நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஜூன் 2022

பேட்டை - தமிழ்ப்பிரபா

வட்டார வழக்கை எழுத்தில் கொண்டு வருவது மிகவும் கடினமான விஷயம். வட்டார வழக்கில் முக்கிய இடம் வகிப்பது அதன் ராகமும், ஏற்ற இறக்கமும். "ஏய் என்னாப்பா" என்பது மதுரையில் ஒரு வகையிலும், கோம்பையில் வேறு மாதிரியும் ஒலிக்கும். அதை அந்த ஊர்க்காரர்கள் மட்டுமே உணர முடியும். இதை எழுத்தில் ஓரளவிற்கே கொண்டுவர முடியும். அதை பலர் வெற்றிகரமாக செய்துள்ளனர். சுகா, ஜெயமோகன், சோ.தர்மன், ஜோ.டி.க்ரூஸ், வைரமுத்து, வெங்கடேசன், கி.ரா போன்றவர்கள்  திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், நாகர்கோவில், நாஞ்சில் நாடு, கோவை, தஞ்சை,மதுரை, தேனி வட்டர வழக்குகளில் பல நாவல்களை எழுதியுள்ளனர். 

சென்னை வழக்கில் எந்த நாவலும் படித்ததில்லை இதுவே முதல். ஜெயகாந்தன் ஒன்றிரண்டு கதைகளில் எழுதியிருந்தாலும் அந்தளவிற்கு ஈர்க்கவில்லை. சோ சில அரசியல் நையாண்டிகளில் பயன்படுத்தியிருந்தது எனக்கு கொஞ்சம் செயற்கையாக தெரிந்தது. இந்த நாவலில் எங்கும் வட்டார வழக்கு செயற்கையாக தெரியவில்லை. சென்னையில் மூன்று வருடம் மின்சார ரயிலில் சென்று வரும்போது கேட்ட அந்த மொழியை படிக்க முடிந்தது.  இயல்பாக அந்த மொழியை பேசினாலும், அதை எழுத்தில் கொண்டுவருவது கடினம். அதை சிறப்பாக செய்துள்ளார்.

26 மார்ச் 2022

சங்கதாரா - "காலச்சக்கரம்" நரசிம்மா

நண்பர் ஸ்ரீராம் காலச்சக்கரம் நரசிம்மா என்னும் எழுத்தாளரைப் பற்றி முன்னர் குறிப்பிடிருந்தார். இந்திரா செளந்திரராஜன் பாணி எழுத்தாளர் என்று நினைத்தேன். உறவினர் வீட்டில் அவர் எழுதிய புத்தகம் ஒன்று கிடைத்தது. வானதி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. நரசிம்மா, பிரபல சினிமா இயக்குனர் சித்ராலயா கோபுவின் புதல்வர், இவரின் தாயரும் அறியப்பட்ட நாவலாசிரியர். கமலா சடகோபன். 

முன்னுரையிலேயே சாண்டில்யன் வாசகர்கள் தலையில் நறுக்கென்று கொட்டி விடுகின்றார். பின்னர் வரும் பக்கங்களில் கல்கி வாசகர்களை கொட்டு கொட்டு என்று தலை வீங்கும் அளவிற்கு கொட்டி விடுகின்றார். சரித்திர கதைகளுக்கு தமிழில் முன்னுதாரணம் என்றால் கல்கியும், சாண்டில்யனும். இவர்கள் பாணியிலேயே பெரும்பாலான கதைகள் எழுதப்பட்டன. விதிவிலக்குகள் சில டணாய்க்கன் கோட்டை, வீரபாண்டியன் மனைவி, ரத்தம் ஒரே நிறம், வானம் வசப்படும், மானுடம் வெல்லும், காவல்கோட்டம் போன்றவை. இந்த நாவல்கள் அண்மை கால சரித்திர குறிப்புகளை வைத்து பின்னப்பட்டவை. 

ஆனால் சாண்டில்யன், கல்கி எழுதியது சோழ, பாண்டிய சரித்திரம். அந்த காலத்தில் கிடைத்த ஆதாரங்களையும், அக்காலத்து ஆய்வு முடிவுகளையும் வைத்து எழுதினார்கள். இன்று ஐம்பது வருடங்களில் பல புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம். இருந்தாலும் அக்கால சரித்திரத்தை எழுதுவது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் என்ன செய்யலாம்

ஸ்பாய்லர் அலர்ட். பல திடுக்கிடும் திருப்பங்கள், அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், யூகிக்கவே முடியாத பல முடிச்சுகளை பற்றி எழுதப்பட்டுள்ளது. அடுத்து வரும் பகுதி நடை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அடிக்கடி  இது மாதிரி எழுதுவார், அந்த பாதிப்பில் எழுதியது.   நாவலும் அதுமாதிரிதானே பொன்னியின் செல்வனின் பாதிப்பில் எழுதியது. அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள். 

28 ஜனவரி 2022

குற்றப்பரம்பரை - வேல.ராமமூர்த்தி

குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ப்ரிட்டீஷ் ஆட்சி காலத்தில் ஒரு சில ஜாதி மக்களை குற்றப்பரம்பரையினர் என்று வகைப்படுத்தி அவர்களுக்கு என ஒரு தனிச்சட்டத்தை கொண்டு வந்தனர். அந்த ஜாதி ஆண்கள் அனைவரின் கை ரேகைகளையும் பதிவு செய்து கொண்டு அவர்களை காவல் நிலையத்தில் இரவு முழுவதும் தங்க வைத்தனர். 

இதில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளர், சேர்வை, அம்பலகாரார் போன்ற ஜாதியினர்கள் என்று கூறப்படுகின்றது. வடஇந்தியாவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் களவுக்கு போனவர்கள், போகாதவர்கள் என்று அனைவரும் பாதிக்கப்பட்டனர். காவல் கோட்டம் நாவலில் ஒரு பகுதியும் இதை அடிப்படையாகக் கொண்டது. 

வேல.ராமமூர்த்தி, இன்று திரைப்படங்கள் மூலம் இன்று பலருக்கு நன்கு தெரிந்தவர். பட்டத்து யானை என்ற படத்தில் அறிமுகமானார் என்று நினைக்கின்றேன். பெரும்பாலும் ஒரே மாதிரி நடிப்பதால் எந்தப் படம் என்ற குழப்பம் வேறு. பட்டத்து யானை திரைப்பட கதை இவருடையதா என்று தெரியவில்ல அதே பெயரில் இவர் ஒரு நாவலும் எழுதியுள்ளார். தனது தாய், தந்தை இருவரின் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து வேல என்று வைத்துக் கொண்டுள்ளார். தன் சமூகத்தின் கதையை எழுதுவதை விட, இன்று அவர்கள் மீது தேவையில்லாது சுமத்தப்பட்ட ஒரு களங்கத்தை களைய வேண்டும் என்பதே அவரது எண்ணம் என்று தோன்றும்படியான முன்னுரை. 

07 ஜனவரி 2022

சிக்க வீர ராஜேந்திரன் - மாஸ்தி ஐயங்கார்

கன்னடத்திலிரிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட நாவல். பொதுவாக எனக்கு மொழி மாற்ற நூல்களைப் பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் கிடையாது. சில பல மோசமான மொழி பெயர்ப்பு நூல்கள் செய்த வினை. ஆனால் இந்த நாவல் எங்கும் இது ஒரு மொழி பெயர்ப்பு என்பதை நினைவு படுத்தவில்லை. 

கர்நாடகாவின் குடகு மலை காவிரி நதியின் பிறப்பிடம். மலைகள் சூழ்ந்த பகுதி. இன்று பெரும்பாலும் காபி தோட்டங்களால் நிறைந்த பகுதி. நல்ல மழை உண்டு. குடகின் கலாச்சாரமும், பண்டிகைகளும் தனித்தன்மையானவை. கன்னடர்களிடமிருந்து அவர்களின் கலாச்சாரம் கொஞ்சம் வேறு பட்டிருக்கும். அவர்களுக்கு என்று பல பண்டிகைகள் உண்டு. அதில் பெரும்பாலனவை விவசாயம் சார்ந்தவை. விதை விதைக்க ஒரு பண்டிகை, அறுவடைக்கு ஒரு பண்டிகை. குடி என்பது அவர்களின் வாழ்வில் ஒரு அங்கம். வீட்டில் செய்து விற்கப்படும் மதுவகைகளை அங்கு காணலாம். ஹோம் மேட் ஒயின். விதவிதமான ஒயின்களை அங்கு கண்டேன். பலவித பழங்களில் செய்யப்பட்டவை, பூக்களில் செய்யப்படுபவை, வெற்றிலையில் தயாரிக்கப்பட்டதை கூட பார்த்தேன். வேட்டையும், போரும் அவர்களது கலாச்சாரம். நாட்டு துப்பாக்கிகளும் புழக்கத்தில் உண்டு என்றும் கேள்வி. அவர்களுக்கு என்று தனிச் சின்னமும் உண்டு. அதில் இருப்பது விவசாயக்கருவிகள், சூரியன், கதிர். பொதுவாக வேட்டையயையும் விவசாயத்தையும், அடிப்படையாக கொண்ட சமூகம். 

03 செப்டம்பர் 2021

பொன்னியின் செல்வன் - கல்கி

பொன்னியின் செல்வனைப்பற்றி யாரும் எழுதாத ஒன்றை எழுதிவிடுவது கடினம். பொன்னியின் செல்வனை வருடம் ஒருமுறையாவது படிப்பது வழக்கம். எப்போது படிப்பது என்பது மனநிலையை பொறுத்தது. ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றால் பொன்னியின் செல்வன் நினைவு வராமல் போகாது. இந்த முறை மணிரத்னம் எடுக்கும் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகர்கள் பற்றி வெளிவந்த செய்திகள் மீண்டும் படிக்க வைத்தது. 

பொன்னியின் செல்வனை முதல்முதலில் படிக்கும் போது வயது பதினொன்று. ஏழாம் வகுப்பு, ட்யூஷன் முடித்து வரும் வழியில் நூலகம். பொன்னியின் செல்வன்,வீட்டிற்கு கொண்டுவந்து படித்தேனா இல்லை அங்கேயே படித்தேனா என்று நினைவில் இல்லை. கடைசி அத்தியாயத்தை எவனோ ஒரு பரதேசி கிழித்து வைத்திருந்தான். பிறகு பல ஆண்டுகள் படிக்க முடியாமல், பத்தோ, பதினொன்றோ படிக்கும் போது நண்பனின் உறவினர் ஒருவர் வீட்டில் இருந்தது என்று கேள்விப் பட்டு சென்று கேட்டேன். யாரிடமும் எதையும் இரவலாக கேட்டதில்லை. இரண்டே புத்தகங்கள் இது ஒன்று, தில்லானா மோகனாம்பாள் இன்னொன்று. பயங்கர பிகு. ஒவ்வொரு பாகமாகத்தான் கொடுப்பேன், ஒன்றை படித்து முடித்து தந்தால்தான் அடுத்த பகுதியை தருவேன். நல்லவேளை படித்த பகுதியில் பரிட்சை வைப்பேன் என்று சொல்லவில்லையே என்று சந்தோஷமாக இருந்தது. ஒரே வாரத்தில் படித்து முடித்தேன். சில புத்தகங்கள் படிக்கும் போது மனதில் ஒரு ஜிலுஜிலுப்பு உண்டாகும், அதில் ஒன்று பொன்னியின் செல்வன். மோகமுள் மற்றொன்று. 

