புத்தகம் படிக்கும் வழக்கம் எப்படி ஆரம்பித்தது என்று யோசித்து பார்த்தால், தினமலர் சிறுவர்மலல் ஆரம்பித்தது. பலமுக மன்னன் ஜோ, சோனி பையன், லக்கி (மறந்துவிட்டது, படம் வரைந்தால் அது நிஜமாக மாறும்), ஜாக்பாட் ஜாக்கி, இன்னும் பல கேரக்டர்கள். பின்னால் காமிக்ஸ், கோகுலம், அம்புலிமாமா, பூந்தளிர் என்று முன்னேற்றம்.
இருபது வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட அப்புத்தகங்கள், கேரெக்டர்கள் எல்லாம் இப்போது மறைந்து வருவதைக் கண்டு வருத்தமாக உள்ளது. என் குழந்தைகள் எதைப் படிக்கும் என்று வருத்தம் ஏற்படுகின்றது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் இன்னும் வருகின்றனவா என்று தெரியவில்லை.
நன்றாக மீண்டும் யோசித்துப் பார்த்தால் புத்தகங்கள் மேல் ஒரு ஆர்வம வர மற்றும் ஒரு முக்கிய காரணம், சிறு வயது முதல் கேட்ட கதைகள். பக்கத்து வீட்டு பாட்டி சொன்ன கதைகள், துருவன் கதை, குசேலன் கதை, தியாகராஜர் கதை, ராமதாசர் கதை, பாரதக் கதைகள். சிறுவயதில் கேட்ட அக்கதைகள் தான் பின்னால் புத்தகங்கள் படிக்க காரணம். கதைகள் கேட்க கேட்க கற்பனை உலகம் திறக்கின்றது.
பெரும்பாலான குழந்தைகள் கதைகள் முழுவது சாகசக் கதைகளாகத்தான் இருக்கின்றன. குழந்தைகளின் கற்பனைத்திறன் என்பது பெரியவர்களை விட கண்டிப்பாக அதிகம். அவர்களின் கற்பனை உலகில் எவ்வித தடைகளும் இல்லை, தர்க்க நியாயங்களும் இல்லை. எல்லையில்லாதது. பெரியவர்களின் கற்பனை அவர்களின் படிப்பு, அனுபவத்தால் குறைப்பட்டது. பஞ்சதந்திரக் கதைகள் போன்றவை சாகசத்துடன் ஒரு நீதியையும் குழந்தைகளுக்கு கற்பிக்கின்றது. தத்துவங்களை குழந்தைகள் மேல் திணிக்க முடியாது, அறிமுகப்படுத்தலாம்.