்தேவையில்லை என்கின்றார் சுஜாதா. அவரின் கருத்துப்படி பாரதியாரின் காக்கை பார்லிமெண்ட்டே ஒரு சைன்ஸ்ஃபிக்‌ஷன். எதிர்கால சமூகம் முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர்களால் நடத்தப்படும் என்னும் அவரது கற்பனை / யூகம் கொஞ்ச கொஞ்சமாக நடந்துவருகின்றது.

கதை வழக்கமான சுஜாதாத்தனமான விறுவிறுப்பு. கதாநாயகன் தேவையற்ற சாகசங்கள் எல்லாம் செய்வதில்லை. நமக்கு தெரியும் கதநாயகன் எப்படியும் அம்மக்களை காப்பாற்றி விடுவான் என்று, அதை எப்படி செய்வான் என்பதே முடிச்சு. அதை தெளிவாக, புத்திசாலித்தனமாக அவிழ்த்துள்ளார்.

கம்ப்யூட்டர் சம்மந்தப்பட்ட தகவல்கள் இன்றைக்கு பழையதாக தெரியலாம். ஒவ்வொரு பதிப்பின் போது மாற்றிக் கொண்டிருப்பது சாத்தியமல்ல. அதை விட்டு பார்த்தால் ஒரு விறுவிறுப்பான கதை.

எழுதிவிட்டு தேடினால் பால்ஹனுமான் தளத்தில் ஒரு விமர்சனம் கிடைத்தது. தோத்தாத்ரி என்பவரின் விமர்சனத்தை படித்து அசந்துவிட்டேன். ஆய்வு கட்டுரையாம். ப்ரமாதம்.// ஒரு வகையான கம்யூனிச எதிர்ப்பை காணலாம்// இது உண்மையென்றால் அதற்காகவே அனைவரும் படிக்கலாம்.

23 ஏப்ரல் 2013

என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ - சுஜாதா

விஞ்ஞான கதைகள் என்றால் முதலில் நினைவிற்கு வருவது சுஜாதாதான். அதன் பின்னால்தான் மற்றவர்கள். யார் அந்த மற்றவர்கள் என்று யோசிப்பவர்களுக்கு எனக்கு தெரிந்து சில ராஜேஷ்குமார், ஆர்னிகா நாசர், மாலன், ஜெயமோகன். விஞ்ஞான சிறுகதைகள் சுலபம், நாவல்கள் சற்று கடினம்.

என் இனிய இயந்திராவும், மீண்டும் ஜீனோவும் விகடனில் தொடராக வந்தது. நாவலின் வெற்றிக்கு காரணம் ஜீனோ. ஒரு பெரிய கிரேக்க மேதையின் பெயரைக் கொண்ட நாய். ரோபாட். இயந்திரம். அது அனைவரையும் கவர்ந்ததற்கு காரணம், அதன் மனிதத்தன்மை. இதே ஒரு இயந்திர மனிதனை அங்கு வைத்திருந்தால் இந்தளவிற்கு கவர்ந்திருக்காது. ஒரு நாய் விஞ்ஞான முன்னேற்றத்தினால் மனிதனைப் போல சிந்திக்க ஆரம்பித்ததுதான் கதையின் பெரிய பலம்.

கதை எதிர்காலத்தில் ஏதோ ஒரு நாளில் ஆரம்பிக்கின்றது. மனிதர்களின் பெயர்கள் சுருக்கப்பட்டு, பிறப்பும் இறப்பும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் ஒரு காலம். நிலா - சிபி. அவர்களின் வீட்டில் உள்ள அறையில் தங்க அனுமதிக்கப்பட்ட விருந்தாளி ரவி. ரவியுடன் வரும் நாய். தத்துவம் படிக்கும் நாய். நிலாவின் கணவன் காணமல் போக, கதை சுறுசுறுப்பாகின்றது. தலைவர் ஜீவாவை சந்திக்கும் நிலா கடைசியில் ரவியின் கூட்டத்துடன் சேர்ந்து ஜீவாவை கொல்ல துணிகின்றாள். ஜீனோவின் உதவியுடன் ஜீவாவின் பின்னால் உள்ள சதியை கண்டுபிடிக்கின்றாள். பெரும்பாலானவர்கள் படித்திருப்பார்கள் அதனால் கதையின் முடிவை சொல்வதில் தப்பில்லை. படிக்காதவர்கள் கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்.

