21 மே 2020

ஆவரணா - The Veil - திரை - SL பைரப்பா

அப்யாரோஹ மந்திரம் – ப்ரஹதாரண்யக உபனிஷதம் 1.3.28

ஓம் அஸதோமா ஸத்மய தமஸோ மா ஜ்யோதிர் மய ம்ருத்யோர்மா அம்ருதம் மய |
உண்மையற்ற நிலையிலிருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக ! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக! மரணத்திலிருந்து என்னை மரணமில்லா பெரு நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!
இன்று ஒரு முக்கிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.  ராமர் கோவில் கட்ட நிலத்தை சீர்படுத்தும் பணியின் போது பழங்கால சிற்பங்கள், தூண்கள், கடவுள் சிலைகள் என ராமர் கோவிலிற்கான சான்றுகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன. ஆனால் அவை அனைத்தையும் தொல்லியல் துறை முன்னமே கண்டு பிடித்து இருக்கலாமே என்ற கேள்வி எழுகின்றது. அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.  கே.கே.முகமது, அயோத்தியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கு கோவிலின் கட்டுமானம் இருப்பதை உறுதி செய்த ,பின்னரும், இடதுசாரிகள் உள்ளே புகுந்து அதை குழப்பி ஒரு பெரிய பிரச்சினையாக ஆக்கினார்கள். அது கோவிலே அல்ல, பெளத்த மடம் என்று வரலாற்றையே திரிக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் திரிப்பு இந்திய வரலாறு முழுவது பரவி கிடக்கின்றது.
திப்பு சுல்தானை விடுதலை போராட்ட வீரனாக்கி, அவன் மலபார் பகுதிகளில் செய்த அட்டூழியங்களை மறைத்தது, அவனின் மத வெறி மீது நாட்டு பற்று என்ற போர்வையை போட்டு மூடியது, காசியின் மசூதி இடிப்பிற்கு ஒரு கதை கட்டிவிட்டது என்று அவர்களின் செயல் நீளுகின்றது. காரணம், ஹிந்து மூஸ்லீம்களிடம் அமைதியை உண்டாக்குகின்றார்களாம். உண்மையின் மேல் அமையாத எதுவும் ஒரு நாள் அழிந்து படும் என்பதை அறியாத மூடர்கள். அதை கண்கூடாக அவர்களின் காசி, ராமேச்வரமான ரஷ்யாவிலேயே காணலாம். 

இது போன்ற பொய்களிடமிருந்து மக்களை காத்து, உண்மையை கொண்டு சேர்க்க வேண்டிய்வர்கள் கலைஞர்கள்,ஆனால் அங்கும்  இவர்களே நிறைந்திருக்கின்றார்கள். முடிந்த வரை ஹிந்து துவேஷத்தை பரப்புவதே நம் கடமை என்று இருக்கும் எழுத்தாளர்களே அதிகம். ஆனால் இந்நாவல் ஒரு தப்பி பிறந்த ஒரு எழுத்தாளரின் நாவல்.
பைரப்பா கன்னடத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர், அவரது பர்வா நாவல் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். இது அவரது மற்றுமொரு படைப்பு. மிகத் துணிச்சலான படைப்பு என்றே சொல்ல வேண்டும்.  கன்னடத்தில் வெளியாக நான்கே மாதங்களில் முப்பது பதிப்புகளை கண்ட நாவல்.


உண்மையை கொண்டு செல்ல நினைக்கும் ஒரு எழுத்தாளரின் கதைதான் இந்த நாவல். பைரப்பா ஒரு பிரபலமான எழுத்தாளர் என்பதால்தான், அவர் நாவலில் வரும் எழுத்தாளரின் நிலை அவருக்கு வரவில்லை. இருந்தும் அவருக்கு இந்துத்துவ முத்திரை குத்தப்பட்டு விட்டது. ஒரு எழுத்தாளர் உண்மையான வரலாற்றை பேசினால் இந்துத்துவவாதி. இந்நாவலில் எங்கும் அவர் இந்து மதத்தை பற்றி எதுவும் பேசவில்லை, ஆதரவாக எழுதவில்லை. உண்மையை எவ்வித பூச்சுமின்றி எடுத்து வைக்கின்றார், அது பலரின் ஆசனவாயில் சுடுகின்றது.

