09 பிப்ரவரி 2022

நெஞ்சம் மறப்பதில்லை - சித்ரா லட்சுமணன்

சித்ரா ராமு-லட்சுமணன் திரைப்படத்துறையில் பிரபலமானவர்கள். சித்ரா லட்சுமணன், தற்போது டூரிங்க் டாக்கீஸ் என்ற பெயரில் ஒரு யூட்யூப் சானல் நடத்தி வருகின்றார். அதில் வரும் பேட்டிகளைத் தவறாமல் பார்ப்பதுண்டு. பிரபலமானவர்களுடன், அட இவர்தானா அது என்று வியக்கும் சிலரையும் பேட்டி எடுப்பதுதான் இவரின் சிறப்பு. அதோடு பேட்டி எடுக்கும் விதமும் சிறப்பானது, குறுக்கே விழுந்து பேசாமால், விருந்தினரை பேச வைத்துப் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளி கொண்டு வருகின்றார். அவரின் பத்திரிக்கை உலக அனுபவமும், மக்கள் தொடர்பாளர் பணியும் அவருக்கு பெரிய உதவி செய்கின்றது. படத்தில் பணிபுரிந்தவரே மறந்து போன பல விஷயங்களை இவர் நினைவு படுத்துவதைப் பார்க்கும் போது ஆச்சர்யம்தான் வருகின்றது. 

அவர் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பெயரில் எழுதிய தொடரை ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ் புத்தகமாக வெளியிட்டுள்ளது. நல்ல டிஸ்கவுண்ட் கிடைத்ததால் வாங்கி விட்டேன். மூன்று பாகம், கிட்டத்திட்ட 150 கட்டுரைகள்.

சினிமா உலகம் என்று அல்ல, பொதுவாக வாழ்க்கை வரலாறு, வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை படிப்பது எனக்கு பிடிக்கும். அடுத்தவர் டைரியை எட்டிப்பார்ப்பது போன்ற ஒரு அல்ப குஷி என்றும் வைத்துக் கொள்ளலாம். நிஜவாழ்வில் நடக்கும் பல விஷயங்கள் நம் கற்பனையில் கூட வராது. நிஜத்தில் நடக்கும் பல சம்பவங்கள் எவ்வித தர்க்கத்திலும் அடங்காது. 

28 ஜனவரி 2022

குற்றப்பரம்பரை - வேல.ராமமூர்த்தி

குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ப்ரிட்டீஷ் ஆட்சி காலத்தில் ஒரு சில ஜாதி மக்களை குற்றப்பரம்பரையினர் என்று வகைப்படுத்தி அவர்களுக்கு என ஒரு தனிச்சட்டத்தை கொண்டு வந்தனர். அந்த ஜாதி ஆண்கள் அனைவரின் கை ரேகைகளையும் பதிவு செய்து கொண்டு அவர்களை காவல் நிலையத்தில் இரவு முழுவதும் தங்க வைத்தனர். 

இதில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளர், சேர்வை, அம்பலகாரார் போன்ற ஜாதியினர்கள் என்று கூறப்படுகின்றது. வடஇந்தியாவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் களவுக்கு போனவர்கள், போகாதவர்கள் என்று அனைவரும் பாதிக்கப்பட்டனர். காவல் கோட்டம் நாவலில் ஒரு பகுதியும் இதை அடிப்படையாகக் கொண்டது. 

வேல.ராமமூர்த்தி, இன்று திரைப்படங்கள் மூலம் இன்று பலருக்கு நன்கு தெரிந்தவர். பட்டத்து யானை என்ற படத்தில் அறிமுகமானார் என்று நினைக்கின்றேன். பெரும்பாலும் ஒரே மாதிரி நடிப்பதால் எந்தப் படம் என்ற குழப்பம் வேறு. பட்டத்து யானை திரைப்பட கதை இவருடையதா என்று தெரியவில்ல அதே பெயரில் இவர் ஒரு நாவலும் எழுதியுள்ளார். தனது தாய், தந்தை இருவரின் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து வேல என்று வைத்துக் கொண்டுள்ளார். தன் சமூகத்தின் கதையை எழுதுவதை விட, இன்று அவர்கள் மீது தேவையில்லாது சுமத்தப்பட்ட ஒரு களங்கத்தை களைய வேண்டும் என்பதே அவரது எண்ணம் என்று தோன்றும்படியான முன்னுரை. 

07 ஜனவரி 2022

சிக்க வீர ராஜேந்திரன் - மாஸ்தி ஐயங்கார்

கன்னடத்திலிரிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட நாவல். பொதுவாக எனக்கு மொழி மாற்ற நூல்களைப் பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் கிடையாது. சில பல மோசமான மொழி பெயர்ப்பு நூல்கள் செய்த வினை. ஆனால் இந்த நாவல் எங்கும் இது ஒரு மொழி பெயர்ப்பு என்பதை நினைவு படுத்தவில்லை. 

