07 மார்ச் 2017

மாயவலை - பா ராகவன்

நிலமெல்லாம் ரத்ததிற்கு பின் அதன் பின்னால் இருக்கும் மாயவலை பற்றிய புத்தகம். உலகளவில் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும் சில ரெளடி இயக்கங்கள் பற்றிய நூல். தீவிரவாதத்தால் வெகுவாக பாதிக்கப்பட்ட நாடுகளில் நாமும் ஒன்று. ஆனால் நமக்கு அண்ணன்கள் எல்லாம் இருக்கின்றார்கள். தினமும் அடிவாங்கிக் கொண்டு பதிலுக்கு அடித்து, அழுது என்று. அந்தளவிற்கு அனைவரையும் இம்சை படுத்தும் தீவிரவாத இயக்கங்களை பற்றி விரிவாக எழுதப்பட்ட ஒரு தொகுப்பு. ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஜமா இஸ்லாமியா, அல் கொய்தா, லஷ்கர் ஈ தொய்பா என்று ஒரேடியாக் இஸ்லாமிய இயக்கங்களை பற்றி மட்டும் எழுதினால் மதச்சார்பு தீட்டு வந்துவிடும் என்று ஒரு ஜப்பானிய இயக்கம், ஓம் என்று ஆரம்பிக்கும் அந்த இயக்கத்தின் பெயரே வாயில் நுழையவில்லை, ஈடிஏ என்னும் இடதுசாரி இயக்கம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.

அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுக்கும் பொதுவான எதிரி அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா. இதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. இஸ்ரேல், இந்தியாவும் அவர்களின் மதத்திற்காகவே எதிர்க்கப்படுகின்றது. அகண்ட இஸ்லமிய தேசத்க்கனவிற்கு பாதகமாக இருப்பது இவையே என்ற எண்ணம் அவர்களிடையே வலுவாக இருக்கின்றது. ஆனால் அவர்களின் சரித்திரத்தை பார்த்தால், அவர்களுக்கான விரோதிகள் வெளியில் எல்லாம் கிடையாது. அவர்கள்தான். 

கிறிஸ்துவத்தில் ஜாதிகள் உண்டு, அங்கும் பிரச்சினைகள் உண்டு. எங்களூரில் கிறிஸ்துவ நாடார் உறவின்முறை என்ற பதத்தை கேட்டு குழம்பியிருக்கின்றேன். என்னாங்கடா, ஜாதியில்லைன்னுதானடா அங்க போனீங்க, அங்கயும் போயுமா? பின்னர் தலித் கிறிஸ்துவத்தில் ஆரம்பித்து கிறிஸ்துவ பிராம்மணர்கள் வரை வந்தாகிவிட்டது. இஸ்லாமில் ஏற்றத்தாழ்வு கிடையாது, அனைவரும் ஒன்று, கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதே பொதுவான சித்திரம். அதுவும் தவறு தம்பி என்கிறது இப்புத்தகம். இனக்குழுக்களின் சண்டை என்பது ஜாதிச்சண்டையை விட மோசமானது. ஷியா - சுன்னி பிரிவு சண்டை, இன்னும் பல உயிர்களை குடித்து வருகின்றது. பிறகு என்ன சமத்துவ பொங்கல் வேண்டியிருக்கின்றது.

உலகளாவிய தீவிரவாதிகளின் வலைப்பின்னல், அவர்களின் இயக்கங்களின் நிர்வாக அடுக்குகள், வருமானம், போன்ற நிழலுகத்தை காட்டுகின்றது. சிங்கம் புலிகளைகூட வேட்டையாடிவிடலாம். எலிகளையும், கரப்பான் பூச்சிகளையும் கொல்வதுதான் கடினம் இவர்கள் அந்த வகைதான். வளைகளுக்குள் ஒளிந்து கொண்டும் தாக்கும் இவர்களை போராளிகள் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுமென்றால் கூறிக் கொள்ளலாம். 

இந்த சரித்திரங்களை எல்லாம் படிக்கும் போது இஸ்லாமியர்கள் வேறு எந்த நாட்டைவிடவும் இந்தியாவில்தான் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் இருக்கின்றார்கள் என்று கூற முடியும். மேடை போட்டு பெரும்பான்மை மதத்தை திட்டும் வாய்ப்பு எங்கு கிடைக்கும். மற்ற நாடுகளில் செய்தால் ஒட்ட நறுக்கிவிடுவார்கள்.

புத்தகத்தில் எரிச்சலூட்டும் விஷயங்களும் இருக்கின்றன. முதலில் தீவிரவாதிகளுக்கு கொஞ்சம் கதாநாயக அந்தஸ்து தருவது. இரண்டாவது, ஜனரஞ்சகமாக எழுதுவது என்ற பெயரில், ஒட்டத நடைக்கு பாய்வது. ஐயன்மீர் என்று ஆரம்பித்து ஆசிரியர் குறுக்கே புகுவது, எங்கோ அரபு நாட்டில் நடக்கும் விஷயங்களை நம்மூர் ஸ்டைலில் தரும் போது பீட்சாவில் பெங்களூரு சாம்பாரை ஊற்றி தின்பதை போல இருக்கின்றது. 

சினிமாவில் மொக்கை பாட்டு வரும் போது போய் ஒரு காபி குடித்துவிட்டு வருவது போல, மொக்கை பகுதிகளை தாண்டி போனால் ஒரு சுவாரஸ்யமான புத்தகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக