24 மார்ச் 2017

அசோகமித்திரன்

பெரும்பாலான ஆத்மாக்களை போல, சிறுவர்மலரில் ஆரம்பித்து ராஜேஷ்குமார் வழியாக கல்கி சுஜாதா என்று படித்துக் கொண்டிருக்கும் போது, திஜாவின் எழுத்து ஒரு தட்டி தட்டி தூக்கிப் போட்டது. என்ன ஒரு எழுத்து என்று வியந்த பொழுது, ஆர்வியின் தளத்தில் ஒற்றன் பற்றி படித்தேன். யார்ரா இந்த அசோகமித்திரன் திஜாவை விட பெரிய ஆளா என்றுதான் படித்தேன். சே, இந்தாளை இவ்வளவு நாள் படிக்காமல் விட்டுவிட்டோமே என்று வெட்கப்படவைத்தது. பெரிய பெரிய வாக்கியங்கள் கிடையாது, அலங்கார வர்ணனைகள் கிடையாது ஆனாலும் மிகப்பெரிய தாக்கத்தை தந்துவிட்டு போய்விட்டார். பின்னர் தேடி தேடி படித்தேன். கரைந்த நிழல்கள், மானசரோவர், தண்ணீர், ஆகாயத்தாமரை, விழாமாலைப்பொழுதில், யுந்தக்களுக்கிடையில் என்று ஓவ்வொன்றும் எனக்கு மிகப்பிடித்தமானதாகிவிட்டது. பதினெட்டாம் அட்சக்கோடு மேலும் அவரை எனக்கு மிகவும் நெருக்கமானவராக்கியது. அவரது பழைய புகைப்படங்கள் கண்ணில் பட்டது, அவரின் தோற்றம் எனது மாமாவை நினைவு படுத்தியது. எனக்கு புத்தகங்களை அறிமுகம் செய்தவரும், பல புத்தகங்களை வாங்கி தந்தவரும், வீட்டிற்கு தெரியாமல் சேர்த்து வைத்த காசில் சிவகாமியின் சபதம் வாங்க ரகசியமாக உதவியவரும் அவர்தான். அவரைப் போலவே இருந்த அவரது தோற்றமும், அவரை ஏதோ எனக்கு மிகத்தெரிந்த ஒரு சொந்தக்காரர் போல நினைக்கவைத்தது. நேற்று அவர் இறந்ததும் ஏதோ நெருங்கிய சொந்தம் ஒன்றை இழந்தது போலத்தான் இருந்தது. அவரது பேட்டிகள் எல்லாம் கூட பலவற்றை கற்று தந்தன. வாழ்க்கை தரும் எந்த கசப்பையும் மனதில் ஏற்றி வைத்துக் கொள்ளாத அந்த மனம். அதுதான் பலருக்கு தேவை.

இவரின் சில சிறுகதைகள் பிடிபடவில்லை என்றாலும், பெரும்பாலனவை மனதிற்கு நெருக்கமானவை. பிராயணம், ரிஷ்கா, புலிக்கலைஞன், ஐநூறு கோப்பை தட்டுகள்,அம்மாவுக்காக ஒரு நாள், என்று ஒரு லிஸ்ட் இருக்கின்றது. அவரை படிக்கும் பலருக்கு அவர் இணையம் மூலமே அறிமுகமாகியிருக்க கூடும் என்னைப் போல. ஜாதி காரணமாக ஆட்சியாளர்களின் பார்வை அவர் மீது பட்டதில்லை.  அவர்களுக்கு ஆனாவுக்கு ஆனா, கானவுக்கு கானா போட்டு எழுதும் எழுத்துக்களே போதும். உண்மையான எழுத்து எப்படியும் அதற்கான பெருமையை அடையும்.

அஞ்சலிகள். 

1 கருத்து:

  1. Super Sir - இதே பதை தான் நானும் அசோகமித்திரன் இடம் வந்தேன்

    சிறுவர்மலரில் ஆரம்பித்து ராஜேஷ்குமார் வழியாக கல்கி சுஜாதா என்று படித்துக் கொண்டிருக்கும் போது, திஜாவின் எழுத்து ஒரு தட்டி தட்டி தூக்கிப் போட்டது. என்ன ஒரு எழுத்து என்று வியந்த பொழுது, ஆர்வியின் தளத்தில் ஒற்றன் பற்றி படித்தேன். யார்ரா இந்த அசோகமித்திரன் திஜாவை விட பெரிய ஆளா என்றுதான் படித்தேன். சே, இந்தாளை இவ்வளவு நாள் படிக்காமல் விட்டுவிட்டோமே என்று வெட்கப்படவைத்தது. பெரிய பெரிய வாக்கியங்கள் கிடையாது, அலங்கார வர்ணனைகள் கிடையாது ஆனாலும் மிகப்பெரிய தாக்கத்தை தந்துவிட்டு போய்விட்டார்.

    பதிலளிநீக்கு