11 பிப்ரவரி 2013

ஸ்ரீரங்கத்து கதைகள் - சுஜாதா

ஸ்ரீரங்கம் எனக்கு பிடித்த கோவில். காரணம் எங்கள் ஊர்க்காரர்தான் அங்கும் பள்ளி கொண்டுள்ளார். எப்போதும் எங்கும் தனியாக போகப் பிரியப்படாத நான், தனியாக போக வேண்டும் என்று நினைத்து, காலையில் மூன்று மணிக்கு எழுந்து (அது ஒரு அதிசய நிகழ்வு என்று பின்னால் அனைவராலும் வர்ணிக்கப்பட்டது) யாரின் தொந்தரவுமின்றி சுற்றிப் பார்த்தேன். ரங்கநாதரை கூட்டமில்லா நேரத்தில் நிம்மதியாக பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு ஒரு ஆர்வத்தை உண்டாக்கியதற்கு மற்றுமொரு காரணம் சுஜாதா.

விகடனில் வரிசையாக வந்த கதைகளைப் படித்து ஸ்ரீரங்கத்தையும் கோவிலையும் பார்க்க அவ்வளவு ஆர்வம் வந்துவிட்டது. சுஜாதாவைப் பற்றிய முழு அறிமுகமும் அதுதான். அதுவும் அவரது தூண்டில் கதைகள் ஸீரிஸும்.

நான் பார்த்த ஸ்ரீரங்கம் அவரின் வார்த்தைகளிலேயே " ஆறாம் நூற்றாண்டிலிருந்து தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட கோயில் தம்மிடையே துருத்திக் கொண்டிருப்பதைப் பற்றி கவலை இல்லாத இன்றைய நகரம், மன்மத ராசாவையும் மாத்தி யோசியையும் பாடிக்கொண்டிருக்கின்றது" கோவிலும் தடுப்பு கட்டைகள், சங்கிலிகள், அர்ச்சனை டிக்கெட் என்று வருமானத்தை பெருக்கும் வேலையில் உள்ளது.

கடவுள் பக்தி இல்லாதவர்களின் நிர்வாகத்தில் வேறு என்ன நடக்கும். தில்லை நடராஜனை, திருவரங்க ரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களா கோவிலை பாதுகாக்க போகின்றார்கள்.


முதல் செட் 1983ல் எழுதியுள்ளார். நான் ஒரு வயது குழந்தையாக இருந்த போது எழுதப்பட்ட கதைகள்.  அடுத்த செட், 2003ல். கல்லூரி படிக்கும் போது வரிசையாக படித்தது. நடுநடுவே வெவ்வேறு வருடங்களில் ஸ்ரீரங்கத்தை மையமாக வைத்து நிறைய எழுதியுள்ளார். இது ஸ்ரீரங்கத்தை மையமாக கொண்டதால், இது அந்த ஊரின் கதையல்ல. அம்மனிதர்கள் எந்த ஊரிலும் இருக்கலாம். அவரே சொல்வது போல "ஸ்ரீரங்கம் என்பது ஒரு மெட்ஃபோர், ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென்று ஒரு ஸ்ரீரங்கம் இருக்கும், அதை நினைவுபடுத்தவே இக்கதைகள்". 

சுஜாதா ரங்கராஜனாக ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது கிடைத்த அனுபவங்கள் கதையாகியுள்ளன. சில கற்பனை கதைகளையும் ஸ்ரீரங்கத்திற்கு ஏற்றி அனுப்பியிருக்கலாம்.

