22 டிசம்பர் 2021

வயது வந்தவர்களுக்கு மட்டும் - கி.ராஜநாராயணன்

 வயது வந்தவர்களுக்கு மட்டும் - கி.ராஜநாராயணன்

தலைப்பே சொல்லும் என்ன மாதிரியான புத்தகம் என்று. பின்னடித்து ரகசியமாய் தொங்கவிடும் புத்தகமல்ல. 

மெலிதான காமம் கலந்த கதைகள் பல படித்திருப்போம், காமத்தை அடிப்படையாக கொண்டும் கொஞ்சம் பலான புத்தகங்களுக்கு நெருங்கி வரக்கூடிய புத்தகங்களும் உண்டு, படிப்பவர்களை அதிர்ச்சியாக்கவே வலிய புகுத்திய கதைகளும் உண்டு. இவை அந்த மாதிரியல்ல.

கிராமத்து பக்கங்களில் சில வசவுகள், சில பழமொழிகளை ஆராய்ந்தால் அதன் பின்னால் ஏதாவது ஒரு விவகாரமான கதை இருக்கும். விக்கிரமாதித்யன் கதைகளில் பல கதைகள் ஆண் பெண் உறவை அடிப்படையாக கொண்டவை. கிராமப்பக்கம் இருக்கும் இது போன்ற கதைகளை தொகுத்து புத்தகமாக்கியிருக்கின்றார் கி.ரா.

ஆண் - பெண் உறவை மையமாக கொண்ட குட்டி குட்டி கதைகள். பச்சையான வார்த்தைகள் இல்லாமல், குறிப்பு மொழியில் சொல்லப்படும் கதைகள். கெட்ட வார்த்தை கதைகள் என்று அழைக்கின்றார்.

பல கதைகள் பெண்களை மையப்படுத்தியே இருக்கின்றது. கணவனை விட்டு வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்ளும் பெண்கள், கல்யாணம் கட்டியும் ஒன்றும் தெரியாத ஆண்கள் என்று. இது மாதிரியான கதைகளின் உண்மையான மூல கதை சொல்லி ஆணா, பெண்ணா என்பது சுவாரஸ்யமான கேள்வி. பெரும்பாலான கதைகள் நகைச்சுவை கதைகள்தான். கொஞ்சம் விரிவாக்கப்பட்ட அடல்ட் ஜோக்.

சில கதைகளை படிக்கும் போதே அதன் வேறு திரிபுகளை நாம் கேள்விப் பட்டிருக்கலாம் அல்லது ஏதாவது புராணங்களில் இருந்த கதையை கொஞ்சம் மாற்றி பரப்பியிருக்கலாம்.இவை பெரும்பாலும் வாய் மொழியாகவே வளர்ந்த கதைகள், ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் போகும் போது மாறுதலடைந்து செல்லும். கி.ராவே தாத்தா, அவர் யாரோ ஒரு தாத்தாவிடம் கேட்ட கதைகள் என்கின்றார். நாட்படு தேறல் போல. 

முன்னுரையில் ஏன் இந்த புத்தகத்தை தொகுத்தேன் என்று நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். படிப்பவர்கள் பலரும் இதை வெளியில் சொல்ல மாட்டார்கள், ரகசியமாக வைத்து கொள்வார்கள் என்கின்றார். முன்பு இருக்கலாம். இது கேம் ஆஃப் த்ரோன்ஸ், நெட்ஃப்ளிக்ஸ் காலம். கிண்டிலில் தமிழ் புத்தகங்களை தேடினால், ஏராளமாக கண்ணில் படுகின்றது. அந்த குப்பைகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், இதில் உள்ள ஒரிஜினாலிட்டி, பல ஆண்டுகாலம் புழங்கியதன் தரம். 

03 செப்டம்பர் 2021

பொன்னியின் செல்வன் - கல்கி

பொன்னியின் செல்வனைப்பற்றி யாரும் எழுதாத ஒன்றை எழுதிவிடுவது கடினம். பொன்னியின் செல்வனை வருடம் ஒருமுறையாவது படிப்பது வழக்கம். எப்போது படிப்பது என்பது மனநிலையை பொறுத்தது. ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றால் பொன்னியின் செல்வன் நினைவு வராமல் போகாது. இந்த முறை மணிரத்னம் எடுக்கும் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகர்கள் பற்றி வெளிவந்த செய்திகள் மீண்டும் படிக்க வைத்தது. 

