27 ஜூலை 2013

மகாபாரதம் - கும்பகோணம் பதிப்பு - முன் வெளியீட்டு திட்டம்.

இட்லி வடையில் மகாபாரதம் கும்பகோணம் பதிப்பின் முன் வெளியீட்டு திட்டம் பற்றிய பதிவு

http://idlyvadai.blogspot.in/2013/07/blog-post_27.html

தொடர்பு விபரங்கள் அதில் உள்ளன.

நான் இணைய விருப்பம் தெரிவித்துள்ளேன். வாங்கினாலும் முழுவதையும் படிக்க எத்தனை வருடங்களாகப் போகின்றதோ.

எங்கே பிராமணன்? - சோ

சில பல வருடங்கள் முன்பு நான் விகடன் ஆன்லைன் வாசகன்.(இப்போது அந்த குப்பையை ஓசியில் படிப்பதுடன் சரி). அப்போது பிரபலமான ஒரு தொடர் வரலாற்று நாயகர்கள். அதில் அம்பேத்கரை பற்றி எழுதிவந்தார்கள். முதல் பத்தியிலேயே, ஆரியர் வருகை, ஆரியர்கள் வந்து இங்குள்ளவர்களை ஏமாற்றினார்கள் என்று  அளந்து விடப்பட்டிருந்தது. பின்னூட்ட பெட்டியில், அந்த புளுகை எதிர்த்து எழுதியிருந்தேன். 

உடனே அடுத்தடுத்து பல வாசகர்கள் சண்டைக்கு வந்துவிட்டார்கள். விவாதம் என்று முழுவதும் கூற முடியாது. அப்போது அலுவலகத்திலும் எனக்கு வேலை அவ்வளவாக இல்லை. எனவே, இச்சண்டையை முழு நேர தொழிலாக கொண்டேன். அந்த சண்டைக்கு பாயிண்ட் தேடவே இதை வாங்கினேன். -இதிலிருந்து மகாபாரதம், இந்துமகா சமுத்திரம் என்று அவரது மற்ற புத்தகங்களும் அலமாரிக்கு வந்தன. எதற்கு சோ? என்றால், சண்டை போட வக்கீலின் துணை வேண்டுமல்லவா.

அனைவருக்கும் ஒரு முன் முடிவு இருந்தது. அதை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. அடுத்தவர் கூறுவதை கேட்பதை விட, அதில் குற்றம் காண்பது மட்டுமே வேலையாக இருந்தது. விளக்கம் சொன்ன கேள்வியையே மாற்றி மாற்றி கேட்டு, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்தது. ஒரு கட்டத்தில் சலிப்பு வந்துவிட்டது. இதனால் ஒரு பயனுமில்லை என்ற ஞானமும் வந்தது. இதற்கு பதில் நாய் வாலை நிமிர்த்தலாம் என்ற உண்மையும் தெரிந்தது.

08 ஜூன் 2013

யுத்தங்களுக்கிடையில் - அசோகமித்திரன்

"கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் வரிசை மாறிக் கூறுவதுதானே கதை" என்று முன்னுரையில் கூறுகின்றார்.

 "இது வெற்றிக் கதையுமல்ல தோல்விக் கதையுமல்ல. பிழைத்திருத்தல் - அதுவும் கூடியவரை நியாயத்தையும் கண்ணியத்தையும் கைவிடாமல் பிழைத்திருத்தல். இவர்களை வீரர்களாகவும் கூறலாம்; சந்தர்ப்பவாதிகளாகவும் கூறலாம்" கதையை பற்றிய அவரது அறிமுகம்.

ஒரு குடும்பத்தின் கதை. கதை நடக்கும் காலம் இரண்டு உலக யுந்தங்களுக்கு நடுவில் நடக்கின்றது. ஒரு பள்ளி ஆசிரியருக்கு பிறந்த ஏகப்பட்ட குழந்தைகளில் மிஞ்சியவர்களின் கதை. 