கதை இரண்டு திரிகள் ஒன்று லக்‌ஷ்மியாக இருந்து ரஸியாவாக மதம் மாறிய ஒரு எழுத்தாளரின் கதை, மற்றொன்று அவர் எழுதும் நாவல். 

ஹம்பியின் இடிபாடுகளில் கதை ஆரம்பிக்கின்றது, ஒரு ஆவணப்படத்திற்கு செல்லும் அமீர்-ரஸியா தம்பதிகளின் உரையாடல்தான் ஆரம்பம். ஹம்பியின் உண்மை கதையை பற்றி ஆரம்பிக்கும் விவாதம், லக்‌ஷ்மியின் மனதில் ஒரு மாறுதலை உண்டாக்குகின்றது. அங்கு காணும் உக்கிர நரசிம்மரின் சிலையை காணும் முற்போக்குவாதி, பெண்ணியவாதி, கம்யூனிஸ்ட் என்று பரவலாக அறியப்படும் ரஸியாவின் மனதில் உண்மையை பற்றிய விவாதம் எழுகின்றது. லக்ஷ்மியின் தந்தை, காந்தியவாதி. அவரது இறப்பிற்கு பின் ஊருக்கு செல்லும் அவளுக்கு, அங்கு அவரது தந்தையின் ஆராய்ச்சி ஆச்சர்யத்தை தருகின்றது. அதைத் தொடரும் அவள், அவுரங்கசீப் காலத்தை அடிப்படையாக கொண்டு ஒரு நாவலை எழுதுகின்றாள், இறுதியில் அந்நாவல் தடை செய்யப்பட்டு, அவளும் கைது செய்யப்படும் நிலையில் கதை முடிகின்றது.

நாவலின் முதல் சில பக்கங்கள் கொஞ்சம் உள் நுழைய கடினாமாக உள்ளது, அதன் பின் தடையேதுமில்லை. ஒரு இந்துப் பெண் மதம் மாறி திருமணம் செய்வதன் பிரச்சினைகள் என்று செல்லும் முற்பகுதி, லக்‌ஷ்மி கிராமத்திற்கு சென்ற பிறகு, சரித்திரத்தின் பக்கம் செல்கின்றது. 

நாவலுக்குள் வரும் நாவல் மிக முக்கியமானது, அவுரங்கசீப்பின் படைகளால் அழிக்கப்படும் ஒரு சிறிய ராஜபுத்திர அரசின் இளவரசனின் கதை. கைப்பற்றப்படும் இளவரசன், படைத்தளபதியால் புணரப்பட்டு, பின் விதை நீக்கம் செய்யப்பட்டு அடிமையாக விற்கப்படுகின்றான். இறுதியில் அவன் அவுரங்கசீப்பின் எத்தனையாவதோ ஒரு மனைவியின் வேலையாளாக செல்கின்றான். பணியின் இடையில் தன் மனைவியை சந்திக்கின்றான். அவளும் அடிமை, இளவரசனின் வாரிசுடன், அவளை விலைக்கு வாங்கியவனின் குழந்தைகளையும் பெற்றிருக்கின்றாள். இடையில் காசி கோவில் இடிப்பை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைக்கின்றது, சத்ரபதி சிவாஜியின் வரலாறு, அவனை தன் மனைவியுடன் தப்பித்து செல்ல முடிவெடுக்க வைக்கின்றது. அதோடு அந்த நாவல் முடிகின்றது.

உள்ளே வரும் நாவலை எளிதில் படித்து விட முடியாது. ஒவ்வொரு பகுதியும் படிக்கும் போது உள்ளே வரும் உணர்வுகளை சொல்ல முடிவதில்லை. கோவிலை இடிப்பதும், சிலைகளை உடைப்பதுமான அக்கிரமங்கள், ஜிசியா வரி, யாத்திரை செல்வதற்கான வரி, போன்ற கொடுமைகள் என்று அவுரங்கசீப் ஆட்சியின் கொடுமைகளை படிக்கும் போது மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் நினைவில் வந்து போனது. ஒரு சுவாரஸ்யமான கதை போல் செல்லும் அப்புத்தகம் கூறாத பல இருண்ட பக்கங்களை காட்டுகின்றது.

அக்காலத்தில் அக்பருக்கு கிடைத்த ஆசிர்வாதம் "நரகத்திற்கு செல்லட்டும்", காரணம், அனைத்து மதங்களையும் சமமாக நடத்தியது. அவுரங்கசீப் சிறந்த மன்னன், காரணம், அவன் மற்ற மதங்களை ஒழிக்க நினைத்தது. ஆனால் அவுரங்கசீப்தான் கடைசி பெரிய மன்னன், அதன் பின் முகலாய சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டது, மராட்டிய சிங்கம் சிவாஜி, சம்பாஜி, பேஷ்வாக்கள் முகலாய சாம்ராஜ்யத்தை தூளாக்கினார்கள்.  (தேனீகளால் தாக்கப்படும் ஒரு வயதான கரடி - வந்தார்கள் வென்றார்களில்). இதைப் பற்றி ரத்தத்தில் முளைத்த என் தேசம் நூலில் காணலாம்

காசி கோவில் இடிப்பை பற்றி பல கட்டுக்கதைகள், அங்கு யாரோ ஒரு ராணியை கடத்தி சென்றார்கள் அதனால அவுரங்கசீப் அதை இடிக்க சொன்னான் என்று. இது போன்று எத்தனை கட்டுக்கதைகள். அவனது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஆரம்பித்ததுதான் காசி கோவில் இடிப்பு,  இந்நாவல் அதை விரிவாக விவரிக்கின்றது. கண்ணீர் வரவழைக்கும் பகுதிகள். அயோத்தி விடுபட்டு விட்டது, காசியும், மதுராவும் இன்னும் விடுபடாமல் இருக்கின்றது, விரைவில் விடுபடும். 

நாவலில் வரும் மற்றுமொரு பாத்திரம் சாஸ்திரி, படிக்கும் போதே இது யோரோ நிஜ மனிதர் என்று தோன்றியது. யோசித்ததில்  யூ.ஆர். அனந்த்மூர்த்தி நினைவிற்கு வந்தார். நாவலைப் படித்த கன்னட நண்பர் சொன்னதும் அதேதான். இடதுசாரி சிந்தனை கொண்ட ஒருவர். அவர் மூலமாக இடதுசாரிகளை பக்கம் பக்கமாக கிழித்து தொங்க விட்டு இருக்கின்றார். 

ஹம்பி கோவில் இடிக்கப்பட்டதற்கு காரணம் சைவ - வைணவ சண்டை, திப்பு சுல்தான் ஒரு விடுதலை வீரன், அவுரங்கசீப் காசியை ஒரு நியாயமான காரணத்திற்காக இடித்தான், முகலாய மன்னர்களின் அட்டூழியங்கள் பற்றியவை அனைத்தும் கட்டுக்கதைகள் என்று அவர்கள் அடித்துவிடும் கதைகளை அடித்து துவைக்கின்றார். அதே சமயம் அவர்களின் தொடர்புகள் எந்த ஆழத்திற்கு சென்றுள்ளன, அவர்கள் நினைத்தால் வரலாற்றை எப்படி மாற்றலாம், மாற்றி இருக்கின்றார்கள், அவர்களுக்கு வரும் அரசங்காப் பணம் எவ்வளவு, அதை வைத்து என்ன செய்கின்றார்கள் (காசி ஹிந்து பல்கலைகழகத்தில் ஹிந்து மதத்தை விமர்சித்து கூட்டம்), அவர்களை கேள்வி கேட்பவர்களை எப்படி முத்திரை குத்தி புறக்கணிப்பார்கள் (எப்போது அலிகார் பல்கலைகழகத்தில் இஸ்லாமை விமர்சித்து கூட்டம் என்று கேட்பவனுக்கு ஆர்.எஸ்.எஸ் என்ற முத்திரை). என்பதை படிக்கும் போது நாட்டை பிடித்த பெரிய வியாதி இவர்கள் என்று தோன்றுகின்றது. இன்றைய  சமுக வலைதள காலத்திலேயே கேரளா கொரானவை வெற்றி கொண்டது என்று அடித்து விடுபவர்கள், செய்தி ஊடகங்களை மட்டும் நம்பி இருந்த காலத்தில், அதனுள் ஊடுருவிய இவர்கள் எவ்வளவு செய்திருப்பார்கள்.