பொன்னியின் செல்வனை முதல்முதலில் படிக்கும் போது வயது பதினொன்று. ஏழாம் வகுப்பு, ட்யூஷன் முடித்து வரும் வழியில் நூலகம். பொன்னியின் செல்வன்,வீட்டிற்கு கொண்டுவந்து படித்தேனா இல்லை அங்கேயே படித்தேனா என்று நினைவில் இல்லை. கடைசி அத்தியாயத்தை எவனோ ஒரு பரதேசி கிழித்து வைத்திருந்தான். பிறகு பல ஆண்டுகள் படிக்க முடியாமல், பத்தோ, பதினொன்றோ படிக்கும் போது நண்பனின் உறவினர் ஒருவர் வீட்டில் இருந்தது என்று கேள்விப் பட்டு சென்று கேட்டேன். யாரிடமும் எதையும் இரவலாக கேட்டதில்லை. இரண்டே புத்தகங்கள் இது ஒன்று, தில்லானா மோகனாம்பாள் இன்னொன்று. பயங்கர பிகு. ஒவ்வொரு பாகமாகத்தான் கொடுப்பேன், ஒன்றை படித்து முடித்து தந்தால்தான் அடுத்த பகுதியை தருவேன். நல்லவேளை படித்த பகுதியில் பரிட்சை வைப்பேன் என்று சொல்லவில்லையே என்று சந்தோஷமாக இருந்தது. ஒரே வாரத்தில் படித்து முடித்தேன். சில புத்தகங்கள் படிக்கும் போது மனதில் ஒரு ஜிலுஜிலுப்பு உண்டாகும், அதில் ஒன்று பொன்னியின் செல்வன். மோகமுள் மற்றொன்று. 

கல்லூரி படிக்கும் போது தொடராக கல்கியில் வந்து கொண்டிருந்தது. எனக்காகவே என் மாமா வாங்கினார். அதிலும் பிரச்சினை இரண்டாம் பாகம் பாதி சென்றபிறகு வாங்க ஆரம்பித்தார். அவரே எனக்காக முதல் பாகம், கல்கியில் வந்த தொடரே பைண்ட் செய்யப்பட்டதை மதுரையில் வாங்கி தந்தார். உள்ளே ஒரே ஒரு அத்தியாயம் மட்டும் பத்மவாசனின் படங்கள் இல்லாமல், முதன் முதலாக தொடர் வெளிவந்த போது வரைந்த மணியத்தின் படங்களுடன். முதல் முறை கல்கியில் வந்த அத்தியாயத்தை எப்படியோ அதில் சேர்த்திருந்தனர். ஆழ்வார்க்கடியான் பழையாறை அரண்மனையில் இருக்கும் பகுதி. கல்லூரி முடிந்து சென்னை வந்த பின்னும் ஊருக்கு வரும் போது எல்லாம் அனைத்தையும் சேர்த்து வைத்து பைண்டிங் செய்த புத்தகம்தான் இன்றும் இருக்கின்றது. இரண்டாம் பாகம் அதே கல்கி பைண்டிங்க் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். எங்காவது பழைய புத்தக கடையில் தேட வேண்டும். அந்த புத்தகத்தை எடுத்து படிக்கும் போதே ஒரு குஷி, அந்த பழைய பேப்பரின் வாசனை, படங்கள் என்று தனி உலகில் சில நாட்கள் திரிய முடியும். அவை அனைத்தும் பெங்களூரில் மாட்டிக் கொண்டதால், கிண்டிலில் தான் படிக்க முடிந்தது. 

22 ஜூலை 2021

பயம் (அவருக்கு வராதது)

குளிக்க போகலாமா, இல்லை வெயில் வந்த பிறகு குளிக்கலாமா என்று யோசித்து கொண்டிருந்தார் நமச்சிவாயம். எப்படியும் நல்ல வெயில் வர பதினொன்று மணியாகும், அதுவரை எப்படி சாப்பிடாமல் இருப்பது, குளிக்காமல் சாப்பிட மனசு ஒப்பவில்லை. சாப்பிடாவிட்டால் காலை மாத்திரைகள் போட முடியாது, மாத்திரை போடாவிட்டால் கொஞ்சம் கட்டிற்குள் இருக்கும் சர்க்கரை எப்படி ஆகுமோ. ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று சோபாவில் அமர்ந்தார்.

"சகுந்தலா, எனக்கு டிபன் கொடுத்துடு, சாப்பிட்டு மாத்திரைய போட்டுக்கிறேன்"

மாத்திரை டப்பாவை எடுத்து, சாப்பாட்டிற்கு முன் பின் என்று பிரித்து வைத்துக் கொண்டார். சகுந்தலா கொடுத்த தண்ணீரில் சில மாத்திரைகளை விழுங்கினார். இட்லியில் கை வைக்கும் போது "விநாயகனே வினை தீர்ப்பவனே" என்று சீர்காழியின் கம்பீர குரல் எழுந்தது. பதறி அடித்து எழுந்தவர், தண்ணீரை தட்டி, தட்டை உருட்டி கைபேசியை எடுத்து பார்த்தார். அவரது அண்ணன் மகன் குமார்.

30 ஜூன் 2021

எம்.எல் - வண்ணநிலவன்

வண்ணநிலவன் சமீபத்தில் கி.ரா மறைந்த போது ஏதோ எழுதி அனைவரிடமும் வாங்கி கட்டிக் கொண்டார். வண்ணநிலவனின் புனைவுகள் எதையும் படித்ததில்லை. வண்ணநிலவன் துர்வாசர் என்ற பெயரில் துக்ளக் இதழில் எழுதிவந்த அரசியல் கட்டுரைகளை மட்டுமே படித்திருக்கிறேன். துர்வாசரின் கட்டுரைகள் கொஞ்சம் கடுகடு ரகத்திலேயே இருக்கும், கோபம், கடுப்பு, வயதானவர்களுக்கு வரும் இயல்பான எரிச்சல் கலந்தது போலவே இருக்கும். அதுவே இவரின் புனைவுகளை படிக்க கொஞ்சம் தடையாக இருந்தது. இதோடு சேர்ந்து ஜெயமோகனும் இவரை மிகக்கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆனால் வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலைப் பற்றியும், எஸ்தர் சிறுகதையை பற்றியும் பலர் சிறப்பாகவே கூறியிருந்தனர். எம்.எல் நாவலே நான் படிக்கும் வண்ணநிலவனின் முதல் நாவல். 