ஒற்றனில் வரும் ஒரு கதையில், பல கதாபாத்திரங்கள், அவர்களின் உறவுகள் பற்றி வரைபடம் வரைந்து நாவல் எழுதுவது பற்றி எழுதியிருப்பார். அதே போல் எழுதியிருப்பார் போல், அத்தனை பாத்திரங்கள், அத்தனை உறவு முறைகள். இக்கதையில் வராத ஒரு உறவினர் மானசரோவரில் வருகின்றார். 

வழக்கமான ஆரம்பம் முடிவு என்ற அமைப்பு இல்லாத கதை. வாழ்க்கையின் ஒரு பகுதி. நான் லீனியர் கதை. அந்த ஆசிரியரின் பல குழந்தைகளில் மிச்சம் இருக்கும் மூன்று ஆண்கள், மூன்று பெண்களை பற்றி முன் பின்னாக சொல்லி வருகின்றார். 

முதலாம் உலக யுத்த முடிவில் ஒருவனுக்கு வேலை கிடைத்து ஊரை விட்டு போகின்றான், அவனுடன் சேர்த்து அவனது தம்பிகளுக்கும் வேலை தேடி தருகின்றார்ன். ரயில்வே. அசோகமித்திரன் அப்பா ஹைதராபாத்தில் ரயில்வேயில் வேலை செய்திருப்பாரோ. பல கதைகளில் நிஜாம் அரசும், ரயில்வேயும் வருகின்றது.


கதை ஆண்களை பற்றியே பேசினாலும், அடிநாதமாக இருப்பது பெண்கள்தான். பதினாறு குழந்தைகளை பெற்ற பெண், தன்னை விட இரண்டு மூன்று வயது அதிகமான கணவனை அடைந்த பெண், இருபது வயதில் கணவனை இழந்த பெண். 


//யார் இருந்தால் என்ன, யார் மறைந்தால் என்ன, பெண்கள் சுகப்படுவதில்லை//

முன்னுரையில் கூறுவது போல கதை மாந்தர்கள் அனைவரும் சாதரணர்கள். சாதரணர்கள் வீரன் கிடையாது, கோழையும் கிடையாது. வாழ்க்கையை முடிந்த வரை வாழ பார்க்கின்றார்கள். சிறிது சமரசத்துடன். பெண்கள் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு ஓடுகின்றனர்.

ஐம்பது வருடங்களுக்கு முந்தைய சமூகத்தை நமக்கு காட்டுகின்றார். யுந்த களேபரங்கள். ரயில்வேயின் பெருமை. 

சின்ன நாவல்தான். ஏகப்பட்ட கிளைகள். யார் யாருக்கு என்ன உறவு என்று மனதில் வரிசைப்படுத்திக் கொள்ளும் முன் கதை முடிந்துவிடுகின்றது. அசோகமித்திரனின் கூறாமல் கூறிச் செல்வதைப் பற்றி தனியாக சொல்லத்தேவையில்லை. அவரது வழக்கமான நகைச்சுவை இதில் அவ்வளவாக இல்லை. சர்வசாதரணமாக ஒரு வரியில் பெரிய திருப்பத்தை கூறிவிட்டு அடுத்த பகுதிக்கு போய்விடுகின்றார். சின்ன சின்ன வரிகள். ஆனால் சொல்ல வந்ததை கச்சிதமாக கூறிவிடுகின்றது. முதல் முறை படிக்கும் போது கொஞ்சம் குழப்பும். இரண்டாம் முறை படிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கின்றது.

ஒரு வரியில் சொன்னால், நமது பாட்டிகள், தாத்தாக்களின் கதை.

18 மே 2013

மத்தகம் - ஜெயமோகன்

அலுக்காமல் பார்த்து ரசிக்க கூடிய விஷயங்கள் என்று சில உண்டு. குழந்தை. யானை. கடல். அதில் ஒன்றான யானையை பற்றிய கதை. யானை என்னும் ஒரு மிருகத்தை இத்தனை நெருக்கமாகவும், அதன் மனதை படிப்பவர்களும் உணரும் படி படைக்க முடியுமா என்ற பிரமிப்பு படித்து முடித்த பின்னும் போகவில்லை.