கர்நாடகாவின் குடகு மலை காவிரி நதியின் பிறப்பிடம். மலைகள் சூழ்ந்த பகுதி. இன்று பெரும்பாலும் காபி தோட்டங்களால் நிறைந்த பகுதி. நல்ல மழை உண்டு. குடகின் கலாச்சாரமும், பண்டிகைகளும் தனித்தன்மையானவை. கன்னடர்களிடமிருந்து அவர்களின் கலாச்சாரம் கொஞ்சம் வேறு பட்டிருக்கும். அவர்களுக்கு என்று பல பண்டிகைகள் உண்டு. அதில் பெரும்பாலனவை விவசாயம் சார்ந்தவை. விதை விதைக்க ஒரு பண்டிகை, அறுவடைக்கு ஒரு பண்டிகை. குடி என்பது அவர்களின் வாழ்வில் ஒரு அங்கம். வீட்டில் செய்து விற்கப்படும் மதுவகைகளை அங்கு காணலாம். ஹோம் மேட் ஒயின். விதவிதமான ஒயின்களை அங்கு கண்டேன். பலவித பழங்களில் செய்யப்பட்டவை, பூக்களில் செய்யப்படுபவை, வெற்றிலையில் தயாரிக்கப்பட்டதை கூட பார்த்தேன். வேட்டையும், போரும் அவர்களது கலாச்சாரம். நாட்டு துப்பாக்கிகளும் புழக்கத்தில் உண்டு என்றும் கேள்வி. அவர்களுக்கு என்று தனிச் சின்னமும் உண்டு. அதில் இருப்பது விவசாயக்கருவிகள், சூரியன், கதிர். பொதுவாக வேட்டையயையும் விவசாயத்தையும், அடிப்படையாக கொண்ட சமூகம். 

22 டிசம்பர் 2021

வயது வந்தவர்களுக்கு மட்டும் - கி.ராஜநாராயணன்

 வயது வந்தவர்களுக்கு மட்டும் - கி.ராஜநாராயணன்

தலைப்பே சொல்லும் என்ன மாதிரியான புத்தகம் என்று. பின்னடித்து ரகசியமாய் தொங்கவிடும் புத்தகமல்ல. 

மெலிதான காமம் கலந்த கதைகள் பல படித்திருப்போம், காமத்தை அடிப்படையாக கொண்டும் கொஞ்சம் பலான புத்தகங்களுக்கு நெருங்கி வரக்கூடிய புத்தகங்களும் உண்டு, படிப்பவர்களை அதிர்ச்சியாக்கவே வலிய புகுத்திய கதைகளும் உண்டு. இவை அந்த மாதிரியல்ல.

கிராமத்து பக்கங்களில் சில வசவுகள், சில பழமொழிகளை ஆராய்ந்தால் அதன் பின்னால் ஏதாவது ஒரு விவகாரமான கதை இருக்கும். விக்கிரமாதித்யன் கதைகளில் பல கதைகள் ஆண் பெண் உறவை அடிப்படையாக கொண்டவை. கிராமப்பக்கம் இருக்கும் இது போன்ற கதைகளை தொகுத்து புத்தகமாக்கியிருக்கின்றார் கி.ரா.

ஆண் - பெண் உறவை மையமாக கொண்ட குட்டி குட்டி கதைகள். பச்சையான வார்த்தைகள் இல்லாமல், குறிப்பு மொழியில் சொல்லப்படும் கதைகள். கெட்ட வார்த்தை கதைகள் என்று அழைக்கின்றார்.

பல கதைகள் பெண்களை மையப்படுத்தியே இருக்கின்றது. கணவனை விட்டு வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்ளும் பெண்கள், கல்யாணம் கட்டியும் ஒன்றும் தெரியாத ஆண்கள் என்று. இது மாதிரியான கதைகளின் உண்மையான மூல கதை சொல்லி ஆணா, பெண்ணா என்பது சுவாரஸ்யமான கேள்வி. பெரும்பாலான கதைகள் நகைச்சுவை கதைகள்தான். கொஞ்சம் விரிவாக்கப்பட்ட அடல்ட் ஜோக்.

சில கதைகளை படிக்கும் போதே அதன் வேறு திரிபுகளை நாம் கேள்விப் பட்டிருக்கலாம் அல்லது ஏதாவது புராணங்களில் இருந்த கதையை கொஞ்சம் மாற்றி பரப்பியிருக்கலாம்.இவை பெரும்பாலும் வாய் மொழியாகவே வளர்ந்த கதைகள், ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் போகும் போது மாறுதலடைந்து செல்லும். கி.ராவே தாத்தா, அவர் யாரோ ஒரு தாத்தாவிடம் கேட்ட கதைகள் என்கின்றார். நாட்படு தேறல் போல. 