கல்லூரி படிக்கும் போது தொடராக கல்கியில் வந்து கொண்டிருந்தது. எனக்காகவே என் மாமா வாங்கினார். அதிலும் பிரச்சினை இரண்டாம் பாகம் பாதி சென்றபிறகு வாங்க ஆரம்பித்தார். அவரே எனக்காக முதல் பாகம், கல்கியில் வந்த தொடரே பைண்ட் செய்யப்பட்டதை மதுரையில் வாங்கி தந்தார். உள்ளே ஒரே ஒரு அத்தியாயம் மட்டும் பத்மவாசனின் படங்கள் இல்லாமல், முதன் முதலாக தொடர் வெளிவந்த போது வரைந்த மணியத்தின் படங்களுடன். முதல் முறை கல்கியில் வந்த அத்தியாயத்தை எப்படியோ அதில் சேர்த்திருந்தனர். ஆழ்வார்க்கடியான் பழையாறை அரண்மனையில் இருக்கும் பகுதி. கல்லூரி முடிந்து சென்னை வந்த பின்னும் ஊருக்கு வரும் போது எல்லாம் அனைத்தையும் சேர்த்து வைத்து பைண்டிங் செய்த புத்தகம்தான் இன்றும் இருக்கின்றது. இரண்டாம் பாகம் அதே கல்கி பைண்டிங்க் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். எங்காவது பழைய புத்தக கடையில் தேட வேண்டும். அந்த புத்தகத்தை எடுத்து படிக்கும் போதே ஒரு குஷி, அந்த பழைய பேப்பரின் வாசனை, படங்கள் என்று தனி உலகில் சில நாட்கள் திரிய முடியும். அவை அனைத்தும் பெங்களூரில் மாட்டிக் கொண்டதால், கிண்டிலில் தான் படிக்க முடிந்தது. 

30 ஜூன் 2021

எம்.எல் - வண்ணநிலவன்

வண்ணநிலவன் சமீபத்தில் கி.ரா மறைந்த போது ஏதோ எழுதி அனைவரிடமும் வாங்கி கட்டிக் கொண்டார். வண்ணநிலவனின் புனைவுகள் எதையும் படித்ததில்லை. வண்ணநிலவன் துர்வாசர் என்ற பெயரில் துக்ளக் இதழில் எழுதிவந்த அரசியல் கட்டுரைகளை மட்டுமே படித்திருக்கிறேன். துர்வாசரின் கட்டுரைகள் கொஞ்சம் கடுகடு ரகத்திலேயே இருக்கும், கோபம், கடுப்பு, வயதானவர்களுக்கு வரும் இயல்பான எரிச்சல் கலந்தது போலவே இருக்கும். அதுவே இவரின் புனைவுகளை படிக்க கொஞ்சம் தடையாக இருந்தது. இதோடு சேர்ந்து ஜெயமோகனும் இவரை மிகக்கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆனால் வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலைப் பற்றியும், எஸ்தர் சிறுகதையை பற்றியும் பலர் சிறப்பாகவே கூறியிருந்தனர். எம்.எல் நாவலே நான் படிக்கும் வண்ணநிலவனின் முதல் நாவல். 


எம்.எல். மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட். கம்யூனிசம் என்பதே நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதை இன்று அனைவரும் உணர்ந்து இருப்பார்கள். அதிலும் ஆயுதப்போராட்டம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதும் மிகத்தெளிவாக புரிந்திருக்கும். கம்யூனிசத்தின் கோர முகத்தை பஞ்சம் படுகொலை பேரழிவு என்ற புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டன் ஆதரங்களுடன் விவரித்திருக்கின்றார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் சில முகங்களை பற்றி ஜெயமோகன் பல கட்டுரைகளில் எழுதியிருக்கின்றார், அவரது பின்தொடரும் நிழலின் குரல், கட்சி தொண்டர்களின் பரிதாப நிலையைப் பற்றி பேசுகின்றது. ஒநாய் குலச்சின்னம், புலிநகக் கொன்றை போன்ற நாவல்களிலும் கம்யூனசத்தின் கோரமுகத்தை காணலாம்.

24 மே 2021

மிதவை - நாஞ்சில் நாடன்

தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ந்த பின் வேலை கிடைப்பது என்பது கொஞ்சம் சுலபமாகிவிட்டது. தகுதிக்கு ஏற்ற வேலை என்பது எப்போது கடினம்தான். ஆனால் பெரும்பாலனவர்களுக்கு இன்று ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கூட, மாலையில் ஸ்விகி, ஜொமொட்டோ போன்ற நிறுவனங்களில் வேலைக்கு சேர முடிகின்றது. 

இதற்கு முன்னால் இருந்த நிலை வேறு. எழுபதுகளின் இறுதிகள், எண்பதுகளின் ஆரம்பகாலப் படங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். தாடி வளர்த்த நாயகன், வேலை காலி இல்லை போர்டுகள், விண்ணப்பம் வாங்க பணம் தராத அப்பா, வேலைவெட்டி இல்லாதவன் மீது காதல் கொள்ளும் மக்கு பெண்கள்.

19 மே 2021

கல்லுக்குள் ஈரம் - ர.சு.நல்லபெருமாள்

அகிலன், நா.பா போன்ற எழுத்தாளர்களின் நாவல்களை படிக்கும் போது "இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் எந்த கிரகத்தில் வசிக்கின்றார்கள்" என்ற எண்ணம் ஏற்படும்.  நாவலில் அனைவரும் தத்துவமாகவும், உயர்ந்த லட்சியங்களை பற்றியும் பேசிக் கொண்டே இருப்பார்கள். இந்த நாவல் கொஞ்சம் தப்பியிருந்தால் அந்த வகையில் விழுந்திருக்கும்.

சுதந்திர போராட்ட காலத்து நாவல். கல்கி  சுதந்திர போராட்டத்தை பின்புலமாக வைத்து பல நாவல்கள் எழுதியிருக்கின்றார் அலையோசை, தியாகபூமி, சோலைமலை இளவரசி. ஆனால் அவரின் நாவல்களில் அனைவரும் கற்பனை பாத்திரங்களே. இந்நாவலில் கற்பனை பாத்திரங்களுடன் பல சுதந்திர போராட்ட வீரர்களும் பாத்திரங்களாக வருகின்றனர். காந்தி, சிதம்பரம் பிள்ளை, பாரதியார், வாஞ்சி நாதன், ராஜாஜி, நேரு.

10 மே 2021

சதுரங்க குதிரைகள் - நாஞ்சில் நாடன்

வழக்கம் போல தலைப்பிற்கும் நாவலுக்கும் என்ன தொடர்பு என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. கதையின் நாயகன் அலைவதற்கு தொடர்பானது என்றால், சதுரங்கத்தின் குதிரைகள் அப்படியல்ல. மிகவும் சக்தி வாய்ந்தவை, மிகவும் ஆபத்தானவை. என்னவோ ஒன்று.

நாஞ்சில் நாடனின் மற்றொரு பம்பாய் கதை. மீண்டும் பலவித மனிதர்கள் அறிமுகம் செய்கின்றார். தனியனாக வாழும் நாரயணனின் கதை.

நாகர்கோவில் தாண்டிய ஒரு கிராமத்திலிருந்து, பிழைக்க பம்பாய் சென்ற ஒருவனின் அனுபவத் தொகுப்பு. அவனின் பம்பாய் வாழ்க்கை, கிராம வாழ்க்கை, பயண அனுபவங்கள் அனைத்தையும் சேர்த்து பின்னிய ஒரு நாவல்.

நாஞ்சில் நாடனின் வழக்கமான கதை சொல்லும் பாணி, மேலோட்டமாக படிக்கும் போது ஒரு சாதரண கதை என்றாலும், உள்ளே நமக்கு சின்ன சின்ன அனுபவங்களை ஒளித்து வைத்துள்ளார். தனியாக ஏதோ ஊரில் சென்று வேலை செய்த பலருக்கு நெருக்கமாக தோன்றும். 

நாவலில் எனக்கு பிடித்தமாக இருந்தது, நாராயணின் பயண அனுபவங்கள். என்னுடைய அலுவலக நண்பருடன் ஒரு முறை திருப்பதி சென்றோம், ஜாலியாக குளித்து விட்டு வந்தபின் துண்டுகளை காயப்போட இடம் தேடிய போது அவர் தன் பையிலிருந்து ஒரு கயிறை எடுத்து கொடுத்தார். அவர் கொண்டு வந்திருந்த பொருட்கள், டார்ச், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கயிறு, நக வெட்டி, சிறியகத்தி, தலைவலி காய்ச்சல் மாத்திரைகள், பேண்டேய்ட், கவர்கள். அவர் இதற்கு முன்னால் வேலை செய்த அலுவலகத்தில் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருக்கும், அப்படி சென்று பழகியதன் விளைவு. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில், முன்பதிவு டிக்கெட் இல்லாத ட்ரெயினில் ஏறி, ஊர் பேர் தெரியாத ஏதோ ஒரு நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டியிருக்கும். அவரின் அந்த அனுபவங்களை, இதில் மீண்டும் நெருக்கமாக காண முடிந்தது. 

நாஞ்சில் நாடன் நாவலில், உணவு இல்லாமலா, பாவ், வடா பாவ், டால் ஃபிரை, புல்கா, உருளை கிழங்கு வடை, கடலை மாவு பண்டம் என்று விதவிதமான உணவு, ஒரு கல்யாண பந்தியும் உண்டு. 

அவரின் தலைசிறந்த நாவல், படித்தே தீர வேண்டும் என்ற லிஸ்டில் வராது, ஆனால் கிடைத்தால் தவறவிடாமல் படிக்க வேண்டிய நாவல். 

05 மே 2021

ராமோஜியம் - இரா.முருகன்



முதலிரவில் மனைவி மூக்குபொடி டப்பாவைத் தேடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு வித்தியாசமான கற்பனையில் விளைந்த நாவல். 

நாற்பதுகளில் சென்னையில் வாழும் ஒரு தம்பதியரின் தினசரி அனுபவங்களின் ஒரு சிறியத் தொகுப்பு. கருப்பு வெள்ளை பிண்ணனியில் சென்னை, டில்லி, கும்பகோணம் போன்ற இடங்களில் சுற்றித் திரிய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும், அந்த வாய்ப்பைத் தவற விடாமல் இருக்க இந்த நாவலைப் படிக்கலாம்.

தேவனின் துப்பறியும் சாம்பு, சிஐடி சந்துரு போன்ற தேவனின்  புத்தகங்களைப் படிக்கும் போது சென்னையைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கும். நாற்பதுகளின் சென்னை, கொரட்டூர் கிராமம், வெளாச்சேரி கிராமம், ஊரை விட்டு எங்கோ இருக்கும் குரோம்பேட்டை, பங்களாக்கள் நிறைந்த நுங்கம்பாக்கம், வளர்ந்து வரும் மேற்கு மாம்பலம், ட்ராம் வண்டிகள் என்று,  ஒரு கருப்பு வெள்ளையில் ஒரு நகரம் நம் கற்பனையில் உருவாகிவரும். அந்தக் கற்பனையை இன்னும் விரிவாக்கும் இந்தப் புத்தகம்.

19 பிப்ரவரி 2021

அஞ்ஞாடி - பூமணி

காவல் கோட்டம், ஆழி சூல் உலகு வரிசையில் மற்றுமொரு பெரிய நாவல்.2014ம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருதினைப் பெற்ற நாவல்.  நூற்றாண்டு கால கதையை சொல்லும் நாவல். சுமார் 1200 பக்கங்கள். படித்து முடிக்க இரண்டு வாரத்திற்கு மேலாகிவிட்டது 

அஞ்ஞை என்றால் அம்மா என்று பொருளாம். அஞ்ஞாடி என்றால் அம்மாடி என்று பொருள் கொள்ளலாம். படித்து முடித்ததும், அம்மாடி எவ்வளவு பெரிய நாவல் என்றுதான் கூற முடிகின்றது. 

கலிங்கல் கிராமத்தில் வாழும் இரண்டு குடும்பங்களின் கதையோடு, ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை தந்துள்ளார். மிகப்பெரிய நாவல். அத்தனை குடும்பங்கள். கலிங்கல் என்னும் ஊரில் வாழும் இரண்டு சிறுவர்கள் ஆண்டி - மாரி. ஆண்டி நிலபுலங்களுடன் வாழும் ஒரு சம்சாரி குடும்பத்து சிறுவன், மாரி கலிங்கல் கிராமத்து மக்களின் அழுக்குகளை வெளுக்கும் குடும்பத்து சிறுவன். இருவரின் நட்பு, மெதுவாக வளர்ந்து, பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றது. அவர்களின் குடும்ப கதையோடு, அந்த பிரதேச வரலாறும் சேர்ந்து சொல்லப்படுகின்றது.

20 நவம்பர் 2020

தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி

சிலிக்கான் ஷெல்பில் ஆர்.வி இந்த நாவலை பற்றி நல்லவிதமாக எழுதியிருந்தார். கிண்டில் அன்லிமிட்டடில் கிடைத்தது. எனக்கு அவ்வளவு சிறப்பாக தோன்றவில்லை. ஆதவனின் கதாநாயகன், பாலகுமாரன் நாவலில் வந்து குதித்தது போல இருந்தது. ஆதவன் கதைகளில் நாயகர்கள் எப்போதும் அனைத்தையும் பிளந்து ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள். எல்லாரையும் விட நாம் ஒரு படி மேல் என்பது போல. அது போன்ற ஒரு நாயகன், பாலகுமாரன் கதைகளில் வரும் பெண்கள் கலந்த நாவல்.

இது முப்பது வருடங்களுக்கு முந்தய காலகட்டத்தை பற்றி பேசுகின்றது. ஆர்வியே அந்த நாயகனுடன் தன்னை பொருத்தி பார்க்க முடிவதாக கூறியிருந்தார்.  கனவுகளுடன் திரியும் விஸ்வம், அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு பிழைப்பை பார்க்க போவதுதான் நாவல். முகவரி படத்திற்கான இன்ஸ்ப்ரேஷன் என்று படித்தேன்.

முப்பது வருடங்களுக்கு முன்பான ஒரு காலகட்டத்தை காட்சிப்படுத்வதில் வெற்றிதான். அதுவே இன்று இந்த நாவலை கொஞ்சம் பழையதாக்கி விட்டது.  நாவலை என்பதை விட, அந்த சூழலை பழையதாக்கி விட்டது. மொத்தமாக படிக்கும் போது எனக்கு ஓரளவு நல்ல முயற்சி அவ்வளவுதான். இதற்கு  மேல் எழுத ஒன்றும் தோன்றவில்லை.

09 செப்டம்பர் 2020

பதிமூனாவது மையவாடி - சோ. தர்மன்

தூர்வை, கூகை, சூல் ஆகிய நாவல்களை எழுதிய சோ.தர்மன் அவர்களின் அடுத்த நாவல் பதிமூனாவது மையவாடி.  ஜெயமோகன் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. முன்னுரை நாவலை எந்த கோணத்திலிருந்து படிக்கலாம் என்பதை மெலிதாக காட்டுகின்றது. எனக்கென்னவோ, வேறு ஒரு கோணத்தில் யாரும் படித்துவிட வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கை போலதான் தோன்றுகின்றது. தமிழ்ஹிந்து நாவலைப்பற்றி மிக எதிர்மறையான விமர்சனத்தை எழுதியிருந்தது. நாவலைப் பற்றியல்ல நாவலாசிரியரைப் பற்றி.சூல் நாவலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்ததும் இந்நாவலில் கிறிஸ்தவமத நிறுவனங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்ததும், வழக்கம் போல அவருக்கு சங்கி பட்டம் கட்டிவிட்டார்கள். விட்டால் இனி கோவிலுக்கு செல்பவன், நெற்றியில் விபூதி வைப்பவன் என அனைவருக்கு இந்த பட்டம் கிடைக்கும். முட்டாள்கள்.

ஒரு சிறுவன் எப்படி ஒரு இளைஞனாக மாறுகின்றான் என்பதுதான் நாவல். கருத்தமுத்து உருளக்குடி கிராமத்திலிருந்து படிப்பதற்காக கிராமத்தை விட்டு வெளியே செல்கின்றான். பாடப்படிப்புடன் உலகத்தையும் கற்று கொள்கின்றான். சமூகம் அவனுக்கு கற்று கொடுக்கின்றது. அவனுக்கு வரும் குழப்பங்கள் அதிர்ச்சிகள் வழியாக அவன் மெதுவாக கற்று கொள்கின்றான். கல்வி, மதம், காமம், களவு, அன்பு எல்லாம் அவனுக்கு அனுபவங்களாக கிடைக்கின்றன. அதை அவன் எப்படி பயன்படுத்தி கொள்கின்றான்? எதைப் பெற்று கொள்கின்றான் என்பதுதான் நாவல்.