எம்.எல். மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட். கம்யூனிசம் என்பதே நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதை இன்று அனைவரும் உணர்ந்து இருப்பார்கள். அதிலும் ஆயுதப்போராட்டம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதும் மிகத்தெளிவாக புரிந்திருக்கும். கம்யூனிசத்தின் கோர முகத்தை பஞ்சம் படுகொலை பேரழிவு என்ற புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டன் ஆதரங்களுடன் விவரித்திருக்கின்றார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் சில முகங்களை பற்றி ஜெயமோகன் பல கட்டுரைகளில் எழுதியிருக்கின்றார், அவரது பின்தொடரும் நிழலின் குரல், கட்சி தொண்டர்களின் பரிதாப நிலையைப் பற்றி பேசுகின்றது. ஒநாய் குலச்சின்னம், புலிநகக் கொன்றை போன்ற நாவல்களிலும் கம்யூனசத்தின் கோரமுகத்தை காணலாம்.

22 ஜூன் 2021

எனது நாடக வாழ்க்கை - அவ்வை சண்முகம்

இந்த பெருந்தொற்று அனைவரையும் வீட்டில் அடைத்து வைத்து இருக்கும் நேரத்தில் நமக்கு உதவுவது தொழில்நுட்பம். பிழைப்பிற்கும், பொழுதுபோக்கிற்கும். பொழுதுபோக்கு இன்று அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கையில் வேண்டிய திரைப்படங்கள், தொடர்கள், ஆவணப்படங்கள். தூங்கும் நேரம் தவிர பார்த்தால் கூட பல வருடங்கள் பார்த்து கொண்டே இருக்கலாம். கொஞ்சம் பின்னால் சென்றால் டீவி தொடர்கள், திரைப்படங்கள், நாடகங்கள், தெருக்கூத்து. இவற்றில் தெருக்கூத்து அழிவின் விளிம்பில் இருக்கின்றது. நாடகங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாடகங்களும் விதவிதமாக மாறியிருக்கின்றன. இன்று நாடகம் என்றவுடன் பட்டென்று நினைவிற்கு வருவது க்ரேஸி மோகனும், எஸ்.வி.சேகரும். துணுக்கு தோரணங்களால் கட்டப்பட்ட நாடகங்கள். பார்க்க கூட வேண்டாம். கேட்டாலே போதும். இன்னும் சில சீரியஸ் நாடகங்களும் நடக்கின்றன. பொன்னியின் செல்வன் எல்லாம் நாடகமாக வருகின்றது. பரிக்‌ஷா மாதிரியான குழுக்கள் வேறுவிதமான நாடகங்களை நடத்துகின்றன. பெங்களூரில் பலர் வீதி நாடகங்களை நடத்துவதுண்டு. 

ஆரம்பத்தில் நாடகங்கள் எப்படி இருந்தன? நாடக நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? எப்படிப்பட்ட நாடகங்கள் நடிக்கப்பட்டன? எப்படி நாடகங்கள் வளர்ந்தன? சினிமா எந்தளவிற்கு பாதிப்பை உண்டாக்கியது? நாடக துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவ்வை சண்முகம் எழுதிய இந்த அனுபவ நூல், இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதிலை தருகின்றது.  

04 ஜூன் 2021

சார்த்தா - எஸ்.எல்.பைரப்பா

பருவா, ஆவரணா நூல்களின் ஆசிரியர் பைரப்பாவின் மற்றொரு நாவல் சார்த்தா. பைரப்பாவின் ஒவ்வொரு நாவலுக்கு பின்னாலும் அவரின் மிகப்பெரிய உழைப்பு உள்ளது. பருவா நாவலுக்காக மகாபாரத நிகழ்ச்சிகள் நடந்த இடங்களுக்கு எல்லாம் நேரில் சென்று பார்த்திருக்கின்றார், ஆவரணாவிற்காக அவர் படித்த நூல்களின் வரிசை மிகப் பெரியது. ஒவ்வொரு நூலையும் ஆராயந்து எழுதும் பைரப்பா, இந்த முறை பருவா - ஆவரணா காலகட்டத்திற்கு இடைப்பட்ட ஒரு காலத்தை நாவலுக்கான காலமாக எடுத்துக் கொண்டுள்ளார். 

வடபகுதிகளில் யார் யார் ஆண்டார்கள், அவர்களின் வம்ச வரிசை எல்லாம் நமக்கு சரித்திரப் பாடத்தில் பரிட்சைக்கு மட்டும் படிப்பதால் மறந்து போகின்றது. அசோகர், சந்திரகுப்தர், சாளுக்கியர்கள், பாடலிபுத்திரம், ஹர்ஷர், பிம்பிசாரர், கன்யாகுப்தம் என்று சில பெயர்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. அந்த காலகட்டத்தை பற்றிய புத்தகம். இப்புத்தகம் அசோகரின் காலத்திற்கு பின்னால், புத்தமத எழுச்சி காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஆதி சங்கராச்சாரியர் காலத்தில் நடக்கின்றது. 

24 மே 2021

மிதவை - நாஞ்சில் நாடன்

தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ந்த பின் வேலை கிடைப்பது என்பது கொஞ்சம் சுலபமாகிவிட்டது. தகுதிக்கு ஏற்ற வேலை என்பது எப்போது கடினம்தான். ஆனால் பெரும்பாலனவர்களுக்கு இன்று ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கூட, மாலையில் ஸ்விகி, ஜொமொட்டோ போன்ற நிறுவனங்களில் வேலைக்கு சேர முடிகின்றது. 

இதற்கு முன்னால் இருந்த நிலை வேறு. எழுபதுகளின் இறுதிகள், எண்பதுகளின் ஆரம்பகாலப் படங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். தாடி வளர்த்த நாயகன், வேலை காலி இல்லை போர்டுகள், விண்ணப்பம் வாங்க பணம் தராத அப்பா, வேலைவெட்டி இல்லாதவன் மீது காதல் கொள்ளும் மக்கு பெண்கள்.

19 மே 2021

கல்லுக்குள் ஈரம் - ர.சு.நல்லபெருமாள்

அகிலன், நா.பா போன்ற எழுத்தாளர்களின் நாவல்களை படிக்கும் போது "இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் எந்த கிரகத்தில் வசிக்கின்றார்கள்" என்ற எண்ணம் ஏற்படும்.  நாவலில் அனைவரும் தத்துவமாகவும், உயர்ந்த லட்சியங்களை பற்றியும் பேசிக் கொண்டே இருப்பார்கள். இந்த நாவல் கொஞ்சம் தப்பியிருந்தால் அந்த வகையில் விழுந்திருக்கும்.

சுதந்திர போராட்ட காலத்து நாவல். கல்கி  சுதந்திர போராட்டத்தை பின்புலமாக வைத்து பல நாவல்கள் எழுதியிருக்கின்றார் அலையோசை, தியாகபூமி, சோலைமலை இளவரசி. ஆனால் அவரின் நாவல்களில் அனைவரும் கற்பனை பாத்திரங்களே. இந்நாவலில் கற்பனை பாத்திரங்களுடன் பல சுதந்திர போராட்ட வீரர்களும் பாத்திரங்களாக வருகின்றனர். காந்தி, சிதம்பரம் பிள்ளை, பாரதியார், வாஞ்சி நாதன், ராஜாஜி, நேரு.

10 மே 2021

சதுரங்க குதிரைகள் - நாஞ்சில் நாடன்

வழக்கம் போல தலைப்பிற்கும் நாவலுக்கும் என்ன தொடர்பு என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. கதையின் நாயகன் அலைவதற்கு தொடர்பானது என்றால், சதுரங்கத்தின் குதிரைகள் அப்படியல்ல. மிகவும் சக்தி வாய்ந்தவை, மிகவும் ஆபத்தானவை. என்னவோ ஒன்று.

நாஞ்சில் நாடனின் மற்றொரு பம்பாய் கதை. மீண்டும் பலவித மனிதர்கள் அறிமுகம் செய்கின்றார். தனியனாக வாழும் நாரயணனின் கதை.

நாகர்கோவில் தாண்டிய ஒரு கிராமத்திலிருந்து, பிழைக்க பம்பாய் சென்ற ஒருவனின் அனுபவத் தொகுப்பு. அவனின் பம்பாய் வாழ்க்கை, கிராம வாழ்க்கை, பயண அனுபவங்கள் அனைத்தையும் சேர்த்து பின்னிய ஒரு நாவல்.

நாஞ்சில் நாடனின் வழக்கமான கதை சொல்லும் பாணி, மேலோட்டமாக படிக்கும் போது ஒரு சாதரண கதை என்றாலும், உள்ளே நமக்கு சின்ன சின்ன அனுபவங்களை ஒளித்து வைத்துள்ளார். தனியாக ஏதோ ஊரில் சென்று வேலை செய்த பலருக்கு நெருக்கமாக தோன்றும். 

நாவலில் எனக்கு பிடித்தமாக இருந்தது, நாராயணின் பயண அனுபவங்கள். என்னுடைய அலுவலக நண்பருடன் ஒரு முறை திருப்பதி சென்றோம், ஜாலியாக குளித்து விட்டு வந்தபின் துண்டுகளை காயப்போட இடம் தேடிய போது அவர் தன் பையிலிருந்து ஒரு கயிறை எடுத்து கொடுத்தார். அவர் கொண்டு வந்திருந்த பொருட்கள், டார்ச், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கயிறு, நக வெட்டி, சிறியகத்தி, தலைவலி காய்ச்சல் மாத்திரைகள், பேண்டேய்ட், கவர்கள். அவர் இதற்கு முன்னால் வேலை செய்த அலுவலகத்தில் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருக்கும், அப்படி சென்று பழகியதன் விளைவு. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில், முன்பதிவு டிக்கெட் இல்லாத ட்ரெயினில் ஏறி, ஊர் பேர் தெரியாத ஏதோ ஒரு நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டியிருக்கும். அவரின் அந்த அனுபவங்களை, இதில் மீண்டும் நெருக்கமாக காண முடிந்தது. 