28 டிசம்பர் 2012

பேசும் பொம்மைகள் - சுஜாதா

கணேஷ் வசந்த் வரும் சைன்ஸ் ஃபிக்‌ஷன். டவுன்லோடிங் என்பதை அடிப்படையாக கொண்ட ஒரு நாவல். 90களில் குங்குமத்தில் தொடராக வந்துள்ளது. மனிதனின் மூளை என்றும் அனைவருக்கும் புதிர். விஞ்ஞானிகளின் பல ஆராய்ச்சிகளால் இன்னும் முழுவதும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பகுதி. மனம் என்பது ஒரு தனியான பகுதியா, மூளையின் ஒரு பகுதியா, வெறும் நினைவுகளா அதுவே இன்னும் குழப்பம்.

உலகின் மிக வேகமான கம்ப்யூட்டர் மனித மூளை. எப்போதோ சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒருவரை, அவரது சாயல் மாறியிருந்தும் சில நிமிடங்களில் கண்டு பிடிக்கும் ஒரு கம்ப்யூட்டர். அது வைத்திருக்கும் டேட்டாக்களை சேமிக்க எத்தனை டெரா பைட் தேவைப்படும். அதை அலசி ஆராய எத்தனை வேகமான ப்ராசசர்கள் தேவை. அப்படிபட்ட மூளையின் அமைப்பை கண்டு கொள்ள முடிந்தால் என்னாவாகும், அதுதான் கதை.

கதை மனிதனின் நினைவுகளை இயந்திரத்திற்கு மாற்றி மீண்டும் அதை மனிதனுக்கு மாற்றும் சாத்தியத்தை பேசுகின்றது. எப்படி அது சாத்தியம் என்பது எல்லாம் இங்கு தேவையில்லை. அது தெரிந்தால் ஏன் கதை எழுத வேண்டும், நோபல் பரிசு வாங்கப் போயிருக்கலாம்.

04 டிசம்பர் 2012

ப்ரியா - சுஜாதா

ஒரு கணேஷ் வசந்த் கதை. வசந்த் பாவம் இதில் முதல் அத்தியாயத்துடன் கிளம்பிவிடுகின்றான். கதை நடக்குமிடம் லண்டன் என்பதால் எதற்கு வீண் செலவு என்று விட்டு விட்டு கணேஷ் மட்டும் போய்விட்டான்.

ப்ரியா ஒரு சினிமா நடிகை அவளின் கணவன் ஜனார்த்தனன் அவள் காதலனுடன் ஓடிவிடக் கூடாது என்று கண்காணிக்க கணேஷை ப்ரியாவுடன் லண்டன் அனுப்புகின்றான்.  ஜனார்த்தனன் லண்டன் வரும் போது ப்ரியா காணாமல் போகின்றாள். அவளை கடத்தி வைத்து பணம் பறிக்கும் முயற்சி நடக்கின்றது. இரு நாட்களில் ப்ரியா கொலை செய்யப்பட்டு கிடக்கின்றாள். யார் கொலை செய்தது என்பதை ஸ்காட்லாண்ட் யார்டுடன் சேர்ந்து கணேஷ் கண்டுபிடிப்பது மிச்சக் கதை.

09 நவம்பர் 2012

நில்லுங்கள் ராஜாவே - சுஜாதா

இரவு தூக்கம் வராமல் கைக்கு கிடைத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அது "நில்லுங்கள் ராஜாவே". நல்ல விறுவிறுப்பான நாவல்.

ஒரு நாள் அலுவலகத்திற்கு போகும் போது உங்களுக்கு பதில் வேறு யாரோ உங்கள் பெயரில் உங்கள் இடத்தில் அமர்ந்து கொண்டு, யார் நீ என்றால் எப்படி இருக்கும்? ஒருவனின் ஐடென்ட்டி இன்னொருவனால் உபயோகப் படுத்தப் பட்டு, இரண்டு நான் கள் இருந்தால் என்ன ஆகும்.

ஜவகர்விட்டல் அலுவலகத்திலும், வீட்டிலும் அவன் அவனிலை என்று விரட்டப் படுகின்றான். குழந்தை, மனைவி, மச்சினிச்சி முதல் பக்கத்து வீட்டுக்காரன் வரை அடையாளம் தெரியவில்லை. காவல் துறையும் அவனை ஏற்க மறுக்கின்றது.

கடைசியில் தன் இடத்தில் உள்ளவனை கொலை செய்ய முயற்சி செய்து, போலிஸ் கஸ்டடியில் செல்கின்றான். அவனை பரிசோதித்த மருத்துவர், அவன் நார்மல் என்று அறிக்கை அளித்தாலும், சந்தேகப் பட்டு கணேஷிடம் அவன் கேஸை ஒப்படைக்கின்றார். ஜாமினில் கொண்டுவரப்படும் அவன் காணாமல் போக, கதை அதன் பின் ஒரே மூச்சில் பாய்கின்றது. 

டிபிகல் சுஜாதா டச். வசந்தின் குறும்பு "மச்சினிச்சி அடையாளம் ஏதாவது சொல்லுங்க", மருத்துவ விஷயங்கள், மூளையை வசப்படுத்துவது பற்றிய விஷய்ங்கள், சிஐஏ, கம்யூனிசம் என்று எங்கெங்கோ போகின்றது. கடைசியில் ஒரு சர்வதேச சதியை கண்டறிவதில் முடிவடைகின்றது.

கதையின் தலைப்பை முதலில் தந்து விட்டு கதையை யோசித்திருப்பார் போல, சும்மா அதை நடுவில் சேர்த்திருக்கின்றார். (ஒரு பெண் தன்னைத் தேடும் அவனைப் பார்த்து "நில்லுங்க ராஜா" என்கின்றாள், அவ்வளவுதான் கதைக்கும் தலைப்பிற்கும் தொடர்பு) தொடர்கதையை எந்த வேகத்தில் எழுதினாரோ, மருத்துவமனை ரிசப்ஷனிஸ்டுக்கு ஒரு பெயரை வைத்து, அடுத்த அந்தியாயத்திலேயே மீண்டும் வேறு ஒரு நாமகரணம் செய்து வைத்துள்ளார். 

அங்கங்கு கொஞ்சம் காதுல பூ என்றாலும் நல்ல விறுவிறுப்பான நாவல். இதைப் படிக்கும் போது எப்போதோ படித்த "மூன்று நிமிஷம் கணேஷ்" நினைவிற்கு வருகின்றது.ஒருவன் "நிமிஷா நிமிஷா நிமிஷா" என்று கூறிவிட்டு இறக்க, அது கணேஷையும் வசந்தையும் எங்கோ கொண்டு செல்லும். இரண்டிற்கும் அடிப்படை ஒன்றுதான் இதில் மருத்துவம், அதில் பொறியியல்.

உயிர்மையின் சுஜாதா குறுநாவல் தொகுப்பு பாகம் 4ல் உள்ளது.

26 அக்டோபர் 2012

கணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா

சுஜாதாவைப் பற்றி அறிமுகம் செய்ய முனைந்தால் அது என் அறியாமையைக் காட்டும். அனைவருக்கும் தெரிந்த பிடித்த எழுத்தாளர். அவரைக் குறை சொல்பவர்கள் கூட அவரை குறைத்து மதிப்பிடுவதில்லை. அவர் கணையாழியில் 33 வருடங்களாக எழுதி வந்த பத்திகளின் தொகுப்பு கணையாழின் கடைசிப் பக்கங்கள் என்று ஒரே தொகுப்பாக உயிர்மை வெளியுட்டுள்ளது.

சுஜாதா கணையாழியில் தொடர்ச்சியாக எழுதவில்லை, விட்டு விட்டு வேறு வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார். தேசிகன் இதை பெரும் சிரந்தை எடுத்து தொகுத்துள்ளார். அனைத்து கட்டுரைகளும் மாதவாரியாக தொகுத்துள்ளனர். படிக்கும் போது அந்த காலத்தைப் பற்றிய ஒரு சித்திரமும் கிடைக்கின்றது.உண்மையில் இதைச் செய்து முடிக்க அசாத்ய பொறுமை வேண்டும். தேசிகனிடம் வேண்டியளவு இருக்கின்றது.