நாவலில் வரும் மற்றுமொரு கருத்து இஸ்லாமிய ஆண்கள் பற்றி, படித்து பட்டம் பெற்றாலும் அவர்களிடம் அந்த பழமைவாத மனது போவதில்லை. முற்போக்குவாதி என்று பெயர்வாங்கும் அமீர், லக்‌ஷ்மியை மதம் மாற்றிதான் திருமணம் செய்து கொள்கின்றான். பின்னர் அவனை விட பலவயது குறைவான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றான். அவனின் குடும்பம் அவளை, அவள் முஸ்லீம் இல்லை என்ற காரணத்தால் ஒதுக்குகின்றது. கம்யூனிசம் பேசும் ரசியாவும் ஐந்து வேளை தொழுகை செய்கின்றாள். முற்போக்கு எல்லாம் ஹிந்துக்களிடம்தான் செல்லும் போல. ரஸியாவின் மகன் சவுதியிலிருந்து வரும் ஒரு முழு இஸ்லாமியனாக இருக்கின்றான். தன் தாயை விட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொண்டது அவனுக்கு தவறாக தெரிவதில்லை, அவர்கள் மதப்படி அது சரி. இன்னொரு காட்சியும் வருகின்றது, அனைவரும் சமம் என்பது இஸ்லாமின் முக்கிய அங்கம், ஆனால் இந்திய முஸ்லீம் அரேபிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவதில்லை.  இருந்தும் அவனுக்கு அரேபியாவே சிறந்த தேசம். அனைவரும் இப்படி இருப்பதில்லை சரிதான். ஆனால் இப்படி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகின்றது என்பது உண்மை.

நாவலில் வரும் அனைத்து உரையாடல்களும் வெகு கூர்மையானவை. பல விவாதங்கல் வெகு நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளன. காசியில் ராஜபுத்திர இளவரசனுக்கும் ஒரு சாதுக்கும் நடக்கும் உரையாடல், நமது பாரம்பர்யத்தின் சாரம். 


நாவலில் ஒரு பகுதியில் சமய நல்லிணக்கித்திற்கான கூட்டம் நடைபெறுகின்றது. அதில் முகலாயர்களை பற்றிய உண்மைகளை கூற கூடாது அது அமைதியை கெடுக்கும் என்ற வாதம் வைக்கப்படுகின்றது. அதற்கு ரசியாவின் பதிலாக கூறப்படுவது. "ஒரு உறுதியான சமுதாயத்தை பொய்யின் மீது கட்டமைக்க முடியாது, காசியை பற்றிய பெரிய கற்பனைகளுடன் செல்பவர்கள் காண்பதை அவர்களால் நம்ப முடிவதில்லை. அவர்களின் புனித தலம் முழுவதும் மசூதிகள், கோவில்களை இடித்து கட்டப்பட்டவைகளை காணும் போது அவர்களுக்கு கிடைப்பது கசப்பு, அது நாளுக்கு நாள் வளரும். உண்மையை மறைப்பது என்பது கசப்பையே வளர்க்கும். சமய நல்லிணக்கம் வளர நாம் செய்ய வேண்டியது உண்மையை நம் சந்ததிகளுக்கு கொண்டு சேர்ப்பது" (சுருக்கமான மொழிபெயர்ப்பு) அதை இந்நாவல் செய்கின்றது. 




கன்னடத்தில் வெளியடப்பட்டு பலமான விமர்சனத்திற்கு உள்ளான நாவல். இந்த நாவலின் இணைப்பாக ஒரு பெரிய புத்தக வரிசையை தந்துள்ளார். இந்நாவலில் வரும் அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது, விமர்சிப்பவர்கள் படித்து விட்டு வாருங்கள் என்றார். வழக்கம் போல அவர் ஒரு இந்துத்துவவாதி என்ற பதில்தான் கிடைத்தது. இன்று வெளியாகி இருந்தால் சங்கி என்று சொல்லியிருப்பார்கள். 

இது தமிழில் திரை என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு வந்துள்ளது.  கிண்டிலில் ஆங்கில மொழி பெயர்ப்பு மட்டுமே உள்ளது.

கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.



2 கருத்துகள்:

  1. நானும் படித்து ரசித்த நாவல்.  அவர் மற்ற நாவல்களின் மொழிபெயர்ப்பு கிடைக்கிறதா என்று இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்!  எங்கள் தளத்திலும் 'திரை' என்ற தலைப்பில் அப்போதே படித்ததை பகிர்ந்து கொண்டிருந்தேன்,.

    பதிலளிநீக்கு