முன்னுரையில் ஏன் இந்த புத்தகத்தை தொகுத்தேன் என்று நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். படிப்பவர்கள் பலரும் இதை வெளியில் சொல்ல மாட்டார்கள், ரகசியமாக வைத்து கொள்வார்கள் என்கின்றார். முன்பு இருக்கலாம். இது கேம் ஆஃப் த்ரோன்ஸ், நெட்ஃப்ளிக்ஸ் காலம். கிண்டிலில் தமிழ் புத்தகங்களை தேடினால், ஏராளமாக கண்ணில் படுகின்றது. அந்த குப்பைகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், இதில் உள்ள ஒரிஜினாலிட்டி, பல ஆண்டுகாலம் புழங்கியதன் தரம். 

03 செப்டம்பர் 2021

பொன்னியின் செல்வன் - கல்கி

பொன்னியின் செல்வனைப்பற்றி யாரும் எழுதாத ஒன்றை எழுதிவிடுவது கடினம். பொன்னியின் செல்வனை வருடம் ஒருமுறையாவது படிப்பது வழக்கம். எப்போது படிப்பது என்பது மனநிலையை பொறுத்தது. ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றால் பொன்னியின் செல்வன் நினைவு வராமல் போகாது. இந்த முறை மணிரத்னம் எடுக்கும் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகர்கள் பற்றி வெளிவந்த செய்திகள் மீண்டும் படிக்க வைத்தது. 

பொன்னியின் செல்வனை முதல்முதலில் படிக்கும் போது வயது பதினொன்று. ஏழாம் வகுப்பு, ட்யூஷன் முடித்து வரும் வழியில் நூலகம். பொன்னியின் செல்வன்,வீட்டிற்கு கொண்டுவந்து படித்தேனா இல்லை அங்கேயே படித்தேனா என்று நினைவில் இல்லை. கடைசி அத்தியாயத்தை எவனோ ஒரு பரதேசி கிழித்து வைத்திருந்தான். பிறகு பல ஆண்டுகள் படிக்க முடியாமல், பத்தோ, பதினொன்றோ படிக்கும் போது நண்பனின் உறவினர் ஒருவர் வீட்டில் இருந்தது என்று கேள்விப் பட்டு சென்று கேட்டேன். யாரிடமும் எதையும் இரவலாக கேட்டதில்லை. இரண்டே புத்தகங்கள் இது ஒன்று, தில்லானா மோகனாம்பாள் இன்னொன்று. பயங்கர பிகு. ஒவ்வொரு பாகமாகத்தான் கொடுப்பேன், ஒன்றை படித்து முடித்து தந்தால்தான் அடுத்த பகுதியை தருவேன். நல்லவேளை படித்த பகுதியில் பரிட்சை வைப்பேன் என்று சொல்லவில்லையே என்று சந்தோஷமாக இருந்தது. ஒரே வாரத்தில் படித்து முடித்தேன். சில புத்தகங்கள் படிக்கும் போது மனதில் ஒரு ஜிலுஜிலுப்பு உண்டாகும், அதில் ஒன்று பொன்னியின் செல்வன். மோகமுள் மற்றொன்று. 

கல்லூரி படிக்கும் போது தொடராக கல்கியில் வந்து கொண்டிருந்தது. எனக்காகவே என் மாமா வாங்கினார். அதிலும் பிரச்சினை இரண்டாம் பாகம் பாதி சென்றபிறகு வாங்க ஆரம்பித்தார். அவரே எனக்காக முதல் பாகம், கல்கியில் வந்த தொடரே பைண்ட் செய்யப்பட்டதை மதுரையில் வாங்கி தந்தார். உள்ளே ஒரே ஒரு அத்தியாயம் மட்டும் பத்மவாசனின் படங்கள் இல்லாமல், முதன் முதலாக தொடர் வெளிவந்த போது வரைந்த மணியத்தின் படங்களுடன். முதல் முறை கல்கியில் வந்த அத்தியாயத்தை எப்படியோ அதில் சேர்த்திருந்தனர். ஆழ்வார்க்கடியான் பழையாறை அரண்மனையில் இருக்கும் பகுதி. கல்லூரி முடிந்து சென்னை வந்த பின்னும் ஊருக்கு வரும் போது எல்லாம் அனைத்தையும் சேர்த்து வைத்து பைண்டிங் செய்த புத்தகம்தான் இன்றும் இருக்கின்றது. இரண்டாம் பாகம் அதே கல்கி பைண்டிங்க் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். எங்காவது பழைய புத்தக கடையில் தேட வேண்டும். அந்த புத்தகத்தை எடுத்து படிக்கும் போதே ஒரு குஷி, அந்த பழைய பேப்பரின் வாசனை, படங்கள் என்று தனி உலகில் சில நாட்கள் திரிய முடியும். அவை அனைத்தும் பெங்களூரில் மாட்டிக் கொண்டதால், கிண்டிலில் தான் படிக்க முடிந்தது.