மோகமுள்ளை படித்துவிட்டு வைத்த போது இரவு 12. தண்ணீர் குடித்துவிட்டு வரும் போது கண்ணில் பட்டது அம்மா வந்தாள். படித்துவிட்டு படுக்கும் போது இரண்டு.
சின்ன நாவல். இரண்டு மணி நேரத்தில் படித்துவிடலாம். வெளிவந்த காலத்தில், படித்தவர்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியை தந்திருக்கலாம். தி. ஜாவை விலக்கி வைக்கும் அளவிற்கு கொந்தளிப்பை ஏற்படுத்திய கதை. இன்றும் ஜீரணக்க கொஞ்சம் கடினமான கதைதான்.
இரண்டு பெண்களை பற்றிய கதை. இந்து, அலங்காரம். இவர்களுக்கு இடையில் அப்பு. அப்பு வேதபாடசாலையில் படித்து முடித்துவிட்டு கிளம்ப தயாராக இருக்கின்றான். இந்து வேதபாடசாலை நடத்திவரும் பவானியின் மருமகள். சிறுவயது முதல் அங்கு வளர்ந்து, கணவனை இழந்து மீண்டும் அங்கு வந்து இருக்கின்றாள். இந்துவிற்கு அப்புவின் மீது காதல். சிறுவயது முதல். அதை மறுக்கும் அப்பு அவளை தன் அம்மாவுடன் ஒப்பிடுகின்றான், இந்து அவனின் அம்மாவை பற்றி கூறி ("அவ யாரையோ நினைஞ்சிண்டு உங்கப்பாவ ஏமாத்திட்டு இருக்கா, நான் உன்ன தவிர யாரையுன் நினைச்சதில்டா பாவி"), அவளோடு என்னை ஒப்பிடாதே என்று கத்துகின்றாள். சென்னை செல்லும் அப்பு அவள் கூறுவது உண்மை என்று கண்டு கொள்கின்றான்.