முன்னுரையில் ஜெயமோகன் கல்வியே ஒருவன் தன் தடைகளை விட்டு வெளியேறும் வழி என்பதே இந்நாவலின் அடிநாதம் என்பது போல சொல்கின்றார். ஓரளவுதான் அது சரி. கல்விதான்  ஒருவனை எவ்வித தளைகளிலிருந்தும் அகற்றும். சமூக ஏற்றதாழ்வோ, பொருளாதார ஏற்றதாழ்வோ அனைத்தும் அறிவின் முன் அடங்கிதான் போக வேண்டும். அது இந்நாவலின் மிக மெலிதான ஒரு சரடு. ஆனால் தலைப்பை பின்தொடர்ந்தால் நமக்கு கிடைப்பது நாவலின் முக்கிய சரடான நிறுவனமயமாக்கப்பட்ட மதமும், அதனுள் இருக்கும் முரண்கள், பிரச்சனைகளும்.

12 ஆகஸ்ட் 2020

மாயப் பெரு நதி - ஹரன் பிரசன்னா

"கவிஞர் ஹரன் பிரசன்னா" எழுதியுள்ள புதிய நாவல் மாயப் பெரு நதி. சாதேவி, புகைப்படங்களின் கதை என்று இரண்டு சிறுகதை தொகுப்பு வெளியிட்டுள்ளார். இது அவரின் முதல் நாவல். சாதேவி தொகுப்பை பற்றிய குறிப்பில், 

//தமிழகத்தில் தமிழை தாய் மொழியாய் கொண்டவர்களை விட பிற மொழியை வீட்டில் பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். எனது ஊரிலேயே வீட்டில் தமிழ் பேசுபவர்கள் குறைவுதான். கன்னடமும், தெலுங்கும் பேசுபவகளே அதிகம். அந்த மொழியும் தமிழுடன் கலந்து மிகவும் திரபடைந்து போயிருக்கும். பிராமணத்தமிழ் என்பதாக ஒன்று உண்டு, ஆனால் அந்த தமிழ் இந்த பிற மொழி பிராமணர்களிடம் இயல்பாக வருவது கிடையாது. என்னுடைய தமிழைக்கேட்டு பலருக்கு ஐயருன்னு சொல்லிட்டு அந்த பாஷை பேச மாட்டேங்கிறியே என்பார்கள். அது வராது, அந்தந்த ஊரின் வட்டார வழக்குதான் வாயில் வரும்.  அதே போல பல பழக்க வழக்கங்கள், பண்டிகைகள் எல்லாம் தமிழகத்து பிராமணர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே இருக்கும். உதாரணம், ஆடி மாதத்தில் யாரும் திருமணம் வைத்துக் கொள்ள மாட்டார்கள், ஆனால் தெலுங்கு, கன்னட பிராமணர்களுக்கு அம்மாவாசை தாண்டியது என்றால் அடுத்த மாதம் பிறந்ததாக கணக்கு. இந்த கூட்டத்தைப் பற்றி எந்த எழுத்தாளரும் பதிவு செய்ததில்லை. பிரசன்னா அதை ஓரளவிற்கு தீர்த்து வைக்கின்றார், சில கதைகள் மூலமாக மட்டும். சும்மா இப்படியும் ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்று தெரிந்து வைத்துக் கொள்ளமட்டும் பயன்படும்.// என்று எழுதியிருந்தேன். 

இந்த நாவலில் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றார். 

03 ஆகஸ்ட் 2020

கரமுண்டார் வூடு - தஞ்சை பிரகாஷ்

சாரு நிவேதிதா அவரது தளத்தில் மிகவும் புகழ்ந்து எழுதியிருந்த ஒரு எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ். அதிலும் குறிப்பாக இந்த நாவலைப் பற்றி மிக உயர்வாக எழுதியிருந்தார். பொண்டாட்டி நாவலின் சூடு நினைவிலிருந்தாலும், இவர் பழைய எழுத்தாளர், அதனால் பரவாயில்லை என்று ஒரு எண்ணம். 

இந்நாவலை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. நூறாண்டுகளுக்கு முன் வசதியாக இருந்த பல குடும்பங்கள், கால மாற்றத்தை உள் வாங்கததால் தேய்ந்து போனன. அது போன்று கால மாற்றத்தை சந்திக்கும் ஒரு குடும்பத்தின் கதை. அந்த குடும்பத்தின் சமூக கதையோடு பெண்களின் கதைகளையும் சொல்லியிருக்கின்றார். இரண்டையும் ஒன்றாக சேர்த்ததில் குழம்பிவிட்டது. கதை உடைப்பெடுத்த காவிரி வெள்ளம் போல நாலாப்பக்கமும் ஓடுகின்றது. 

வாழ்ந்து கெட்ட ஒரு வீட்டின் கதையையும், வீட்டி வெவ்வேறு வகைகளில் அடைக்கப்பட்ட பெண்களின் கதைகளும் இணைந்து வருகிறது. ஆற்றின் நடுவே இருக்கும் ஒரு வீடு. காவிரி அலைகள் எப்போதும் சுவற்றில் மோதும் சத்தக் கேட்கும் ஒரு வீடு. வீட்டு வெளிச்சுவரில் ஏறி காவிரியில் குதிக்கலாம், ஈரம் பட்டு பட்டு பாசி படிந்த சுவர்கள். இதுதான் முதலில் நாவலில் உள்ளே ஈர்க்கும் கண்ணி. இறுதியில் அதுவே இறுக்கவும் செய்கின்றது. 