யானையை ரசிப்பது என்பது ஒரு குழந்தையை ரசிப்பது போலத்தான். யானையின் செய்கை எல்லாம் ஒரு கபடமற்ற குழந்தையின் செய்கை போலத்தான் தோன்றும். அவ்வளவு பெரிய உருவம் ஒரு சின்ன சங்கிலிக்கு கட்டுப்பட்டு அடங்கி இருப்பது என்பது ஒரு பார்வைக்குதான். அது நினைத்தால் அச்சங்கிலி தூள்தூளாகும். காட்டிலிருந்தாலும் நாட்டிலிருந்தாலும் யானை யானைதான். அது போனால் போகின்றது என்று மனிதனுக்கு கட்டுப் பட்டு இருக்கின்றது. 

கேசவன் கஜராஜ கேசரி. திருவனந்தபுர மன்னரின் தோழன். அவனின் பாகன்களில் ஒருவன் பரமன். பரமன்தான் கதை சொல்லி. மொத்தம் ஐந்து அந்தியாயங்கள். தவறுதலாக குழியில் விழுந்த யானை அக்குழியிலியே பிரசவித்த குட்டி. குட்டி கொஞ்சம் வளர்ந்ததும் அரச கொட்டடிக்கு வருகின்றது. யானை வந்த வேளையில் நோய்வாய்ப்பட்ட தம்புரான் எழுந்து நடக்க, யானை  அவரின் தோழனாகின்றது. வளர்ந்ததும் திருவெட்டாறு கோவிலிக்கு விடப்படும் கேசவன், தம்புரான் பட்டத்திற்கு வந்தது அதுவும் ஒரு பட்டத்து யானையாக மாறுகின்றது. கடைசியில் தம்புரான் மறைந்ததும், பட்டத்திலிருந்து கீழே இறங்கி வருகின்றது. 

கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் அது காட்டும் உலகம் வித்தியாசமானது. சாதரணர்கள் காண, கண்டிருக்க முடியாத உலகம். யானை, யானை வளர்ப்பு, யானைகளின் சுபாவம் என்று ஒரு சரடு. யானைகளுடனே வாழும் பாகன்களின் உலகம் என்று ஒரு சரடு.இரண்டிற்கும் ஊடே அதிகாரம் என்னும் ஒரு சரடு. இது அனைத்தும் பின்னி பிணைந்ததுதான் மத்தகம். 

மத்தகம் என்பது பாகன் அமரும் இடம். கேசவன் அம்மத்தகத்தில் யாரையும் அமர விடுவதில்லை. தம்புரானை மட்டுமே அவ்விடத்தில் அனுமதிக்கும். கதை உள்ளே பேசுவது அதிகாரத்தை பற்றி. தம்புரானின் தோழனாக இருக்கும் போது கம்பீரமாக ஒரு ராஜாவைப் போல இருக்கும் கேசவன், தம்புரான் இல்லை என்று தெரிந்ததும், அதிகார மாற்றத்தை உணர்ந்து சாதரண பாகனிடம் தன்னை ஒப்படைத்து கீழ்படிவதாக மாறுகின்றது. கஜகேசரியாக இருக்கும் வரை பாகனின் தவறுக்காக அவனை நெருங்க விடாத கேசவன், அவனை தன் மத்தகத்தில் ஏற்றி வைத்துக் கொள்கின்றது.

பாகன்களின் வாழ்க்கை. யானையின் காலடியில் வாழ்வது என்பது மரணத்துடன் இருப்பது போலத்தான். யானை கோபம் கொண்டால், ஒரு வினாடி போதும் பாகன் போய் சேர வேண்டியதுதான். பாகனின் சொல் பேச்சு கேட்கும் யானை எப்படி அவர்களை தாக்கும் என்பதற்கான் விடை இங்குள்ளது. பாகன்களின் பார்வையில் யானை, என்று அருமையாக காட்டியுள்ளார். கதை வெகுகாலத்திற்கு முன்பு நடக்கின்றது. பாகன்களின் பரிதாப நிலையை விட அவர்களின் மனைவிகளின் நிலை, எப்போது வேண்டுமானாலும் வாழ்க்கை பறி போகும் அபாயம், அதன் பின்னால் வாழ வேண்டிய கட்டாயம், அதற்காக அவர்கள் தரும் விலை. 

