30 ஜூன் 2025

வேள்பாரி - சு. வெங்கடேசன்

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய தொடர்கதை. வீரயுக நாயகன் வேள்பாரி. விகடனில் தொடராக வெளிவந்து, ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேலாக விற்பனையாகி உள்ளது என்று புத்தக அட்டை சொல்கின்றது. 

இன்றைய நிலையில் ஒரு லட்சம் பிரதி என்பது உண்மையில் ஒரு சாதனைதான். காவல்கோட்டம் இந்த அளவிற்கு போகவில்லை என்று அனுமானிக்கலாம். அதே ஆசிரியர், வரலாற்று தளம் இருந்தும் ஏன் இந்த வித்தியாசம். கண்டிப்பாக விகடன்  காரணம் இல்ல. விகடனில் வரும் அனைத்து தொடர்களும் இப்படி விற்பதில்லை. பின் எப்படி என்று பார்த்தால் இரண்டு விஷயங்கள். நமது சினிமா ஆர்வம், புதிதாக கிளம்பி இருக்கும் தமிழர் உணர்வு (தமிழ் உணர்வு இல்லை, தமிழர் உணர்வு) 

இது ஒரு பாகுபலி டைப் கதை. ஏன் பாகுபலி ஓடியது, பிரம்மாண்டமான திரையில் நம்ப முடியாத காட்சிகளை ஒரு காமிக்ஸ் வடிவத்தில் காட்டியது. இது அது போன்ற ஒரு நாவல். தமிழர் என்ற வார்த்தை ஒரு நல்ல வியாபார வார்த்தை. எதோடு சேர்த்தாலும் விற்கும், தமிழனின் பானம், தமிழனின் கலை, தமிழனின் கட்டிடம், தமிழனின் உணவு, தமிழனின் அறிவு  இது அந்த வகையில்  இது தமிழனின் சரித்திரம். புல்லரிப்புகளுடன் படிக்க ஏற்ற கதை.

19 ஜூன் 2025

கர்மன் - ஹரன் பிரசன்னா

ஹரன் பிரசன்னா, சாதேவி, புகைப்படங்களின் கதைகள் என்ற சிறுகதை தொகுப்புகளும், மாயப்பெரு நதி என்னும் நாவலையும் வெளியிட்டுள்ளார். சுவாசம் பதிப்பகம் மூலம் பல புத்தகங்களை வெளியிட்டுவருகின்றார். அவரின் புதிய நாவல் கர்மன்.

மாயப்பெருநதி குறிப்புகளில் அந்த நாவலின் அட்டைப்படத்தை பற்றி பாரட்டி எழுதியிருந்தேன். இந்த நாவலை படிக்க தூண்டியதில் இந்நாவலின் அட்டை படத்திற்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால் அட்டைபடத்தை வைத்து நான் யூகித்தது மாதிரி இல்லை.

அட்டைப்படம், ஒரு கேத வீட்டை காட்டுகின்றது. ஒருவர் இறந்து போனால் அவருக்கு செய்யும் இறுதி சடங்கையும் கர்மா என்றே சொல்வதுண்டு. "கர்மா செய்யும் வயதா அது", "யார் கர்மாவை செய்வது" என்று எல்லாம் பேச்சு வழக்கில் பேசுவதுண்டு. அட்டைப்படத்தையும், தலைப்பையும் பார்த்து யாருடைய சாவுக்கோ கர்மா செய்யும் ஒருவனைப் பற்றிய கதை என்றே நினைத்தேன். இல்லை. கர்மா என்பது முன்வினைப்பயன் என்று கூறலாமா? கர்மா என்பது நமது செயல்களுக்கான வினை, இங்கு பெங்களூரில் கன்னடர்கள்  கடுப்பாகி போகும் போது, "நன்னு கர்மாபா", "ஹே, ஏனு கர்மாபா" என்று புலம்புவார்கள்.  கர்மன் என்பது கர்மாவிற்கு தந்த உருவம். 

மரண வீடுகள் பலருக்கு பல கேள்விகளை எழுப்பும், அந்த கேள்விகளின் அடிப்படையில் உருவானது இந்த நாவல் என்கின்றார் ஆசிரியர்.