20 ஆகஸ்ட் 2013

மோகமுள் - தி.ஜானகிராமன்

சிறுவயது முதல் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தாலும், அது தீவிரமானது வேலை கிடைத்த பின்னர்தான். (புத்தகங்களை காசு குடுத்தும் வாங்கி படிக்கு வழி ஒன்று இருக்கின்றதல்லவா?) முதலில் ஆரம்பம் சுஜாதா. அதற்கு பின்னர் தி. ஜானகிராமன். தி. ஜானகிராமனின் முள்முடி சிறுகதை பள்ளியில் ஒரு துணைப்பாடம். அதைத் தவிர அவரைப் பற்றி தெரிந்த ஒரே விஷயம் மோகமுள்ளின் ஆசிரியர். 

மோகமுள் திரைப்படம் ஏற்கனவே பார்த்திருந்தேன். அது பிடித்தும் இருந்தது. மோகமுள்ளை படித்ததும், படம் நாவலின் அருகில் கூட வர முடியாது என்பது மிகத்தெளிவானது. வாங்கிய பின் அதை பல முறை படித்திருப்பேன். இன்றும் 
என்னால் அதை புதிது போல் ரசித்து படிக்க வைக்கின்றது. 

கதை, தன்னை விட பத்து வயது பெரிய பெண்ணின் மீது கொண்ட காதல். அந்த மோகம் முப்பது நாளில் போகாமல் முள்ளாக இருக்கின்றது. பாபுவை விட பத்து வயதில் பெரியவள் யமுனாவின் உடல் வனப்பும், அவளின் குணமும் பாபுவிடம் இரண்டு வித தோற்றம் கொண்டு நிற்கின்றது. அவளை தெய்வம் போல தொழும் பாபுவிற்கு அவள் அழகு அவனின் மோகத்தையும் தூண்டுகின்றது. மோகம், அனைவரையும் அர்ச்சகராக்காத வருத்தம் போல பாபுவின் நெஞ்சில் தைக்கின்றது.

12 ஆகஸ்ட் 2013

என் பேர் ஆண்டாள் - சுஜாதா தேசிகன்

தேசிகனின் புதிய புத்தகம். அவரது கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலனவை அவரது தளத்தில் வெளிவந்தவை. ஏற்கனவே சிலவற்றை படித்திருந்தாலும், ஆன்லைனில் படிப்பதை விட புத்தகத்தில் படிப்பது எனக்கு பிடித்திருக்கின்றது. 

கட்டுரைகளை அவரே வகைப்படுத்தியுள்ளார்.அனுபவம், சுஜாதா, பொது, அறிவியல், பயணங்கள்.

முகவுரையில் கடுகு அவர்கள் கூறுவது போல யூசர் ஃப்ரெண்ட்லிதான் இப்புத்தகம். எளிமையாக சொல்வது எளிதல்ல, அதுவும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும், அதோடு மிகவும் எளிமையாக போய் தினதந்தி ஸ்டைலில் போய்விடக் கூடாது. தேசிகன் இவையனைத்தையும் சமாளித்து எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதியுள்ளார்.

தலைப்பு கட்டுரை என் பெயர் ஆண்டாள். ஆண்டாள் அழகான தமிழ் பெயர். அப்பெயரின் சரித்திரம் சுவாரஸ்யமானது. அனைவருக்கும் தினமும் அனைவருக்கும் பற்பல அனுபவங்கள் கிடைக்கின்றன, அதை எழுத்தில் அப்படியே கொண்டுவருவது கடினம், அப்படியே வந்தாலும் அது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பாதியிலேயே தூக்கம் வந்துவிடும். இவரின் கட்டுரையில் அந்த சுவாரஸ்யம் குறையாமல் இருக்கின்றது. அனுபவத்துடன் கொஞ்சம் கைச்சரக்கும் இருக்கும்தான். அதில் எது கைச்சரக்கு என்று கண்டுபிடிப்பது வாசகனுக்கான சவால். 

27 ஜூலை 2013

மகாபாரதம் - கும்பகோணம் பதிப்பு - முன் வெளியீட்டு திட்டம்.

இட்லி வடையில் மகாபாரதம் கும்பகோணம் பதிப்பின் முன் வெளியீட்டு திட்டம் பற்றிய பதிவு

http://idlyvadai.blogspot.in/2013/07/blog-post_27.html

தொடர்பு விபரங்கள் அதில் உள்ளன.

நான் இணைய விருப்பம் தெரிவித்துள்ளேன். வாங்கினாலும் முழுவதையும் படிக்க எத்தனை வருடங்களாகப் போகின்றதோ.

எங்கே பிராமணன்? - சோ

சில பல வருடங்கள் முன்பு நான் விகடன் ஆன்லைன் வாசகன்.(இப்போது அந்த குப்பையை ஓசியில் படிப்பதுடன் சரி). அப்போது பிரபலமான ஒரு தொடர் வரலாற்று நாயகர்கள். அதில் அம்பேத்கரை பற்றி எழுதிவந்தார்கள். முதல் பத்தியிலேயே, ஆரியர் வருகை, ஆரியர்கள் வந்து இங்குள்ளவர்களை ஏமாற்றினார்கள் என்று  அளந்து விடப்பட்டிருந்தது. பின்னூட்ட பெட்டியில், அந்த புளுகை எதிர்த்து எழுதியிருந்தேன். 

உடனே அடுத்தடுத்து பல வாசகர்கள் சண்டைக்கு வந்துவிட்டார்கள். விவாதம் என்று முழுவதும் கூற முடியாது. அப்போது அலுவலகத்திலும் எனக்கு வேலை அவ்வளவாக இல்லை. எனவே, இச்சண்டையை முழு நேர தொழிலாக கொண்டேன். அந்த சண்டைக்கு பாயிண்ட் தேடவே இதை வாங்கினேன். -இதிலிருந்து மகாபாரதம், இந்துமகா சமுத்திரம் என்று அவரது மற்ற புத்தகங்களும் அலமாரிக்கு வந்தன. எதற்கு சோ? என்றால், சண்டை போட வக்கீலின் துணை வேண்டுமல்லவா.

அனைவருக்கும் ஒரு முன் முடிவு இருந்தது. அதை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. அடுத்தவர் கூறுவதை கேட்பதை விட, அதில் குற்றம் காண்பது மட்டுமே வேலையாக இருந்தது. விளக்கம் சொன்ன கேள்வியையே மாற்றி மாற்றி கேட்டு, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்தது. ஒரு கட்டத்தில் சலிப்பு வந்துவிட்டது. இதனால் ஒரு பயனுமில்லை என்ற ஞானமும் வந்தது. இதற்கு பதில் நாய் வாலை நிமிர்த்தலாம் என்ற உண்மையும் தெரிந்தது.

08 ஜூன் 2013

யுத்தங்களுக்கிடையில் - அசோகமித்திரன்

"கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் வரிசை மாறிக் கூறுவதுதானே கதை" என்று முன்னுரையில் கூறுகின்றார்.

 "இது வெற்றிக் கதையுமல்ல தோல்விக் கதையுமல்ல. பிழைத்திருத்தல் - அதுவும் கூடியவரை நியாயத்தையும் கண்ணியத்தையும் கைவிடாமல் பிழைத்திருத்தல். இவர்களை வீரர்களாகவும் கூறலாம்; சந்தர்ப்பவாதிகளாகவும் கூறலாம்" கதையை பற்றிய அவரது அறிமுகம்.

ஒரு குடும்பத்தின் கதை. கதை நடக்கும் காலம் இரண்டு உலக யுந்தங்களுக்கு நடுவில் நடக்கின்றது. ஒரு பள்ளி ஆசிரியருக்கு பிறந்த ஏகப்பட்ட குழந்தைகளில் மிஞ்சியவர்களின் கதை. 

ஒற்றனில் வரும் ஒரு கதையில், பல கதாபாத்திரங்கள், அவர்களின் உறவுகள் பற்றி வரைபடம் வரைந்து நாவல் எழுதுவது பற்றி எழுதியிருப்பார். அதே போல் எழுதியிருப்பார் போல், அத்தனை பாத்திரங்கள், அத்தனை உறவு முறைகள். இக்கதையில் வராத ஒரு உறவினர் மானசரோவரில் வருகின்றார். 

வழக்கமான ஆரம்பம் முடிவு என்ற அமைப்பு இல்லாத கதை. வாழ்க்கையின் ஒரு பகுதி. நான் லீனியர் கதை. அந்த ஆசிரியரின் பல குழந்தைகளில் மிச்சம் இருக்கும் மூன்று ஆண்கள், மூன்று பெண்களை பற்றி முன் பின்னாக சொல்லி வருகின்றார். 

முதலாம் உலக யுத்த முடிவில் ஒருவனுக்கு வேலை கிடைத்து ஊரை விட்டு போகின்றான், அவனுடன் சேர்த்து அவனது தம்பிகளுக்கும் வேலை தேடி தருகின்றார்ன். ரயில்வே. அசோகமித்திரன் அப்பா ஹைதராபாத்தில் ரயில்வேயில் வேலை செய்திருப்பாரோ. பல கதைகளில் நிஜாம் அரசும், ரயில்வேயும் வருகின்றது.


கதை ஆண்களை பற்றியே பேசினாலும், அடிநாதமாக இருப்பது பெண்கள்தான். பதினாறு குழந்தைகளை பெற்ற பெண், தன்னை விட இரண்டு மூன்று வயது அதிகமான கணவனை அடைந்த பெண், இருபது வயதில் கணவனை இழந்த பெண். 


//யார் இருந்தால் என்ன, யார் மறைந்தால் என்ன, பெண்கள் சுகப்படுவதில்லை//

முன்னுரையில் கூறுவது போல கதை மாந்தர்கள் அனைவரும் சாதரணர்கள். சாதரணர்கள் வீரன் கிடையாது, கோழையும் கிடையாது. வாழ்க்கையை முடிந்த வரை வாழ பார்க்கின்றார்கள். சிறிது சமரசத்துடன். பெண்கள் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு ஓடுகின்றனர்.

ஐம்பது வருடங்களுக்கு முந்தைய சமூகத்தை நமக்கு காட்டுகின்றார். யுந்த களேபரங்கள். ரயில்வேயின் பெருமை. 

சின்ன நாவல்தான். ஏகப்பட்ட கிளைகள். யார் யாருக்கு என்ன உறவு என்று மனதில் வரிசைப்படுத்திக் கொள்ளும் முன் கதை முடிந்துவிடுகின்றது. அசோகமித்திரனின் கூறாமல் கூறிச் செல்வதைப் பற்றி தனியாக சொல்லத்தேவையில்லை. அவரது வழக்கமான நகைச்சுவை இதில் அவ்வளவாக இல்லை. சர்வசாதரணமாக ஒரு வரியில் பெரிய திருப்பத்தை கூறிவிட்டு அடுத்த பகுதிக்கு போய்விடுகின்றார். சின்ன சின்ன வரிகள். ஆனால் சொல்ல வந்ததை கச்சிதமாக கூறிவிடுகின்றது. முதல் முறை படிக்கும் போது கொஞ்சம் குழப்பும். இரண்டாம் முறை படிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கின்றது.

ஒரு வரியில் சொன்னால், நமது பாட்டிகள், தாத்தாக்களின் கதை.