முக்கியமானது யானையின் குணாதியங்கள். காட்டிற்கு ராஜா சிங்கம் என்கின்றார்கள். உண்மையான ராஜா யானைதான். சிங்கம் ஒரு சோம்பேறி வேறு. யானையின் கம்பீரம், பலம் அனைத்தையும் விட அப்பலத்தை தன் கட்டிற்குள் வைத்திருக்கும் மனம். காட்டில் வாழும் மிருகங்களில் அசாத்தியமான நினைவாற்றலுடனும், பலத்துடனும், புத்திசாலித்தனத்துடன் இருக்கும் ஒரே மிருகம் யானைதான். எல்லா யானையும் ராஜா இல்லை. அனைவரும் தலைவராக முடியாதல்லவா. கேசவன் அப்படிப்பட்ட தலைவன். கஜராஜன். கேசவன் அவனுக்கு முந்தைய கஜராஜனான நாரயணனை கண்டு பயந்தாலும் அதை சீண்டிபார்க்கின்றான். கேசவனை சீண்ட கடைசியில் கொச்சு கொம்பன் வருகின்றான். 

ஜெ.மோவிற்கு யானை என்றால் மிகவும் பிடிக்கும் போல. காடு நாவலில் வரும் கீறக்காதன், குட்டப்பன் யானையை பற்றி பேசும் விஷயங்கள். யானை டாக்டர். விஷ்ணுபுரத்தில் வரும் வீரன், பைரவன். ஊமைச் செந்நாயில் வரும் கொம்பன், மண் கதையில் வரும் இன்னொரு கொம்பன் என பல யானைகள். ஆனால் கதை முழுக்க வந்து கதையையே தன் மத்தகத்தில் கொண்டு செல்வது இந்த கேசவன் மட்டும் தான்.

ஜெயமோகனின் கதைகளில் என்னை அதிகம் கவர்வது இது போன்ற கதைகள்தான். காடு, மலை, தொன்மம் போன்ற விஷயங்களை இவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. ஒரு யானையுடன் ஒரு மணி நேரம் பயணம் செய்த உணர்வை தருகின்றது இக்கதை.



01 மே 2013

பாம்பு

கருப்பாக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்த அந்த பாம்பை முதலில் பார்த்தது என் பெரியம்மா பெண்தான்.

 "டேய் அங்க பாரு பாட்டி வீட்டு பக்கத்துல என்னமோ போகுது, பாம்பு போல இருக்கு"

எனக்கு ஒன்றும் தெரியவில்லை. இருட்ட தொடங்கும் நேரம். அவளின் கண்ணாடி பவர் வேறு என்னைவிட இரண்டு பாய்ண்ட் அதிகம்.

 "கண்ணாடிய துடச்சு பாரு" என்றேன்.

"நல்ல பாருடா அங்க, நெளிஞ்சு நெளிஞ்சு போகுது"

கண்ணாடியை துடைத்துதான் போட்டிருக்கின்றாள். நல்ல நீளமான பாம்பு, சுமார் ஐந்து அடிக்கு மேல் இருக்கும். நல்ல பருமன். பளபளவென்று உடல். அசங்கி அசங்கி தூக்கத்தில் நடப்பவன் போல் போய்க் கொண்டிருந்தது.

"ப்பா என்ன பெருசு, பளபளன்னு இருக்குல்ல, தோல பாரு நல்ல லேடிஸ் ஹேண்ட் பேக் போல வளவளன்னு இருக்கு'

"ரசிக்ற மூஞ்சிய பாரு, இப்ப என்ன பண்றது"

எனக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. பாதுகாப்பான தூரம் என்பதை உறுதி செய்து கொண்டு குறி பார்த்து ஒரு கல்லை எடுத்து எறிந்தேன். விளைவு விபரீதமாகி, பாம்பு பாட்டி வீட்டிற்குள் விறுவிறுவென நுழைந்தது.

"ஐயஐயோ பாட்டி"