ஹரன் பிரசன்னா, சாதேவி, புகைப்படங்களின் கதைகள் என்ற சிறுகதை தொகுப்புகளும், மாயப்பெரு நதி என்னும் நாவலையும் வெளியிட்டுள்ளார். சுவாசம் பதிப்பகம் மூலம் பல புத்தகங்களை வெளியிட்டுவருகின்றார். அவரின் புதிய நாவல் கர்மன்.
மாயப்பெருநதி குறிப்புகளில் அந்த நாவலின் அட்டைப்படத்தை பற்றி பாரட்டி எழுதியிருந்தேன். இந்த நாவலை படிக்க தூண்டியதில் இந்நாவலின் அட்டை படத்திற்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால் அட்டைபடத்தை வைத்து நான் யூகித்தது மாதிரி இல்லை.
அட்டைப்படம், ஒரு கேத வீட்டை காட்டுகின்றது. ஒருவர் இறந்து போனால் அவருக்கு செய்யும் இறுதி சடங்கையும் கர்மா என்றே சொல்வதுண்டு. "கர்மா செய்யும் வயதா அது", "யார் கர்மாவை செய்வது" என்று எல்லாம் பேச்சு வழக்கில் பேசுவதுண்டு. அட்டைப்படத்தையும், தலைப்பையும் பார்த்து யாருடைய சாவுக்கோ கர்மா செய்யும் ஒருவனைப் பற்றிய கதை என்றே நினைத்தேன். இல்லை. கர்மா என்பது முன்வினைப்பயன் என்று கூறலாமா? கர்மா என்பது நமது செயல்களுக்கான வினை, இங்கு பெங்களூரில் கன்னடர்கள் கடுப்பாகி போகும் போது, "நன்னு கர்மாபா", "ஹே, ஏனு கர்மாபா" என்று புலம்புவார்கள். கர்மன் என்பது கர்மாவிற்கு தந்த உருவம்.
மரண வீடுகள் பலருக்கு பல கேள்விகளை எழுப்பும், அந்த கேள்விகளின் அடிப்படையில் உருவானது இந்த நாவல் என்கின்றார் ஆசிரியர்.
நாகராஜ ராவ் என்னும் ஒரு முதியவரின் அந்திமகாலத்தில் ஆரம்பித்து நாவல் அவரது முன்னோர்களின் கதையை முன்னும் பின்னும் பேசுகின்றது கர்மன். சுப்பாராவ் என்னும் ஒருவரின் கர்மா வம்சத்தை துரத்தும் கதை. நாகராஜராவுடன் பேசும் கர்மன், நாகராஜராவின் கேள்விகளுக்கு பதிலாக அவரது முன்னோர்களின் கதையை முன்னும் பின்னும் நகர்த்தி கூறுகின்றது.
பெண்பாவம், பசுஹத்தி, சர்ப்பதோஷம், பித்ருசாபம் இது எல்லாம் பல விடாமல் துரத்தும்., தலைமுறை தலைமுறையாக விரட்டும். இதில் ஏதாவது ஒன்று இருந்தாலே போது ஒரு பரம்பரைக்கு அனைத்தும் சேர்ந்தால்? குலதெய்வ வழிபாடு என்பதை எக்காலமும் விடக்கூடாது அதை மறந்து போனால்? ஒருவன் செய்த தவறு எப்படி அவன் வம்சத்தையே பாதிக்கும்? ஒரு தவறு எப்படி பல தவறுகளை சிருஷ்டிக்கும்? இதற்கு எல்லாம் தர்க்க ரீதியான் விடை கிடைக்காது, நம்பிக்கை வழி பார்க்க வேண்டியது.
பல டோலர்கள் எல்லாம் பிராமணர்கள் எல்லாம் சிறுதெய்வங்களை வழிபடமாட்டார்கள் என்று அடித்துவிடுவார்கள், உண்மையில் பல பிராமண குடும்பங்களின் குலதெய்வம் சாஸ்தா, அம்மன், அய்யனார். பல கோவில்களில் பூஜை செய்பவர்கள் பிராமணர் அல்லாதவர்கள். அதை எல்லாம் ஒரு ஓரமாக தொட்டு செல்கின்றது. நாவலின் இறுதிப் பகுதியில் வரும் கன்யா உடுகி பகுதிகள், அதிகம் எழுதப்படாத பகுதி அல்லாது நான் யார் எழுதியும் நான் படித்ததில்லை. பல குடும்பங்களில் இன்றும் உள்ள பழக்கம் என்று தெரியும், கல்லில் ஆவஹானம் செய்வது எல்லாம் புதிது எனக்கு. நடுவில் கொஞ்சம் ஆவி பேசுவது, நாற்காலி ஆடுவது, மெழுகுவர்த்தி அணைவது என்று கொஞ்சம் அமானுஷ்யம் வேறு உள்ளது.
கதை முன்பின் சென்றாலும் குழப்பமில்லாமல் போகின்றது. பலவித ராவ்கள், நல்ல ராவ், கெட்டராவ், நல்லதும் கெட்டது கலந்த ராவ்ஜிகளின் கதை. வேதவியாஸ்ராவ் ஓடிப் போகும் பகுதி மட்டும் எனக்கு ஏதோ கதையில் ஒட்டாமல் துருத்திக் கொண்டு தெரிகின்றது. சில விஷயங்கள் இயல்பாக இல்லாமல் வலிய புகுத்தப்பட்டதைப் போல தெரிகின்றது. "சகஜானந்தரை தெரியாது ராமசாமியை தெரியுமே" என்ற வசனம் ஒரு உதாரணம்.
முன்னுரையில் முழுக்க முழுக்க கற்பனை ஆனால் எங்கேயோ கேட்டது கலந்திருக்கலாம் என்கின்றார். சில பகுதிகளை படிக்கும் போது எங்கோ நடந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றியது. சில மனிதர்கள் செய்யும் விபரீதங்களை கற்பனை செய்வது கூட கடினம், அது அவர்களால் மட்டுமே செய்யக்கூடியது. இறுதிப்பகுதிகள் பல கேள்விகள் என்ற தலைப்பின் கீழ் வருகின்றன, ஆனால் அது அழுத்தமாக கேள்விகளை எழுப்பவில்லை, ஒரு கதையின் தர்க்கரீதியான முடிவை நோக்கி அவசரத்துடன் செல்வதுடன் முடிகின்றது.
வர்ணனைகள் அதிகம் இல்லாத நேரடியான கதை சொல்லல், எளிமையான உரைநடைகள். அவரது முந்தைய நாவலை போலவே இதுவும் ஒரு மாத்வ குடும்பத்தை பற்றிய கதை. மாத்வ சம்பிரதாயங்கள் அங்கங்கு எட்டி பார்க்கின்றன. மாத்வர்கள் என்பதால் தைரியமாக திருநெல்வேலி தமிழில் பேசிக் கொள்ள முடிகின்றது. தமிழ் பிராமணர்கள் என்றால பிராமண நடையில் எழுதியிருக்க வேண்டும். சிறுசிறு உரையாடல்கள் மூலம் பாத்திரங்களையும், காட்சிகளையும் கண்முன் காட்டுகின்றார். சமீபத்தில் படித்த ஒரு நல்ல நாவல். படிக்கலாம்.
சுவாசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக