18 ஜூலை 2016

காண்டீபம் - ஜெயமோகன்

மகாபாரத வரிசையில் இந்திரநீலத்திற்கு அடுத்த நூல்.

காண்டீபம், பாரதத்தின் கதையோட்டத்திலிருது விலகி செல்லும் ஒரு நாவல். வெண்முகில் நகரத்திற்கு பின் கதை வெகுதூரம் விலகி விட்டது. இந்திரநீலம். கிருஷ்ணனின் திருமணங்களை பற்றி கதை. பெண்களை வென்ற கதை. காண்டீபம் அர்ஜுனனின் திருமணங்களை பற்றியகதை.

பாரதத்தில் மிகவும் குழப்பமான ஒரு விஷயம். காலம். வருடங்களின் கணக்குகள் எல்லாம் மிகவும் குழப்பமானவை. பல கதைகளின் இடைச்சொருகல்கள் காரணமாக நேர்ந்திருக்கலாம். அதே சமயம் எவை இடைச்சொருகல் என்று காண்பது எளிதல்ல. எவற்றையும் ஒதுக்க முடியாது. ஜெயமோகன், இம்மாதிரி விஷய்ங்களுக்கு கையாளும் உத்தி சூதர் கதைகள். நம்ப முடியாத கதைகளை சூதர்கள் சொல்வதாக அமைத்து விட்டால் ஒரு தொல்லை விட்டது.

அர்ஜுனன். பாண்டவர்களில் தேடல் நிறைந்தவன். பாரதம் முழுக்க திரிந்தவன். காண்டீபம் அர்ஜுனனின் வில். காண்டீபனின் கதையை சொல்வது காண்டீபம்.


கெளரவன் சுபாகுவின் புதல்வன் சுஜயனின் கனவுகளில் ஆரம்பிக்கின்றது கதை. அவரது தளத்தில் வெளிவந்த போது இதை படிக்கவே இல்லை. முதல் நாள் பகுதியுடன் இணைத்து தொகுத்து படிக்கவே முடியவில்லை. புத்தகமாக படிக்கும் போதுதான் சுலபமாக இருக்கின்றது. முதல் சிலபகுதிகள், சுஜயனின் விபரீத கனவுகள். அவனை வீரனாக்க, அர்ஜுனனின் கதையை கேட்க அர்ஜுனனின் செவிலி மாலினியிடம் அனுப்புகின்றனர். கூடவே சுபகை, சுஜயனின் செவிலியும் செல்கின்றாள்.

சுபகை. அர்ஜுனனின் ஒரு நாள் காதலில் முழுக்க நிறைவுற்று இருப்பவள், மீண்டும் அவனை காணவேணும் என்ற விருப்பமும் அச்சம் நிறைந்து செல்கின்றாள். மாலினி காட்டில் தவவாழ்க்கை வாழ்கின்றாள். சூதர்கள் எழுதிய பார்த்தனின் கதைகளை சுஜயனுக்கு கூறுகின்றார்கள்.

முதலில் வருவது, உலூபி. நாகர்களின் உலகம். முதல் பகுதியில் வரும் நாகர்கள், இதில் இன்னும் நெருக்கமாக வருகின்றனர். ஒரு மாயலோகம். நாகர்கள் இப்பாரத பூமியெங்கும் இருந்தவர்கள், மற்ற குடியினர் பெருக பெருக அவர்கள் மெதுவாக மறைந்தனர் என்பது வெண்முரசில் பல இடங்களில் வருவது. காண்டவத்தில் கொஞ்சம் வந்து மறைந்தது.

கதைப்படி நாகலோக இளவரசி, உலூபி அர்ஜுனனை கவர்ந்து சென்று மணந்து கொண்டாள். அவர்களுக்கு பிறந்தவன் அரவான். போரில் களப்பலியானவன்.  இது முழுக்க முழுக்க ஒரு ஃபேண்டசி கதை. அதை தரையிலிறக்கி (இதுதான் மாயயதார்த்தவாதமோ??) காட்டியுள்ளார்.

உலூபி கவர்ந்து செல்லும் போது அவனுக்கு வரும் மாயக்காட்சிகள், நாகங்களின் உலகம் எல்லாம் வேறு எதன் குறீயீடோ என்னவோ. எனக்கு அந்தளவிற்கு புரியவில்லை. வெண்முரசில் வரும் யோகம், தாந்திரகம், பல வழிப்பாட்டு முறைகள், போன்றவற்றை பற்றிய் குறியீடுகள் எல்லாம் எனக்கு புரிவதில்லை, அறிமுகமில்லை. எனக்கு தெரிவது, மனிதர்கள் மட்டுமே. இதில் இரண்டும் கலந்தே உள்ளது.

உலூபியின் நகரம், புற்றுக்குள் வாழ்வது எல்லாம் ஒரு நல்ல சிஜி சினிமாவிற்கான கரு. பெரிய பெரிய நாகங்கள் வந்து பலி கொள்வது, நாகர்கள் தன்னையே பலி கொடுப்பது, பின்னால் அரவான் மரணத்துடன் தொடர்பு கொள்ளும் போது வலிமை கொள்கின்றது.

உலூபிக்கு அடுத்தது சித்ராங்கதை. இதில் காட்டப்படும் இடம் எங்குள்ளது என்பதை யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். வெளிவந்த காலத்தில் யாராவது இதைப்பற்றி எழுதியிருப்பார்கள். ஆனால் என்னால் அப்போது அதை தொடர்ச்சியாக படிக்கமுடியவில்லை. அர்ஜுனன் அஞ்ஞாத வாசத்தில் பெண்ணாக மாறியிருந்ததன் லீட் இங்குள்ளது. அர்ஜுனன் ஊர்வசியின் சாபத்தால் அவ்விதம் மாறினான் என்பது கதை. இதில் ஆசிரியர் அர்ஜுனன் அதை ஒரு கலையாக கற்றான் என்று கூறுவது யதார்த்ததிற்கு பொருத்தமாக உள்ளது.

சித்ராங்கதை ஆணாகவும், அர்ஜுனன் பெண்ணாகவும் இருந்தாலும், ஒருவர் மற்றவரை கண்டைகின்றனர். இதில் வரும் அரண்மனை கற்பனையா? நிஜமா? கேட்டால் சொல்லமாட்டார். என்ன செய்ய. பற்றில்லாதவன் அர்ஜுனன் என்பது உண்மையல்ல என்றுதான் தோன்றுகின்றது. தேடல் நிறைந்தவன், தேடலுக்கக இருப்பதை விட்டு விட்டு செல்கின்றான். சித்ராங்கதையின் மகன் பப்ருவாகனனை விட்டு செல்கின்றான்.

இதற்கு அடுத்து வரும் அந்த சுனைக்கதை. கதை என்ற வகையில் ஒரு நல்ல புனைவு. அடுத்து வரும் பிரபாச தீர்த்த கதையும். பிரபாச தீர்த்தம் கிருஷ்ணன் தன்னுடலை விட்டு சென்ற இடம். பாபங்களை தீர்க்கும் இடம். அனைவருக்கும் உடலைவருத்தி தீர்க்க வேண்டிய பாபங்கள் இருக்கின்றன. அது இல்லாதவன் ஏது. பாபங்கள் தீர்வது என்பது கற்பனையாகவே இருந்தாலும், குறைந்தபட்சம் குற்ற உணர்விலிருந்து விடுதலையையாவது தருகின்றது.

சுபத்திரா திருமணம், அருகர் நெறியை பற்றி பல புதிய விஷயங்களை பேசும் பகுதி. அரிஷ்டநேமி. இந்த பெயர் கேள்விபட்டிருந்தாலும், காண்டீபம் சொல்லும் விஷயங்கள் மிகப் புதிது. ரைவதர் கதையும் புதிது. சமண மதம் இத்தனை பழையது என்பது இதற்கு முன்னால் தெரியாது. நம் பாடப்புத்தகங்கள் அதை சொல்வதில்லை.

சுபத்திரையின்  திருமணத்தில் நடக்கும் விஷயங்கள், ஏன் பாரதப்போரில் யாதவர்களில் பலர் துரியனிடம் சேர்ந்தாகள் என்பதை காட்டுகின்றது. நம்மை விட ஒருவன் திறமைசாலியாக இருந்தால், அவனை நாம் முழுவதும் நம்பினாலும் அவனின் சறுக்கலை எப்போதும் எதிர் கொண்டே இருப்போம். இன்றைய அரசியல் சூழலிலும் அதைக்காணலாம்.

அது போலவே கிருஷ்ணனை போற்றினாலும், அவனை கால்வாரிவிடவும் காத்திருக்கின்றனர்.

இறுதிப் பகுதிகள் புன்னகையை தருபவை.
குழந்தைகள் உலகிலும் போர், இளவரசிகள் கடத்தல் என்று. விளையும் பயிர். காண்டீபத்தின் தரிசனத்துடன் முடிகின்றது.

ஜெயமோகனின் எழுத்துகலையை பற்றி புதிதாக சொல்வதற்கேதுமில்லை. வேறு எங்கோ எதற்கோ சொல்லப்பட்ட கதைகளை சரியான் இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றார். முதலில் வரு திரிசரஸ் கதை,, இந்திரனால் சபிக்கப்பட்ட ஐந்து பெண்களின் கதை.

திரிசரஸ் ஒருவகையில் அர்ஜுனனுக்கு உவமையாகின்றான். அருக நெறி பற்றி பல விஷயங்கள் வருகின்றன. ரைவதரின் கதையும், அரிஷ்டநேமியின் கதையும் தொடர்பில்லாதது போன்று தோன்றினாலும், நுணுக்கமாக அதை அர்ஜுனனிடம் சேர்க்கின்றார். லார்ட் ஆஃப் ரிங்க்ஸில் வரும் ஒரு வசனம், வீரம் என்பது கொல்வதல்ல, எப்போது கொல்லாமல் விடுவது என்பது (அப்படியே நினைவில்லை, இது போல வரும்). கிருஷ்ணனையே வெல்லும் அரிஷ்டநேமி, இறுதியில் தேர்வது அருகனின் பாதையை. அது அர்ஜுனனிடம் மாற்றத்தை உண்டாக்குகின்றது என்பதாகவே தோன்றுகின்றது.

இதை ஒரு தனி நாவலாக கொள்ளும் போது கால வரிசை பெரும் குழப்பத்தையே தருகின்றது. அதை உணர்ந்தே மாலினி மூலம் ஒரு சமாதானத்தை தருகின்றார்.

செம்பதிப்பும் கிடைக்கின்றது வழக்கமான பதிப்பும் கிடைக்கின்றது. 

3 கருத்துகள்:

  1. செம்பதிப்புக்கும் சாதா பதிப்புக்கும் நூறு ரூபாய்தான் வித்தியாசம்!!!

    பதிலளிநீக்கு
  2. வெண்முரசு மகாபாரத வரிசையில் இதுவரை எத்தனை புத்தகங்கள் வெளி வந்திருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1. முதற்கனல்
      2. மழைப்பாடல்
      3. வண்ணக்கடல்
      4. நீலம்
      5. பிராயகை
      6. வெண்முகில் நகரம்
      7. இந்திர நீலம்
      8. காண்டீபம்
      9. வெய்யோன் - செம்பதிப்பு முன்பதிவு ஆரம்பம்
      10. பன்னிரு படைக்களம் - சில வாரங்களுக்கு முன் முடிந்தது
      11. சொல்வளர்க்காடு - இனி ஆரம்பம்

      பிராயகையிலிருந்து கிழக்கு பதிப்பகம் வெளியீடு. நல்ல தரமான பதிப்பு. முந்தைய புத்தகங்களும் இரண்டாம் பதிப்பாக கிழக்கில் கிடைக்கின்றன். செம்பதிப்பும், வழக்கமான பதிப்பும் கிடைக்கின்றன

      நீக்கு