நாஞ்சில் நாடன் நாவலில், உணவு இல்லாமலா, பாவ், வடா பாவ், டால் ஃபிரை, புல்கா, உருளை கிழங்கு வடை, கடலை மாவு பண்டம் என்று விதவிதமான உணவு, ஒரு கல்யாண பந்தியும் உண்டு. 

அவரின் தலைசிறந்த நாவல், படித்தே தீர வேண்டும் என்ற லிஸ்டில் வராது, ஆனால் கிடைத்தால் தவறவிடாமல் படிக்க வேண்டிய நாவல். 

05 மே 2021

ராமோஜியம் - இரா.முருகன்



முதலிரவில் மனைவி மூக்குபொடி டப்பாவைத் தேடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு வித்தியாசமான கற்பனையில் விளைந்த நாவல். 

நாற்பதுகளில் சென்னையில் வாழும் ஒரு தம்பதியரின் தினசரி அனுபவங்களின் ஒரு சிறியத் தொகுப்பு. கருப்பு வெள்ளை பிண்ணனியில் சென்னை, டில்லி, கும்பகோணம் போன்ற இடங்களில் சுற்றித் திரிய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும், அந்த வாய்ப்பைத் தவற விடாமல் இருக்க இந்த நாவலைப் படிக்கலாம்.

தேவனின் துப்பறியும் சாம்பு, சிஐடி சந்துரு போன்ற தேவனின்  புத்தகங்களைப் படிக்கும் போது சென்னையைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கும். நாற்பதுகளின் சென்னை, கொரட்டூர் கிராமம், வெளாச்சேரி கிராமம், ஊரை விட்டு எங்கோ இருக்கும் குரோம்பேட்டை, பங்களாக்கள் நிறைந்த நுங்கம்பாக்கம், வளர்ந்து வரும் மேற்கு மாம்பலம், ட்ராம் வண்டிகள் என்று,  ஒரு கருப்பு வெள்ளையில் ஒரு நகரம் நம் கற்பனையில் உருவாகிவரும். அந்தக் கற்பனையை இன்னும் விரிவாக்கும் இந்தப் புத்தகம்.

19 பிப்ரவரி 2021

அஞ்ஞாடி - பூமணி

காவல் கோட்டம், ஆழி சூல் உலகு வரிசையில் மற்றுமொரு பெரிய நாவல்.2014ம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருதினைப் பெற்ற நாவல்.  நூற்றாண்டு கால கதையை சொல்லும் நாவல். சுமார் 1200 பக்கங்கள். படித்து முடிக்க இரண்டு வாரத்திற்கு மேலாகிவிட்டது 

அஞ்ஞை என்றால் அம்மா என்று பொருளாம். அஞ்ஞாடி என்றால் அம்மாடி என்று பொருள் கொள்ளலாம். படித்து முடித்ததும், அம்மாடி எவ்வளவு பெரிய நாவல் என்றுதான் கூற முடிகின்றது. 

கலிங்கல் கிராமத்தில் வாழும் இரண்டு குடும்பங்களின் கதையோடு, ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை தந்துள்ளார். மிகப்பெரிய நாவல். அத்தனை குடும்பங்கள். கலிங்கல் என்னும் ஊரில் வாழும் இரண்டு சிறுவர்கள் ஆண்டி - மாரி. ஆண்டி நிலபுலங்களுடன் வாழும் ஒரு சம்சாரி குடும்பத்து சிறுவன், மாரி கலிங்கல் கிராமத்து மக்களின் அழுக்குகளை வெளுக்கும் குடும்பத்து சிறுவன். இருவரின் நட்பு, மெதுவாக வளர்ந்து, பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றது. அவர்களின் குடும்ப கதையோடு, அந்த பிரதேச வரலாறும் சேர்ந்து சொல்லப்படுகின்றது.

05 பிப்ரவரி 2021

சண்டை (அவர் போடாதது)

 நமச்சிவாயமும், ஐயப்பனும் பண்டு கடை பெஞ்சில் அமர்ந்து கொண்டு சிய்யத்தை சாப்பிட்டு முடித்து விட்டு டீக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். 

எதிரில் குமார் வருவதை முதலில் ஐயப்பன்தான் பார்த்தார், “பண்டு இன்னம் ஒரு ரெண்டு காராச்சிய்யம் கொண்டு வா” என்றார்.


அவர் கொண்டு வரவும் குமார் அருகில் வரவும் சரியாக இருந்தது. நேற்றைய தினபூமியில் வைக்கப்பட்ட சிய்யத்தை கையில் வாங்கியபடி, “என்ன செட்டியாரே, இன்னும் பேப்பர்ல தர. தேனியில பாரு, ஒரு தட்டுல வச்சி நல்ல சட்டினி  ஊத்தி தரான். பாளையம் பைபாஸ்ல எலையில வச்சி சட்னி ஊத்தி தரான்” என்றபடி வடிசட்டியில்  இருந்ததிலேயே பெரிய சிய்யத்தையும் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தான். 


“அங்க எல்லாம் சாப்டு முடிச்ச உடனே காசு தரணும் இல்ல” என்றார் ஐயப்பன்


அதை கண்டு கொள்ளாத குமார், “சித்தப்பா வழக்கம் போல இங்கதான் இருப்பன்னு தெரிஞ்சிதான் வந்தேன்.” 


04 பிப்ரவரி 2021

சமாதானம் (அவர் செய்யாதது)

 ஐயப்பன் ஊருக்கு போயிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த நமச்சிவாயத்தை அவர் மனைவியின் குரல் எழுப்பி கூடத்திற்கு அழைத்து வந்தது.

கூடத்தில் ஒரு ஓரமாக ஒரு உருவம், தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தது. குமார்


"என்ன குமாரு, இந்த நேரத்துல இங்க, ஏய் ஏண்டா அழுவுற, என்னடா ஆச்சு"


"சித்தப்பா. நீயே சொல்லு நான் எம்புட்டு தூரம் நியாய தர்மத்திற்கு பயந்தவன், ஏதாவது அநியாயமா பேசி பாத்திருக்கியா, சொல்லு சித்தப்பா"


"இப்ப எதுக்குடா அது எல்லாம்"


"சொல்லு சித்தப்பா, நீதான் நம்ம வீட்லயே மனசுல உள்ளத பட்டுன்னு சொல்ற ஆளு, சொல்லு சித்தப்பா"


நமச்சிவாயம் மனைவியை ஏறிட்டு பார்த்தார், அவர் முகத்திலிருந்த கேலியை கண்டு கோபம் வந்தவராக "உன்னவிட நியாயஸ்தன் யாருடா, எல்லாருக்கும் எது நல்லதுன்னு பாத்து பாத்து செய்வ, அதுக்கு என்ன இப்ப"


03 பிப்ரவரி 2021

பங்கு (அவர் பிரிக்காதது)

 "நா வரலப்பா, என்ன விடு. எனக்கு பேங்க் வரை போகனும்" என்று ஐயப்பன் அடம் பிடித்துக் கொண்டிருந்தார். 

"பத்து மணிக்கு முதல்ல நம்ம ரிஜிஸ்ட்ரேஷன்தான், முடிஞ்ச உடனே நீ பேங்க் போகலாம்" என்று ஐயப்பனை கிளப்பிக் கொண்டிருந்தார் நமச்சிவாயம். 


"நீயும் உன் அண்ணனும் பாகம் பிரிச்சி ரிஜிஸ்ட்டர் பண்ற விஷயத்துக்கு என்னை ஏன் கூப்டுற. நீ ஏற்கனவே அவங்க என்ன கொடுத்தாலும் சரின்னு சொல்லிட்டு வந்திருக்க முட்டாப்பய மாதிரி, இப்ப எதுக்கு நான்"


"நீ இல்லாம எப்படி"


"சரி வந்து தொலையுறேன்"


பத்திர பதிவு அலுவலகத்தில் நல்ல கூட்டம். நமச்சிவாயம் கூட்டத்தில் குமாரை தேடி கண்டு பிடித்தார். கூடவே அவரது அக்காவும், தங்கையும். 


"பாருய்யா குமாரோட நல்ல மனச, அவன் அத்தைங்களுக்கும் பங்கு கொடுக்க கூப்பிட்டு அனுப்பியிருக்கான் பாரு, எங்க அவனோட அக்காவ காணோம்”


ஐயப்பன், நமச்சிவாயத்தை பரிதாபமாக பார்த்தார். 


02 பிப்ரவரி 2021

கடன் (அவர் வாங்காதது)

 ஐயப்பன் காலையில் எழுந்து அவர் வீட்டில் காப்பி குடித்துவிட்டு, வழக்கம் போல நமச்சிவாயத்துடன் டீ குடிக்க நமச்சிவாயம் வீட்டிற்கு வந்தார். வழக்கத்திற்கு மாறாக நமச்சிவாயமே வெளியில் நின்று வரவேற்றார்.


"யே, என்னப்பா இது, வழக்கமா நா வரும்போதுதான் பல்ல விளக்கிட்டு இருப்ப, இப்ப என்னடான்னா ரெடியா நிக்கிற"


"ஐயப்பா உனக்கோசோரம் தான் காத்திட்டு இருக்கேன், நம்ம சொசைட்டி பேங்கல இருந்து வந்திருக்காய்ங்க ஏதோ கடன் விஷயமாம்"


"உனக்கு எதுக்குடா கடன், உங்கய்யா  கட்டி விட்ட கடை வாடகை வருது, உங்கண்ணன் வேற உன் பங்க பிரிச்சி கொடுத்துட்டாரு அதுல வேற கொஞ்சம் வருது"


"யோவ் நீ வேற கடுப்பு மயிர ஏத்தாத, அவனுங்க வந்திருக்கிறது கடன் கொடுக்க இல்ல. கொடுத்த கடன வசூல் பண்ண"


ஐயப்பன் மாறிய குரலில், "பாத்தியா ஏங்கிட்ட ஒரு வார்த்த சொல்லாம போய் கடன் எல்லாம் வாங்கியிருக்க. சொன்னா நான் என்ன ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மேலயா கேட்டிருப்பேன்"


நமச்சிவாயம் கோபம் முற்றிய குரலில்,"டேய் வெண்ணை. முழுசா கேட்டுட்டு பாட்டுப்படி. நான் எந்த கடன் மயிரும் வாங்கல, இப்ப வந்து கடன கட்டுங்கறாய்ங்க. கேட்டா நீதான் உன் கடைய வச்சி வாங்குனங்க்ராய்ங்க"


ஐயப்பன் சுதாரித்துக் கொண்டு "வா உள்ள போலாம்" என்று கூறிவிட்டு உள்ளே வந்தார்.


