நாஞ்சில் நாடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாஞ்சில் நாடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 மே 2021

மிதவை - நாஞ்சில் நாடன்

தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ந்த பின் வேலை கிடைப்பது என்பது கொஞ்சம் சுலபமாகிவிட்டது. தகுதிக்கு ஏற்ற வேலை என்பது எப்போது கடினம்தான். ஆனால் பெரும்பாலனவர்களுக்கு இன்று ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கூட, மாலையில் ஸ்விகி, ஜொமொட்டோ போன்ற நிறுவனங்களில் வேலைக்கு சேர முடிகின்றது. 

இதற்கு முன்னால் இருந்த நிலை வேறு. எழுபதுகளின் இறுதிகள், எண்பதுகளின் ஆரம்பகாலப் படங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். தாடி வளர்த்த நாயகன், வேலை காலி இல்லை போர்டுகள், விண்ணப்பம் வாங்க பணம் தராத அப்பா, வேலைவெட்டி இல்லாதவன் மீது காதல் கொள்ளும் மக்கு பெண்கள்.

10 மே 2021

சதுரங்க குதிரைகள் - நாஞ்சில் நாடன்

வழக்கம் போல தலைப்பிற்கும் நாவலுக்கும் என்ன தொடர்பு என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. கதையின் நாயகன் அலைவதற்கு தொடர்பானது என்றால், சதுரங்கத்தின் குதிரைகள் அப்படியல்ல. மிகவும் சக்தி வாய்ந்தவை, மிகவும் ஆபத்தானவை. என்னவோ ஒன்று.

நாஞ்சில் நாடனின் மற்றொரு பம்பாய் கதை. மீண்டும் பலவித மனிதர்கள் அறிமுகம் செய்கின்றார். தனியனாக வாழும் நாரயணனின் கதை.

நாகர்கோவில் தாண்டிய ஒரு கிராமத்திலிருந்து, பிழைக்க பம்பாய் சென்ற ஒருவனின் அனுபவத் தொகுப்பு. அவனின் பம்பாய் வாழ்க்கை, கிராம வாழ்க்கை, பயண அனுபவங்கள் அனைத்தையும் சேர்த்து பின்னிய ஒரு நாவல்.

நாஞ்சில் நாடனின் வழக்கமான கதை சொல்லும் பாணி, மேலோட்டமாக படிக்கும் போது ஒரு சாதரண கதை என்றாலும், உள்ளே நமக்கு சின்ன சின்ன அனுபவங்களை ஒளித்து வைத்துள்ளார். தனியாக ஏதோ ஊரில் சென்று வேலை செய்த பலருக்கு நெருக்கமாக தோன்றும். 

நாவலில் எனக்கு பிடித்தமாக இருந்தது, நாராயணின் பயண அனுபவங்கள். என்னுடைய அலுவலக நண்பருடன் ஒரு முறை திருப்பதி சென்றோம், ஜாலியாக குளித்து விட்டு வந்தபின் துண்டுகளை காயப்போட இடம் தேடிய போது அவர் தன் பையிலிருந்து ஒரு கயிறை எடுத்து கொடுத்தார். அவர் கொண்டு வந்திருந்த பொருட்கள், டார்ச், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கயிறு, நக வெட்டி, சிறியகத்தி, தலைவலி காய்ச்சல் மாத்திரைகள், பேண்டேய்ட், கவர்கள். அவர் இதற்கு முன்னால் வேலை செய்த அலுவலகத்தில் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருக்கும், அப்படி சென்று பழகியதன் விளைவு. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில், முன்பதிவு டிக்கெட் இல்லாத ட்ரெயினில் ஏறி, ஊர் பேர் தெரியாத ஏதோ ஒரு நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டியிருக்கும். அவரின் அந்த அனுபவங்களை, இதில் மீண்டும் நெருக்கமாக காண முடிந்தது. 

நாஞ்சில் நாடன் நாவலில், உணவு இல்லாமலா, பாவ், வடா பாவ், டால் ஃபிரை, புல்கா, உருளை கிழங்கு வடை, கடலை மாவு பண்டம் என்று விதவிதமான உணவு, ஒரு கல்யாண பந்தியும் உண்டு. 

அவரின் தலைசிறந்த நாவல், படித்தே தீர வேண்டும் என்ற லிஸ்டில் வராது, ஆனால் கிடைத்தால் தவறவிடாமல் படிக்க வேண்டிய நாவல். 

25 டிசம்பர் 2015

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில்நாடன்

சொல்ல மறந்த கதை. அழகி படம் பார்த்த ஹேங் ஓவரில் என் நண்பன் என்னை இழுத்துக் கொண்டு போனான். அழகியே என்னை பொருத்தவரையில் ஒரு குப்பை படம்தான். இளையராஜா இல்லாதிருந்தால் படம் பப்படமாகியிருக்கும். டைட்டில் போடும் போது தலைகீழ் விகிதங்கள் என்னும் நாவலை அடிப்படையாக கொண்டது என்று போட்டிருந்தது. முணுக் முணுக்கென்று அழுகும் சேரன் படத்தையே ஒவ்வாததாக செய்திருந்தார். படத்தை பார்த்து நொந்து வந்த பின் நாவலாசிரியர் மீது ஒரு எரிச்சலே இருந்தது. நாவலாசிரியர் யார் என்று தேடினால், நாஞ்சில்நாடன். பெரிதாக படிக்கும் ஆர்வம் வரவில்லை.

ஜெயமோகனின் தளத்தில் அவரை பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதியிருந்தார். தாடகை மலையடிவாரத்தில். அவரை பற்றிய ஒரு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அதன் பின் ஜெயமோகன் அவரை பற்றி பல இடங்களில் எழுதியிருந்தார். ஜெயமோகன் எழுத்துக்கள் மூலம் அவர் ஏதோ மிகவும் தெரிந்தவர் போல ஆகிவிட்டார். அவரின் முதல் நாவல் இப்புத்தகம்.