17 ஜூலை 2020

பாலகுமாரன் - சில நாவல்கள்

கிண்டில் அன்லிமிட்டடில் கங்கை கொண்ட சோழன் படிக்கலாம் என்று நினைத்தால், கடைசி பாகத்தை மட்டும் அன்லிமிட்டடில் வைக்கவில்லை. வியாபார உத்தி போல. லைப்ரேரியில் முடிவு பகுதியை கிழித்து வைக்கும் ஆசாமி யாரோ ஐடியா கொடுத்துள்ளார். சரி போகட்டும், உடையார் எப்படி என்றால், அதில் சில பகுதிகளை காணவேயில்லை. சரி கிடைத்த சில நாவல்களை படிக்கலாம் என்று படித்தேன்.

பந்தயப்புறா

பாலகுமாரனைப் படித்து தெளிந்தேன், குரு என்றெல்லாம் பலர் பேசுவதற்கு காரணம், இது போன்ற நாவல்கள்தான். 80களில் இருந்த சூழல் இன்று எந்தளவிற்கு மாறியுள்ளது என்று தெரியவில்லை. ஒரு பெண் தன் தடைகளை விட்டு விலகி பறக்க நினைப்பதும், பறப்பதும்தான் கதை. புதிதாக வேலைக்கு சேரும் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவங்கள், அங்குள்ளவர்களின் முறைப்புகள், தரப்படும் சில வெட்டி வேலைகள் எல்லாம் பலரை நாவலுடன் தன்னை இணைத்து கொள்ள செய்யும். நான் முதன் முதலில் வேலைக்கு சென்றதுதான் நினைவிற்கு வந்தது. எனக்கு என்ன வேலை தருவது என்று தெரியாமல், சில நூறு பக்க ரிப்போர்ட்களை டைப் செய்ய சொன்னார்கள். வெட்டியாக அதையும் செய்து கொண்டிருந்தேன். இதில் பாலகுமாரனின் மனைவி ஒரு பாத்திரமாக வருகின்றார், சுயவிமர்சனம் போல. இறுதியில் வரும் காதல் எல்லாம் சினிமாக்கு லாயக்கான கதை. இருந்தும் ஓரளவிற்கு நல்ல நாவல்.

21 மே 2020

ஆவரணா - The Veil - திரை - SL பைரப்பா

அப்யாரோஹ மந்திரம் – ப்ரஹதாரண்யக உபனிஷதம் 1.3.28

ஓம் அஸதோமா ஸத்மய தமஸோ மா ஜ்யோதிர் மய ம்ருத்யோர்மா அம்ருதம் மய |
உண்மையற்ற நிலையிலிருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக ! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக! மரணத்திலிருந்து என்னை மரணமில்லா பெரு நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!
இன்று ஒரு முக்கிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.  ராமர் கோவில் கட்ட நிலத்தை சீர்படுத்தும் பணியின் போது பழங்கால சிற்பங்கள், தூண்கள், கடவுள் சிலைகள் என ராமர் கோவிலிற்கான சான்றுகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன. ஆனால் அவை அனைத்தையும் தொல்லியல் துறை முன்னமே கண்டு பிடித்து இருக்கலாமே என்ற கேள்வி எழுகின்றது. அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.  கே.கே.முகமது, அயோத்தியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கு கோவிலின் கட்டுமானம் இருப்பதை உறுதி செய்த ,பின்னரும், இடதுசாரிகள் உள்ளே புகுந்து அதை குழப்பி ஒரு பெரிய பிரச்சினையாக ஆக்கினார்கள். அது கோவிலே அல்ல, பெளத்த மடம் என்று வரலாற்றையே திரிக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் திரிப்பு இந்திய வரலாறு முழுவது பரவி கிடக்கின்றது.
திப்பு சுல்தானை விடுதலை போராட்ட வீரனாக்கி, அவன் மலபார் பகுதிகளில் செய்த அட்டூழியங்களை மறைத்தது, அவனின் மத வெறி மீது நாட்டு பற்று என்ற போர்வையை போட்டு மூடியது, காசியின் மசூதி இடிப்பிற்கு ஒரு கதை கட்டிவிட்டது என்று அவர்களின் செயல் நீளுகின்றது. காரணம், ஹிந்து மூஸ்லீம்களிடம் அமைதியை உண்டாக்குகின்றார்களாம். உண்மையின் மேல் அமையாத எதுவும் ஒரு நாள் அழிந்து படும் என்பதை அறியாத மூடர்கள். அதை கண்கூடாக அவர்களின் காசி, ராமேச்வரமான ரஷ்யாவிலேயே காணலாம். 

30 ஏப்ரல் 2020

ரூஹ் - லக்‌ஷ்மி சரவணக்குமார்

கானகன் எழுதிய நாவலாசிரியரின் மற்றொரு படைப்பு.

எழுத்தாளர் சாருநிவேதிதா இவரைப் பற்றி மிக பெரிதாக எழுதியிருந்தார். வழக்கமாக அவர் பாராட்டினாலும், திட்டினாலும் எக்ஸ்ட்ரீம் லெவலி போவது வழக்கம். இந்த நாவலை பலமாக பாராட்டியிருந்தார்.

அன்பை பேசுகின்றது, கருணை, தூய உள்ளம், எக்ஸட்ரா எக்ஸட்ரா. இதுமாதிரிதான் இந்நாவலை பற்றி பலர் எழுதியிருந்தார்கள்.

இஸ்லாமிய பிண்ணனி கதை என்பதாகவும், சூஃபிகள் பற்றிய கதை என்றும் பல அறிமுகங்கள்.

உண்மையில் நாவல் அப்படித்தான் என்றால் இல்லை. இஸ்லாமிய பிண்ணனி என்றவுடன் ஒரு கடலோரக கிராமத்தில் அளவிற்கு நினைத்து கொள்ளக் கூடாது, சூஃபியிசம் பற்றி ஏதாவது வருமா என்றால் அதுவும் இல்லை. இஸ்லாமிய பாத்திரங்கள் இருக்கின்றன அவ்வளவுதான்.

கதையின் ஆரம்பத்தில் வரும் ஒரு சிறிய காட்சியே கதை மீது முதல் ஒவ்வாமையை உண்டாக்கிவிட்டது.   மாராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் கடற்படை தளபதி கானோஜி ஆங்க்ரே, அவர் ஏதோ ஒரு கொள்ளைக்காரர் போல சித்தரிக்கப்படுகின்றார்.

மராட்டிய கடற்படை பற்றிப் பேசிவிட்டு, கானோஜி ஆங்க்ரே பற்றிப் பேசாதிருக்க முடியுமா என்ன?  இவர்தான் மராட்டிய கடற்படையை புதியதொரு சிகரத்துக்கே கொண்டு சென்றவர்

மேலே உள்ளவை நமது பிரதமர் பேசியவை. இதைப் படித்தவுடனே நாவலின் மீது ஒரு விலக்கம் வந்துவிட்டது.

அதன் பின்னால் கதை தட்டு தடுமாறி செல்கின்றது. ஒரு இஸ்லாமிய பெண்ணிற்கும் ஒரு சிறுவனுக்கும் இடையிலான பாசத்தை பற்றி பேச ஆரம்பித்து, கதையை ஜிலேபி மாதிரி சுற்றி, நடுநடுவே ஆசிரியர் வந்து அமர்ந்து கொண்டு தத்துவங்கள் பல பேசி, ஒரு வழியாக எங்கோ சென்று முடித்துவிட்டார்.

படித்தவனுக்கும் அப்பாடா முடிந்ததே என்று ஒரு திருப்தி. வளவள என்று ஆசிரியர் பேசுவது பயங்கர எரிச்சல்.

ஒரு அரைகுறை முயற்சி.  

23 ஏப்ரல் 2020

கானகன் - லக்‌ஷ்மி சரவணகுமார்

காடு பற்றிய ஒரு நாவல். 

காட்டைப் பற்றி ஏற்கனவே காடு நாவல் பதிவில் எழுதியிருக்கிறேன். காடு நாவல் நினைவில் வராமல் இதை படிக்க இயலவில்லை. இரண்டும் வேறு வேறு விஷயங்களை பேசுபவை.

கானகன், காட்டை வேட்டையாடுவதன் மூலம் காட்டை அறிய நினைக்கும் ஒருவன், காட்டின் மிருகங்களை நேசிப்பதன் மூலம் காட்டை அறிய நினைக்கும் ஒருவன் இந்த இருவரைப் பற்றிய கதை. 

ஒரு புலி வேட்டையில் ஆரம்பிக்கும் கதை புலி வேட்டையில் முடிகின்றது.

கதை மேற்குதொடர்ச்சி மலையில் இருக்கும் அகமலை என்னும் பகுதியில் நடக்கின்றது. கதை ஆரம்பத்தில் புலி வேட்டையில் ஆரம்பிக்கின்றது, ஊருக்குள் புகுந்து நாசம் செய்யும் புலியை கொல்லும் தங்கப்பன், சிறந்த வேட்டைக்காரன். இருந்தும் கொன்றது தாய்ப்புலியை என்று தெரிந்த பின் வருந்துகின்றான். அதற்கு பின் கதையை எந்த தளத்தில் நகர்த்துவது என்ற குழப்பம் வந்து விட்டது போல தெரிகின்றது. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இருக்கும் உறவை வைத்து நகர்த்துவதா இல்லை காட்டிலேயே வாழும்  பூர்வகுடிகளின் நிலையை அரசியலாக  பேசுவதா என்று இரண்டிலும் கவனம் குவியாமல் போய்விட்டது.

09 மார்ச் 2020

இறவான் - பாரா

யதிக்கு பின்னால் எழுதப்பட்ட நாவல். யதியின் ஹேங்க் ஓவர் என்று சொல்லலாம். ஒரு இசைக்கலைஞனின் கதை என்று பொதுவாக அனைவராலும் கூறப்படுகின்றது. நூற்றாண்டிற்கு முன்னால் இசைக்கப்பட்ட ஹீப்ரூ மொழி இசை ஒருவனால் வாசிக்க முடிகின்றது, சிம்போனியை ஒரு நாற்பது பக்க நோட்டில் எழுத முடிகின்றது, கஞ்சா அடிக்கின்றான், சம்பந்தமில்லாமல் பேசுகின்றான். யதியில் தப்பிய ஏதோ ஒரு சகோதரன் இங்கு வந்து குதித்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும், அந்தளவிற்கு மாயாஜாலம். 

கதை என்ற வஸ்து இருந்தால் அதைப் பற்றி ஏதாவது எழுதலாம், ஒரு க்ராக்கின் வாழ்க்கையை துண்டு துண்டாக வெட்டி போட்டிருக்கின்றார். ஒருவனுக்கு திடீரென்று தான் ஒரு இசை மேதை என்றும், யூதன் என்றும் தோன்றுகின்றது. அதன் பின் அவன் என்ன ஆனான் என்று வளவளவென்று பல பக்கங்களில் அடித்து துவைத்திருக்கின்றார் வாசகனை.

கதையுடன் எங்கும் வாசகனை ஒன்ற விடக்கூடாது என்பதில் பாரா மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.