உள்ளே அமர்ந்திருந்தவர்களிடம் ஐயப்பன் தாழ்ந்த குரலில் பேசிவிட்டு வந்தார். ஐயப்பன் “குமார்” என்றார். நமச்சிவாயம் புரிந்து கொண்டு, குமாரை போனில் அழைத்தார். "தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கின்றார்னு வருது"


ஐயப்பன் தலையை சொறிந்தார். 


01 பிப்ரவரி 2021

கையெழுத்து (அவர் போடாதது) - குட்டி கதை

 நமச்சிவாயம் கையில் தபால்க்காரர் தந்த கடிதத்தை வைத்து கொண்டு முழித்துக் கொண்டிருந்தார். 

"சுத்த நச்சு பிடிச்ச மழையப்பா" என்றபடி உள்ளே வந்தவர் நமச்சிவாயத்தின் நண்பர் ஐயப்பன். "என்னப்பா லெட்டர்".


"இந்தா நீயே படிச்சி என்ன எழவுன்னு சொல்லு, எனக்கு ஒன்னும் புரியல."


ஐயப்பன் படித்து முடித்துவிட்டு, "ஒன்னுமில்லப்பா இன்னைக்கி இருந்து நீ நமச்சிவாயம் இல்ல, சின்னப்பா"


"அதுதான் ஊருக்கே தெரியுமே"


"ஆமா, ஆனா அது அரசாங்கத்துல செல்லாது இல்ல. இப்ப அரசாங்கமே உன் பேர சின்னப்பான்னு மாத்தி அரசாங்க இதழ்ல வந்துடிச்சி அம்புட்டுதான். நீ எதுக்குப்பா பேர மாத்த எழுதி கொடுத்த"


"நா எதுக்குயா எழுதிக் கொடுக்கணும்"


"சமீபத்துல எதுலயாவது கையெழுத்து போட்டியா, ஆதார் அது இதுன்னு" 


"இல்லயா, இப்படி பேர மாத்தாலாம்னே எனக்கு தெரியாதேப்பா. குமார் என் ஆதார் கார்டு வாங்கிட்டு போனான். நம்ம பெரிய வீட்ட விக்கனும் அதுக்காக ஏதோ வேணும்னு வாங்கிட்டு போனான். நீ கூட சொன்னியே என் கையெழுத்து இல்லாம ஒன்னும் பண்ண முடியாதுன்னு."


"ஆமா இப்பவும் சொல்றேன், உன் கையெழுத்து இல்லாம ஒன்னும் பண்ண முடியாது. அவனுக்கு போன போடு. ஸ்பீக்கர்ல போடு."


"டேய் குமாரு, என்னடா என் பேரு என்னவோ மாறியிருகுன்னு தபால் வந்திருக்கு."


"வந்திருச்சா சித்தப்பா, அனுப்பி எவ்வளவு நாள் ஆச்சு. ஒரு வேலை சரியா நடக்குதா இந்த அரசாங்கத்துல."


"யார கேட்டு என் பேர மாத்துன, எதுக்கு மாத்துன"


"இதுவா, அது ஒன்னுமில்ல சின்னப்பா. பங்கு பிரிச்சோமில்ல அப்ப உன் பேர பத்திரம் எழுதும் போது பேச்சு வழக்குல நான் உன் பேர எல்லா இடத்துலயும் சின்னப்பான்னே சொல்லி, அப்படியே ரெஜிஸ்ட்டரும் ஆயிடுச்சு.அத யாரும் கவனிக்கல. இப்ப அந்த வீட்ட விக்க போனா, யாரு சின்னப்பான்னு கேக்குராய்ங்க. அதான் பேர மாத்திட்டேன்."


"என் கையெழுத்து இல்லாம இது எல்லாம் பண்ண முடியாது, நீ என் கையெழுத்த போட்டுட்டன்னு சொல்றான் ஐயப்பன். "


"என்ன சின்னப்பா, இப்டி கேக்குறாரு உங்காளு. நான் போடுவனா. அப்படிப்பட்ட ஆளா நானு."


"பின்ன எப்படிடா மாத்துன. "


"ப்ரோக்கர்தான் போட்டான். "


"நீ போடல ப்ரோக்கர் போட்டான்,அத நீ பெருமையா வேற சொல்ற. கர்மம்டா. எவன கேட்டு என் பேர நீ மாத்துன"


"சித்தப்பா உன் நல்லதுக்குதான நான் மாத்துனேன், அதுக்கு போய் குதிக்கிறயே."


"ஏண்டா, கையெழுத்த போர்ஜரி பண்ணிட்டு, அத கேட்டா என்ன தப்புங்கிற. ஒருத்தன் கையெழுத்த இன்னொருத்தன் போடறது பேரு வேறடா. இதுக்கு எத்தன வருஷம் தெரியுமா. இன்னம் வேற எதுல எல்லாம் என் கையெழுத்த போட்டிருக்க. "


"என்ன விட்டா ரொம்ப குதிக்கிற, நான் என்ன உன் செக் புக்லயா கையெழுத்து போட்டேன். இல்ல நீதா உன் பாஸ்புக்கு, செக் புக்கு எல்லாத்தையும் என்கிட்ட கொடுத்து வச்சிருக்கியா. சும்மா பேசிட்டு இருக்க.நீ தான் படிக்கல , அந்த ஐயப்பனுக்கு அறிவில்ல. இப்ப என்ன நடந்து போச்சுன்னு கத்துற.  ஊருக்குள்ள எல்லாருக்கும் நீ சின்னப்பாதான். நியாயமா உன்  பேர நீதான் மாத்தியிருக்கனும். கூடவே இருக்காரே ஐயப்பன் சொன்னாரா அவரு. "


"டேய் நான் எதுக்குடா மாத்தனும், என்னக்கு என்ன தேவை மயிரு இருக்கு. "


"மாத்துனதுக்கு எம்புட்டு பணம் செலவாச்சு தெரியுமா, அத கூட உன்கிட்ட கேக்கலயே நான். அதுக்கு நீ காட்ற நன்றி இதுதானா. எங்கப்பா கையெழுத்த போட்ட எத்தன தடவ பணம் எடுத்துருப்பேன், எங்கப்பா ஒரு கேள்வி கேட்டிருப்பாரா என்ன. அதவிடு எத்தன தடவ என் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்ல எங்கம்மா கையெழுத்த போட்டிருக்கேன். என் கட்சி சார்பா அனுப்புற மனுல எத்தன கையெழுத்த போட்டுருப்பேன், எத்தன் மொட்ட கடுதாசில கையெழுத்து போட்டிருப்பேன். நீ என்னடான்னா ஒரு பேர மாத்துனதுக்கு இந்த பேச்சு பேசுற. "


"டேய் அது எல்லாமே ஃப்ராடுத்தனம்தான்டா"


"எல்லாம் என் கிரகம். நல்லது பண்ண போய் இப்ப நா பேச்சு வாங்கிட்டு இருக்கேன். நம்ம சித்தப்பா இப்படி ரெண்டு பேரோட இருக்காரே, ஒரு பேருக்கு ரெக்கார்டே கிடையாதே அப்படின்னு மனசு நொந்து பல நாள் தூக்கம் வந்ததே இல்ல. அவருக்கு ஏதாவது நல்லது பண்ணனும் பண்ணனும்னு மனசு கிடந்து தவிச்சது எனக்குதான் தெரியும். சரி ஒரு 5000 செலவானாலும் பரவாயில்ல அவருக்கு பேர மாத்தி நல்லது பண்ணனும் நினைச்சா இப்படி பேசிட்டயே. உன் கையெழுத்த போட எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு தெரியுமா. எனக்கே அவ்வளவு கஷ்டமாயிருக்கும் போது, உன் வயசுக்கு அது எவ்வளவு கஷ்டம், எப்படி உன் கையெழுத்த போடுவ. அத எல்லாம் நினச்சு பாரு உனக்கே தெரியும். இப்படி இருக்க உன் கிட்ட வந்து உன்ன கஷ்டப்படுத்துவனா நானு."


"ஒரு சின்ன கையெழுத்துக்காக உன்ன கார் வச்சி கூட்டிட்டு போய கஷ்டப்படுத்த முடியுமா, பாவம் இல்ல. வயசான காலத்துல நீ எப்படி கார்ல வருவ. நீயே இங்க சோத்துக்கு கஷ்டப்பட்டுட்டு இருக்க. இதுக்கு மேல கார்ல போற கஷ்டம் வேறயா. நீ வேற நாங்க வேறயா சித்தப்பா. என்னதான் சொத்து பிரிக்கும் போது உனக்கு கம்மியா கொடுத்தாலும், உன் மேல பாசத்த கம்மியாவா கொடுத்தோம். வருஷ வருஷாவரும் எங்களுக்கு வர பொங்கல் வேட்டிய உனக்குதான் தரோம். "


"யோவ் ஐயப்பா அழுகுறான்யா, டேய் வேணான்டா"


"விடு மறுபடியும் நான் மாத்தி கொடுத்துடறேன். ஏற்கன்வே மாத்தினதுக்கும், இப்ப மறுபடியும் மாத்துறதுக்கும் சேத்து ஒரு பத்தாயிரம் கொடு போது. நீ கையெழுத்து கூட போட வேண்டாம்." 


போனை வைத்த நமச்சிவாயம் கண்ணில் நீர். 


நமச்சிவாயம் "யோவ், பாவம்யா அவன் என் நல்லதுக்குதான் பண்ணியிருக்கான் போலய்யா"


ஐய்யப்பன் அவஸ்தையாய் தலையை அசைத்தர்.